27/02/2019

நாய்வால்---குறள்_வெண்பா_4

நாய்வால் நிமிர்த்தும் முயற்சியிலே நீயொரு
தாய்போல் நடப்பது வீண்!

#சமோசாவும்_சட்னியும்



வாராவாரம் வந்திடுவேன்- நான்
வாரா-வாரம் நொந்திடுவேன்- உனை
வாரா வரம்போல் நினைந்தாலோ- நீ
வரவர முன்போல் சரியில்லை!

#சமோசாவும்_சட்னியும்

நாடகம்


காயாத கானகத்தே
காதலிக்க ஆசை வச்சு
மேயாத மானை
மேயவிட்ட நாடகத்தை
பாய விரிச்சு வச்சு
பாய்மேல குத்த வச்சு
ராவெல்லாம் தூங்காமல்
ரசிச்ச கூட்டம் எங்கே?!

வள்ளி திருமணத்தை
வச்சா குத்தமுன்னு
மீறி வச்சாக்க
மழை தண்ணி வராதுன்னு
அரிச்சந்திர நாடகந்தான்
அதிக மழை தருமுன்னு
வச்ச கண் வாங்காமல்
விழிச்ச கூட்டம் எங்கே?!

பப்பூனும் டான்சும்
பம்பரமா ஆடுறத
விரல வாயில் வச்சு
விசில பறக்கவிட்டு
சந்தடி சாக்குல
சைட்டும் அடிச்சுக்கிட்டு
ராக்கெட் விடுகின்ற
ரசிகர் கூட்டம் எங்கே?!

கொட்டகை பின்னால
எட்டி எட்டி பார்த்துக்கிட்டு
நானும் பார்த்தேன்னு
நாளெல்லாம் சொல்லிக்கிட்டு
நாடகம் முடிஞ்சதுமே
நடிகர்கள தொட்டுக்கிட்டு
சிரிச்சே ரசிக்கின்ற
சிறுபிள்ளை கூட்டம் எங்கே?!

அந்த ஒரு துளியேதான்



குறிப்பிட்ட
அந்த ஒரு துளியில்தான்
அமிலம் காரமாகிறது...

குறிப்பிட்ட
அந்த ஒரு துளியில்தான்
அண்டம் கருவாகிறது...

ஆம்...
அந்த ஒரு துளியே தான்

தன்னை மதிக்க
தன்னம்பிக்கை பிறக்கும் எனில்
தன்னை மதிக்க மதிக்க
தலைக்கனம் பிறக்கிறது!

தன்னம்பிக்கையை
தலைக்கனமாய் மாற்றுவது
அந்த ஒரு துளியேதான்....

✍️செ. இராசா

26/02/2019

உயிர்பெற்ற தமிழரின் பாட்டு--பாரதியின் ஒரு பாட்டே போதும்



முக்தியும் ஞானமும் சொல்பவர்கள் - நம்
மக்களின் மொழியினில் சொல்வதில்லை!
உலகில் சிலபேர் சொன்னாலும்- அவர்
உலகியல் உண்மையைச் சொல்வதில்லை!

எப்படிச் சொல்வேன் பாரதியை- அவன்
எப்பவும் இதிலே விதி விலக்கே!
எப்படிப் புகழ்வேன் மா கவியை-அவன்
எப்பவும் நமக்கு விதி விளக்கே!

ஆயிரம் நூல்களின் ஞானம்- ஒரு
ஆதவன் பாட்டிலே கண்டேன்!
பாயிரம் போலவே நானும்- இந்த
பாடலை இங்கே தந்தேன்!

உயிர்பெற்ற தமிழரின் பாட்டு- அது
உயர்புகழ் கவிஞனின் பாட்டு!
உயிர்பெரும் முக்தியின் பாட்டு- அது
உயர்வினைத் தருகிற பாட்டு!

---இராசா--
******************************************************
அன்பு நண்பர்களே,

நாம் அனைத்தையும் அறிந்து கொள்ள, “உயிர்பெற்ற தமிழரின் பாட்டு" என்ற பாரதியின் ஒரு பாட்டே போதும்.

சாதிய சவுக்கடியில் தொடங்கி, புராணங்களின் கட்டுக்கதைகளை விளக்கி, வேதங்கள் செய்த பிரிவினையை எடுத்துசொல்லி, உண்மையில் யார் மேலோன் என்று சொன்ன விதம் அருமையோ அருமை. (வையகம் காப்பவரோ அல்லது வாழைப்பழக் கடை நடத்துபவரோ உண்மை சொல்பவரே மேலோர் என்று சொல்கின்றார்)

கடினமான வார்த்தைகளின் எளிதான விளக்கங்களைப் பாருங்களேன்:

தவம்- உண்மைகள் கூறி இனியதைச் செய்தாலே போதும்
யோகி- நலம் தர உழைப்பவன் யோகி
யோகம்- ஊருக்கு உழைத்திடல் யோகம்
யாகம்- பிறருக்கு வருந்துதல் யாகம்
ஞானம்- போரில் நின்றாலும் பொங்கிடா அமைதி ஞானம்
பரம்பொருள்- எங்கும் இருக்கும் அறிவு பரம்பொருள்
முக்தி- இன்பம், துன்பம், வெறுமை மூன்றையும் ஏற்று நடக்கும் பக்குவமே முக்தி நிலை.

அது மட்டுமா....இன்னும் நிறைய உள்ளது.

25/02/2019

எங்கே அப்பா இருக்கீக...



எங்கே அப்பா இருக்கீக...
எப்போ அப்பா வருவீக...

சத்தமாய் யாரும் கதைத்தாலே
சடக்குனு அம்மா அழுகுதப்பா..

ஈழம் இன்னும் கொதிக்குதப்பா..
ஈரம் இங்கே இல்லையப்பா..

அதிதியாய் எங்கும் போகலைப்பா
அகதியைப் போலவே இருக்குதப்பா

எத்தனை பொங்கல் போகுதப்பா
எத்தனை பண்டிகை வருகுதப்பா

எங்கே அப்பா இருக்கீக...
எப்போ அப்பா வருவீக..

கண்ணீருடன்

இல்லறம் என்பது யாதெனில் --#குறளின்_குரலில்



அறத்தைப் போற்றா மனிதர்களும்-இந்த
அகிலத்தில் சுகமாய் இருக்கையிலே
அறத்தைப் போற்றிடும் நல்லவரே-நீர்
அறமாய் வாழ்வதில் யாதுபயன்?!

ஊழின் வினையால் வாழ்பவரை-ஒரு
உதாரணம் என்றே கொள்பவரே
அறத்தின் பயனல்ல பேரின்பம்?!-நாம்
அறமாய் வாழ்வதே பேரின்பம்!

இல்லறம் ஒன்றே போதுமெனில்- இனி
இன்னொரு அறமும் எதற்கன்றோ?!
இல்லறம் துறவறம் இரண்டிலுமே-இங்கு
இல்லறம் எதனால் சிறப்பன்றோ?

அன்பும் அறமும் விரிவடைய-இங்கு
அடுத்த அறமும் தேவையன்றோ?!!
இல்லறம் மட்டும் இல்லையெனில்-இங்கு
இரண்டாம் அறமே இல்லையன்றோ?

✍️செ.இராசா

#குறளின்_குரலில்

இல்லறத்தான் போற்றிப் பாதுகாக்க வேண்டிய 11 நபர்கள் யார் யார்? என வள்ளுவர் கூறுகிறார்

1. பிள்ளைகள் (பிரம்மச்சாரி)/Kids
2. பெற்றோர்கள் (வானபிரபஸ்தர்)/Parents
3. கணவன்/ மனைவி/Better half
4. துறவிகள்/ துறக்கப்பட்டவர்/ Monk/ refused one
5. வறியவர்/ poor
6. நம் வீட்டின் முன் இறந்தவர்கள்/ Died one in front of house
7.தென்புலத்தார்(முன்னோர்கள்)/ Ancestor
8. தெய்வம் (குலதெய்வம்)/ God
9. விருந்தினர்கள்/ Guest
10. சுற்றத்தார்கள்/ Relatives
11. தான்/ Self

24/02/2019

பிரசவிக்கும்வரை
போராடிக் கொண்டிருக்கிறது
படைப்பாளியின் மனம்

23/02/2019

❤️காமம்?!!!!!!❤️


காமம் தவறில்லையா?

காமம் தவறெனில்...
காமத்துப்பால் எதற்கு?!
விளங்கவில்லையே...
வள்ளுவன் தவறிழைத்தானா?!!

காமம் தவறெனில்
காமசூத்ர வியாக்யானம் எதற்கு?!
புரியவில்லையே...
புலவன் புளுகுகின்றானா?!

காமம் தவறெனில்
காமரச பாசுரங்கள் எதற்கு?!
புத்திக்கு எட்டலையே...
பக்திக்கு பாதகமில்லையா?!

அன்று நாற்றம் எனில் மணம்
ஆனால் இன்று நாற்றம் நாறுகிறதே?!
அன்று காமம் எனில் காதல்
ஆனால் இன்று காமம் கதறுகிறதே?!

எனில் காமம் தவறா?!

ஆம்....
பிறன் மனைக் காமம்
பீறிட்டு வருமாயின்
காமம் தவறே.....

கட்டுப்பாடில்லா காமம்
காட்டாற்று வெள்ளமாயின்
காமம் தவறே.....

பொருந்தாக் காமம்
பொருந்தி நிற்குமாயின்
காமம் தவறே.....

ஆனால்....

இல்லறம் இனிதென
இல்லாள் துணையென
உணவிலே உப்பென
ஊடலில் கூடினால்
காமம் சரியே..
——இது திருக்குறள்

சிந்தையில் சிவனொடு
சிந்தயில் நினைவோடு
அளவிலே முறையாகி
அன்பிலே கூடினால்
காமம் சரியே..
——இது திருமந்திரம்

சீவவித்தை செறிவூட்டி
சீவனைத் தினம் கூட்டி
உடலை உறுதியாக்கி
உயிரை வளமாக்கினால்
காமம் சரியே...
——-இது வேதாத்திரியம்

காமத்திலிருந்து கடவுளுக்கு
——-இது ஓஷோ ரஜனீஷ்

காமம் ஞானத்தின் முதல்படி
——-இது கவியரசர் 

முறையான காமம் எனில்
முற்றிலும் சரியே-அது
முக்திக்கான வழியே...

22/02/2019

அப்பத்தா



தென்கரை மண்ண விட்டு
தெக்கால வாக்கப்பட்டு
அஞ்சு பொண்ணு இரண்டு ஆணு
அத்தனையும் பெத்து போட்டு
அம்மன் பட்டி ஊருக்குள்ள
அரசாண்ட அப்பத்தா-நீ
........மாணிக்கம் ஐயா தேடி
........மலேசியா போனபோது
........வாசலில் கோலமிட
........மாட்டுச் சாணம் தேடியத
........எப்பவும் சொல்வாயே
........இப்ப யாரு சொல்லிடுவா?!

அப்பா அடிச்சாக்க
அப்பாவ திட்டிடுவ
அம்மா அடிச்சாக்க
அடியேன்னு வஞ்சிடுவ
ராசா ராசான்னு
காசெல்லாம் தந்திடுவ
........நல்லா வரனும்னு
........மனசார வேண்டிக்குவ..
........ஐயோ....அப்பத்தா-நீ
........செத்த பொழுதுகூட- உன்
........சாவுக்கு நான் வல்ல
........ஏதோ காரணத்தை
........என்னான்னு சொன்னாலும்
........இப்ப நினைச்சாலும்
........என்னைத்தான் வஞ்சிடுவேன்
நல்ல வாழ்க்கையின்னு
நாலுபேரு சொன்னாலும்
என்ன வாழ்க்கைன்னு
எனக்குள்ள கேட்டுக்குவேன்...
..............
..............
அப்பத்தாவின் நினைவோடு...
அன்புப் பேரன்
செ. இராசமாணிக்கம்
அம்மன் பட்டி

வாழிய செம்மொழி செந்தமிழே



தகரத்தில் தங்கமாய் ‘த’ எடுத்து
மகரத்தில் மிடுக்காய் ‘மி’ எடுத்து
ழகரத்தின் சிறப்பாய் ‘ழ்’ எடுத்து
‘தமிழ்’மொழி என்றே ஆனவளே- நீ
தமிழினம் தந்தத் திருமகளே!

ஆதியில் அகத்தியம் ஆகிநின்று
அருந்தொல் காப்பியம் உடன்தந்து
இரண்டடிக் குறளில் உலகளந்து
கம்பனில் காவியம் ஆனவளே- நீ
கவிக்கொரு பாரதி தந்தவளே!!!

தேனிலும் இனிய வாசகமாய்
தேடியும் கிடைக்கா மந்திரமாய்
பாடியும் முடியா பாவினமாய்
தமிழில் ஒலிக்கிற இன்னிசையே-நீ
தீந்தமிழ் என்கிற மெல்லிசையே!!

மரபிலே கவிதைகள் பலதந்து
மரபணு மாற்றியே பின்வந்து
புதுப்புதுக் குறுங்கவி கோடிதந்து
முற்றிலும் பற்றிடும் நற்றமிழே-நீ
முற்றியும் முற்றா பொற்றமிழே!

வாழிய எம்மொழி எந்தமிழே!!!
வாழிய செம்மொழி செந்தமிழே!!!

✍️செ. இராசா

20/02/2019

மொடாக் குடிகாரனைத் திட்டும் பாடல்

நாய்வால நிமித்த முடியுமா- பங்காளி
நாய்வால நிமித்த முடியுமா?- இவன
வாயால திருத்த முடியுமா- பங்காளி
வாயால திருத்த முடியுமா?!


பட்டை சரக்குல கெட்ட பயபுல்ல;
முட்ட குடிக்கிற முட்டா பயபுல்ல;
பட்டும் திருந்தாத வெட்டி பயபுல்ல;
கெட்டும் குடிக்கிற பொட்ட பயபுல்ல!

.................(நாய்வால....)
பச்சப் புள்ளையில்ல பாடம் நடத்திட;
மெச்சும் படியில்ல மெல்ல உரைத்திட;
வச்சுக் குடிக்கிற எச்சப் பயபுல்ல;
நச்சு குடிச்சிட அச்சப் படவில்லை!:
.................(நாய்வால....)

✍️செ.இராசா
You tube link
👇👇👇👇
https://youtu.be/SauSVDwIi4A

கண்டதைச் சொல்லும்---குறள்_வெண்பா

கண்டதைச் சொல்லும் கவிஞனே மெய்யெனக்
கண்டதை மட்டுமே சொல்!

#மூன்றாம்_முயற்சி_குறள்_வெண்பா

பிறந்தநாள் வாழ்த்து---ஏபிஎஸ்



அடிக்கடி இடம்மாறும்
ஓபிஎஸ்ஸோ ஈபிஎஸ்ஸோ அல்ல அவன்
எல்லோரையும் ஏற்றிவிட்டு
எப்போதும் மனம் மகிழும்
ஏபிஎஸ்ஸே அவன்...

கல்லூரி நினைவுகள் எல்லாம்
கண்முன் வருகின்றன...இதில்
எதைச் சொல்வேன்?!
எதை விடுவேன்?

“படித்துவிட்டு என்ன ஆகப்போகிறாய்?”

இது என்ன?!
நா. முத்துக்குமார் கவிதைபோல்
ஆம் அதே கேள்விதான்
பிஇ இரண்டாம் ஆண்டில்
நாங்கள் கேட்டுக்கொண்டோம்...

அனைவரும் ஏதேதோ சொன்னார்கள்
ஆனால்,
அவன் மட்டும் இப்படி சொன்னான்...
“வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிப்பேன்” என்று...

குறிக்கோள் இல்லாதவனின்
வாக்குபோல் நினையாதீர்....
குறிதவறாமல் காலத்தைக் கணித்த
ஞானவானின் வாக்கு அது...
ஆம் அது என் நண்பனின் வாக்கு..

சொன்னதுபோல் செய்யும் அற்புதம் அவன்
அசுர வளர்ச்சியிலும்
அமைதியாய் சிரிக்கும் அதிசயம் அவன்...
அது மட்டுமா?!!
அன்று திசைமாறிய என் பயணத்தை
திருப்பிவிட்ட கலங்கரை விளக்கு அவன்

மொத்தத்தில் என் நண்பன் அவன்...

அவனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் என்றும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மனமார்ந்த நன்றி நண்பா!!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இடப்பக்கம் நண்பர் பிரதீஸுடன், வலப்பக்கம் நண்பர் செந்தில் குமாருடன் நான்.

மீன்கள்



 

(1)
புதியதாய் நினைத்து
பாய்ந்து செல்கிறது
பழைய மீன்கள்

(2)
அடிக்கடி இடம்மாறி
அசுத்தம் செய்கிறது
அதே மீன்கள்

(3)
இரையின் வருகைக்கு
ஏங்கிக் கிடக்கிறது
தொட்டில் மீன்கள்

(மேலே சொன்ன மீன்கள் அனைத்தும் அரசியல் மீன்கள்)

(4)
உலகம் சிறிதென
அலுத்துக் கொள்கிறது
குடுவை மீன்கள்

19/02/2019

வெற்றி வாய்ப்பு
பிரகாசமாய் உள்ளது
எதிரணிக்கு

18/02/2019

அவளே மருந்து (குறளின் குரலாய்)




விழியில் விழிமோதி
விழித்த என் ஆண்மை
துளிர்த்த அவ்வேகம் கண்டு- நான்
விழித்தேன் அது யாது என்று?

கண்ணில் உருவாகி
நெஞ்சில் இடம்மாறி
புயலாய் உருமாறக் கண்டு- நான்
புரிந்தேன் அது காதல் என்று..

கொதிக்கும் தனலாகி
தகிக்கும் என் காதல்
விருப்ப விதைதூவக் கண்டு- நான்
வியந்தேன் அது நோயோ என்று...

வருந்தும் நோய் தீர
மருந்தை நான் தேட
அவளே மருந்தென்று கண்டேன்- நான்
அவளை அவளாலே வென்றேன்...

✍️செ. இராசா

17/02/2019

காதல் சாலை----143வது களஞ்சியம் கவிதைப் போட்டி--வெற்றிக் கவிதை

143வது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: முதலிடம்
நடுவர்: திரு. கோபிநாத் அவர்கள்
அமைப்பு: தமிழ்ப்பட்டறை
தலைவர்: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

காதல் சாலை
**************
கண்களில் தொடங்கிய பயணம்
நெஞ்சினைத் தொடுகிற போது
கண்களில் உறக்கம் போகும்!
நெஞ்சினுள் குழப்பம் சேரும்!

உள்ளத்தில் தொடர்கிற பயணம்
உதிரத்தில் கலக்கிற போது
உணவுகள் இறங்கிட மறுக்கும்!
உணர்வுகள் கிறங்கிட வைக்கும்!

உணர்விலே தொடர்கிற பயணம்
உயிரிலே கலக்கிற போது
உள்ளுக்குள் உலகம் சுழலும்!
உயிருக்குள் உறுப்புகள் உளறும்!

எண்ணத்தில் தொடர்கிற பயணம்
எங்குமே பரவிடும் போது
எழுத்துகள் கவிதையாய் மாறும்!
எவரையும் கவிஞனாய் மாற்றும்!

காதலில் தொடர்கிற பயணம்
மோதலில் முடிகிற போது
வேதனை வெடியெனக் கொல்லும்!
ரோதனை அதுவெனச் சொல்லும்!

வலிகளில் தொடர்கிற பயணம்
வழியினை மாற்றிடும் போது
நெஞ்சிலே ஆனந்தம் கொள்ளும்!
கண்ணிலே காதலைச் சொல்லும்!

✍️செ. இராசா


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2245601405758763?sfns=mo 

16/02/2019

அசிங்கமான வார்த்தைகளில்



அசிங்கமான வார்த்தைகளில்
அருவருப்பாய் எழுதிவிட்டால்
ஆத்திரங்கள் அடங்கிடுமா?!- இல்லை
ஆக்ரோசமான வார்த்தைகளில்
அனைவரையும் உசுப்பிவிட்டால்
அனைத்தும் சரியாகிடுமா?!

தன்கட்சித் தலைவன்
தவறாகச் சொன்னாலும்
தன்போக்கும் அதுதானா?!- இல்லை
தனக்குப் பிடிக்காதவன்
தவறின்றி நடந்தாலும்
தன்போக்கில் திட்டனுமா?!

மதங்களில் மூழ்கியவன்
மதியின்றி செய்ததற்கு
மதச்சாயம் பூசணுமா?!- இல்லை
மக்களை உசுப்பிவிடும்
மதவெறிச் செயலுக்கு
மடைபோட்டுத் தடுக்கணுமா?!

சிறிது கேள்



சிறியதுதானே என்று
சிறிதாய் நினையாதீர்...

ஏனெனில்..

சிறு ஓட்டைதானே
பெருங் கப்பலை மூழ்கடிக்கிறது...

சிறு பொறிதானே
பெருந்தீயாய் மாறுகிறது

சிறு சபலம்தானே
பெருந்தீதாய் முடிகிறது

சிறு துளிதானே
பெரும் உடலாய் வருகிறது

சிறு விதைதானே
பெரும் விருட்சமாய் வளர்கிறது

ஆம்...சிறிதுதான்

அணுக்கள் சிறிதுதான்
ஆனால், அண்டத்தின் பேராற்றல்
அதிலே உள்ளது

குறள்கள் சிறிதுதான்
ஆனால், அகிலத்தின் குரலெல்லாம்
அதிலே உள்ளது

அவ்வளவு ஏன்?

பெரிய கடல் என்பது
சிறிய நீர்த்துளிகளின்
கோர்வைதானே..

பெரிய காவியம் என்பது
சிறிய கவித்துளிகளின்
கோர்வைதானே..:

சிறு குரங்கெனஅனுமனின்
வாலில் தீவைத்தானே....இராவணன்
என்ன ஆனது?!
அது கொளுத்தியது
அவன் தீவைத்தானே?!!

சிறு துரும்பென சிந்துராஜனின்
சிதையை சீரழித்தனரே....பாண்டவர்
என்ன ஆனது?!
அவன் திரும்ப வந்து
அபிமன்யுவை சீரழித்தானே?!

சாக்கிரதை..
தேளின் கொடுக்கு சிறிதானாலும்
தேக்கிடும் விசம் பெரிது...

ஆனால்,
தேனியின் வயிறு சிறிதானாலும்
தேடிடும் விசயம் பெரிது

ஆம்...

தயிர் சிறிதுபோதும்
தயிரைப் புதிதாய் உருவாக்க

தவறு சிறிதுபோதும்
தருதலையாய் மனிதன் உருவாக..

ஈரல் சிறிதுபோதும்
ஈரலை மீண்டும் உருவாக்க..

ஈரம் சிறிதுபோதும்
இறைவனாய் மனிதன் உருவாக...

இனியும்...
சிறிதை சிறிதாய் நினையாதீர்...

✍️இந்தச் சிறியவன்
😊செ. இராசா

(இதில் “தீவைத்தானே”என்ற சிலேடை வாலி சொன்னது. உரிமையோடு நான் பயன்படுத்தி உள்ளேன்)

படத்தில்: தம்பி மகன் தணுஸ் ராஜா (இடம் உள்ளவர்)
— with Sathish Senthil Nathan.

குறள் வெண்பா-2



உண்ணா விரதம் சிறப்பெனினும்;எண்ணமே
எண்ணா விரதம் சிறப்பு

✍️செராவின்_குறள்_வெண்பா_2

உண்ணா விரதம் இருந்துபார்
உணவின் அருமை தெரியும்
எண்ணா விரதம் இருந்துபார்
எண்ணத்தின் வலிமை தெரியும்

15/02/2019

என்னில் தமிழ் ஊற்றி

என்னில் தமிழ் ஊற்றி
உன்னை எழுதிக்கொல் தமிழே- நான்
உன்(ண்)மை எழுதுகோலாவேன்...

என்னில் தமிழ் ஏற்றி
உன்னை ஒளியேற்று தமிழே- நான்
எண்(ண)ணெய் விளக்காவேன்...


என்னில் தமிழ் தந்து
உந்தன் புகழ்பாடு தமிழே- நான்
என்றும் உனக்காவேன்...

✍️செ. இராசா

கவிதை தேவையில்லை




இருப்பது எல்லாம் இறைவனெனில்
இன்னொரு இறைவன் தேவையில்லை!

திருப்தியாய் வாழ்ந்திட முடியுமெனில்
தியானங்கள் எதுவும் தேவையில்லை!

வினையின் செயல்கள் விளங்குமெனில்
விளைவால் கலங்கிடத் தேவையில்லை!

வாழும் வாழ்வே கவிதையெனில்
வார்த்தையில் கவிதை தேவையில்லை!

✍️செ. இராசா

***********************************

Being God is everything
No other god is required!

If you can be satisfied
No hymns are needed!

If the actions of reaction are present
No need to shake the outcome!

Live living poetry
Word does not need poetry!

(Thanks: Google Translate)

குறள் வெண்பா-1



நிறைய எழுதுவது நன்றல்ல உன்னில்
நிறைய எழுதுவதே நன்று

13/02/2019

அவர் நிறைய படிச்சிருக்காருபா 
எப்படி சொல்லுற?
அவர் எழுதுறது புரியவே இல்லைபா...

கரூரார் புத்தகத்தை....



கரூரார் புத்தகத்தை
கண்களில் பருகும்
என் வீட்டு மீன்!

அதற்குத் தெரியுமா?!
அது விண்மீனென்று...

(கவிஞர் கரூர்பூபகீதன் தம்பியின் வேர்களின் குறுக்கு வெட்டுத்தோற்றம் படியுங்கள். வியந்து போவீர்கள்.)

இதயம்



(1)
அருகில் நெருங்கினால்
வேகமாய்த் துடிக்கிறது
பெற்றோரின் இதயம்..

(2)
இதயத்தின் ஓசை
இன்னும் கேட்கவில்லை
சாதீய மூளைக்கு..

(3)
அறிவில்லா இதயத்தை
அகிலமே ஏற்கிறது
அன்பின் சின்னமாய்..

12/02/2019

கவிஞன் என்று தன்னை நினையாதோனின்
வரிகளே காட்டிக்கொடுக்கின்றன!
அவனே மிகச்சிறந்த  கவிஞனென்று...!!!

சர(ண்)கவி என்பேன்!

நண்பர்களே,

ஒரு கவிதை இன்னொரு கவிதையை பிரசவிக்குமானால் அந்த கவிதை மிகச்சிறந்த கவிதை என்பது என் திண்ணம்.

அந்த வகையில் இன்று நான் முகநூலில் கண்ட தம்பி தமிழ் சரண் அவர்களின் ”எங்கள் சோழன்” என்ற கவிதை என்னைத் தட்டி எழுப்பியது. அவரின் கவிதையைப் படியுங்கள் அசந்து போவீர்கள்.

அவர் வரிகளுக்கு நான் வழங்கிய பின்னூட்டக் கவிதை இதோ...



வீரத்தை விதைப்பதில்
விவேகத்தைக் காட்டி- நீ
காரமாய் வழங்கினாய்
கவிநயம் ஊட்டி!

எவ்வரி சிறப்பென
எப்படிச் சொல்வேன்- நீ
எழுதிய வரிகளில்
என்னையே கொன்றேன்!

பாடலில் நீயொரு
பாரதி என்பேன்- நீ
பாயிரம் பாடியே
பாய்வதைக் கண்டேன்!

சரங்களாய் வெடிக்கிற
சரவெடி என்பேன்- நீ
சரணாகதி அடையா
சர(ண்)கவி என்பேன்!

வாழிய நீ பல்லாண்டு

✍️செ. இராசா

அவரின் கவிதைக்கான இணைப்பு கீழே

👇👇👇👇👇👇👇👇👇👇

https://www.facebook.com/100016252205774/posts/365636577321413?sfns=mo 

#கிழிஞ்சு_போச்சு



அழுத்தித் தேய்த்ததில்
கிழிந்து போனது..
அவள் தந்த அந்த சட்டை..
அவன் செய்யவில்லை அதை சட்டை..

மாற்றச் சொன்னாள்
மறுதலித்தான்..
காரணம் கேட்டாள்
காமராசர் என்றான்..
புரியவில்லை என்றாள்
புரியும்படி சொன்னான்;

இடம்மாறி போட்டிருந்த
இடப்பக்க துண்டுபற்றி
சரம்மாறி கேள்விகளில்
சளைக்காமல் கேட்டதற்கு
அன்றைய முதலமைச்சர்
அவர்சொன்ன பதிலென்றான்;

“அது வொன்றும் இல்லை ஐயா
அப்பக்கம் ஓட்டை ஐயா..”
அவர் சொன்ன அப்பதிலில்
அனைவருமே வாய் பிளந்தார்...
அவளும்தான் வாய் பிளந்தாள்..

இடம்மாறத் துண்டு போடும்
இக்கால அரசியலார்- தலைவர்
இடம்மாறி துண்டு போட்ட
இக்கதையை அறிவாரோ?!

அவர் செய்த அச்செயலே
அவன் செய்யப் போவதாக
அவன் சொல்லிப் புன்னகைத்தான்..
அங்கியினை அணிந்தவாறே..

#கிழிஞ்சு_போச்சு

அங்கி- கோட்டு (Coat)

11/02/2019

ஒற்றைப் புள்ளி


ஒற்றைப் புள்ளியில்
எப்போதோ பொதிந்த
முந்தையப் பதிவுதானே
இந்தைய மானிடப் பிறவி..

ஒற்றைப் புள்ளியில்
எப்போதோ வெடித்த
அந்தப் பெரியபிரளயம்தானே
இந்தப் பேரண்டப் பிறவி..

ஒவ்வொரு புள்ளியும்
ஒவ்வொரு வட்டமெனில்
ஒவ்வொரு வட்டமும்
ஒவ்வொரு புள்ளிதானே..

ஒவ்வொரு சூரியனும்
ஒவ்வொரு விண்மீனெனில்
ஒவ்வொரு விண்மீனும்
ஓவ்வோரு புள்ளிதானே..

புள்ளிகளின் கைகோர்ப்பில்
புலனாகும் கூட்டணிதானே
ஒவ்வொரு நேர்கோடும்

புள்ளிகளின் கைகோர்ப்பில்
புலனாகும் உருவம்தானே
ஒவ்வொரு ஒளிப்படமும்

எழுத்தின் ஆரம்பம்
எப்போதும் துவங்குவது
ஒற்றைப் புள்ளியில்தானே

எழுதும் வாக்கியங்கள்
எப்போதும் முடிவது
ஒற்றைப் புள்ளியில்தானே

முன்னூற்று அறுபது பாகையும்
முழுதாய் அமைவது
ஒற்றைப் புள்ளியில்தானே

உலகின் நபர்களும்
உடலின் செல்களும்
ஒவ்வொரு ஒற்றைப் புள்ளிகள்தானே

புள்ளிதானே என எண்ணாதீர்...
புள்ளியின் இடம்பொறுத்தே
எண்களின் மதிப்பு...

புள்ளியை பூஜ்ஜியமாய் இகழாதீர்
புள்ளியைப் புரிந்தவனுக்கே
பூவுலகில் மதிப்பு

காவல் துறையில் கரும்புள்ளி
கவன அடையாளம்

மங்கை நெற்றியில் வரும்புள்ளி
மங்கள அடையாளம்..

குழந்தையின் கன்னப்புள்ளி
திருஷ்டியின் அடையாளம்..

பொருள்களின் அணுப்புள்ளி
சிருஷ்டியின் அடையாளம்...

இங்கே...
நீயும் நானும் ஒற்றைப்புள்ளியே
அவனும் அவளும் ஒற்றைப்புள்ளியே
அதுவும் இதுவும் ஒற்றைப்புள்ளியே
அட...அனைத்தும் ஒற்றைப்புள்ளியே

https://youtu.be/ztIPiC8-nUg

✍️(((.))) செரா

10/02/2019

செவ்வாயில் நீர்தேடும் மக்கா

எவ்வாய்க்கும் நீரில்லா போது
செவ்வாயில் நீர்தேடும் மக்கா...
வருவாய்க்கே வழியில்லா போது
உருவாக்கும் விஞ்ஞானம் ஏனோ?!..

.✍️செ.ரா

மேகம் தூது போக வேண்டும்

மேகம் தூது போக வேண்டும்
மெல்லச் சாரல் தூர வேண்டும்
கன்னி நெஞ்சம் குளிர வேண்டும்
எந்தன் காதல் சொல்ல வேண்டும்..\

😊✍️செ.ரா

எங்கெங்கு காணினும் பொறியாளர்


எங்கெங்கு காணினும் பொறியாளர்
எங்கேயும் ஆகலை பணியாளர்...
எப்போதோ ஓரிரு பணியிடங்கள்
அப்போதே ஆயிரம் படிவங்கள்..

முட்டிடும் மோதிடும் இளைஞர்கள்
தட்டியே பறித்திடும் பரிந்துரைகள்!
எட்டியே பிடித்திடும் இளைஞர்கள்
துட்டிலே தடுத்திடும் பரிதாபங்கள்!

வக்கெற்று நிற்கிற வாலிபர்கள்
வடக்கிலே தேடுதல் ஓரவலம்!
ஹிந்தியை உதறிய காரணத்தால்
அங்கேயும் நோகுதல் பேரவலம்!

அல்லல்கள் நீக்கிடும் எண்ணத்துடன்
அயலகம் போகிற நம்மவர்கள்
அங்கேயும் ஆயிரம் சிக்கலுடன்
அவர்படும் அல்லலை யாரறிவார்?

08/02/2019

நினைக்கும்முன் மறப்பேனா?!


மனமெல்லாம் நீதானே-நான்
மனம்நோகச் செய்வேனா?!
மதியெல்லாம் நீதானே-நான்
மதிக்காமல் இருப்பேனா?!

மணமெல்லாம் நீதானே- நான்
மலர்தேடிப் போவேனா?!
கவி(😊)யெல்லாம் நீதானே- நான்
கவிபாடிக் கொள்(ல்)வேனா?!

தமிழெல்லாம் நீதானே-நான்
தனிமையிலே நிற்பேனா?!
குறளெல்லாம் நீதானே- நான்
குரல்மாற்றிக் கதைப்பேனா?!

இசையெல்லாம் நீதானே-நான்
இசைக்காமல் இருப்பேனா?!
நினைவெல்லாம் நீதானே-நான்
நினைக்கும்முன் மறப்பேனா?!

கண்ணே பாருடா



கண்ணே பாருடா- என்
கண்ணே பாருடா
உன்னைப் பெத்தவர
என்னான்னு கேளுடா?

மாசம் முடியுமுன்னே
மாசமாக்கிப் போனவர
பாசம் இருந்தாக்க
பார்க்க வரச்சொல்லுடா..

பாப்பா வருமுன்னே
பாஃரினுக்குப் போனவர
வாப்பா நீ தான்னா
வாப்பான்னு சொல்லுடா

வருசம் முழுவதுமே
வாட்சப்பில் வந்தவர
எப்போ வருவேன்னு
இப்போதே கேளுடா..

✍️செ. இராசா

07/02/2019

வேகமாய் முடிப்பவனுக்கே
விரைவாய்க் கிடைக்கிறது
அதிக வேலை...
😀😀😀

வாழும் மகாத்மாவை




வாழும் மகாத்மாவை
இன்றும் சுடுகிறார்கள்
இருப்பை உணர்ந்த கோட்சேக்கள்....

அரபி நபர்.... ஆச்சரியப் பூச்சொறியும் அற்புத மனிதர்..



அதிகாரக் குவியல்
அதி காரமாய்த்தான் இருக்கும்..
அந்த இடமும்
அப்படித்தான் இருந்தது
அன்று வரை...
அந்த நபர் வரும் வரை...

ஆனால் இப்போது
அதிகாரம் இருந்த இடத்தில்
அகங்காரம் இல்லை..
அறைவாசல் வாசகங்களில்
அனுமதி மறுப்பு இல்லை..

அவரின் முன்னே
அனைவரும் அமர முடிகிறது...

அனைவருக்கும் குழம்பி வருகிறது..
அதுவும் அவர் கையால்..

ஆச்சரியமாய் இருக்கிறது
அது அந்த பழைய இடம்தானா?!!

ஆம்..
அனைவரும் இப்படி
அசத்தி விடுவதில்லை...
அனைவரும் இப்படி
ஆச்சரியம் தருவதில்லை..

அடித்துச் சொல்வேன்
அவரைப்போல் இங்கே
அவர் மட்டுமே...

அணு அணுவாய் ரசித்த
அந்த அரபி நபர்....
ஆச்சரியப் பூச்சொறியும்
அற்புத மனிதர்..

அறிவின் மிகுதியிலும்
அதிகார மிகுதியிலும்
ஆடுவோர் பலரிருக்க,
அனைத்தும் இருந்தாலும்
அகத்தில் ஏற்றாத
அவர் மட்டுமல்ல...
அனைத்து நபர்களும்
ஆண்டவனின் பிள்ளைகளே....

🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

06/02/2019

நானும் ஓர் கவிதை எழுதிவிட மாட்டேனா?
வெந்த பூரியில்
சப்தம் வராது...

05/02/2019

முடியாதது எதுவுமில்லை



உயரத்தை அடைகிற ஆவலிலே
உலகத்தில் பலபேர் முயன்றாலும்
உள்ளத்தில் வலுவுள்ள வல்லவரே
உயரத்தை எளிதில் அடைகின்றார்!

ஒன்றை நன்றாய்க் கற்றறிந்து
ஒன்றின் வழியே சென்றாலும்
என்றும் புதிதாய்க் கற்பவரே
என்றும் வெற்றியில் நிற்கின்றார்!

தந்திர வழியினில் செல்லாமல்
தன்திற வழியினில் செல்பவரே
தன்தரம் யாதெனச் சொல்கின்றார்!
தன்னறம் அதுவென வாழ்கின்றார்!

முயற்சியில் அயர்ச்சி கொள்ளாது
முயலை ஆமை வென்றதுபோல்
முயலும் நபரே வெல்கின்றார்!
முன்னே நோக்கிப் பாய்கின்றார்!

#முயன்றால்_முடியாதது_எதுவுமில்லை

✍️செ. இராசா

01/02/2019

மௌனமே ஆனந்தம்------141வது கவிதைப்போட்டியில்-வெற்றிக் கவிதை

141வது கவிதைப்போட்டியில்
இரண்டாமிடம் பிடித்த கவிதை இது.




மௌனமே ஆனந்தம்
*******************
உதடுகள் பேசா மௌனத்தில்
உள்ளம் பேசுதல் ஆனந்தம்!
உள்ளமும் பேசா மௌனத்தில்
உள்ளது உண்மையில் ஆனந்தம்!

இதழ்கள் பேசிடும் நேரத்தில்
இதயத்தின் வார்த்தை கேட்பதில்லை
இரைச்சல் இருக்கும் இதயத்தில்
இறைவனின் வார்த்தை கேட்பதில்லை

ஒன்றில் ஒன்றாய் ஒன்றுகின்ற
ஒன்றை நன்றாய்க் கற்றிடுவோம்!
உலகில் தன்னை இணைக்கின்ற
உன்னத மௌனம் பழகிடுவோம்!

சூனிய ரகசியம் அறிகின்ற
சூட்சுமம் யாதென அறிந்திடுவோம்!
சுழலும் உலகை வெல்கின்ற
சூத்திரம் அதுவெனத் தெரிந்திடுவோம்!

எச்சில் படாத மொழிகொண்டு
எண்ண மொழியில் பேசிடுவோம்!
எங்கும் நிறைந்த இறைமொழியை
ஏகாந்த நிலையில் கேட்டிடுவோம்!

என்ன மொழியாய் இருந்தாலும்
எண்ண மொழியே உயர்வாகும்!
ஆதி மொழியாய் இருந்தாலும்
அமைதி மொழியே சிறப்பாகும்!

#மௌனம்_பழகு

✍️செ. இராசா

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2237821849870052/