15/08/2020

கரண்டி

 


 

உப்போ சர்க்கரையோ
உவர்ப்போ காரமோ
எப்படி இருந்தாலும்
எமக்கெல்லாமே ஒன்றுதான்

தேனடைத்த அறைக்குள்
தேதிகள் பல போட்டாலும்
ஊறுகாய்க் கிடங்கிற்குள்
ஊறல்பல போட்டாலும்
உண்மைத் துறவிபோல்
ஒன்றையும் தீண்டோம்!
இருந்தும்..
நாங்கள் தொடாத எதுவும்
உங்கள் நாக்கைத் தொடுவதே இல்லை

நீங்கள்..
சூப்புக் குளத்தின்
சூட்டில் தள்ளினாலும்
பனிக்கூழ் மலையில்
பலநாள் விட்டாலும்
வருத்தமோ இன்பமோ
வருவதே இல்லை..

நாங்கள் முத்தமிடா
இதழ்களே இல்லை..
ஆங்கில முத்தமாய் இருந்தாலும்
அதில் ஆபாசம் இருக்காது

ஆனால்..
சிலர் படுத்தும்பாடுதான்
வதைத்து வளைத்து விடுகிறது...

அவர்களின் விரல்களுக்குள்
எங்கள் வால் பிடிபட்டால்
சின்னாபின்னமாகி
சிதைந்துபோவது என்னவோ
பெரும்பாலும் வாய்தான்...

எமக்கு என்னதான் வாயிருந்தாலும்
இதையெல்லாம் சொல்ல
வார்த்தைகள் இல்லையே....

இப்படிக்கு,

கரண்டி

No comments: