29/09/2021

குஷ்பூவைக் கண்டதுமே

 


புஸ்ஸென்று பூத்திருந்து
..... புஸ்வானம் ஆகிவிட்ட
குஷ்பூவைக் கண்டதுமே
....கூடவந்து- குஸ்தியிட
தொப்பைய உள்ளவச்சு
...‌.துள்ளிவரும் சின்னதம்பி
அப்பப்பா என்னே அழகு!

✍️செ. இராசா

கசங்கி இருந்தாலும்

கசங்கி இருந்தாலும்
மதிப்புடன் செல்கிறது
பணம்

பாலாய் நினைந்தது

 

பாலாய் நினைந்தது பாழாய்த் திரியுமெனில்
காலால் உதறிக் கட
 
✍️

தோசைக்கு மீனென்றால்

 


தோசைக்கு மீனென்றால் தொட்டுக்கக் கூச்சமா?!
ஆசையுடன் தள்ளலாம் அஞ்சு
✍️

கேழ்வரகு தோசை😊😊 வாங்க சாப்பிடலாம்... 💐💐💐

27/09/2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்--புறநானுறு

 #புறநானுறு- (முதல் நூற்றாண்டு)
#PURANANURU(1st Century) 1st BCE

#புறம்_192 (POEM 192)
#கணியன்_பூங்குன்றனார் (KANIYAN POUNGUNDRANAAR)

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

#பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை பிறரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் என்பது புதியது இல்லை, வாழ்தல்
இனியது என்று மகிழ்ந்ததும் இல்லை
வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை

வானத்தின் குளிர்ந்த மழைத் துளியானது,
கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு ஓடும் பேராற்றின்
நீர்வழி தடத்திலே போகும் மிதவை போல, அரிய உயிரியக்கமானது
இயற்கைவழி போகத் தான் செய்யும் என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லிய காட்சியில் தெளிந்தோம், ஆதலினால் பிறந்து வாழ்வோரில்
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

#ENGLISH_TRANSLATION

Every town our home town, Every man our relatives
Good and evil do not come from others.
Even pain and relief come of themselves.
Dying is nothing new.
We do not rejoice that life is sweet nor call it bitter.

after a downpour from skies, the rain drop
sounding and dashing across the rocks and river
Over water course as rafts drifting in the rapids of a great river
Our lives, however dear, follow their own course,
we know this from the vision of men who see.

So, we are not amazed by the great,
and we do not scorn the little.

ஈர்ப்புவிசை

 


சூரியனை மையம் கொண்டு
சுற்றுவது பூமி என்ற
கலிலியோவைக் குறைகூறி
கண்டபடி கதைத்ததுபோல்
உன்மேல் மையம் கொண்டு
உமைச்சுற்றி வருமென்னை
காமக் கிறுக்கனெனக்
கண்டதுபோல் பேசுகின்றார்!

சரி விடு..
காமமோ காதலோ...
உன் ஈர்ப்புவிசை உண்மை தானே?!
😊😊😊😊
என்ன சிரிப்பு?!
உன்மெய் அல்ல‌......உண்மை!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_178

26/09/2021

உன்னை யாரும் விரும்புவதில்லை

உன்னை யாரும் விரும்புவதில்லை
அதற்காக நீ விடுவதுமில்லை
உன்னை யாரும் வரவேற்பதில்லை
அதற்காக நீ வராமலுமில்லை

உண்மையில்...
உன்னைக் காணாமல் இங்கே
யாருக்கும் எந்த உயரமும் இல்லை..
உன்னை எண்ணாமல் இங்கே
யாருக்கும் எதுவும் ருசிப்பதே இல்லை..

இருந்தும்
உன்னை யாரும் விரும்புவதில்லை
அதற்காக
நீ விலகுவதும் இல்லை....

சரி வா‌....ஒன்றாய்ப் பயணிப்போம்
கொஞ்ச நாட்கள்தானே...

என் அன்புத் #தோல்வியே....

#தோல்வி

24/09/2021

QATAR FIFA TAMIL SONG---FOR TUNE


:0:36
 
உன்னை வெல்ல இங்கே
..என்ன வேணும் போ.
முன்னே உள்ள தாரு
..எண்ண வேணாம் போ
இன்னும் என்ன வேணும்
..எட்டி தூரம் போ
முன்னும் பின்னும் தாண்டி
.. முட்டி முன்னே போ
 
0:50
 
கத்தார் மண்ணில் இங்கே
‌...காட்டும் வீரன் யார்?
கெத்தாய்க் காட்டி வீழும்
.. கானல் நீரும் யார்?
கிட்டும் வாய்ப்பைக் கோலாய்
.‌‌..மாற்றும் தீரன் யார்?
எட்டும் கோப்பைக் கென்றே
...ஏங்கும் சூரன் யார்?
 
1:30
 
யாரென்ன சொன்னால் என்ன
...உந்தன் நோக்கில் நீயும் ஓடு.
கோலைப் போடும் எண்ணத் தோடே
...ஓடும் வேகம் கூட்டி ஓடு
காலங்கள் தோறும் உன்னை
.. நெஞ்சில் லியோனல் மெஸ்ஸி போலே
நீயும் என்றும் நெஞ்சில் கொண்டே
..நேராய்ப் பந்தைக் கோலாய் மாற்று (2)

காசுக்காய்க் கத்தும்

காசுக்காய்க் கத்தும் களவாணிக் கூட்டத்தை
நாசுக்காய் வைதால் நரிகளுக்குக்- கூசுமா?
பூசுவதைப் பூசி புறத்திலே போட்டால்தான்
ஏசுகிற வாய்மூடும் இங்கு

✍️செ. இராசா

23/09/2021

நிழலும் நிஜமே

 


நி‌ஜம் பெரிதுதான்
அதற்காக நிழலொன்றும் மட்டமில்லை...
நிஜம் அழகுதான்
அதற்காக நிழலொன்றும் அசிங்கமில்லை...
நிஜம் சுயம்தான்
அதற்காக நிழலெல்லாம் போலியுமில்லை

சில நேரங்களில்
நிஜத்தை விட நிழலைத்தான் பிடிக்கிறது
காரணம் ..
நிழல் வெப்பம் தணிப்பதால்
நிழல் குளுமை தருவதால்‌
நிழல் அருகில் இருப்பதால்....
நிழல் நம்மைத் தொடர்வதால்..

ஆம்..
#நிழலும்_நிஜமே

22/09/2021

அகனதிகாரம் ---அகனார் அதிகாரம்




 

#அகனதிகாரம்
#அகனார்_அதிகாரம்
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_மாமா

முகநூல் வழிவந்த முக்கிய நட்பில்
அகன்மாமா நற்குரு நட்பு
(1)

இலக்கணம் எல்லாம் இவர்வசம் என்றும்
இலவசம் ஆக்கினார் இங்கு
(2)

தமிழில் பிழையெனில் தன்வழிச் சொல்லி
உமிக்கும் தருவார் உயர்வு
(3)

சுட்டும் பிழைகள் சுறுக்கெனத் தைத்தாலும்
கொட்டும் கரம்யார் குரு
(4)

இருக்கிற போதே இவர்போல் கவிக்குத்
தருவோம் சபைமேல் தரம்
(5)

வெண்பா விளையாடும் வித்தகர் கூட்டத்தில்
பொன்போல் அகனார் புகழ்
(6)

கணம்கணம் கொட்டும் கவிதையில் கூடக்
குணம்மிகும் இல்லை குறை
(7)

ஆசுகவி என்றே அறிந்தவர் போற்றிடும்
பேசுகவி ஆசான் பெயர்
(😎

வாழ்த்த எனக்கோர் வயதில்லை என்றாலும்
வாழ்த்துதல் நற்றமிழ் மாண்பு
(9)

வாழ்க வளமுடன் வையகம் மாண்புற
வாழ்க தமிழுடன் நன்று!
(10)

✍️செ. இராசா

21/09/2021

உயிரோவியம் நடமாடுது

 


 உயிரோவியம் நடமாடுது
ஒரு தூரிகை தொட ஏங்குது
உருவாகையில் பல காயங்கள்
ஒளியாகையில் அது மாயங்கள்
வலி தாங்கிய சிலை நீயடி
உயிர் ஏற்றிய உளி யாரடி?

✍️செ. இராசா

#இளையராஜா_ஓவியங்கள்

நேரமில்லை நேரமில்லை நேரமில்லை

 #துள்ளலிசைப்_பாடல்

நேரமில்லை நேரமில்லை நேரமில்லை
நேரமில்லை நேரமில்லை நேரமில்லை

இணைய உலகத்துல எல்லாமே மாறினாலும்
இன்னும் இதைத்தானே எல்லோருமே சொல்லுறாங்க‌
பயண தொலைதூரம் பக்கத்துல வந்தாலும்
பார்க்க முடியலையாம் சொந்தபந்தம் சொல்லுறாங்க

நேரமில்லை....

பெருத்த TV பொட்டி சிறுசாக மாறிடுச்சு
சிறுத்த சீமாட்டி சிலிண்டரா மாறிடுச்சு
ஆட்டுக்கல் அம்மி அழிஞ்சே போயிடுச்சு
சேர்த்த நேரமெல்லாம் எங்கங்க போயிடுச்சு?!

நடக்கும் டிரட்மில்லு நடுவீட்டில் வந்திடுச்சு
கிடக்கும் துணியேறி எந்திரத்தில் குந்திடுச்சு
யோகா தியானங்கள் யூடிபில் ஏறிடுச்சு
வாகா வாட்சப்பில் வடைசுட்டுப் போட்டாச்சு

கடமை தவறாமல் காலையில எந்திரிச்சு
உடனே ஒழுங்காக ஓடமனம் சொல்லிடுச்சு
அடிச்ச கடிகாரம் அடிச்சடிச்சு பார்த்துடுச்சு
இடிச்ச புளிபோல இன்னைக்குந்தான் போயிடுச்சு..

சாரு ரொம்ப Busy....

✍️செ. இராசா

20/09/2021

அனுபவத்தின் விலை ஆயிரம் ரூபாய்

 



சமீபத்தில் நான் பெரிதும் விரும்பும் பேச்சாளர்களில் ஒருவரான சொல்வேந்தர் திரு‌. சுகி சிவம் ஐயா அவர்களின் மூன்றுநாள் பயிற்சியில் கலந்து கொண்டேன். எனக்கு அத்தலைப்பு பற்றி எந்த சந்தேகமும் இல்லாதபோதும் ஐயா அவர்களிடம் நேரலையில் பேசும் வாய்ப்பு கிடைக்கிறதே என்று விரும்பித்தான் கலந்து கொண்டேன். ஆழியாறு போனபோது ஐயா அவர்களுடன் சேர்ந்து புகைப்படமெல்லாம் எடுத்துள்ளேன். இருந்தாலும் இதில் கலந்து கொண்டு பேசவேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருந்ததால் 1000 ரூபாயை இந்தியாவில் என் நண்பன் சிவா மூலமாகக் கட்டச்சொல்லி சேர்ந்துகொண்டேன். அதில் பெற்ற அனுபவத்தையே இங்கு பகிர்கின்றேன்.
 
1. புலனக் குழு இதற்கென உருவாக்கி சரியாக வழிநடத்தினாலும் அவர்களின் பேச்சு ஆங்கிலம் கலந்த தமிழிலேயே (TANGLISH) இருந்தமை எமக்கு முதல் அதிர்ச்சி அளித்தது.
 
2. முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களில் ஒன்றரை ஒன்றரை என்று மொத்தம் மூன்று மணிநேரம் நடந்த வகுப்பில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காணொளியைப் பகிர்ந்தார்கள். அதில் பாதி நேரடி ஆங்கிலமாக இருந்தமை இரண்டாவது அதிர்ச்சி அளித்தது. காரணம் நான் கலந்து கொண்டது தமிழ் வகுப்பு. என்மேல் ஆங்கிலம் வலிய திணிக்கப்பட்டமை, நம்மவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதையே காட்டுகிறது. மேலும், சுகி சிவம் ஐயா அவர்களே ஒரு காணொளி போடும்முன் எளிய ஆங்கிலம்தான் என்று சமாதானம் சொல்கிறார்கள். (ஆகா...என்னே ஒரு விளக்கம்)
 
3. மூன்றாவது நாளில் அவர் அளித்த நேரலைப் பேட்டியில் இக்குறைகளைப் பேசலாம் என்று நினைத்தாலும், குறைகளை நேரடியாகச் சொல்வது நன்றாக இருக்காது என்பதால் புலனத்தில் பேசி அனுப்பி வைத்தேன். எந்தப்பதிலும் வரவில்லை.
 
4. யோசித்துப் பாருங்கள் ஒரு வகுப்பில் 220+ பேர்கள் கலந்து கொண்டார்கள். ஒரு நபருக்கு 1000/ என்றால் 2,20,000/ரூபாய் வருகிறது. ஒரு தமிழ்ப்பேச்சாளர் இணைய வழியில் இவ்வளவு பணம் சம்பாதிப்பது தமிழுக்குக் கிடைத்த பெருமையே என்றாலும் தமிழ் இல்லாமல் ஆங்கிலமும் கலப்புத் தமிழும் இருந்தால் அது எப்படித் தமிழ் நிகழ்வாகும்?! 
 
5. இப்போதும் சொல்கிறேன் அவரை சிறுமைப் படுத்துவது எம் நோக்கமல்ல. ஆனால், அவரே இப்படி நடந்து கொண்டால் மற்ற வருங்காலப் பேச்சாளர்கள் எப்படி நடப்பார்கள். ஏற்கனவே வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழை தமிங்கிலமாக்கிக் கெடுப்பது போதாதா?!!
 
ஒன்று மட்டும் தெளிவாகிறது. இவ்வளவுக்கு இடையிலும் பணம் வாங்காமல் சேவை செய்வோரின் சொற்களை மதிப்பிட்டால் எத்தனை கோடிகள் வரலாம். ஆனால் நாம் அவற்றையெல்லாம் எவ்வளவு உதாசீனம் செய்கிறோம்.
சிந்திப்போம்!!!
 
✍️செ. இராசா

அறிவு

அது இருக்கா இது இருக்கா
என்றால் வராத கோபம்
அறிவிருக்கா என்றால் வருகிறதே ஏன்?
 
அழகு குறைந்தோன்
வசதி குறைந்தோன்
என்றால் வராத கோபம்
அறிவு குறைந்தோன் என்றால் வருகிறதே ஏன்?
எனில்
அறிவு அவ்வளவு முக்கியமா?!
 
ஆம்...
அறிவை வைத்துதானே
அனைத்தையும் வகுக்கிறோம்!
 
ஒவ்வொரு புலனுக்கும்
ஒவ்வொரு அறிவாய்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
அகிலமே இங்கு
அறிவுசூழ் கூட்டம்தானே..
 
அறிவில்தான் எத்தனை அறிவுகள்?
பட்டறிவு
பகுத்தறிவு
மெய்யறிவு
பொய்யறிவு
உள்ளறிவு
புல்லறிவு....என
அப்பப்பா....!!!
 
ஆமாம்...
அறிய அறிய அறிவதென்ன?!
அறிவின் எல்லையை
அறிய முடியாது என்பதுதானே...
 
இங்கே...
அறிவு மிகு
கூகிள் பிச்சைக்குத்தானே
அத்தனை கோடி சம்பளம்‌
கூகுள் பே பிச்சைகளுக்கில்லையே..
 
அறிவு மிகு
ஐன்ஸ்டீன்களால்தானே
இத்தனை கோடி மாற்றம்
பொய் கூறும் பேடிகளால் இல்லையே..
 
அறிவே தெய்வம் என்கிறார் பாரதி!
அறிவுக்குக் கோவில் கட்டியுள்ளார் வேதாத்திரி!
ஆதியே அறிவென்கிறார் ஔவையார்!
மெய்யுணர்தலே அறிவென்கிறார் வள்ளுவர்!
அறிவே அனைத்தும் என்றாலும்
அறமில்லா அறிவு
ஆபத்தில் முடிகிறதே...
 
உண்மைதான்..
அறிவுமிகு சமூகம்
அறிவின்றி நடப்பது ஆபத்தே..
ஆனால்..
அறிவு மிகு சமூகத்தை அறிவதெப்படி?
 
அதை அறியத்தானே அகழ்வாராய்ச்சி..
கீழடி
பொருநை
ஆதிச்சநல்லூரென
ஆதி நாகரிகத்தின் அடையாளம்
#தமிழ் என்றறிந்தும்
#ஆங்கிலம் பேசினால் "#ஆ" வென்போரே..
மன்னிக்கவும்...
 
✍️செ. இராசா
 
(தமிழை ஆங்கிலத்தோடு கலப்பதை முடிந்தவரைத் தவிருங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏)