30/09/2018

கப்பல்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையுமே
ஒவ்வொரு கப்பல் பயணமன்றோ?!!
ஒவ்வொரு பயணமும் முடியும்வரை
ஒவ்வொரு கப்பலும் வேண்டுமன்றோ?!

கப்பலில் ஓட்டை விழுமென்றால்
எப்படி பயணம் சிறப்பாகும்?!!
கப்பலில் மாலுமி தூங்கிவிட்டால்
எப்படி பயணம் முடிவடையும்?!

போக்கிடம் எதுவெனத் தெரியாமல்
போகின்ற பயணம் சரிதானா?!
கலங்கரை விளக்கது தெரியாமல்
கப்பலை ஓட்டுதல் முறைதானா?!

என்னத்த சொல்லுறது?

என்னத்த சொல்லுறது- இங்கே
என்னத்த சொல்லுறது?
எங்கே போகிறது- தேசம்
எங்கே போகிறது?

சீதைகள் ஒத்துழைத்தால்- இனி
பாதையை மாற்றிடலாம்!
மாதவி மறுதலித்தால்- வேறு
மார்க்கத்தைத் தேடிடலாம்

திருட்டு கற்பழிப்பு- இனி
முரட்டு குற்றமில்லை!
குருட்டு மன்றத்திலே- கடும்
இருட்டுக்கு பஞ்சமில்லை!

எங்கே மல்லையா- அவர்
இங்கே இல்லையா
கடனில் கந்தையா- அவரை
உடனே பிடியுமய்யா....

காவிரி மேலாண்மை- அட
தீர்ப்ப பின்னர் சொல்லு...
காவேரிமேல் ஆண்மை- அட
தீர்ப்ப உடனே சொல்லு...

28/09/2018

சிற்றின்பம் பேரின்பம்


துன்பவலி நீக்கம் சிற்றின்பம்
இன்பவழி பெருக்கம் பேரின்பம்

உயிர்கள் விரும்புவது சிற்றின்பம்
உயர்வோர் விரும்புவது பேரின்பம்

பொய்யில் மயங்குவது சிற்றின்பம்
மெய்யில் மகிழ்வது பேரின்பம்

இன்பத்தின்பால் விளைவது சிற்றின்பம்
இறைவனின்பால் சேர்ப்பது பேரின்பம்

கானலாய் மறைவது சிற்றின்பம்
கவிதையாய் மலர்வது பேரின்பம்

கவர்ச்சியில் வருவது சிற்றின்பம்
எழுச்சியில் உணர்வது பேரின்பம்

ஈருடல் சேர்மை சிற்றின்பம்
ஈகின்ற தாய்மை பேரின்பம்

சிலை


சிற்பியின் சிந்தைக்குள் புகுந்து
கற்பனைக் கவிதையாய் நுழைந்து
அற்புதக் கரங்களில் பிறப்பது சிலை..

ஓவியக்கலையில் உடலாகி
சிற்பக்கலையில் உயிராகி
சித்திரக்கலையாய் உருவாவது சிலை...

இங்கே...

கடவுளுக்கும் சிலை
கற்பனைக்கும் சிலை

இருப்பவருக்கும் சிலை
இல்லாதவருக்கும் சிலை

தலைவனுக்கும் சிலை
தண்டங்களுக்கும் சிலை

கண்ணகிக்கும் சிலை
கண்டவனுக்கும் சிலை

தமிழ்த்தாய்க்கும் சிலை
தருதலைகளுக்கும் சிலை

அரசியல் நடிகர்கருக்கும் சிலை
நடிக அரசியலார்க்கும் சிலை

இவ்வளவு ஏன்?

சிலையை எதிர்த்த
புத்தருக்கும் சிலை
பெரியாருக்கும் சிலை

தேவையா சிலை என்றால்
தேவை தான் என்பேன்

இல்லையெனில்....
சித்தரில் சித்தனாம்
சிந்தனை சிற்பியாம்
வள்ளுவனின் சிலை இல்லாது
வங்கக்கடல் வாடி இருக்குமே....

தேவையா சிலை என்றால்
தேவையில்லையென்றும் சொல்வேன்

ஏனெனில்...
சரித்திரத் தலைவர்களை எல்லாம்
சாதியத் தலைவர்களாய் மாற்றி
கம்பியிட்டு காவல்காக்கும்
கொடுமையையும் காண்கிறோமே...

யார் கேட்டார்கள்?!
மூலைக்கு மூலை சிலை

யார் கேட்டார்கள்?!
மூளைக்குள் போகாதோர் சிலை

வையுங்கள் சிலை
எப்படி வாழ வேண்டுமென்பதற்காக

வைக்காதீர் சிலை
எப்படி வாழ வேண்டாமென்பதற்காக

இந்துக்களின் சிலை
தத்துவத்தின் அடையாளம்

இயேசுவின் சிலை
அன்பின் அடையாளம்

புத்தரின் சிலை
கருணையின் அடையாளம்

ஆனால்...
திருவள்ளவரின் சிலை
தமிழர்களின் மொத்த அடையாளம்

வையுங்கள் சிலை
..............வள்ளுவனுக்கு மட்டும்

✍️செ. இராசா

கானல்நீரை(யும்) குடிப்போம்



அந்தரத்தில் தொங்குகின்ற
எங்கவாழ்க்கை பாரு- ஆனால்
சொந்தபந்தம் சொல்லுதுங்க
எங்கவாழ்க்கை வேறு!

அக்கரைய விட்டுப்புட்டு
இக்கரைக்கு வந்தோம்- ஆனால்
எக்கரையும் பச்சையின்றி
திக்கிமுக்கிப் போனோம்!

அங்கஇங்க கடனவாங்கி
அயல்நாடு வந்தோம்- ஆனால்
எங்க கடன் தீருமுன்னே
வயக்காட்டக் காணோம்!

என்னடா வாழ்க்கையென்று
நொந்துபோயி நிப்போம்- ஆனால்
காசுபணம் வேணுமேன்னு
கானல்நீரை(யும்) குடிப்போம்!

#அயல்நாட்டுப்_பாட்டாளிகளின்_குரலாய்

#அறிவியலும்_தமிழும்_3



***********************
மிகப்பெரிய அண்டத்தையும், அதற்கு ஆதாரமான மிகச்சிறிய அணுவையும்பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்தப்பதிவில் நம் பிண்டத்தை அதாவது உடல்வளத்தை நன்றாக வைக்க உதவும் மருத்துவத்துறையில் தமிழின் பங்குபற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

மூன்று முக்கிய ஓட்டங்கள்
*************************^^
நாம் மருத்துவரிடம் போனதும் என்ன செய்கிறார்கள்?! ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சுக்காற்றின் வேகத்தையும் இதயத்துடிப்பையும் கவனிப்பார்கள். பிறகு தெர்மாமீட்டர் வைத்து உடலின் வெப்பநிலை அளவைக் கவனிப்பார்கள். பின் சளி, இருமல் என்று நீர்கோர்த்து உள்ளதா என்று கவனிப்பார்கள். இது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமல்ல எல்லா மருத்துவத்திற்கும் இதுவே அடிப்படை என்று அறிவோம்.

ஆம் உறவுகளே....உடலில் ஓடும் மூன்று முக்கிய ஓட்டங்களை வைத்து நோயைக் கண்டுபிடிக்கலாம். அது என்ன அந்த மூன்று ஓட்டங்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அவையாவன...

1. காற்றோட்டம்
2. வெப்ப ஓட்டம்
3. நீரோட்டம்

இதை வாதம் (காற்று), பித்தம்
(நெருப்பு) மற்றும் சிலேத்துமம் (நீர்)
என்று சொல்வார்கள். இதை 2000 வருடங்களுக்கு முன்பே நம் தமிழ்ச்சான்றோன் வள்ளுவனாரின் கீழ்வரும் குறள் மூலம் காணலாம்.

குறள் 941
*********
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

விளக்கம்
********
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

மருத்துவத்துறையெனில் யார் யார் அங்கத்தினராக இருப்பார்கள்?
******************************
முதலில் நோயாளி, பின்னர் மருத்துவர் அப்புறம் மருந்து அவ்வளவுதானே.. ஆனால் செவிலியும் (உதவியாளர்) தேவையென்று நவீன மருத்துவ உலகம் சொல்கிறதே......ஆம் ஆனால் இதை
எப்போது அறிந்துகொண்டது என்றால் 19ஆம் நூற்றாண்டில் நைட்டிங்கேலின் வருகைக்குப் பின்னரே.

ஆனால் ஆச்சரியம் பாருங்கள்.....நம்ம தமிழ்பாட்டன் அதையும் தன் குறளில் சொல்லியுள்ளார்.

குறள் 950:
***********
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

விளக்கம்:
********
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

மேலும், நம் தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம்பற்றி நாம் அனைவரும் அறிவோம். சித்த மருத்துவம் என்பது பின்விளைவு இல்லாத ஒரு மருத்துவமுறையாகும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் நோயின் அளவைப்பொருத்து இன்றும் மருந்து தரப்படுகிறது.

மேலும் ஒரு சுவாரஸ்யமான் தகவல்;

இலங்கை ஜெயராஜ் ஐயா சொல்வார்.
இலங்கையில் ஓரு சித்தமருத்துவர் உள்ளாராம். அவரைக்கொண்டுபோய் உலகின் எந்த மூலையில்விட்டாலும் அந்த ஊர் காய்கறிகள் முளைக்கும் தன்மையைப் பார்த்தே அது எக்குணம் என்று சொல்லும் ஆற்றல் உள்ளவராம். உதாரணமாக....

புடலங்காய் பாம்புபோல் கீழ்நோக்கி வளரும், எனவே அது நீர் குணம் என்பாராம். வெண்டைக்காய் மேல்நோக்கி வளரும், அதாவது தீபஒளி மேல்நோக்கித்தானே எரியும்...ஆக அது நெருப்பின் குணமாம்.பரங்கிக்காய் பரந்து வளரும், அது காற்றின் குணமாம்.
இப்படி பார்த்து பார்த்தே சொல்லிவிடுவாராம் அவர் ஊர் வைத்தியர். இது எதற்கு என்றால், நாம் பார்க்காத பல காய்கறிகள் உள்ளன அல்லவா?!! அவர்களுக்கு ஒருவேளை சித்த மருத்துவம் தேவையெனில் இப்படிப்பார்த்தே சொல்லிவிடுவாராம் அந்த இலங்கை வைத்தியர்.

அட போங்க சார்.... நமக்கு காய்ச்சல் வந்தால் பனடால் போதும் என்பவர்களுக்கு நாம் சொல்வது புரியவாபோகிறது.?!!

சரி நண்பர்களே.... மீண்டும் சந்திப்போம்

நன்றி

27/09/2018

#அறிவியலும்_தமிழும்_2


இந்த பேரண்டத்தில் நாம் காணும் அனைத்துமே அணுக்களின் கூட்டு என்பதை நாம் அறிவியல் பூர்வமாக அறிகின்றோம். இதை வெகு எளிதாகச் சொல்வதென்றால், சிறு வயதில் களிமண்ணால் விளையாடும்போது வண்டி, பொம்மை என்று பற்பல உருவங்கள் செய்து விளையோடுவோமல்லவா??! மேலும் இப்படி நாம் என்னதான் பல உருவங்கள் செய்தாலும் இவை அனைத்தும் உருவானது களிமண் என்று அறிவோம்தானே?!. அதைப்போலவே, நாம் காணும் அனைத்துப் பொருட்களும் (நீர், நிலம், நெருப்பு, கோள்கள்......அண்டம், பிண்டம்) என அனைத்துமே அணுக்களால் ஆனதே.

அறிவியல் பூர்வமாகச் சொல்வது என்றால் ஒரு பொருளை எடுத்து உடைத்துக் கொண்டே (பகுத்தல்) போகும்போது அதற்குமேல் உடைக்கமுடியாத ஒன்றே அணுவாகும். அணுக்களின் அமைப்பையும் அதன் சேர்க்கையையும் பொருத்து தனிமங்கள், வாயுக்கள், நீர்மங்கள்.... என்று அழைக்கின்றோம்.

இந்த அணுவை வேகமாக ஒரு சக்தியைக் கொண்டு தாக்கினால் அதில் அளப்பறிய ஆற்றல் வருகிறது என்று நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அதன் விளைவே அணுகுண்டு மற்றும் அணுஉலைகள்.

அணுவின் அளப்பறிய ஆற்றலை அறிந்த ஔவையார், திருக்குறளின் பெருமையை அணுவை உவமையாக வைத்துச் சொல்வதை இங்கே கவனியுங்கள்;

“அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக் குறுகத்தரித்த குறள்”

-திருவள்ளுவமாலை
(11ஆம் நூற்றாண்டு )

அதாவது அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகட்டியதுபோல மிகவும் சிறிய அளவிலான குறளில் அளப்பரிய கருத்துகள் உள்ளதாம். இங்கே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆம், இங்கே நாம் குறளின் பெருமையை அறிவதோடு
அணுவின் ஆற்றலையையும் அறிகின்றோம்.

மேலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் இயற்றிய திருமந்திரத்தைக் கவனியுங்கள்

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்

மேலும் ஒரு சித்தர் பாடல் மூலமாக
அறிய வருவது யாதென்றால்;

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கிலச்சாணிரண்டு முழமாம்.”

அதாவது, அணுவின் அளவைப்பற்றிச் சொல்வதற்காக எழுதப்பட்ட பாடல்.

அணு, தேர்த்துகள், பஞ்சிழை, மயிர், மணல், கடுகு, நெல், விரல், சாண், முழம்
....... இப்படி போகிறது.

அணுவையும் பகுத்து நவீன அறிவியல் 2012ல் “God Particles” என்று கண்டுபிடித்ததாகச் சொன்னாலும் அதற்கு முன்பாக 1985லேயே தன் கட்டுரையில் “இறைத்துகள்கள்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(பெயரும் ஒத்துப்போனது மிகப்பெரும் ஆச்சரியமே)

நண்பர்களே, என் நோக்கம் இன்றைய அறிவியல் வளர்ச்சியை தாழ்த்தி தமிழை உயர்த்துவதாக எண்ண வேண்டாம். நம் தமிழில் நிறையவிடயங்கள் முன்கூட்டியே இருந்துள்ளது என்பதைத் தெரியப்படுத்துவதே ஆகும்.

(தொடரும்)

26/09/2018

#அறிவியலும்_தமிழும்_1



#அறிவியலும்_தமிழும்_1
********************
அனைத்து அறிவியல் சார்ந்த கருத்துகளும் ஆங்கிலேயர்கள் சொன்னதாகவே நினைத்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்காகவும், தமிழில் உள்ள அறிவியல் விடயங்களை அறிந்து கொள்ள நினைக்கும் ஆர்வலர்களுக்காகவும் எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் பதிவிடலாமே என்று எண்ணியதன் விளைவாகவே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். பிழை இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டலாம்.

நாம் சில சமய இலக்கியங்களை மத ரீதியாக மட்டுமே அணுகாமல் அறிவியல் ரீதியாகவும் அணுகினால், கண்டிப்பாக பல விடயங்களை நம்மால் வெளியில்கொண்டு வர முடியும் என்பது என் திண்ணம்.

அண்டத்தின் தோற்றம்
**********************
அணுவைப்பற்றியும், கோள்களைப்பற்றியுமான தெளிவு ஆங்கிலேயர்களுக்கு வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் தமிழர்களுக்கு வந்துவிட்டது நண்பர்களே. கடந்த நூற்றாண்டில்தான் பெருவெடிப்புக் கொள்கையே (Bigbang theory) வருகிறது. ஆனால், நம் தமிழ்ப்பாடல்கள் அதற்கு முன்பாகவே அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?!!

நாம் வாழும் பூமி ஒரு சூரிய குடும்பத்தில் உள்ளது, ஒரு சூரிய குடும்பம் என்பது ஒரு சூரியனை மையமாகச் சுற்றிவரும் பல கோள்களையும் பல துணைக்கோள்களையும் கொண்ட ஒரு குடும்பம். இப்படி எத்தனையோ சூரிய குடும்பங்கள் சேர்ந்த ஒரு அமைப்பே பால்வீதி (கேலக்ஸி) எனப்படும். இப்படி எத்தனையோ பால்வீதிகள் சுற்றிவரும் அமைப்பே அண்டம் எனப்படும். இப்படி எத்தனையோ கோள்கள் சுற்றிவரும் அமைப்பே நம் பேரண்டம் என்று, தற்போதுதான் (போன நூற்றாண்டில்தான்) அறிக்கை வெளியிடுகிறார்கள்.

ஆனால், 9ஆம் நூற்றாண்டில் வந்த மாணிக்கவாசகர் எழுதிய கீழ்வரும் திருவாசகப் பாடலைப் பாருங்களேன்.
நீங்களே அறிந்து கொள்வீர்கள் தமிழனின் விஞ்ஞானம் பற்றிய மெய்ஞானத்தை.

இதோ பாடல்
**************
அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரைய..

விளக்கம்:
**********
அண்டத்தில் அடங்கியுள்ள அழகான மிகப்பெருங் காட்சியின் ஒவ்வொன்றாக அதன் அழகு பற்றிச் சொல்வதானால் 101 கோடிக்கும் மேலாக விரியும். எப்படியென்றால், மேற்கூரையில் இருக்கும் சிறிய துளையின் வழியாக வீட்டுக்குள் புகும் சூரியக்கதிரில் காணப்படும் நெருங்கிய துகள்களைப்போல் இருக்கும்.

இதைவிட எப்படிச் சொல்ல முடியும் உறவுகளே?!?

அடுத்து அண்டத்தின் ஆதாரமான அணுவைப்பற்றி பார்ப்போம்.

(தொடரும்)

24/09/2018

என்ன ஆளய்யா இவன்?

என்ன ஆளய்யா இவன்?
**********************
ஓன்றாய் நாமிருந்தோம்
ஒருசேர தூக்கிவந்தான்
ஓரிரு நாட்கள் மட்டும்
ஒன்றோடு உறவாண்டான்...

எடுத்த ஒன்றை விட்டுவிட்டு
அடுத்த ஒன்றைத் தொடுகின்றான்

மீண்டும் ஒன்றைத் தொலைத்துவிட்டு
மீண்டும் ஒன்றைத் தேடுகின்றான்

என்ன இவனென்று
என்னிடம் கேட்கின்றன
இன்னும் தொலையாத
மிஞ்சியுள்ள பேனாக்கள்...

✍️செ. இராசா

#நான்_தொலைக்கும்_பேனாக்கள்

#மலைச்சாரல்_காற்றே_வா



#மலைச்சாரல்_காற்றே_வா
மழைத்தூரல் தூவிட வா
தமிழ்ச்சாரல் காற்றே வா
கவித்தூரல் தூவிட வா

கடலை நுகர்ந்து
கருமை(வை) சுமந்து
வளியில் உலவிடும் மேகம்- நீ
குளுமை மிகுந்து
துளியாய்க் கசிந்து
தூவிடும் சாரலே கானம்

(மலைச்சாரல் காற்றே வா...)

வார்த்தை எடுத்து
வரியாய்த் தொடுத்து
வார்க்கிற கவியின் மூலம்- தமிழ்
மறையைப் படித்து
மனத்தில் ருசித்து
கோர்க்கிற கவியே பேசும்!

(மலைச்சாரல் காற்றே வா...)

✍️செ. இராசா

23/09/2018

துணிவோடு வா


துன்பங்கள் உன்னிடம்
.....................தொடர்ந்து வந்தாலும்
துன்பத்தில் உன்மனம்
......................துவண்டு போனாலும்
பணிவோடு கனிவான
..................பண்போடு நண்பா
துணிவோடு போராடி வென்றிடவா!

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

சொந்தமும் பந்தமும்
....................சூழ்ச்சி செய்தாலும்
நொந்திடும் உன்மனம்
....................வெந்து நின்றாலும்
கனிவோடு பணிவான
....................கருத்தோடு நண்பா
துணிவோடு போராடி வென்றிடவா!

💪💪💪💪💪💪💪💪💪💪💪
✍️செ. இராசமாணிக்கம்
*************
குறிப்பு: நான் எந்தக்கட்சியையும் சேர்ந்தவனில்லை.

22/09/2018

திருநீறு


*******
வருவது எல்லாம் போவது திண்ணம்
இருப்பது எல்லாம் அழிவது திண்ணம்
நெஞ்சில் இதனை நிறுத்திட வேண்டி
நெற்றியில் இடுவோம் திருநீறு!

ஆக்ஞ சக்கரம் இருக்கிற இடத்தில்
ஆத்ம ஞானம் விழிப்புறும் இடத்தில்
தொட்டுத் தொட்டு தூண்டிட வேண்டி
பட்டையாய்ப் போடுவோம் திருநீறு!

நீரில்லா நிலங்கள் அழிவதுபோலே; திரு
நீறில்லா நெற்றியும் பாழ்படுமென்று: திரு
நீறினைப் பூசிடச் சொன்னவர்கள்: திரு
நீறினைப் புரிந்த சித்தர்களே!

21/09/2018

நெஞ்சோடு


எப்போதும் என்னோடு
இருக்கின்ற என்னெஞ்சே..
தப்பேதும் செய்யாமல்
வலிக்கின்றாய் ஏன்நெஞ்சே?!

அன்போடு துள்ளிவர
இன்புற்ற என்னெஞ்சே?
இன்றைக்குத் தயங்கிவர
துன்புற்றாய் ஏன் நெஞ்சே?!

வண்டாகி வருகையிலே
வரவேற்ற என்னெஞ்சே..
துண்டாகித் தூங்கையிலே
துயருற்றாய் ஏன் நெஞ்சே?!

கவிதையாய்ப் பிறக்கையிலே
களிப்புற்ற என்னெஞ்சே..
கற்பனையில் பிழையென்றால்
கலங்குகிறாய் ஏன் நெஞ்சே?

19/09/2018

குறுங்கவிதை

பாவத்திற்குத் தண்டனையாய்//
மூக்கு உடைக்கப்படுகிறது//
மரணத்தீர்ப்பில் எழுதுகோலுக்கு//`

18/09/2018

112வது கவிச்சரம்- பஞ்ச பாண்டவர்கள்

112வது கவிச்சரம்

🌸🌼🌸🌼🌼🌸

தமிழ்த்தாய் வணக்கம்
*********************
ஆதியிலே வந்தமொழி
ஆதவனாய் நின்றமொழி

அத்தனைக்கும் மூத்தமொழி!
அம்மையப்பர் சொந்தமொழி

எந்தன்மொழி எந்தைமொழி
எங்கள்பிள்ளை பேசும்மொழி

அம்மொழியாம் தமிழ்மொழியை
அகமொழியில் வணங்குகிறேன்
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
ஏது தலைப்புகள் கொடுத்தாலும்
சேது அண்ணா கலக்கிடுவார்!

ஐக்கூ சென்றியூ என்றாலும்
நச்சென நன்றாய் எழுதிடுவார்!

களஞ்சியம் போட்டிகள் வந்தாலே
கவிச்சரம் தானெனக் காட்டிடுவார்!

உவமைக் கவிதை வடிவத்திலே-நம்
உள்ளம் கவர்ந்த நாயகரை
மனதால் மொழியால் வாழ்த்துகிறேன்!
மகிழ்வுடன் அவரை வணங்குகிறேன்!

வாழ்க வளமுடன் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சபை வணக்கம்
***************
நவ ரத்தினக் கற்களைப்போல்
நவ கிளைகள் கண்டசபை!

இந்திய எல்லைவிட்டு
இலங்கையிலும் கொண்டசபை!

எத்தனயோ கிளை பரப்பி
எங்கெங்கும் பரவும் சபை!

எங்கள் சபைப் பட்டறையை
என்தமிழால் வணங்குகிறேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பஞ்ச பாண்டவர்கள்
*******************
சந்திரவம்சக் குலம்தன்னில்
பாண்டு மன்னரின் பிள்ளைகளாய்
பஞ்ச பாண்டவர் பிறந்தனரே...

பாண்டு அரசரின் முன்னவனாம்
திருதராஷ்டிரர் பெற்றெடுத்த
நூறு கவுரவர் வந்தனரே...

ஐந்தும் நூறும் சண்டையிட
ஐந்தின் துணையாய் கண்ணன்வர
ஐந்தால் நூறை வென்றனரே...

எண்ணிக்கை என்பது பொருட்டல்ல
எண்ணங்கள் என்பதே பொருட்டாகும்!
நம்பிக்கை மிகுந்த எண்ணத்தினால்
நன்மைகள் நிச்சயம் நடந்தேறும்!

ஐம்புலன் ஆள்கின்ற மனம்போல
ஐவரை ஆண்டது கண்ணனன்றோ?!!
இச்சைகள் நூறையும் கொல்வதற்கு
இறைவனின் துணையும் வேண்டுமன்றோ?

தருமன்
*******
வில்லிலே சிறந்தவன் விஜயன்- ஆனால்
விருப்பதில் பெண்களின் பித்தன்!
ஆயிரம் யானைபோல் பீமன்- ஆனால்
அரக்கரின் குணம்கொண்ட முரடன்!

மாத்ரியின் மைந்தர்கள் இருவர்-ஆனால்
சத்ருக்கள் பயப்படாத சிறுவர்!
ஐவரிலும் சிறந்தவர் தருமர்- அவர்
ஐயமின்றி அறம்காத்த ஒருவர்!

நன்றி நவில்தல்
***************
எத்தனையோ கவிஞர்களை
ஏற்றிவிட்ட சபையினை
எளியோனின் கவிதைக்கும்
இடம்தந்த சபையினை
நன்றிகூறி விடைபெறுகின்றேன்
நன்றி! நன்றி!! நன்றி!!!

வேடிக்கை மனிதர்கள்



*********************
இறந்த சடலத்தை
இடுகாட்டில் போட்டுவிட்டு
நிலையாமை என்கின்ற
நிலைமறந்து போகின்ற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

ஏமாற்றும் கட்சிக்கே
ஏற்றத்தை தந்துவிட்டு
மாற்றமே இல்லையென்று
மாறாமல் சொல்கின்ற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

குப்பையாய் இருப்பதாக
கூப்பாடு போட்டுவிட்டு
தன்வீட்டுக் குப்பையினை
தெருவிலே வீசுகின்ற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

என்ன கொடுமையென்று
எந்நாளும் சொல்லிவிட்டு
எதிரில் கொடுமை கண்டு
எதற்கென்று ஒதுங்குகிற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

தமிழே உயர்வென்று
தரணியெங்கும் பேசிவிட்டு
தன்பிள்ளை படிப்பதற்கு
தனியார் பள்ளிசெல்லும்
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

✍️செ. இராசமாணிக்கம்

#வெற்றிபெறா_கவிதை_இது
#வேடிக்கை_மனிதர்கள்

17/09/2018

கவி வருமா? எப்பொழுதெல்லாம்?


கணங்களின் காதலிலே
கற்பனை சிறகடித்தால்
கவிதையில் பறக்கின்ற
கவிஞனாய் மாறிடலாம்!

கனங்களின் நோதலிலே
கற்றது தெளிவானால்
வரிகளை மருந்தாக்கி
வலிகளை ஆற்றிடலாம்!

வனங்களின் சூழலிலே
வருவது வரியானால்
தேனிலே ஊறவைத்த
கனியென்று சுவைத்திடலாம்!

அருவியின் சாரலிலே
அமைவது அடியானால்
சொல்லிலே செய்கின்ற
கள்ளென்று பருகிடலாம்!

உச்ச அன்பெல்லாம்
உள்ளத்தில் திணிவானால்
கடவுளின் படைப்பாற்றல்
கவிதையில் கண்டிடலாம்!

16/09/2018

கவிதையும் கட்டிடமும்



அனைத்துக் கட்(டி)டமைப்பும்
அழகாய் இருப்பதில்லை!
அற்புதக் கட்(டி)டமைப்போ
அசத்தாமல் போனதில்லை!

கற்பனை எழிலோடு
கலையாய் வடிவமைத்தால்
விற்பனை ஆவதற்கு
சொற்பதம் தேவையில்லை!

எண்ணக் கருவோடு
வண்ணக் கலவைசெய்தால்
நிறைவு குறைவெனினும்
குறையாய்த் தெரிவதில்லை!

#கவிதையும்_கட்டிடமும்

15/09/2018

பொறியாளர் தின வாழ்த்துகள் 2018






எங்கெங்கு காணினும் பொறியாளராய்
எழில்மிகு இந்தியா பாருங்களேன்...
எங்கெங்கு காணினும் கல்லூரியாய்
எந்தமிழ் நாட்டைப் பாருங்களேன்...

கட்டிடக் கலைஞர் என்கின்றார்
கணினியில் கப்பல் விடுகின்றார்!
மின்னணுப் பொறிஞர் என்கின்றார்
வங்கியில் மண்டையைக் குடைகின்றார்.

எத்தனை மதிப்பெண் எடுத்தாலும்
அத்தனை பேருமே பொறியாளர்!
எங்கே எப்படி படித்தாலும்
இங்கே அனைவரும் பொறியாளர்!

போதும் போதும் தம்பிகளே
பொறியாளர் போதும் தம்பிகளே
தொழிலைக் கற்போம் தம்பிகளே
தொழிலதிபர் ஆவோம் வாருங்களேன்

#பொறியாளர்_தின_வாழ்த்துகள்_2018

ஓர் உயிரினம்

நீரிலும் நிலத்திலும் வாழும்
ஓர் உயிரினம்
குடிமகன்

13/09/2018

நன்றி நவில்தல்



நான் எனும் மண்குடத்தை
நான் செய்ய முயலுகையில்
அணிந்துரை எழுதித்தர
அருமை அண்ணா சம்மதித்தார்!
(விக்டர்தாஸ் கவிதைகள்)

வாழ்த்துரை வேண்டுமென்று
கரூர்தம்பி (கரூர்பூபகீதன்) எனைக்கேட்க
யாரிடம் கேட்பதென்னு
யோசனை செய்கையிலே

தானே வழங்குவதாய்
தாமாக முன்மொழிந்து
வாழ்த்திய வள்ளலானார்
செல்வம் சந்திரனார்
(Selvam Chandran)

யாரிவர்?!
*********
பன்னாட்டு நிறுவனத்தில்
பல நாட்டு நபர்களோடு
நம் நாட்டு நண்பராக
என்னோடு பயணிப்பவர்...

என்ன சிறப்பு?
*************
எண்ணத்தைச் சொல்லாக்கி
எழுதுகின்ற கிறுக்கன் நான்!
எண்ணத்தை செயலாக்கும்
எழுச்சிமிகு இளைஞர் அவர்!

மரமொன்றும் வளர்க்காத
மரமண்டை மனிதன் நான்!
மரங்களை நேசிக்கின்ற
மரநேய மனிதனவர்!

யாருக்கும் செய்வதிலே-அன்று
ஊரறிந்த கஞ்சன் நான்!
ஊருக்குச் செய்வதிலே
உண்மையிலே வள்ளலவர்!

அது மட்டுமா?!!

இயற்கை விவசாயமோ
இவருக்கு அத்துப்படி!
இந்திய நாட்டு மாடுகளோ
இவருடைய மனையின் பிடி!

வெளிநாட்டில் இருந்தாலும்
உள்நாட்டில் இவர்மூச்சு!
பொறியாளர் ஆனாலும்
அறம்போற்றும் தமிழ்ப்பேச்சு!

கட்டுரை எழுதுவதில்
கைதேர்ந்த எழுத்தாளர்!
கருத்துரை வழங்குவதில்
கருணைமிகு ஆசிரியர்!

கேப்பையும் கூலும் வைத்து
கைபோட்டு சாப்பிடுவார்!
போலி உலகத்திலே
பொய்யின்றிப் பழகிடுவார்!

இவருக்கு பெருமை செய்ய
இத்தனை நாள் ஆகியதில்
எனக்கிருந்த மனச்சுமையை
இன்றேதான் இறக்கி வைத்தேன்!

வாழ்க வளமுடன் நண்பரே!
வாழ்க வளமுடன் ஐயா!

✍️செ. இராசமாணிக்கம்

(புகைப்படம் எடுத்தவர்: திரு. Riaz Ahamed அவர்கள்)
— with Selvam Chandran.

மனதை அறிய

மனதை அறியும் முயற்சியெனில்- உன்
மனதை அறிய முயன்றிடுவாய்- பிறர்
மனதை அறிய முற்பட்டால்- உன்
மனதில் சுமையைப் பெற்றிடுவாய்!

அறிவின் ஆழம் (குறளின் குரலில்)


அலைகள் மிகுந்த கடற்கரையில்
ஆழம் அதிகமாய் இருப்பதில்லை- அஃதே
ஆட்டம் மிகுந்த மனிதர்களின்
அறிவும் ஆழமாய் இருப்பதில்லை!

நிறைந்த குடங்கள் ஒருபோதும்
நீரைத் தழும்ப விடுவதில்லை- அஃதே
நிறைந்த ஞானம் ஒருபோதும்
நிலையில் தவறி வீழ்வதில்லை!

நரியும் நாயும் குரைத்தாலும்
பரிதியின் புகழோ குறைவதில்லை- அஃதே
மற்றோர் ஆயிரம் சொன்னாலும்
கற்றோர் புகழும் குறைவதில்லை!

✍️செ. இராசமாணிக்கம்

முயற்சி விநாயகரே


முயற்சியில் முடியா காரியம்
உலகில் உள்ளதாய் நினையாதே!
முயற்சியில் வெற்றியைத் தருகின்ற
உகரக் கடவுளை மறவாதே!

முயற்சியே திருவினை ஆகுவதால்
முயல்வதை வாழ்வில் நிறுத்தாதே!
முயற்சியில் அருள்மிகு விநாயகரே
முக்தியை அளிப்பார் மறவாதே!

முயன்றும் எதுவும் முடியலையா?!
முன்வினைச் செயலென அறிந்திடுவாய்!
முன்வினைத் தடைகளை அறுத்திடவே
முதல்வனின் கால்களில் வீழ்ந்திடுவாய்!

முயற்சியை என்றும் நிறுத்தாது
வாழ்க்கையில் தினமும் முயன்றிடுவாய்!
முயற்சியின் இலக்கினை அடைவதற்கு
விநாயகர் துணைவர வேண்டிடுவாய்!

---------செ. இராசா------
(போன வருடம் எழுதியது. இப்போதுதான் விநாயகர் அருளால் இங்கே அரங்கேறுகிறது)

அனைவருக்கும் #இனிய_வினாயகர்_சதுர்த்தி_வாழ்த்துகள்_2018

12/09/2018

சிறுவர் பாடல்---கிளியே கிளியே



கிளியே கிளியே கிளியக்கா!
கிளையில் அமர்ந்த கிளியக்கா!
கொஞ்சிப் பேசும் கிளியக்கா!
கொத்தும் பாம்பைப் பாரக்கா!

குயிலே குயிலே குயிலம்மா!
கூவும் குயிலே குயிலம்மா!
கழுகைப் பார்த்தேன் குயிலம்மா!
கவலை இனிமேல் வேண்டாம்மா!

கழுகே கழுகே வாராயோ!
கடவுள் போலவே வாராயோ!
பருந்தே பறந்து வாராயோ!
பறவை இனத்தைக் காப்பாயோ!

✍️ஆக்கம்: செ. இராசா

மனதுக்குள் மல்யுத்தம்


வைத்த மணிக்கடிகை
வைகறையில் சத்தமிட
மீண்டும் தூங்குகையில்
மனதுக்குள் மல்யுத்தம்

சினத்தினை கொல்லவேண்டி
சிந்தையிலே ஏற்றிவிட்டு
மீண்டும் சீறுகையில்
மனதுக்குள் மல்யுத்தம்

நாக்கை அடக்கவேண்டி
நாளெல்லாம் பேசிவிட்டு
மீண்டும் மீறுகையில்
மனதுக்குள் மல்யுத்தம்

கெட்ட பழக்கத்தை
விட்டிடவே முடிவெடுத்து
மீண்டும் தொடுகையிலே
மனதுக்குள் மல்யுத்தம்

புதியதைப் புகுத்தவேண்டி
புதியதாய் முடிவெடுத்து
மீண்டும் மறக்கையிலே
மனதுக்குள் மல்யுத்தம்

எத்தனையோ மல்யுத்தம்
எந்நாளும் போடுகிறோம்
மனதுக்குள் வேண்டாமே
மறுபடியும் மல்யுத்தம்....

11/09/2018

நேரமில்லை....நேரமில்லை





அவசர உலகத்தில்
அனைவரும் சொல்வது
நேரமில்லை....நேரமில்லை...

நேரமில்லை என்று சொல்லும்
நேரமில்லா உறவுகளே...
நேரமில்லை என்று சொல்ல
நேரம் தந்த காரணத்தால்
நேரமில்லா உங்களுக்கு
நேரமொதுக்கி நான் எழுதும்
நேரம் பற்றிய படைப்பு இது
நேரமிருந்தால் படியுங்களேன்..

நேரம் தந்து யோசித்தால்
நீங்களும் சொல்வீர்கள்;
நேரமில்லை என்பது
மடத்தனமென்று

இரவெல்லாம் வேலையென்று
விடியவிடிய தூங்கிவிட்டு
கூவாமல் இருப்பதாய்
சேவல்கள் சொல்வதில்லை
நேரமே இல்லையென்று...

சேர்த்தது போதுமென்று
சோர்விலே உறங்கிவிட்டு
தேடாமல் இருப்பதாய்
தேனீக்கள் சொல்வதில்லை
நேரமே இல்லையென்று....

பிறப்பு முதல் இறப்பு வரை
இருக்கின்ற உடலுக்குள்
இயங்குகின்ற உறுப்புகள்
இளைப்பாறப் போவதில்லை
நேரமே இல்லையென்று...

ஆனால்
மனமுள்ள மனிதனுக்கோ
மணிநேரம் இல்லையாமாம்

அரட்டை அடிக்க நேரமுண்டு
ஆடிக்களிக்க நேரமுண்டு
இணையம் தேட நேரமுண்டு
ஈ குறியீடனுப்ப நேரமுண்டு
உலகை வசைபாட நேரமுண்டு
ஊதியம் சேர்க்க நேரமுண்டு
எள்ளி நகைக்க நேரமுண்டு
ஏறி மிதிக்க நேரமுண்டு
ஐந்தில் மயங்க நேரமுண்டு
ஒன்றைத் தூற்ற நேரமுண்டு
ஓய்வை நீட்ட நேரமுண்டு
ஔவியம் கொள்ள நேரமுண்டு

ஆனால்

அன்போடு பேச நேரமில்லை
ஆசையோடு கொஞ்ச நேரமில்லை
இனியநூல் கற்க நேரமில்லை
ஈதலறம் செய்ய நேரமில்லை
உடலைப் பேண நேரமில்லை
ஊக்கம்தந்து வாழ்த்த நேரமில்லை
எளியோரை நினைக்க நேரமில்லை
ஏற்றியோரைக் காண நேரமில்லை
ஐங்கரனைத் தொழுக நேரமில்லை
ஒருமையில் தியானிக்க நேரமில்லை
ஓர்மையை ரசிக்க நேரமில்லை
ஔதாரியமாய் வாழ நேரமில்லை

ஐயோ.. பாவம்
உண்மையில் நேரமில்லைதான்

மனமுள்ள மாந்தர்களே...
உங்களுக்கு நேரமிருக்கிறதா?!

✍️செ. இராசா

(நேரமிருந்தால் கருத்துச் சொல்லுங்கள்)

09/09/2018

கவிஞனும் ரசிகனும்


கணத்தின் துளியை மனத்தில் ஏற்றி
அனுபவக் கோப்பையில் அதனை ஊற்றி
கற்பனைச் சாற்றில் கருவினைக் கலந்து
கவிதையில் வடித்துத் தருபவன் கவிஞன்!

மோனத்தில் பிறந்த ஞானத்தின் கருத்தை
அணுவில் அணுவாய் அகத்தில் நுழைத்து
அருந்தும் சுகத்தில் அகிலத்தை மறந்து
கருவில் லயித்து ருசிப்பவன் ரசிகன்!

✍️செ. இராசமாணிக்கம்

(கவிஞனின் ரசிகனாய்
அண்ணனின் அடிபொடி)

குடி_உடலையும்_உறவையும்_கொல்லும்



நீ என்னருகில் வந்த முதல்நாளில்
நான் அப்படி நினைக்கவில்லை
நீ என்னை மேலும் நெருங்குவாயென...

நீ என்னோடு நெருங்கிய நாட்களில்
நான் அப்படி நினைக்கவில்லை
நீ என்னோடே இருக்கப்போகிறாயென

நீ என்னோடு கலந்தது இருக்கையிலோ...
நான் எதுவே நினைப்பதில்லை
நீ எங்கே நினைக்கவிட்டாய்?!!
.......

#குடி_உடலையும்_உறவையும்_கொல்லும்

08/09/2018

தமிழைப்போலவே



அருந்தும் அனைத்துமே
அற்புத ஊட்டச்சத்து- தமிழ்
தாய்ப்பால்போல...

அருகில் இருக்கையிலே
அருமை தெரிவதில்லை- தமிழ்
மனைவியைப்போல...


எத்தனைமுறை பேசினாலும்
அத்தனையும் இனிமையானது- தமிழ்
காதலியைப்போல...

அழகாய் இருந்தாலும்
ஆழமாய் இருக்கிறது- தமிழ்
கன்னிமனம்போல...

வயது முதிர்ந்தாலும்
வாலிபம் குறையவில்லை- தமிழ்
தமிழைப்போலவே...

✍️செ. இராசமாணிக்கம்
*******************************************************
குறிப்பு:

நான் எனும் மண்குடத்தில், “பணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை மிகவும் புதிய வடிவத்தில் இருந்தது என்று தம்பி Muthu நேற்று பாராட்டினார்கள்.

அந்த வடிவத்தில் இந்த கவிதை எழுத அவரின் பாராட்டுதல் மிகவும் தூண்டுதலாக இருந்தது.
மனமார்ந்த நன்றி தம்பி.

07/09/2018

அன்பு மகனின் 9வது பிறந்தநாள்





உயிரில் உருவாகி கவியில்(ன்) கருவாகி
உலகில் எனதான உறவே- நீ
புவியில் நிலையாகி ரவியைப் பலசுற்றி
கவிகள் பலபாடு மகனே!


அன்பை உருவாக்கி அருளை உனதாக்கி
உன்னை உருமாற்று உறவே- நீ
தமிழை ஊணாக்கி அறிவை ஊனாக்கி
உன்னை தரமாக்கு மகனே!

குறளைத் தினம்பாடி குரலில் அறம்பாடி
பிறப்பை மெய்யாக்கு உறவே- நீ
உறவைப் பெரிதாக்கி உலகை வசமாக்கி
சிறப்பைப் பெரிதாக்கு மகனே!

வாழ்க வளமுடன் மகனே!
வாழ்க வளமுடன் அப்பா!

✍️செ. இராசமாணிக்கம்

06/09/2018

கடந்து வந்த பாதை


கடந்து வந்த பாதையிலே- நான்
நடந்து பின்னே போகையிலே- சிலர்
தடத்தைப் பற்றிச் செல்கையிலே- அந்த
கடவுளின் வீட்டைக் காணுகின்றேன்!

ஆதியில் வந்தது யாரென்று- அந்த
ஆதின மிளகியின் பின்சென்றே- முதல்
ஆதாம் மனிதன் வழிசென்றே - அந்த(ம்)
ஆதியில் அவனைக் காணுகின்றேன்!

மனிதன் தோன்றும் முன்னாலே- வந்த
மனிதக் குரங்கின் பின்சென்றே- உயிர்ப்
பிண்டச் செல்களின் வழிசென்றே- இந்த
அண்டமே அவனாய்க் காணுகின்றேன்!

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

கவிதை

அக்கணத்தில் தோன்றுவதை
எக்கணமும் நினைவுறுத்த
சிக்கனமாய் எழுதுவதே கவிதை

பின்நாளில் பேச்சாளராவாள்

மனப்பாடப் பகுதி ஒப்பிக்கும்போது
இடையில் தண்ணீர் கேட்டபோது புரிந்துகொண்டேன்....

என் மகள் பின்நாளில் பேச்சாளராவாள் என்று....

(மறந்தத சமாளிக்கனும்ல...😀)

05/09/2018

துணிவே துணை (குறளின் குரலில்)


கற்பதைக் கசடற கற்றுவிட்டு- தொழில்
விற்பன்னர் ஆகிடத் துணியாமல்- தான்
கற்பதன் பயனே பணிக்கென்று- பலர்
பற்றிய பணிகளில் உழல்கின்றார்!

வரவுகள் குறைவா யிருந்தாலும்-தொழில்
வரவினைச் சிறிதென நினையாமல்- சிறு
வரவையும் பெரிதென மதிப்போரே- தம்
வரவினில் இன்பம் அடைகின்றார்!

எண்ணிய பின்னே தயங்காமல்- மனம்
எண்ணிய முன்னதில் தளராமல்- தான்
எண்ணிய ஒன்றில் துணிபவரே- தாம்
எண்ணிய இலக்கை அடைகின்றார்!

ஆடுமாடு சூத்திரமே.......ஆசிரியர்தின வாழ்த்துகள்



ல்லில் சிலைவார்க்கும்
கலைமிகு சிற்பியைப்போல்;
எண்ணத் தூரிகையில்
வண்ணமிடும் கவிஞனைப்போல்
மண்ணைப் பதமாக்கும்
மாண்புமிகு விவசாயிபோல்;

என்னையும் ஏற்றிவிட்ட
எண்ணில்லா ஆசிரியர்கள்
எண்ணம் முழுவதுமே
என்றென்றும் இருந்தாலும்
அதிலே சிலர்பற்றி
அன்போடு எழுதுகின்றேன்!

ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரை
அம்மாவின் ஆசிரியரே
அடியேனின் ஆசிரியர்
இராசாவின் அடித்தளமே
இராணி டீச்சர் என்று சொல்வேன்!

ஆறாம் வகுப்பொன்றில்
ஆமைபோல் இருந்தவனை
மேடையில் ஏற்றிவிட்டார்
மேதகு ஆசிரியர்...
மாணிக்கம் அவர் பெயர்

“வானாகி மண்ணாகி......
வளியாகி.........வளியாகி...
வாய்க்குள் அன்றெனக்கு
வார்த்தைகள் வரவில்லை...
கண்கள் கலங்கியது..
கால்கள் நடுங்கியது...

உடனே ஒரு குரல்
சடக்கென்று வந்ததன்று...
“பதறாதே மாணிக்கம்
பதறாதே” என்று சொல்லி
மனிதர் யாவரையும்
மாடாய் நினைக்கச்சொல்லி
மாணிக்க வாத்தியார்
மனபயம் போக்கி வைத்தார்....
மாணிக்க வாசகரும்
மனதில் ஓடி வந்தார்....
மாணிக்க வரிகளினால்- இந்த
மாணிக்கத்தின் மானம் காத்தார்!

அன்று முதல் இன்றுவரை
எங்குநான் சென்றாலும்
ஏறுகின்ற மேடைகளில்
எப்போதும் வருவதெல்லாம்
ஆசிரியர் சொல்லித்தந்த
ஆடுமாடு சூத்திரமே....

பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு நானொன்றாய்
படிப்பில் தேறாது
பதராய் இருந்தவனை
பத்தாம் வகுப்புதனில்
முதல்நிலை ஆகவைத்த
நல்லமுத்து ஆசிரியர்
நல்ல தலைமை ஆசிரியர்!

இன்னும் இன்னும்
என்னுள்ளே எத்தனையோ ஆசிரியர்கள்
அனைவருக்கும் சொல்லுகிறேன்
ஆசிரியர்தின வாழ்த்துகள்...

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

04/09/2018

சாக்கடைச்சாத்தானை..............

போக்கிடம் போகின்ற
சாக்கடைச்சாத்தானை
நாக்கிலே சொல்லவே நாக்கூசுதே——///——

நஞ்சினைத் தந்தவள்
பிஞ்சினைக் கொன்றதை
நெஞ்சிலே எண்ணவே முடியலையே

03/09/2018

நீதான் என் பிரபஞ்சமே


நீ என் சுவாசத்தின் காற்றானாய்
நீ என் கண்களின் காட்சியானாய்
நீ என் சிந்தனையின் கருவானாய்
நீ என் கவிதைகளின் பொருளானாய்

நீ மட்டும் இல்லையென்றால்
நான் என்ற ஒன்றே இல்லை....

நீ மட்டும் இருப்பாயென்றால்
நான்கூட தொடுவேன் எல்லை

ஆம்...

நான் துளித்துளியாய் அருந்தியும் தீராத
நீதான் என் பெருங்கடலே...

நான் அணுஅணுவாய் ரசித்தும் சலிக்காத
நீதான் என் பிரபஞ்சமே...

நான் வரிவரியாய்ப் படித்தும் முடியாத
நீதான் என் திருக்குறளே...

நீ...நீதான்....நீயேதான்....!!!