27/07/2017

அப்துல்கலாம் ஐயா நினைவாஞ்சலி



 (நாட்டுப்புறப் பாடல் வடிவில்)

ஐயாவபத்தி எழுத நானும்
ஆசை வச்சேங்க!
ஐயாமாரே பிழை இருந்தால்
என்னை மன்னியுங்க!

ராமேஸ்வரம் தீவு- நம்ம
புனித பூமிங்க!
ஐயா பிறந்ததாலே- அதுக்கு
இன்னும் பெருமைங்க!

பள்ளியிலே படிக்கும்போதே-பல
பணிகள் செஞ்சாருங்க!
படுத்தும்வறுமை வந்தபோதும்-அவர்
படிப்பில் கெட்டிங்க!

கல்லூரியில் படிக்க- ஐயா
திருச்சி போனாருங்க!
அதுக்கு மேல படிக்க- ஐயா
சென்னை போனாருங்க!

பணிகளிலே திறமையாக-நல்ல
புதுமை செஞ்சாருங்க
நம்மநாடு வளர்ந்திடத்தான்-ஐயா
நிறையா செஞ்சாருங்க!

செயற்கைகோள்கள் செஞ்சு- ஐயா
நிறைய விட்டாருங்க!
ஏவுகணைகள் செஞ்சு- ஐயா
ஏவி விட்டாருங்க!

நம்ம நாட்டு மூளையாலே- ஐயா
நாட்டை காத்தாருங்க!
ஆன்மீகமும் பேசி- ஐயா
அன்பு செஞ்சாருங்க!

பார்த்த நாடு எல்லாருமே
பயந்து போனாங்க!
கலாம் ஐயா பேரச்சொன்னால்
கலங்கிப் போனாங்க!

குடியரசுத் தலைவராக- ஐயா
சேவை செஞ்சாருங்க!
குறையில்லாத தலைவராக- ஐயா
சிறப்பு செஞ்சாருங்க!

அப்துல்கலாம் ஐயாவால
நமக்குப் பெருமைங்க!
அவருமட்டும் இல்லையினா
நிறைய இல்லீங்க!

எதிர்காலம் ஐயாபேர
நினைச்சு போற்றுங்க!
என்றைக்குமே ஐயா புகழ்
நிலைச்சு நிக்குங்க!

--------நன்றி--------

யார் அவர்?

அன்பின் உருவமவர்!
ஆற்றலில் அணுசக்தியவர்!
இளைஞர்களின் இதயமவர்!
ஈகையின் இருப்பிடமவர்!
உண்மையின் உறைவிடமவர்!
ஊழலின் எதிரியவர்!
எளிமையின் அடையாளமவர்!
ஏற்றத்தின் உச்சமவர்!
ஐயரில் ஐயரவர்! (ஐ- தலைவன்)
ஒரு குறையும் இல்லாதவர்!
ஓர் குறள்போல் உயர்ந்தவர்! (ஓர்- ஒப்பற்ற)
ஔதாரியம் (பெருந்தன்மை) நிறைந்தவர்!
அஃதே ஐயா அப்துல் கலாம்!


மதங்களைக் கடந்து
மனிதத்தால் உயர்ந்த
மகா ஆத்மா அவர்!
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!

----- செ. இராசா-----

25/07/2017

செருப்பு தூக்கிய கிருஷ்ணர்


பாரதப் போரின் உச்சம்
பார்க்கும் கண்களில் அச்சம்!
பீறிடும் எரிமலைக் கனலாய்
பீஷ்மரும் பிணமலைக் குவித்தார்!

போரினில் ஐவரை அழிக்க
போட்டார் சபதம் பீஷ்மர்!
தர்மத்தின் நடுநிலை காக்க
தன்னிலை மறந்தார் பீஷ்மர்!

பதிகளைக் காத்திட வேண்டியே
பாஞ்சாலி கிருஷ்ணரை நாடினாள்!
சகலமும் அறிந்த கிருஷ்ணரோ
சகுனிபோல் திட்டமும் தீட்டினார்!

பீஷ்மரின் பாதத்தில் வணங்கியே
ஆசிகள் வாங்கிடக் கூறினார்!
பரிபோல் பார்வையை செலுத்தியே
அடிகளை வணங்கிடக் கூறினார்!

காலடி ஓசையைத் தவிர்த்திட
காலணி தவிர்த்திடக் கூறினார்!
திரௌபதி காலணி இரண்டையும்
திருக்கரம் பற்றியே கழற்றினார்!

கடவுளாய் இருந்த போதிலும்
கர்மத்தில் யோகியாய் மாறினார்!
பாதணி தூக்கியச் செயலினால்
பரதனைப் போலவே மாறினார்!

தீர்க்க சுமங்கலி ஆசியை
பீஷ்மரும் வரமெனத் தந்தார்!
யாரோ மாதென எண்ணியே
பீஷ்மரும் வாக்கினை வழங்கினார்!

ஆட்ட நாயகன் கிருஷ்ணனே
ஆட்டத்தின் போக்கை மாற்றினார்!
சபதத்தை வரமாய் மாற்றியே
சர்வத்தில் தர்மத்தை நிறுத்தினார்!

24/07/2017

எப்ப அண்ணே வருவீக--- எசப்பாட்டு

ஆத்தாள விட்டுப்புட்டு
அப்பனையும் விட்டுப்புட்டு
ஊருக்கு போன அண்ணேன்........
எல்லாரும் கேக்குறாக .....
எப்ப அண்ணே வருவீக....

காசு பணம் சேக்கனுன்னு
கண்ணாலம் கட்டனுன்னு
வெளிநாடு வந்தேன்டா....தம்பி
கருவாடு ஆனேன்டா.......
காசுதாண்டா சேரவில்லை....

என்னண்ணேன் சொல்லுறீக?..
விவசாயம் செத்துப்போச்சு......
காணி நிலமும் வித்து போச்சு
காசு பணம் வேணுமுன்னு
கடன்காரன் வர்ரான் அண்ணேன்.....

என்னடா தம்பி செய்யுறது........
நாலு வருஷம் ஓடிடுச்சு
நம்ம கடன் அடையலயே......!
ஊரு விட்டு வந்ததால
உள்ளதும் போச்சுதேடா..........?!

ஹைக்கூ (முதல் முயற்சி)

சர்க்கரை பதுக்கல்
தினமும் நடக்கிறது
சாரை சாரையாய் எறும்புகள்!



அடிக்க அடிக்க
சிரிப்புச் சத்தம்
கிரிக்கெட் போட்டி!



கத்தியால் கிழித்தும்
சிரிப்புச் சத்தம்
பிரசவ அறை!

மனமார்ந்த வாழ்த்துக்கள்

கவிதைகள் எழுதிடும் போட்டியிலே- இரு
கவிதைகள் எழுதியே பதிவிட்டேன்!
நேர்படப் பேசிடும் கவிதைகளாய்-சிந்தை
கூர்படத் தமிழால் பதிவிட்டேன்!


எதிர்பார்த்து எழுதிய போட்டியிலே-நான்
ஏனோ வெற்றியை ருசிக்கவில்லை!
கவிஞர்கள் எழுதிடும் போட்டியிலே-நான்
கிறுக்கிய எழுத்துக்கள் சிறக்கவில்லை!

குறைகள் உள்ளதாய் எண்ணவில்லை- நான்
நிறைகள் குறைந்ததாய் எண்ணுகின்றேன்!
குறைகள் இல்லாப் படைப்புகளை- நான்
நிறைவுடன் எழுதிட முயலுகின்றேன்!

தமிழினைக் காக்கும் தளங்களிலே-நான்
தமிழ்ப்பட்டறைத் தளமே சிறப்பென்பேன்!
பத்தரை மாற்றுத் தங்கமென- நான்
தமிழ்ப்பட்டறை தளத்தினை காணுகின்றேன்!

தமிழால் வென்ற கவிஞர்களை- என்
தமிழால் இங்கே வாழ்த்துகின்றேன்!
தமிழினை காத்திடும் அனைவரையும்-என்
தமிழின் மொழியால் வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் கவிஞர்களே!
வாழ்க வளமுடன் தமிழர்களே!
வாழ்க வளமுடன் தலைவர் அவர்களே!
வாழ்க வளமுடன் நிர்வாகிகளே!

----- செ. இராசா-----

நேர்படப் பேசு---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (63) பங்குபெற்ற கவிதை


நேர்படப் பேசு தமிழா- நீ
நேர்படத் தமிழால் பேசு!
கூர்படப் பேசு தமிழா-சிந்தை
கூர்படத் தமிழால் பேசு!


திராவிடம் பேசிடும் தமிழா- நீ
தமிழினம் வாழ்ந்திடப் பேசு!
மார்க்சியம் பேசிடும் தமிழா- தமிழ்
மார்க்கத்தின் பெருமையைப் பேசு!

குரலினை உயர்த்திடும் தமிழா- திருக்
குறளினை உரக்கமாய்ப் பேசு!
கம்பனை படித்திடும் தமிழா- தமிழ்க்
கவிஞனைப் பெருமையாய்ப் பேசு!\

சாதியை ஒழித்திடத் தமிழா- தமிழ்
சாதியென் சாதியெனப் பேசு!
சரித்திரம் திரும்பிடத் தமிழா- இனி
சகலரும் சமமெனப் பேசு!

நாவினை பழக்கிடத் தமிழா- தமிழ்
நாட்டிலே தமிழிலே பேசு!
வீரியம் விதைத்திடத் தமிழா-நீ
வீட்டிலே தமிழிலேப் பேசு!

தமிங்கலம் பேசிடும் தமிழா- நீ
தமிழினைச் சரியாய்ப் பேசு!
ஆங்கிலம் போற்றிடும் தமிழா- நீ
அதையாவது சரியாய்ப் பேசு!

மொழியினை கலந்திடும் தமிழா- நீ
மொழி வதை நிறுத்திப் பேசு!
கவிதைகள் படைத்திடும் தமிழா- நீ
கவிதையால் தழிழனைப் பேசு!

நேர்படப் பேசு தமிழா- நீ
நேர்படத் தமிழால் பேசு!
கூர்படப் பேசு தமிழா-சிந்தை
கூர்படத் தமிழால் பேசு!
-----------/////------/////---------


நேர்படப் பேசு (2வது படைப்பு)
**************************

நேர்படப்பேசு...நேர்படப் பேசு...
என்றும் எங்கும் நேர்படப் பேசு...

வாழ்க்கையில் தாழ்ந்திடும் நிலை வந்தாலும்
வாட்டிடும் வறுமையால் வதங்கி நின்றாலும்
நெஞ்சத்தின் நினைவிலே தாழ்ந்து விடாது
நெஞ்சினை நிமிர்த்தியே நேர்படப் பேசு!

கொற்றவன் ஆனவன் குற்றம் புரிகினும்
கூற்றுவன் போலவே நாடி வருகினும்
நேரிடும் இன்னலோ கோடி ஆகினும்
நேர்மையின் பார்வையால் நேர்படப் பேசு!

எதிரியின் கூடத்தில் எவர் நின்றாலும்
எதிர்க்கும் கரங்களில் எது இருந்தாலும்
எதிர்ப்பால் நஞ்சினை ஊட்ட வந்தாலும்
எதிரிக்கு எதிரியாய் நேர்படப் பேசு!

கற்றவர் பெற்றவர் யாரென் றாயினும்
மற்றவர் குடிகளில் குற்றங்கள் செய்திடின்
நெற்றிக்கண் பார்வையால் குற்றத்தை பொசுக்கியே
நேசத்தின் பெருமையை நேர்படப் பேசு!

அறத்தினை குழைப்பவன் மகனென் றாயினும்
அநீதிகள் இழைப்பவன் எவனென் றாயினும்
அகத்தினில் தர்மத்தை மறந்து விடாது
அதர்மத்தை அழித்திட நேர்படப் பேசு!

மதத்தினை விளக்கிடும் குருவென் றாயினும்
மதத்தால் மனிதனை பிரித்திட நினைத்திடின்
மனிதத்தை காத்திடும் கடவுளாய் மாறியே
மனிதத்தை காத்திட நேர்படப் பேசு!

நேர்படப்பேசு...நேர்படப் பேசு...
என்றும் எங்கும் நேர்படப் பேசு...

------ செ. இராசா---------

மனமார்ந்த வாழ்த்துக்கள்
*************************
கவிதைகள் எழுதிடும் போட்டியிலே- இரு
கவிதைகள் எழுதியே பதிவிட்டேன்!
நேர்படப் பேசிடும் கவிதைகளாய்-சிந்தை
கூர்படத் தமிழால் பதிவிட்டேன்!

எதிர்பார்த்து எழுதிய போட்டியிலே-நான்
ஏனோ வெற்றியை ருசிக்கவில்லை!
கவிஞர்கள் எழுதிடும் போட்டியிலே-நான்
கிறுக்கிய எழுத்துக்கள் சிறக்கவில்லை!

குறைகள் உள்ளதாய் எண்ணவில்லை- நான்
நிறைகள் குறைந்ததாய் எண்ணுகின்றேன்!
குறைகள் இல்லாப் படைப்புகளை- நான்
நிறைவுடன் எழுதிட முயலுகின்றேன்!

தமிழினைக் காக்கும் தளங்களிலே-நான்
தமிழ்ப்பட்டறைத் தளமே சிறப்பென்பேன்!
பத்தரை மாற்றுத் தங்கமென- நான்
தமிழ்ப்பட்டறை தளத்தினை காணுகின்றேன்!

தமிழால் வென்ற கவிஞர்களை- என்
தமிழால் இங்கே வாழ்த்துகின்றேன்!
தமிழினை காத்திடும் அனைவரையும்-என்
தமிழின் மொழியால் வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் கவிஞர்களே!
வாழ்க வளமுடன் தமிழர்களே!
வாழ்க வளமுடன் தலைவர் அவர்களே!
வாழ்க வளமுடன் நிர்வாகிகளே!

பார்வையே கவிதை


கயல்விழிப் பார்வையை வார்த்தையில் வடித்திட
கலைநயப் பார்வையை கண்களில் ஏற்றியே
கவிஞனாய் பார்க்கிற கண்களின் மொழியினை
காதலின் பார்வையாய் தவறாய் கணித்திட
கன்னியோ பார்வையை நிலத்தில் செலுத்திட
கவிஞனின் பார்வையோ தாழ்ந்து நோக்கிட
கன்னியும் பார்வையால் மெல்ல சிரித்திட
கவிஞனின் பார்வையோ தடங்கள் மாறிட
கன்னியின் பார்வையை கண்களால் கவ்விட
கவிஞனின் பார்வையோ காதலில் மூழ்கிட
கன்னியின் பார்வையே கவிதை என்றானாம்!

விவேகானந்தர் பொன்மொழிகள் (எனது பாணியில்)


கண்ணுக்கு புலப்படும் கடவுள் என்றே
அண்ணனும் தம்பியும் நினைத்திட வேண்டும்!
கண்ணில் காணா கடவுளை எல்லாம்
அதற்குப் பிறகே வழிபட வேண்டும்!


அன்பு குறைந்தால் மரணம் என்றே
அகிலம் உண்மையை உணர்ந்திட வேண்டும்!
அன்பு விரிந்தால் வாழ்க்கையும் விரிந்திடும்
அகிலத்தின் சிறப்பை அறிந்திட வேண்டும்!

உண்மை நேர்மை உள்ளவர் என்றால்
உலகம் எதிர்த்தால் எதிர்த்திட வேண்டும்!
நம்மால் எதுவும் முடியா தென்ற
நினைப்பை நினைவினில் நீக்கிட வேண்டும்!

அகத்தினில் விழித்திடும் கலைகளைப் பயின்று
மின்னலின் வேகத்தில் எழுந்திட வேண்டும்!
அடிமன எண்ணம் அடைந்திடும் வரைக்கும்
மின்னலின் வேகத்தில் உழைத்திட வேண்டும்!

19/07/2017

மனதோரம் மழைச்சாரல்/ கவிச்சாரல்---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (62) பங்குபெற்ற கவிதை


மனதோரம் மழைச்சாரல்
வருகின்ற நன்நேரம்
மனம்பேசும் கவிச்சாரல்
வரிகளாய் வடியாதோ?!


மனதோரம் புதைந்துள்ள
மலிவான ரகசியங்கள்
கண்ணீரில் கவியாகி
கரைந்துருகிப் போகாதோ?!

மனதோரம் வழிகின்ற
வீணான சபலங்கள்
மறைபோன்ற நல்கவியால்
வீழாமல் தடுக்காதோ?!

மனதோரம் எரிக்கின்ற
கணங்களின் நினைவலைகள்
மருந்தான கவிகளினால்
கனத்தினை குறைக்காதோ?!

மனதோரம் உதிக்கின்ற
சிலகவிகள் நம்நெஞ்சில்
மனத்தினை மாற்றுகின்ற
சிறுபொறி ஆகாதோ?!

மனதோரம் மலர்கின்ற
மணம்வீசும் கவிகளினால்
மடியாத காதல்களும்
மணம்செய்யத் துடிக்காதோ?!

-------செ. இராசா-------

யார் அவன்?

உள்ளே விழுந்து உலகத்தை மறந்து
உலகம் தன்னுள் உருள்வதாய் நினைத்து
உருண்டும் புரண்டும் உவகையால் நகைத்து
உளறலால் தன்னை உரைப்போன் யார்?

நிலையாமை


வழியோரம் கிடந்த பொருளொன்றை
விழியோரம் விழுந்திட ஆதரித்தேன்!
கலைநயம் மிகுந்த பொருளென்றே
கண்ணால் கண்டே களிப்புற்றேன்!


கண்ணாடி பந்தெனெ அப்பொருளை
குழந்தைகள் இரண்டும் கண்டனரே!
கரங்களில் எடுத்தே அப்பொருளை
குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனரே!

அன்றொரு நாளில் அப்பொருளை
தூக்கி எறிந்தாள் கடைக்குட்டி!
பறந்து வந்த அப்பொருளால்
உடைந்தே போனது எல்.இ.டி!

அதிர்ந்தே அனைவரும் அப்பொருளை
அழித்திட வேண்டி சபித்தனரே!
தெருவில் கிடைத்த அப்பொருளை
தெருவில் தூக்கி எறிந்தனரே!

வருகின்ற பொருள்கள் எல்லாமே
வரும்வழி செல்வது நிச்சயமே!
ஊழின் விதியை நாமுணர்ந்து
உண்மைப் பொருளை உணர்வோமே!

யாரின் பிழையென நினையாது
யாவிலும் நல்லதைக் காண்போமே!
பொய்ப்பொருள் அழிந்தால் கலங்காது
மெய்ப்பொருள் அறிந்திட முயல்வோமே!

-----செ. இராசா----

பேரழகி


அவள் இந்தப் பிரபஞ்சத்தின் பேரழகி!
அவன் பார்வையில்....

அட....ஆமாம்...அவள் பேரழகியே....
அவன் கண்கொண்டு
அவளைப் பார்க்கையில்

தீர்வு உண்டா?/ (மணல் பிரச்சினைக்கு)



கட்டுமானத் தேவைக்குதான்
மணலும் கிடைக்கவில்லை!
கமுக்கமாத்தான் நடக்குதுங்க
மணலும் அங்கே கொள்ளை!


ஆற்று மணல் இல்லையினா
வீடு எப்படி உயரும்?
ஆற்றில் மணலே இல்லையினா
ஆறு எப்படி உருளும்?

ஒரு லோடு மணலின் விலை
ஒரு பவுனு காசாம்!
பல லோடு மணலெடுத்தால்
பாயும் ஆறு தரிசாம்!

பிரச்சனைகள் இரண்டுக்குமே
மணலே பெரிய தொல்லை!
அரசாங்கம் கையிலதான்
அதுக்குத்தீர்வு இல்லை!

செட்டி நாடு வீடுகட்ட
மணலே தேவை இல்லை!
நம்ம நாட்டுத் தொழில்நுட்பம்
நாம காக்கவில்லை!

வெள்ளைக்காரன் தொழில்நுட்பம்
நமக்கு எதுக்கு வேணும்!
நம்ம ஊரு தொழில்நுட்பம்
நமக்கு கிடைச்சால் போதும்!

கட்டிடக்கலையில் நாமதானே
தலைநிமிர்ந்து நின்னோம்!
தரணிபுகழ் கோவில்கட்டி
தமிழனென்று சொன்னோம்!

நம்மூரு மண்ணெடுத்தால்
நமக்கு மணலும் வேணாம்!
தோண்டி வச்ச குழியிலேயே
தண்ணீர் விழும் தானா!

மணலில்லாத வீடு கட்ட
மறுபடியும் முயல்வோம்!
மாற்றுவழி அறிந்திடவே
மதியை நாமும் குடைவோம்!

மாத்தி யோசிப்போம்......

செ. இராசா, கட்டிடப் பொறியாளர்.

11/07/2017

ஆத்திகனாய் மாறிய நண்பனுக்கு




கிருஷ்ணனை வாசித்து
கிருஷ்ணனை நேசித்து
கிருஷ்ணனை சுவாசித்து
கிருஷ்ணனாய் மாறிய
கிருஷ்ண(நாக)ராஜாவிற்கு
இனிய பிறந்த நாள் வணக்கங்களையும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும்
மனமார கூறிக்கொண்டு
மனவரிகளைப் பதிகின்றேன்;

ஓ. சிறுவயலில் பிறந்தவனே...
ஓஹோவென வளர்ந்தவனே...
ஒதுங்கியே இருந்தாய் நாத்திகனாய்..
ஒருநாள் மாறினாய் ஆத்திகனாய்!
ஒரிரு வார்த்தையில் சொல்வதென்றால்
ஒரு ஞான யோகியாய் மாறிவிட்டாய்!

ஒதிடும் மறைகளைச் சொல்கின்றாய்...
ஒராயிரம் நாமங்கள் கதைக்கின்றாய்...
ஓருஒரு வேதமாய் படித்தேதான்
ஒவ்வொரு படியாய் கடக்கின்றாய்
ஒவ்வொரு நாளும் எங்களுக்கும்
ஒளியை கதையால் தருகின்றாய்!

எப்படி மாறினாய் இப்படியாய்
என்றே பலரும் நினைக்கின்றார்!
அப்படி இப்படிப் போகாமல்
அருள்படி சென்றதால் வியக்கின்றார்!
முறைப்படி நீயும் சென்றதற்கு
முதல்படி யாதென கேற்கின்றார்!

உன்னிடம் பழகிய நட்பினிலே
உணர்ந்ததை உரைக்கிறேன் உரிமையிலே!
உன்பாதை மாற்றிய அக்கதையை
ஊருக்கு உரைப்பதும் நற்செயலே!
விருட்சஞான விதை தூவிய
விஜய்டிவி மஹாபாரதக் கதையதுவே!

நண்பனாய் தமையனாய் ஒருவார்த்தை
நானும் உன்னிடம் வேண்டுகின்றேன்!
நன்மையை தந்திடும் கதைகளையும்
நீயும் தினம்தினம் எழுதிடுவாய்!
நாளும் நாங்களும் வாசிக்க
நாளுக்கு ஒன்றாய் பதிவிடுவாய்!

வாழ்க வளமுடன்!
கிருஷ்ணார்ப்பணம்!

கர்ணன் கதை (சுருக்கமாக)

 (அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்)






அறிமுகம்
********
நட்பென்று சொன்னாலும்
கொடையென்று சொன்னாலும்
சிந்தையிலே வரும்நாமம்
கர்ணனென்ற திருநாமம்

அன்றுமுதல் இன்றுவரை
அனைவருமே அறிந்த கதை!
அனைவருடைய மனதிலுமே
ஆழமாகப் பதிந்த கதை!

அகிலத்தில் நட்பிற்கு
ஆதாரம் ஆன கதை!
அக்கதையை அடியேனும்
அடிசுருக்கி எழுதுகின்றேன்!

அடிகளிலே பிழையிருப்பின்
அடியேனின் பிழைபொறுத்து
அடிகளையும் எடுத்துரைக்க- உம்
அடிகளையே வணங்குகின்றேன்!

கர்ணனின் பிறப்பு
***************
ஆயர்குல குந்திதேவி
அரியவரம் ஒன்றினாலே
ஆதவனின் ஆசியோடு
ஆனாளே தாயாக!

காதினிலே குண்டலமும்
மார்பினிலே கவசமுமாய்
கதிரவனின் ஒளியாலே
கர்ணனையும் பெற்றாளே!

மணம் செய்யும் முன்னாலே
மகன் வந்த அதிர்ச்சியாலே
மணம் இல்லா மலர்போல
மனம் நொந்து போனாளே!

அறியாமல் செய்தபிழை-பிறர்
அறியாமல் செய்திடவே-விழி
ஆறாக வடிந்திடவே- சேயை
ஆற்றினிலே விட்டாளே!

கர்ணனின் வளர்ப்பு
*****************
தேரோட்டி அதிரதனும்
நீராடும் வேலையிலே-ஆற்று
நீரோடு வந்த சேயை
மார்போடு அணைத்தானே!

சேயில்லா ராதைக்கும்
தாயில்லா சேயுக்கும்
மறுவாழ்வு வந்ததென்று
மனதார மகிழ்ந்தானே!

பாலூட்டா விட்டாலும்
பாசமூட்டி வளர்த்ததாலே
பணிவோடு வளர்ந்தானே!
பண்போடு நடந்தானே!

அரச இனம் நடத்துகின்ற
வில்வித்தை போட்டியிலே
விளையாடும் மனத்தோடு
விருப்போடுச் சென்றானே!

தேரோட்டி மகனுக்கு
வில்போட்டி எதற்கென்று
சொல்கூட்டி பலர்கூற
தரைதட்டி அழுதானே!

அவமானம் தாங்காது
அம்மாவின் மடிவீழ்ந்து
ஓ வென்று அழுதிடவே
ஓடோடிச் சென்றானே!

அவனோட பிறப்புபற்றி
அம்மாவும் அப்பாவும்
அழுதழுது கதைப்பதையும்
அப்படியே கேட்டானே!

அச்செய்தி கேட்டதுமே
அடிமேல் அடியென்று
ஆடித்தான் போனானே
அதிர்ச்சியிலே உறைந்தானே!

அனைத்தையும் மறந்திடவே
அகிலத்தை வென்றிடவே
கலைகள் பல பயின்றிடவே
குரு தேடிச்சென்றானே!

குரு துரோணர் குருகுலத்தில்
குலம்பற்றி வினவிடவே
குலமறியா காரணத்தால்
குரு அவனை மறுத்தாரே!

குரு சொன்ன சொல்லாலே
கோபத்தில் எரிதனலாய்
குருவின் குரு பரசுராமர்
குடில்நோக்கிச் சென்றானே!

சாதிபற்றி பொய்யுரைத்து
சகலவித்தை கற்றானே!
சத்தியவான் பரசுராமர்
சாபத்தையும் பெற்றானே!

துரியோதனனின் நட்பு
******************
கற்றவித்தை காட்டுகின்ற
களப்போட்டி தளத்தினுலே
அகிலத்தில் சிறந்தவனாய்
அர்ச்சுனனை அறிவிக்க.....

"நிறுத்துங்கள்... "எனச் சொல்லி
நின்றானே கர்ணனங்கே!
அறிவிப்பைத் தவறென்றான்...
போட்டிக்குத் தயாரென்றான்...

துன்பத்தின் உச்சத்திலே
துரியோதனன் துவளையிலே
துயர்துடைக்க வந்தவானாய்
துரியோதனன் மகிழ்ந்தானே!

குருகுலத்தில் போட்டியிட
குலத்தகுதி வேண்டுமென்றும்- இல்லை
கோ தகுதி வேண்டுமென்றும்
கர்ணனிடம் கதைத்தனரே!

அங்கிருந்த துரியோதணன்
அனைவரையும் வாயடைத்து
கர்ணன் எந்தன் நண்பனென்றான்!
கர்ணன் இனி அரசனென்றான்!

அவமான மனதிற்கு
அருமருந்து போட்டதாலே
அன்றுமுதல் துரியனையே
அகத்தினிலே பதித்தானே!

கர்ணனின் கொடை
******************
புகுந்த இடம் சரியில்லாது
புளங்காகிதம் அடைந்தாலும்
உயிரும் உடலும் அனைத்தையுமே
துரியனுக்கே தந்தானே!

அதர்மத்தின் கூடாரத்தில்
அறிவுரைகள் உதவாதென்று-தன்
அதர்மத்தை தர்மமாக்க
அள்ளிஅள்ளிக் கொடுத்தானே!

அந்தணர்கள் சூத்திரர்கள்
வந்தவர்கள் நொந்தவர்கள்
அனைவருக்கும் அனைத்தையுமே
அன்போடு கொடுத்தானே!

சகதிசேற்றில் தாமரைபோல்
சதிகாரரில் நல்லவனாய்
கர்ணன் தர்மம் செய்தானே!
கர்மம் அதுவென வாழ்ந்தானே!

பாண்டவர் தோல்வி தவிர்த்திடவே
மாண்டவர் அதர்மி என்றாக்கிடவே
கண்ணனும் திட்டங்கள் தீட்டினானே!
கர்ணனும் திட்டத்தில் மாட்டினானே!

பாண்டவர் தாயாம் குந்திதேவி
பாண்டவர் ஐவரை காத்திடவே
தாமாய் சென்று உண்மைகூறி
தானமாய் வரங்கள் பெற்றாளே!

தாய்கூறும் உண்மைகளால்
தாயின்மேல் கோபம் நீங்கி-அவன்
மடிந்ததுமே மெய்யுறைக்க
மனமருகிக் கேட்டானே!

(வேறு)

அருச்சுனன் உயிரைக் காத்திடவே
இந்திரன் சூழ்ச்சி செய்தானே!
கவசம் குண்டலம் இரண்டையுமே
கர்ணனை அணுகிப் பெற்றானே!

கர்ணனின் உயிரை வீழ்த்திடவே
கர்ணனின் தர்மம் வேண்டுமென்று
கண்ணனும் கொடையாய் கேட்டிடவே
கர்ணனும் தானமாய் தந்தானே!

முடிவு
*****
பாரதப் போரின் உச்சத்திலே
பார்த்த சாரதியின் சூழ்ச்சியிலே
விஜயனின் கடைசி அம்பினிலே
வீழ்ந்தது கர்ணனின் தர்மமன்றோ?

பொதுதர்மம் பூமியில் நிலைத்திடவே
தனிதர்மம் அன்று தோற்றதன்றோ?!
கர்ணனின் தர்மம் தோற்றாலும்
தரணியில் சிறந்தவன் கர்ணனன்றோ?!

----- செ. இராசா------

இந்தக் கவிதையும் என் பக்கத்தில் இருந்து திருடப்பட்டுவிட்டது.....பரவாயில்லை...... அவருக்குத்தான் எத்தனை பின்னூட்டங்கள் மற்றும் பகிர்வுகள்... வியக்கின்றேன்?!!!!!!!!!!!!



எண்ணெய் அபாயம்


என்றைக்கு நம்முள்ளே- பல
எண்ணெய் புகுந்தனவோ...
அன்றைக்கே நம்முள்ளே-பல
நோய்கள் புகுந்தனவே!

எள் எண்ணெய்
கடலை எண்ணெய்
நம்ம ஊரு எண்ணெய்ங்க...

நல்ல எண்ணெய் அதைவிடுத்து
மற்ற எண்ணெய் எதுக்குங்க?

சூரியகாந்தி எண்ணெய்க்குள்ளே- பல
சூட்சமங்கள் இருக்குங்க-அதில்
சூழ்ந்துள்ள மர்மங்களால்- நாம
சூன்யாய் ஆவோங்க...

சூடு குறைச்சு பிழிஞ்சாதான்- அது
நல்ல எண்ணெய் ஆகுங்க...
சூடு அதிகம் போச்சுதுன்னா- அது
நம்மள காவு வாங்குங்க...

புதிய தலைமுறை கார்க்கின்ற
பொறுப்பு நமக்கு இருக்குங்க....
புதிய நோயை பரப்புகின்ற
எண்ணெய்களை நிறுத்துங்க......

(புரிஞ்சதுன்னா அனைவருக்கும்
உடனே Share பண்ணுங்க. நன்றிங்க)

------- செ. இராசா-------

விழியால் கதை எழுது--களஞ்சியம் கவிதைப் போட்டியில் (61) பங்குபெற்ற கவிதை


என்னவளின் கண்ணழகை
என்னவென்று சொல்லிடுவேன்?!
எழுத்துக்களால் அவ்வழகை
எப்படிநான் எழுதிடுவேன்?

விழியால் கதை எழுதும்
விந்தையினைச் சொல்லவா?- அவள்
விழிபேசும் கவிதையினால்
வியந்த கதை சொல்லவா?

விழிக்கின்ற நேத்திரங்கள்
விடிவெள்ளி அல்லவா?-அவள்
சொக்குகின்ற பார்வைகளோ
சொர்க்கங்கள் அல்லவா?

கண்களிலே பேசும்மொழி
காவியங்கள் அல்லவா?!-அவள்
காதல்மொழி பேசுகின்ற
காரிகையவள் அல்லவா?!

வில்புருவ விழியழகி
என்னவளே அல்லவா?-அவள்
விழிஇரண்டைப் போற்றுவதும்
என்கடமை அல்லவா?!

------செ. இராசா------

திருதராஷ்டிரன்


பாரதக் கதையினில் ஒரு பாத்திரம்!
பிறந்தது புகழ்பெற்ற குரு கோத்திரம்!

பெற்றது பார்வையற்ற இரு நேத்திரம்!
பெற்றதும் பாசமற்ற நூறு தரித்திரம்!

கற்றது பீஷ்மர்வழி பல சாத்திரம்!
கற்காதது தர்மம் அறம் மாத்திரம்!

பாண்டவர்மேல் கொண்டது பல ஆத்திரம்!
பாழ்சகுனியால் கண்டது பல சூத்திரம்!

புறக்கண்கள் மறைந்ததில் இல்லை விசித்திரம்!
அகக்கண்களும் மறைந்ததுதான் அவர் சரித்திரம்!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்-----களஞ்சியம் கவிதைப் போட்டி-60 (வெற்றிக் கவிதை)


60வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும் கவிதையை தெரிவு செய்த நடுவர்Kavignar Vaalidhasan
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

(மூன்று கவிதைகள் எழுதினேன். தேர்வானது எதுவெனத் தெரியவில்லை. மூன்றையும் பதிவிடுகிறேன்)

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890145117971062/

 



(தலைப்பு-1, கவிதை-3)
தலைப்பு: "எனக்குத் தெரிஞ்சதெல்லாம்"
************************************
கவிதை-1:

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எழுதிடவே எண்ணமுற்று
எடுத்தேன் நான் கைப்பேசி.
என்னவென்று சொல்லிடுவேன்
என்னவளின் முகமதிலே
ஏளனமாய் நகைக்கிறதே!

என்ன இவன் எழுதிடுவான்?
எதைப்பற்றி விளக்கிடுவான்?
என்றெண்ணி தன்னுள்ளே
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எழுத்துலகின் ஜாம்பவான்கள்
எழுதுகின்ற தளமதிலே
எளியோனும் எழுதுவதால்
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எம்பாட்டன் வள்ளுவரும்
எழுதாத எழுத்தினையா
எம்புருசன் எழுதிடுவான்
என்றெண்ணி அதனாலே
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எம்பாட்டி ஔவையாரும்
எழுதிவைத்த பாடல்போல
எள்ளவும் என்றேனும்
எழுதாத திறனறிந்து
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எழுத்துலகின் கவியரசர்
எழில்மிகுந்த கண்ணதாசர்
எழுதிவைத்த பாடல்போல
எழுதிடாத தரமறிந்து
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
என்தமிழில் எழுதிடுவேன்
என்னவளே நகைக்காதே!
----------------------------
கவிதை-2
-----------------------------
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எள்ளளவு தானென்று
எவ்வுள்ளம் அறிகிறதோ
அவ்வறிவே அறிவாகும்!

அவ்வறிவில் உரமிட்டு
நுண்ணறிவாய் மாற்றிடவே
இறையறிவாம் பேரறிவு
எளிதினிலே புலனாகும்!

மழைநீரின் நிறம்மாறி
மண்நிறத்தைப் பெறுவதுபோல்
பேரறிவும் நிஜம்மாறி
சிற்றறிவாய் தோன்றிடுமே!

கரைபடிந்த சிற்றிவால்
கலங்கியுள்ள இறையறிவு
முறையான பயிற்சியினால்
முயன்றாலே தெளிவாகும்!

எனக்குத் தெரிஞ்சது எல்லாமே
எறும்பின் அளவே என்றறிந்தோர்
அறிவின் எல்லையை விரித்திடவே
அடைவது இறைவனின் நிலையாகும்!

அறிவைக் கூட்டி அன்பைப் பெருக்கி
அகிலம் முழுவதும் இறையைக் கண்டு
அமைதிக் கடலாய் மனத்தை மாற்றி
அறிவே தெய்வம் என்றுணர்வோம்!
----------------------------------
கவிதை-3
----------------------------------
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எளிமையும் நேர்மையுமாய்
வாழ்கின்ற வாழ்வினிலே
வசந்தங்கள் கோடி என்பேன்!

இவ்விரண்டு குணங்களையும்
தன்னிரண்டு கண்களாக்கி
இந்தியாவை சிறக்க வைத்த
எத்தனையோ தலைவர்களில்
இதயத்தில் வாழுகின்ற
இருபெரும் தலைவர்களை
இங்கே நானும் எழுதுகின்றேன்!

முதலாமவர் யாரென்றால்?

மேலாடை துறந்தவராய்
ஓராடை தரித்தவராய்
எளிமை நேர்மை வடிவான
சத்தியத்தை பாதுகாத்த
உத்தமரில் உயர்ந்தவராம்
மஹா ஆத்மா காந்தியாவார்!

இரண்டாமவர் யாரென்றால்?

சொந்தவீடு இல்லாதவராய்
சொத்து எதுவும் சேர்க்காதவராய்
எளிமை நேர்மை வடிவான
படிக்காத மேதையான
கர்மவீரர் காமராசர்
கருப்பு நிற காந்தியாவார்!

இரண்டு பேரும் கடைபிடித்த
இரண்டு கொள்கை நமக்கிருந்தால்
இறவா புகழும் அடைந்திடலாம்!
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எளிமையும் நேர்மையுமே....
எழுதிவிட்டேன் இத்தளத்தில்
எளிமையோடும்! நேர்மையோடும்!
----------------------------------
செ. இராசா

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890145117971062/ 

ரயில் பயணத்தில் வாழ்க்கைப் பயணம்


பணத்தின் அளவைப் பொறுத்தேதான்
பயணிக்கும் வகுப்பு முடிவாகும்!
பணத்தின் இருப்பு கனத்திருந்தால்
பயணிக்கும் வகுப்பு முதலாகும்!

முன்வினை அளவினைப் பொறுத்தேதான்
நன்மையும் தீமையும் நடந்தேறும்!
முன்வினை நல்வினை செய்திருந்தால்
நன்மையும் நமக்காய்க் காத்திருக்கும்!

பயணம் செய்கின்ற அனைவருமே
பயணத்தை நாளும் தொடர்கின்றார்!
பயணத்தின் அலுப்பைப் போக்கிடவே
பாடியும் ஆடியும் மகிழ்கின்றார்!

பாடலை ரசித்திடும் அனைவருமே
பாடலில் காலத்தை மறக்கின்றார்!
பாடலின் ராகம் முடியுமுன்னே
பாதியில் சிலரோ செல்கின்றார்!

பயணத்தின் தூரம் முடியுமுன்னே
பிறருக்கு தர்மம் செய்திடுவோம்!
பண்பும் அன்பும் குறையாமல்
பயணத்தை இனிதாய் கழித்திடுவோம்!

செ. இராசா

02/07/2017

நியாயம்- அநியாயம்


அன்பிற்காக சுகத்தினைத் துறத்தல் நியாயம்!
சுகத்திற்காக உறவினைத் துறத்தல் அநியாயம்!
உறவிற்காக தன்னலம் துறத்தல் நியாயம்!
தன்னலத்திற்காக உண்மையைத் துறத்தல் அநியாயம்!
உண்மைக்காக செல்வத்தைத் துறத்தல் நியாயம்!
செல்வத்திற்காக நட்பைத் துறத்தல் அநியாயம்!
நட்பிற்காக உயிரைத் துறத்தல் நியாயம்!
உயிருக்காக மானத்தைத் துறத்தல் அநியாயம்!
மானத்திற்காக பதவியைத் துறத்தல் நியாயம்!
பதவிக்காக கருணையைத் துறத்தல் அநியாயம்!
கருணைக்காக எதையும் துறத்தல் நியாயம்!
எதற்காகவும் அன்பைத் துறத்தல் அநியாயம்!

இரண்டு கோடுகள்


வாழ்க்கை வாழும் முறைமையினை
வரைந்திடும் இரண்டு கோடுகளால்
திரைப்படம் ஒன்றின் வழியாக
பழைய தலைமுறை அறிந்ததுபோல்
புதிய தலைமுறை அறிந்திடவே
உங்களில் ஒருவன் முயல்கின்றேன்!

கோடு ஒன்றை வரைந்துவிட்டு
கோட்டின் அருகில் மறுபடியும்
மற்றொரு கோட்டை வரைந்திடவே
இரண்டாம் கோட்டின் உயரத்தால்
முதலாம் கோட்டின் உயரமும்
சிரிதாய் தெரிந்திடும் அக்கணமே!

ஒப்பீட்டு முறையைக் கையாண்டே
உலகம் உயரத்தைக் கணிப்பதையே
இரண்டு கோட்டில் விளக்குவதாய்
உணர்ந்தேன் உண்மைப் பொருளாக!
உள்ளத்தில் பதிந்த உட்கருத்தை
உரைத்திட இங்கே முயலுகின்றேன்!

அறிவில் சிறந்த அறிஞர்களின்
அறிவின் லட்சியம் அதுவாக
அமைப்போம் பெரிய கோட்டினையே!
அறிவில் என்றும் உயர்ந்தவரை
அகத்தில் என்றும் உயர்வாக
அமர்ந்திடச் செய்வோம் அழகாக!

செல்வம் குறைந்த வறியவரின்
செல்வத்தை நினைத்து பார்த்திடவே
வரைவோம் சிரிய கோட்டினையே!
நமக்கும் கீழே உள்ளவரை
நினைத்துப் பார்த்திடச் சொன்னவரின்
வரிகளை நினைப்போம் ஆழமாக!

செ. இராசா

கவிஞன் --கவிஞர் வாழ்த்து


கசக்கிப் பிழிந்திட முயலாமல்
கசிந்து உருகிடும் எண்ணங்களை
கவிதையில் பதித்திடும் கவிஞர்களின்
கர்மத்தின் சிறப்பை யாதென்பேன்?

கவிதைமீது காதல் செய்து
காதலிபோலே ஊடல் செய்து
கவிதையில் கொஞ்சிடும் கவிஞர்களின்
காதல் பக்தியை யாதென்பேன்?

பலருக்கு சிலவேலை உதிக்கின்ற
சிலருக்கு முழுவேலை மலர்கின்ற
கவிதைகள் தருகின்ற கவிஞர்களின்
கற்பனை சக்தியை யாதென்பேன்?

கதைக்கும் கவிதை எழுதுகின்ற
கவிதைக்குள் கதையைச் சொல்லுகின்ற
தமிழினம் காத்திடும் கவிஞர்களின்
தமிழின் செழுமையை யாதென்பேன்?

ஞானக் கருத்தைக் கவிதையிலே
ஞாலம் பயனுறச் சொல்கின்ற
ஞானம் நிறைந்த கவிஞர்களின்
ஞான திருஷ்டியை யாதென்பேன்?

தூரிகை தூக்கிடும் ஓவியன்போல்
உளியைப் பிடித்திடும் சிற்பியைப்போல்
வார்த்தைகள் வார்க்கின்ற கவிஞர்களும்
வாழ்வது தமிழின் சிறப்பென்பேன்!

தங்கமடி நீ எனக்கு----களஞ்சியம் கவிதைப் போட்டி-59 (வெற்றிக் கவிதை)



(அடியேனுக்கு இரண்டாம் இடம் அளித்தமைக்கு, நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்)



அத்தைமடி மெத்தையிலே
அல்லிக்கொடி ஆனவளே!
ஆசைக்கொடி நீ உறங்க-இந்த
அத்தான்மடி ஏங்குதடி!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

---------------------------------

கண்டபடி பேசிநீயும்
திட்டிக்கடி இஷ்டம்போலே
கட்டிப்பிடி வேலையிலே....
கவிதையடி ஆகுமடி!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

--------------------------------------

அதிர்ஷ்டமடி இவனுக்கென்று
சொல்லுதடி இவ்வுலகம்...
உள்ளபடி சொல்வதாலே
உண்மையடி ஊர் வார்த்தை!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

--------------------------------------

கண்அடி விழியலகால்- பிறர்
கண்ணடி பட்டதன்றோ?!
குறளடி அழகுபோல- உன்
குரலடி உள்ளதன்றோ?!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

----------------------------------
செ. இராசா


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1861102527541988/

சிற்பியையும் சிற்பக்கலையையும் வாழ்த்திடுவோம்



கல்லில் ஒளிந்த கடவுளையும்
கண்ணில் தெரியச் செய்கின்ற
கருணைக் கடலாய் உள்ளவனை
கரங்களால் வணங்கிட வேண்டாமா?!


மனதில் உதித்த மறைபொருளை
கனவில் தோன்றிய மனஉருவை
கற்பனை கலந்து வடிக்கின்ற
கலையைப் போற்றிட வேண்டாமா?!

 வள்ளுவன் சிலையை வடித்தவனின்
ஒளவையை அழகுறச் செய்தவனின்
கண்ணகி கோபத்தைச் சொன்னவனின்
சிறப்பினை வாழ்த்திட வேண்டாமா?!

வாழ்க சிற்பிகள்! வாழ்க வளமுடன்!
வாழ்க சிற்பக்கலை! வாழ்க வளமுடன்!


(புகைப்படத்தில் உள்ள வள்ளுவர் சிலை அடியேன் வீட்டில் நிறுவியுள்ளேன் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்தி, இச்சிலை செய்த சிற்பிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்திக்கொள்கிறேன். நன்றி ஐயா)

தமிழ்ப்பட்டறை



எழுத்துத் தமிழ் சிறப்புறவே
தமிழ்ப்பட்டறைத் தளம்மூலம்
எழில்தமிழ் வளம்காக்கும்
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரு மூச்சு!
எப்பொழுதும் தமிழ் மூச்சு!
என்நேரம் தமிழ் தாகம்!
எல்லோர்க்கும் ஒரே நோக்கம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
எனக்குள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எடுத்தாளும் ஆளுமையால்
எழுத்துப்பட்டறை ஆகியதோ?!
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கிறதே!!!

என்தமிழ் உறவுகள்
என்றென்றும் சிறப்புறவே
என் மனமார வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறைத் தலைவரையும்
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
என் மனம் மொழி இரண்டாலும்
என்வழியில் வாழ்த்துகிறேன்!
எம்சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

எல்லோரும் வாழ்க வளமுடன்!
எல்லோரும் வாழ்க வளமுடன்!
எல்லோரும் வாழ்க வளமுடன்!

செ. இராசா