31/03/2018

காவிரி




கண்களில் கட்டிய துணி
வாயிலும் கட்டப்பட்டது
காவிரி தீர்ப்பு

நீர் கேட்கும்போது மட்டும்
நான் திராவிடனில்லை
சொல்லும் கர்நாடகத்தான்

நீர் தராவிட்டாலும்
நான் திராவிடன்
சொல்லும் தமிழகத் திராவிடன்

—-செ. இராசா—-

மௌனப் போராட்டம் --99வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)

99வது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: இரண்டாமிடம்
நடுவர்: திரு. கோபிநாத் ஐயா
குழுமம்: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா

🙏🙏🙏🌸மனமார்ந்த நன்றி🌸🙏🙏🙏

 

மௌனப் போராட்டம்
**********************
கட்சிகள் நடத்திடும் போராட்டம்-அது
காட்சிக்குச் சேர்க்கிற வெறுங்கூட்டம்!
ஆட்சியை எதிர்த்திடும் போராட்டம்-அது
சாட்சிக்குச் சேர்க்கிற வெள்ளோட்டம்!

மக்கள் நடத்திடும் போராட்டம்-அது
சிக்கல் தீராத வெற்றோட்டம்!
எங்கும் நடக்கின்ற போராட்டம்-அது
இங்கே எங்களின் தொடரோட்டம்!

வாழ்க்கையே தினமும் போராட்டம்-அது
வாழ்வியல் போதிக்கும் முன்னோட்டம்!
வெளியே நடக்கிற போராட்டம்-அது
வெற்றியை நோக்கிடும் நீரோட்டம்!

கௌதமர் நடத்திய போராட்டம்-அது
ரௌத்திரம் இல்லா அறிவூட்டம்!
பௌத்தம் புகுத்திய போராட்டம்-அது
மௌனத்தின் விதைக்கு செறிவூட்டம்!

மனதை உயர்த்திடும் போராட்டம்-அது
மனிதனின் வாழ்வை செழிப்பூட்டும்!
மதியை செதுக்கிடும் போராட்டம்-அது
விதியை மாற்றிட வழிகாட்டும்!

மனிதா மனிதா போராடு- நீ
மனிதத்தை உயர்த்திடப் போராடு!
மனிதா மனிதா போராடு- நீ
மனிதனாய் மௌனமாய்ப் போராடு!

—-செ. இராசா——


https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=99%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF 


30/03/2018

தாயில் சிறந்தத் தத்துவனே



திருவாசகத் தேன் சொரிந்த
திருப்பெருந்துறை ஊரினிலே
அருவமாய் அவனிருக்கும்
அற்புதத்தை யாதுரைப்பேன்?!

அரனுடைய கோவில்களில்
அதிசயக் கோவிலென்றால்
ஆத்மநாதர் வீற்றிருக்கும்
ஆவுடையார் கோவிலாகும்!

யோகசக்தி வடிவான
யோகாம்பாள் துணையோடு
இறையருளைப் பொழிகின்ற
இறைவனின் கோவிலாகும்!

சிந்தனையை சிலிர்க்க வைக்கும்
சிற்பக்கலை சிலைகளாக
ஆலயம் முழுவதுமே
அங்கேங்கே இருந்தாலும்
ஆத்மாவாய் வீற்றிருக்கும்
சிவனுக்கும் சிலையில்லை!
சக்திக்கும் சிலையில்லை!
இருவருக்கும் காட்டுகின்ற
இறைதீபம் அங்கு இல்லை!
கொடிக்கம்பம் பலிபீடம்
கோவிலிலே காணவில்லை!

மனிதனாய் பிறந்திருந்து
புனிதனாய் மாறிநின்று
திருமொழியாம் தமிழாலே
திருவாசகத் தேனளித்த
மாணிக்கவாசகரே
மரியாதை நேசரிங்கே...

ஆயிரம் வருடங்களாய்
ஆகிநின்ற போதிலும்
அவர்செய்த திருநூலும்
அவர்பெருமை சொல்கிறது...
அழகான பொக்கிஷமாய்
அதுவும் அங்கே இருக்கிறது....

மூலிகை ஓவியங்களோ
மூத்த கதை சொல்கிறது...
கற்சிலைச் சிற்பங்களோ
காவியங்கள் சொல்கிறது...

கல்லில் செய்த சங்கிலியோ
கண்கொள்ளாக் காட்சியாக
அந்தரத்தில் தொங்குவது
ஒரு பானை சோற்றிர்க்கு
ஒரு பருக்கைச் சோறாகும்...

அருவுருவ சிவலிங்கம்
அரனுடைய வடிவமெனில்
அருவம் அ(இ)ல்லா ஆத்மாவும்
ஆண்டவனின் வடிவமாகும்..

தாயில் சிறந்தத் தத்துவனின்
கோயில் சென்று வணங்கிடவே
நாயடியேன் வேண்டுகின்றேன்!
நாயகனைப் போற்றுகின்றேன்!

——செ. இராசா——-

(என்னை இக்கோவிலுக்கு கூட்டிச்சென்று காண்பித்த அன்புத்தம்பி திருR Thanga Pandiananக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்)

28/03/2018

காதலின் சிறப்பு (குறளின் குரலில்)



அன்பான தன்னவனும்
அகத்தினிலே இருப்பதினால்
தேநீரைக் குளிரவைத்து
தேன்போல சுவைக்கின்றாள்...

கண்ணுக்குள் கருமணியாய்
காதலனே இருப்பதினால்
காண்கின்ற பொருளெல்லாம்
தானென்றே உணர்கின்றாள்...

உடலோடு உயிராக
உரியவனே உறைவதினால்
தன்னுடம்பே அழகென்று
தன்னையேக் கொஞ்சுகின்றாள்....

—- செ. இராசா—-

ஓரு வேண்டுகோள்



பிள்ளை வரைந்த ஓவியத்தை- சரி
இல்லையென யாம் சொல்வோமா?-இல்லை
ஆகா அருமை எனச்சொல்லி- அவை
நோகா வார்த்தைகள் சொல்வோமா?!

விளைந்திடத் துடிக்கும் பயிர்களை-நாம்
முளையில் கிள்ளுதல் சரிதானா?- அஃதே
எழுதிட முயன்றிடும் புதியவரை- நாம்
ஏளனம் செய்வதும் முறைதானா?

குறைகளைக் களைவது தவறில்லை-வெறும்
குறைகளாய்க் காணுதல் தவறாகும்- அஃதே
நிறைகளைப் புகழ்வது தவறில்லை- ஆனால்
நிறையவே புகழ்வது தவறாகும்!

எழுதிடும் அனைத்தும் கவிதையென்று- சிலர்
எண்ணிடும் கருத்தும் சரியில்லை!- அஃதே
எடுத்துச் சொல்லிடும் கவிஞர்களை-சிலர்
எள்ளி நகைப்பதும் சரியில்லை!

எண்ணத்தை எழுத்தாய் மாற்றிடுவோம்- நம்
எண்ணம்போல் நாமும் உயர்ந்திடுவோம்- நம்
எழுத்தில் புதுமை கண்டிடுவோம்- நாம்
எழுதிடும் முறைமையைப் பயின்றிடுவோம்!

—- செ. இராசா—-

(அன்பு அண்ணா கவிஞர். விக்டர்தாஸ் அவர்களுடன் நேற்று உரையாடியபோது
கவிதைபற்றிப் பேசிய கலந்துரையாடலின்
கவிதை வடிவம் இது)

27/03/2018

தமிழ்-3



ஒலியாக ஒரு வடிவம்
வரியாக மறு வடிவம்
இரண்டுமே மொழிக்கென்று
இருக்கின்ற பொது வடிவம்

இருவடிவும் உயிர்ப்போடு
இல்லாத மொழிகளுண்டு....
வரிவடிவம் இல்லாது
வழக்கிழந்த மொழிகளுண்டு..
ஒலிவடிவைப் பதியாது
ஒழிந்துபோன மொழிகளுண்டு...

ஒலியோடும் வரியோடும்
ஒன்றாகப் பயணித்து
சுயமாகத் தன்னெழுத்தை
நயமாக உருசேர்த்து
காலத்தின் ஓட்டத்தில்
காணாமல் போகாது
ஞாலத்தில் சிறக்கின்ற
நல்மொழிகள் சிலவற்றில்
செம்மொழியாய்த் திகழ்கின்ற
நம்மொழியைப் போற்றிடுவோம்

வாழ்க தமிழ்!

—-செ. இராசா

24/03/2018

ஆறுதல் மொழி



எதை நான் எடுப்பதென்றும்
எதை நான் விடுவதென்றும்
என்னுள்ளம் படும்பாட்டை
எங்கே நான் முறையிடுவேன்...?!!

வந்தவற்றில் மகிழ்வேனா
வராதவையால் வருந்துவேனா?!
யாதென்று சொல்லிடுவேன்
யாரிடம் நான் முறையிடுவேன்...?!!

ஒன்றாய்ப் பிறந்தவற்றில்
ஓரவஞ்சனை செய்தேனாம்...
வராத அத்தனையும்
வாய்விட்டு அழுகிறதே.....

ஒன்றாய் அவை கூடி
ஓ... வென்று அழும்சத்தம்
ஓரமாய் என் காதில்
ஓயாமல் ஒலிக்கிறதே.......

அனைத்தையும் ஏற்றிடவே
ஆசையுடன் முயன்றேனே....
ஆயினும் அதனுள்ளே
அடக்கிட முடியலையே.....

அடுத்த புத்தகத்தில்
அனைவருமே சென்றிடலாம்...
அதுவரையும் உறவுகளே
அன்போடு வாழ்த்துங்களேன்....

#அச்சில்_ஏறாத_கவிதைகளுக்கு_ஆறுதல்_மொழி

21/03/2018

போதிமரம்



ஒரு மரம் மட்டுமா போதிமரம்?!!!
அனைத்து மரங்களுமே போதிமரம்..

ஆம்.....

முன்பும் போதித்தது
இன்றும் போதிக்கின்றது
இனியும் போதிக்கும்

ஆமாம் என்ன போதித்தது?

வெட்டினாலும் தாங்குகின்ற
பொறுமையைப் போதித்தது!
வெட்ட வெட்ட தளிர்க்கின்ற
தன்னம்பிக்கையைப் போதித்தது!

மழைதரும் காரணியாய்
செய்நன்றி போதித்தது!
வளைத்தாலும் வளையாத
நேர்மையைப் போதித்தது!

இலையுதிர் காலத்தில்
நிலையாமை போதித்தது!
இறந்தாலும் வாழ்கின்ற
புகழுடைமை போதித்தது !

தன்வேரில் நீருறிஞ்சி
நுனிவரைக்கும் எடுத்துச்சென்று
தன்னையே நிமிர்த்துகின்ற
அறிவினைப் போதித்தது!

அடிவேரில் கிளைபரப்பி
பெருங்காற்றில் தலையாட்டி
அழிவினைத் தாங்குகின்ற
ஆற்றலைப் போதித்தது!

எவ்வுயிரும் இளைப்பாறும்
பல்லுயிர்ப் புகலிடமாய்
என்றென்றும் தருகின்ற
ஈகையைப் போதித்தது!

ஒரு மரம் மட்டுமா போதிமரம்...
அனைத்து மரங்களுமே போதிமரம்..

இனிய உலக வன தின வாழ்த்துகள்...
இனிய உலகக் கவிதை தின வாழ்த்துகள்

--செ. இராசா---

20/03/2018

அம்மன் பட்டி-2


 
செம்மை குறையாத
சிவகங்கைச் சீமையில
அன்பு குறையாத
அம்மன்பட்டி கிராமமுங்க....

என்னப்பா ராசான்னு
எல்லோரும் அழைப்பாக...
சூதுவாது இல்லாமல்
சொந்தமாவே நினைப்பாக...

வீட்டுக்கு ஒருத்தருன்னு
வெளிநாட்டில் இருப்பாக...
எப்போதோ ஒருமுறைதான்
ஊருக்கு வருவாக....

வரும்போது எல்லோரும்
வளமாத்தான் வருவாக....
வந்தவேலை முடிஞ்சதுன்னா...
வந்தவழி போவாக...

வானம் பாத்த பூமியிலே
வாழவழி இல்லேன்னு
காடுபோகும் காலம்வரை
கடைசிவரை உழைப்பாக....

சாதிமதம் பார்க்காமல்
சமத்துவமா வாழ்வாக...
பஞ்சாயத்துத் தேர்தல் மட்டும்
பிணக்கில் சிலர் இருப்பாக...

மத்தபடி எல்லோருமே
மனிதநேய தெய்வமுங்க....
எந்த ஊரு போனாலும்
எங்க ஊரே சிறப்புங்க...

கலக்கலாய் நடிக்கின்ற
கூல் சுரேசு ஊருங்க (Cool Suresh)
நினைத்ததைக் கிறுக்குகின்ற
நானும் அந்த ஊருங்க...

சொந்தவூர நினைச்சாலே
சிந்தையெல்லாம் குளிருதுங்க.....
சொந்தமான ஊரு சனம்
எந்தன் முன்னே தெரியுதுங்க...

—-செ. இராசா—-

(ஊரைப்பற்றி எழுதச்சொன்ன தம்பி Raja Sumithra விற்கும் திரைத்துறையில் வளர்ந்துவரும் மாப்பிள்ளை சுரேஷிற்கும் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்

19/03/2018

மாறு மாற்றம் வரும்....களஞ்சியம் கவிதைப்போட்டி (97)- வெற்றிக்கவிதை


97வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், மூன்றாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. வசந்த் சுப்பையா ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



மாறு மாற்றம் வரும்
*******************
ஊரெல்லாம் சேறென்றும்
பாரெல்லாம் தீதென்றும்- இங்கே
யாரெல்லாம் சொல்கின்றார்?!!

ஆட்சிகள் மாறும்போதும்
காட்சிகள் மாறாத போதும்- யார்
சாட்சியாய் இருக்கின்றார்?!

வாக்கினை விற்றுவிட்டு
வாக்காளரைத் தேர்ந்தெடுத்து- யார்
வாய்கிழியப் பேசுகின்றார்?!

உள்ளூர் பொருள் தவிர்த்து
வெளியூர் பொருள் நுகர்ந்து- யார்
நம்மூரை நசுக்குகின்றார்?!!

தமிழ் பள்ளியில் சேர்க்காமல்
தமிழ் மொழியில் பேசாமல்- யார்
தமிழைத் தாழ்த்துகின்றார்?!

அறநூற்கள் பயிலாமல்
மனநூலைத் திருத்தாமல்- யார்
முகநூலில் போதிக்கின்றார்?!

மாறு மாற்றம் வரும்!
மாறுவோம் மாற்றம் வரும்- நாம்
மாறினால் மாற்றம் வரும்!

—-செ. இராசா—-

 https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=vasanth%2097

பழைய கஞ்சி







அன்பான மனைவி இன்று
அமிழ்தமான உணவளித்தாள்....
ஆனாலும் அவளுக்கு
அவ்வுணவில் விருப்பமில்லை

அசதியில் சில கணங்கள்
அவள் இன்று உறங்கியதால்
அதிகாலை உணவுசெய்ய
அவளாலே இயலவில்லை....
அதனாலே வருத்தத்துடன்
அவளெனக்கு உணவளித்தாள்....

ஆனாலும் அவளுக்கு
அவ்வுணவில் விருப்பமில்லை....
அன்பாலே நீ அளித்த
அனைத்து உணவிலுமே
அற்புத உணவென்றால்
அது இந்த அமிழ்தமென்றேன்......
ஆனாலும் அவளுக்கு
அதில் ஏனோ விருப்பு இல்லை...

அருகில் உள்ளவர்கள்
ஆயிரம் சொன்னாலும்
அனைவரும் நாடுவது
அலைவழி தானென்று (google )
அவ்வுணவின் பெருமை பற்றி
அலைபேசி வழியாக
அவளுக்குக் காட்டினேன் ...

ஆச்சரியம்....ஆச்சரியம்...........

நான் உண்ணும் உணவே
அற்புத மருந்தாமாம்...........
புற்று நோய் தடுக்கின்ற
பாக்டீரியா உள்ளதாமாம்..........
அதற்கான காப்புரிமை
அமெரிக்கனிடம் உள்ளதாமாம்....

அதிக விலை வைத்தே
அவன் அங்கே விற்கின்றான்..
அமெரிக்க நாட்டில் வாழும்
ஆண்டர்சனே சொல்லுகின்றான்..........
(MD Anderson cancer cure centre)

ஆனால் நாமிங்கே
அலட்சியமாய் எண்ணுகின்றோம்...
அவளிடம் எடுத்துச்சொல்லி
அமுதத்தை நான் உண்டேன்....
அதையே தரச்சொல்லி
அனுதினமும் கேட்டுக்கொண்டேன்....

அகத்தில் மகிழ்வோடு
அவளும்தான் நகர்ந்துவிட்டாள்....
ஆயினும் எனக்குள்ளே
அமைதி நிலை வரவில்லை

ஆதிகால பொருளுக்கெல்லாம்
அவனுரிமை வாங்குகின்றான்....
அனைத்தையும் இழந்துவிட்டு
அவன்பெருமை பேசுகின்றோம்

எத்தனை கொடுமை இது?
எத்தனை கொடுமை இது?

உங்களில் ஒருவனாக
உரிமையோடு வேண்டுகின்றேன்...
நோய்க்கு அஞ்சி வாழாமல்
பழைய கஞ்சி சாப்பிடுங்கள்

----செ. இராசா---

(ஆற்று நீர் வாதம் போக்கும்,
அருவி நீர் பித்தம் போக்கும்,
சோற்று நீர் இரண்டும் போக்கும்.
----நம் பண்டையத் தமிழ் சித்தர்களின் வாக்கு----)

நண்பரின் புகழாரம்



# இப்பதிவு தேவையா?
தேவையே!!!!
எவ்ளோ நல்ல விடயங்களால்
நறுமணம் வீசும்
முகநூலில்...
ஒருவர் மற்றொருவரை
பாராட்டல்
மிக அரிதாகவே...
வருத்தமான விடயமாய்!
நான்கூட
நல்ல கவிஞர்களின்
கவிதைகளால் ஈர்க்கப்பட்டு...
தானாய் முன்வந்து
ஊக்கமூட்டங்கள் செய்வேன்...
ஆனால் 90% பேர்...
அவர்கள்
படைப்புகளை பதிவிடலில்
காட்டும் அக்கறையை...
பிறர்கவனித்தலை
புறக்கணிக்கின்றனர்...
அதனால் வெறுப்புற்று,
பலரின் தொடர்பு
எல்லைகளைத் தொலைத்துள்ளேன்...


ஆக
என்ன சொல்ல வருகிறேன் எனில்...
நேரமில்லை
என்று சாக்கு சொல்லாதீர்...
தயவு செய்து
தவறுகளை சுட்டுங்கள்...
நல்லவற்றை
மனம்திறந்து பாராட்டுங்கள்
நட்பூக்களே!


இவ்வகையில்...
இன்று
எனக்கொரு சிறந்தநாள்!
தமிழ்ப்பட்டறை
நிர்வாகிகளில் ஒருவரும்...
நல்ல கவிஞருமான...
ராஜா மாணிக்கம்...
என கவிதைகளை
பாராட்டி பின்னூட்டமிட்டார்...
பெருமகிழ்வில் நான்!
இதென்ன விளம்பரம்???
புரிகிறது...
அப்படியாவது
ஒரே ஒருவரேனும்...
மற்றவரை பாராட்ட
முன்வரவேண்டும்
என்ற உத்வேகம் கொள்ளவே!
தவறாயிருப்பின்
மன்னிக்கவும் நட்பூக்களே!

# ராஜூ ஆரோக்கியசாமி

--------------------------------
கவித் தென்றல் அனுராதா கட்டபொம்மன் Raja Manickam ஒரு சிறந்த பண்பாளர். அவரை பாராட்டுவது தகும். எனக்குப் பின்னூட்டமிடுபவர்கள் பலர் படைப்பை நான் பார்ப்பதில்லை என்பது உண்மையே. நான் ஒப்புக் கொண்ட பல விஷயங்களில் - இலக்கணம் எழுதுவது உட்பட - என் நேரம் முழுதும் செலவாகி விடுகிறது. அது இல்லாமல் ஒரு நாளைக்கு சுமார் 50 தகவல்களுக்குக் குறையாமல் உள் பெட்டிக்கு வருகிறது. அவைகளையும் என்னால் கவனிக்க முடியவில்லை. என்னால் Raja Manickam போல் இருக்க முடிய வில்லையே என்ற வருத்தம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம் பொதுப் பதிவுகளைப் பார்க்கிறேன். அப்போது என் மனதைக் கவரும் வரிகளுக்குப் பின்னூட்டமிடாமல் இருப்பதில்லை. இன்று இந்தப் பதிவு கண்ணில் பட்டு என் கருத்தைக் கவர்ந்தது. பின்னூட்டமிட்டிருக்கிறேன். எல்லா பதிவுகளுக்கும் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. அப்படி பின்னூட்டமிட எனக்கு நாளைக்கு 72 மணி நேரம் வேண்டும். மேலும், நான் எதையும் எழுத முடியாது. மிக, மிக வருந்துகிறேன். அன்புடன் ''அகன்''...............................

 
நான்: 

தாங்கள் நேரம் ஒதுக்கி அருமையான மற்றும் ஆழமான பதிவு எழுதியதுகண்டு நான் மிகவும் மனம் மகிழ்கிறேன் ஐயா....

தங்களைத் தன்குருவாக பாவிக்கும் எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.....


தாங்கள் நடுவராகக் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் திருத்துவதும் தட்டிக்கொடுப்பதும் மிகப்பெரிய வேலை......
நான் அதைக்கண்டு வியக்கின்றேன்...

முகநூலில் இலவசமாக நிறைய விடயங்களைத் தாங்கள் கற்றுக்கொடுப்பது மிகப்பெரிய சேவை.

இதற்கிடையில் இந்தப்பதிவிற்கும் தாங்கள் நேரம் ஒதுக்கி பின்னூட்டம் இட்டமையில் மிகவும் மனம் மகிழ்கின்றோம்.

நன்றி ஐயா...

(நன்றிகள் அல்ல என்று தாங்கள் கற்றுக்கொடுத்தது. தங்களைப் பார்த்து வளரும் ஏகலைவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பணிவுடன் கூறிக்கொள்கிறேன் ஐயா)



கவித் தென்றல் அனுராதா கட்டபொம்மன் இலக்கணத்தை எளிமையாக்கவும், நிறைய எடுத்துக் காட்டுகளுடன் எழுதவும் ஒரு பதிவுக்கு குறைந்தது 4 நாட்களாவது பிடிக்கிறது. இதற்கிடையில் மனதில் ஊறும் கற்பனைகளை இறைத்துக் கவிதையாக்கிப் பதிவிட்டு என் மொழிவளம் மற்றும் கவி வளம் இரண்டையும் நிலை நிறுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. சக படைப்பாளிகளின் ஆவல் எனக்கும் புரிகிறது. என்னால் முடியவில்லை என்ற ஆதங்கமும் இருக்கிறது. என்ன செய்ய?

 

துளிகள்

கவிஞன் நிறைவடைந்தால்
கவிதைதான் வந்திடுமா?!!
கவிஞனின் உயிர்மூச்சே
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************
ஒரு கவிதை
இன்னொரு கவிதையைப் பிரசவிக்குமானால்
அது மிகச்சிறந்த கவிதையாகும்
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************
உருவமாய்த் தெரியும்
உரித்தால் ஒன்றுமில்லை
“நான்” வெங்காயம்போல..
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************
அழுத்தம் அதிகமானால்
சீறி எழும் சுனாமியே
#பெண்
கவிதையில் உள்ளதன்றோ...!!!
*************************************

கசிந்துருகும் கவிதையில் உணர்ச்சி மிகுந்திருக்கும்.....😃😔😭🙂❤️
தேடிப்பிடிக்கும் கவிதையில் அறிவு
மிகுந்திருக்கும்...📚📕📔
உணர்ச்சி மிகு கவிதைகளே
உயிரோட்டமான கவிதையாக இருக்கின்றன....
அவை பெரும்பாலும் தேடாத பொழுதே பூக்கின்றன......💐🌷🌸🌼
சரியா?
*************************************
இன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் பையன் கற்றுக்கொடுத்தான்;சிங்கக்குட்டி- தவறு
சிங்கக்குருளை- சரியென்று
நன்றி ஐயா-

15/03/2018

நான் கருப்பானவன்......



சிவப்பான பெண்னென்றால்
சீர்வரிசை வேண்டாமாம்...
கருப்பான ஆணொருவன்
கரிசனம் காட்டுகின்றான்

பிஞ்சு பிறந்ததுமே
அள்ளி அள்ளி கொஞ்சுகின்றான்....
பிறந்தது சிவப்பென்றால்
பல்லெல்லாம் காட்டுகின்றான்....

கருப்பாய் இருந்தாலும்
கலையாக உள்ளானாம்....
மாநிறமே ஆனாலும்
மலர்போல பேரழகாம்....

ஆமாம்,
அது என்ன "இருந்தாலும், ஆனாலும்"
அனைவருமே சொல்லுகின்றீர் ...
அடிமனதில் ஒரு கருத்தை
ஆழமாய் விதைக்கின்றீர்.....

வார்த்தையின் உள்ளர்த்தம்
வார்த்திடும் சேதி என்ன?

சிவப்பென்றால் புரட்சியென்றும்
கருப்பென்றால் துக்கமென்றும்
யார் சொன்ன அர்த்தமிது?

வெளுப்பென்றால் தூய்மையென்றும்
மஞ்சளென்றால் மகிமையென்றும்
யார் சொன்ன விளக்கமிது?

நிறத்திலே பேதம்கண்டு
நிஜத்தினை மறக்காதீர்...

மனிதனில் பேதம்கண்டு
மனிதத்தைத் துறக்காதீர்....

இப்பொழுது சொல்லுகின்றேன்...
இறுமாப்போடு சொல்லுகின்றேன்

நான் கருப்பானவன்......

--செ. இராசா---

14/03/2018

கண்ணப்ப நாயனார்


பன்றிக்கறி படையலிட
பற்றிய கரங்களோடு;
உச்சிக் கொண்டையிலே
அர்ச்சிக்க மலர் சுமந்து;
உப்பிய வாயினிலே
அபிடேக நீர் சுமந்து,
தினம் தினம் அன்போடு
திண்ணனும் பூசித்தான்!

சைவக் கடவுளுக்கு
அசைவத்தில் படையல் செய்து
பக்திப் பரவசத்தில்
பரமனோடு கொஞ்சி நின்றான்!

ஆண்டவனின் கண்ணொன்றில்
பொங்கிவந்த குருதிகண்டு
பச்சக் குழந்தைபோல
பதறியே ஓடிச்சென்று
பச்சிலை பறித்துவந்தான்!
பதமாய் சாறு விட்டான்!

குருதியும் நிற்கவில்லை!
குழப்பமும் தீரவில்லை!

கண்ணுக்கு கண்ணென்றே-
திண்ணனும் எண்ணியதால்- தன்
கண்ணைக் குத்துகின்றான்- சிவன்
கண்ணில் பொருத்துகின்றான்!

இறையின் குறை ஒன்று
இன்றோடு போனதென்று
இனியவன் மகிழயிலே;
இறைவனின் மறு கண்ணில்
இறங்கிடும் குருதிகண்டு
இம்முறை துளியளவும்
இவனுக்குள் அச்சமில்லை!

அடையாளம் அறிவதற்கு
ஆண்டவனின் விழியருகே
அவன் காலை வைக்கின்றான்!

அவன் கண்ணை குத்திடவே
அவசரத்தைக் காட்டுகின்றான்!

அப்பா! அப்பப்பா!
போதும்பா! கண்ணப்பா!

ஆண்டவன் அலறிவிட்டான்!
அவன் அன்பில் ஆடிவிட்டான்!

----செ. இராசா---------

அதோ பாரு தேரு




அதோ பாரு தேரு
ஆடி வருது பாரு
தேரு மேலே யாரு?
தெரிஞ்சா நீயும் கூறு!

ஆடி வரும் தேரில்
தேடி வரும் சாமி
நாடி வரும் நமக்கு
கோடி வரம் தருமே...

12/03/2018

85 -வது வார கவிச்சரம்---பண்டைய கால பெண்டிர்


🙏தமிழ்த்தாய் வணக்கம்🙏
**********^**************
மூத்த மொழிகளிலே
முதல் மொழியாம்
தமிழ் மொழியை
தலைகுனிந்து வணங்குகின்றேன்
தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே...🙏

🙏கவிச்சரத் தலைமை வணக்கம்🙏
********************************
பொறிஞராய் தேர்ச்சிபெற்று
அறிஞராய் பவனிவந்து
கவிஞராய் மிளிர்கின்ற
கவிச்சரத் தலைமையினை
மீனா திருப்பதி அக்காவை
கரமுயரத்தி வணங்குகின்றேன்
காலமெல்லாம் வாழ்ந்திடவே.....🙏

🙏அவை வணக்கம்🙏
**********************
ஆன்றோரும் சான்றோரும்
கற்போரும் கற்பிப்போரும்
தமிழாலே சங்கமித்த
தமிழ்ப்பட்டறை அவையினைநான்
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்....
தமிழோடு வாழ்ந்திடவே....🙏

பண்டைய கால பெண்டிர்
***********************
மாட்சிமை பொருந்திய மாந்தர்களின்
சாட்சியாய் வாழ்ந்த பெண்ணினத்தை
போற்றியே நானும் வணங்குகின்றேன்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

சீதையும் திரௌபதியும்
***********************
மண்ணில் தோன்றிய சீதையும்
நெருப்பில் உதித்த திரௌபதியும்
பாரதம் போற்றிடும் காவியங்களின்
பாத்திரப் படைப்பின் நாயகிகள்!
--------------------------------------
வில்லினை உடைக்கும் போட்டியிலே
வீரத்தைக் காட்டிய இராமனையே
வெற்றியின் பரிசாய் மாலையிட்டு
சூரியகுலம் புகுந்தாள் சீதையம்மா!

வில்வித்தை சுயம்வரப் போட்டியிலே
வீரன் விஜயனை மாலையிட்டு
விதியால் ஐவரை மணந்திடவே
சந்திரகுலம் புகுந்தாள் திரௌபதித்தாய்!
----------------------------------
பதியுடன் கழித்த வனவாசம்
பதிமூன்று ஆண்டுகள் முடிந்தவுடன்
சிறையினில் கழிந்தது ஓராண்டு!
சிறியோன் இராவணன் செயலாலே!

ஐவருடன் ஒருவராய் வனவாசம்
பனிரெண்டு ஆண்டுகள் முடிந்தவுடன்
மறைந்து வாழ்ந்தது ஓராண்டு!
சதிகார சகுனியின் செயலாலே!
--------------------------------------
இலட்சுமணக் கோட்டைத் தாண்டியதால்
இலக்கை அடைந்தான் இராவணனே!
இச்செயல் வினையின் விளைவாக
இழந்தாள் இன்பம் ஜானகியே!

தடுக்கி விழுந்த துரியோதனனை
விடுக்கென உதவிட நினையாமல்
படக்கென சிரித்திட்ட செயலாலே
பட்டாள் துயரம் பாஞ்சாலி!
-------------------------------------
பிறன் மனையாளை கரம்பிடித்து
பிடித்தே இழுத்த பாவிகளில்
பத்துத் தலையோனும் மடிந்தானே!
புத்திகுறை தம்பியும் மடிந்தானே!
--------------------------------------
இராம இராஜ்ஜிய பேரரசி
இராம நீதியின் பெயராலே
கானகம் சென்றாள் துயரோடு!
கடேசியில் புதைந்தால் மண்ணோடு!

பாண்டவர் வெற்றியை பெற்றாலும்
பாஞ்சாலி பிள்ளைகள் அழிவாலே
வாடியே விழுந்தாள் தானாக!
வாழ்வும் கழிந்தது நெருப்பாக!
--------------------------------------
இதிகாசப் புராணங்கள் இரண்டிலுமே
இன்னல்கள் இருவரும் அடைந்தாலும்
இரும்பாய் இதயம் கொண்டதாலே
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்!

நன்றி நவில்தல்
***************
பெரியோர் நிறைந்த சபையினிலே
எளியோன் எமக்கும் வாய்ப்பளித்த
நல்லோர் சபைக்கு நன்றி பல.....
நன்றி... நன்றி... நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏