02/08/2020

கண்ணீர்த்துளி தமிழ்ப்பட்டறைக் கவியரங்கம்

 


 #தமிழ்ப்பட்டறைக்_கவியரங்கம்
நாள்: 02.08.2020
தலைமை: #பாடலாசிரியர்_நிகரன்_அவர்கள்
தலைப்பு: #கண்ணீர்த்_துளி

#தமிழ்த்தாய்_வாழ்த்து

இந்த "நான்" என்னும் உடலுக்குள்
எப்போதும் உயிர் மூச்சாய் உலாவும்
தமிழ் அன்னையின் தாழ்களை
தலையில் தாங்கி வணங்குகிறேன்!

#தமிழ்ப்பட்டறை_மாணவன்_நான்

எதுகை மோனையென
எதை எதையோ எழுதியவன்
இங்கே வந்தபின்தான்
இலக்கணம் அறிந்து கொண்டேன்..

ஹைக்கூ சென்றியூவென
பொய்கூவாய் கூவியவன்
இங்கே வந்தபின்தான்
மெய்க்கூவல் கூவுகின்றேன

எசப்பாட்டு இல்லையெனில் என்
நிசப்பாட்டு இல்லீங்க
கவிச்சரம் இல்லையெனில் இந்தக்
கவி ராசா இல்லீங்க

ஆம்...
தமிழ்ப்பட்டறை எனக்குத்
தமிழ்ப்பால் ஊட்டிய இரண்டாம் தாய்
இல்லை இல்லை...
இன்னும் ஊட்டிக்கொண்டிருக்கும்
அட்சயத்தாய்..அதிசயத்தாய்
அந்த இரண்டாம் தாய்க்கு
என் முதலாம் வணக்கமும்
அதன் முதலாம் தமையனுக்கு
என் இரண்டாம் வணக்கமும்

ஆமாம்அது யாரு?அந்தத் தமையன்?
வேறு யாரு? அந்த வேர்தான் யாரு
நம்ம "

ஐயா தான்
வணக்கம் ஐயா

#கவித்தலைமை
********
பட்டறையின் நடுவராய்
பாட்டெழுதும் கவிஞராய்
பட்டையைக் கிளப்புகின்ற
பைந்தமிழ் ஆசானுக்கு
இந்த அன்பின் அடிபொடியின்
இன்பப் பெரு வணக்கம்!

##தலைப்பு:
++++++++++++
#கண்ணீர்த்_துளி

சிரித்தால் சிரிப்பு வரும்
அழுதால் அழுகை வரும்
அப்படித்தானே?!
இல்லை..இல்லை
அழுதால் கண்ணீர் வரும்?

ஆனால்...
சிரித்தாலும் கண்ணீர் வருகிறதே...

ஆம்..
புண்பட்ட மனங்களின்
ரணங்களை குறைப்பது மட்டுமல்ல
இன்பத்தின் உச்சியிலே
இமைகளை நனைப்பதும்
கண்ணீரே..

பிறந்ததை உறுதி செய்ய
பிஞ்சுகளிடும் பிள்ளையார் சுழி மட்டுமல்ல
இருந்ததை உறுதி செய்ய
இருப்போர் தூவும் அங்கீகார மொழியும்
கண்ணீரே..

ஆனால்
இந்தக் கண்ணீர் பற்றித்தான்
எத்தனை எத்தனை
மூட நம்பிக்கைகள்..

ஆண்களின் கண்ணீர்
கோழைத்தனமாம்!
பெண்களின் கண்ணீர்
ஆபத்தான ஆயுதமாம்!

“வெங்காயம்”

ஆம்
அது உரித்தால்கூடத்தான்
கண்ணீர் வரும்...
காரணம்
இரசாயண மாற்றமே ஒழிய
இருபால் மாற்றமல்ல...

போதும்..
கண்ணீரிலும்
இனம் பிரிக்காதீர்...

புத்தகம் படித்தும்
படம் பார்த்தும் அழுததுண்டா?!
எனில் நீங்களே மென்மையானவர்கள்

அட கொஞ்சம் பொறுங்கள்....
உண்மையில் நீங்களே பலமானவர்கள்

ஆம் சொல்வது அறிவியல்...
சந்தேகமெனில்
கூகுள் மாமாவைக் கேளுங்கள்!

அழுகையில் மட்டும்தான்
அழுத்தமெனும் நதி
அமைதிக் கடலில்
அடக்கமாகிறது!

அழுகையில் மட்டும்தான்
ஆன்ம ஒளி
ஆத்ம ஜோதியில் ஐக்கியமாகிறது!

அது மட்டுமா?!

கண்ணீர் பக்தியின் உத்வேகம்
கண்ணீர் உணர்ச்சியின் உற்சாகம்
கண்ணீர் அன்பின் அடையாளம்
கண்ணீர் மனிதனின் மா வைத்தியம்

இங்கே
சில கண்ணீர்
சூர்ப்பணகை கண்ணீர்போல்
சூனியமாக்க வல்லவை!

ஆனால்
சில கண்ணீர்
மாணிக்கவாசகரின் கண்ணீர் போல்
மகத்துவம் வாய்ந்தவை!

இங்கே
சில கண்ணீர்
பிக்பாஸ் கண்ணீர்போல்
பித்தலாட்டமானவை!

ஆனால்
சில கண்ணீர்
திருமணத்துக் கண்ணீர்போல்
திவ்யமானவை!

அழுங்கள் அழுங்கள்
அழுகையில்தான்
ஆன்மா குளிக்கும்!

அழுங்கள் அழுங்கள்
அழுகையில்தான்
அழுத்தத் தீ அணையும்!

#நன்றியுரை
****
உருக்கமான பாடல்களால்
உருகிடுவார் இரசிகர்கள்!
கண்ணீர் துளிகளினால்
கைகளைக் குலுக்கிடுவார்!
அப்படி இல்லையெனில்
அகத்தினுள் குலுங்கிடுவார்!
எப்படி படைத்தேனோ
எமக்கது தெரியாது..

இணைய வழி என்பதால்
இமையின் வலி புரியாது..

நன்றாய் இருந்தெதனில்
நற்றமிழின் பெருமையென்பேன்!
ஏதோ இருந்ததெனில்
எளியோனின் பிழையென்பேன்!
பிழையைப் பொருத்தருள
பிரியமுடன் வேண்டி
நன்றி கூறி விடைபெருகிறேன்
நன்றி வணக்கம்!

---செ. இராசமாணிக்கம்

No comments: