31/01/2019

#தமிழ்_அயனோடு




சில உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்து விடுவது உண்டு. இன்று நான், தமிழ் மூன்றாமாண்டு படிக்கும் பாசத்திற்குரிய தம்பி அயனோடு சில தமிழ் வார்த்தைகளைப் பற்றியும் அதன் அர்த்தங்கள் காணும் முறைமையும் பேசிக்கொண்டிருந்தேன்.

இன்றைய உரையாடலில் வந்து விழுந்த சில தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்களை மறக்காமல் இருக்கவும், மற்றவர்களுக்கு அது போய்ச்சேர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்திலும் இங்கே சுருக்கமாகப் பகிர்கின்றேன்.

1. பொறுமை/ பொறாமை- அர்த்தங்கள்
***************************************
பொறுமை- பொறு(க்கும் தன்)மை
பொறாமை- பொறா(த தன்)மை

(தன்னிடம் திறமையும், ஊழ்வினை பற்றிய அறிவும் இல்லாதவனே மற்றவரின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாமல் பொறாமைப்படுவான்)

2. காமத்துப்பால் பிரிவுகள்- களவியல் & கற்பியல்
******************************************
களவியல்- களவு + இயல்

* களவு என்றால் திருட்டு என்று அர்த்தம் வரும்போது, அதை ஏன் வள்ளுவர் வைக்க வேண்டும். திருமணத்திற்கு முன் காதலிக்கும் பெண்ணை மற்றவர்கள் பார்க்காமல் தான் மட்டும் கண்ணிலேயே கள்ளத்தனமாக பார்த்து காதலிப்பது என்ற ரீதியில் வருவது. கள்ளப் பார்வை, கள்ளச்சிரிப்பு... அப்படி, ஒரு கவித்துவமாக உள்ளதைச் சொல்வது களவியல். (மனதைக் களவாடுதல் என்றும் கொள்ளலாம்)

கற்பியல்- கற்பு + இயல்

* திருமணத்திற்குப் பின் வரும் காதல். திருமண பந்தம் கற்ப நெறியில் கட்டப்பட்டதால் அதைக் குறித்து அந்த பந்தத்தில் வரும் காதலைக் கவித்துவமாய்ச் சொல்வது கற்பியல்

3. ஒப்புரவு அறிதல்
*******************
நான் எப்படி அந்த வார்த்தையை உடைக்கிறேன் என்றால்,

ஒப்பு + உறவு + அறிதல் = ஒப்புற(ர)வறிதல்

-நம்மோடு ஒத்த (இணையான) உறவை அறிதல்
-இன்னொரு விதமாக ஒப்பு என்பதை உப்பு என்று மாற்றினால், உப்பிட்ட உறவை மறக்காமல் அறிதல்.
-அந்த அதிகாரம் சொல்வது உதவி செய்தல்.
-உடையோனுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வந்தால்தான், யாரென்றே தெரியாதவருக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்ய மனம் வரும் என்பதால் “ஈகை” என்ற அதிகாரம் ஓப்புரவறிதலுக்குப் பின்னர் வருகிறது.

—-நன்றி உறவுகளே—-

(பதிவு பயனுள்ளதாக இருந்தால் சொல்லுங்கள் உறவுகளே)

#தமிழ்_அயனோடு_தமிழ்
#தம்பி_உடையான்_எதற்கும்_அஞ்சான்

வாத்துக்கள்



(1)
குனிந்தே பழகிய வாத்துக்கள்
இன்னும் நிமிராமலே நடக்கின்றன
மேய்ப்பவனின் முன்னால்...

(2)
முன்னேறிப் போவதாய் நினைத்து
இன்னும் பேசிக்கொண்டே இருக்கின்றன
பேக் பேக் வாத்துக்கள்

#இது_அரசியல்_பதிவல்ல

30/01/2019

உன்னால் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறேன்...




நன்றாக ஞாபகம் உள்ளது
நீ என்னிடம் வந்த
அந்த முதல் நாள்..

மிகவும் கசப்பான சந்திப்பு அது....
அப்போது தெரியவில்லை- நீயே
ஆளப்போகிறாய் என்று

தூரத்தில் பார்த்தபோதும் தெரியவில்லை
தொடும்போதுதான் தெரிந்தது....நீ
அனைத்தையும் உருவுவாய் என்று

இன்று உன்னால் உயிரையும்
இழந்து கொண்டிருக்கிறேன்...

ஆனால்...நீயோ....
அரசு கஜானாவை
நிரப்பிக் கொண்டே(றே) இருக்கிறாய்...

#மது_ஒரு_சமூக_நோய்

-செ. இராசா

(இது கற்பனையே...)
ஒவ்வொரு கருத்திலும் உடன்படாதவர்களை நீக்கிவிட்டால் பிறகு
முடிவு:

வெங்காயமே....

அனைத்தையும் மறந்தார்கள்




அளவில்லாக் காதல்
அவனுக்கு அவள்மேல்
அவளுக்கு அவன்மேல்
அணைத்துக் கொண்டார்கள்
அகிலத்தை மறந்தார்கள்

காலங்கள் நகர்ந்தது
காட்சிகள் மாறின..

அளவில்லாக் கோபம்
அவனுக்கு அவள்மேல்
அவளுக்கு அவன்மேல்
அடித்துக் கொண்டார்கள்
அனைத்தையும் மறந்தார்கள்...

எதுவும் புரியாமல்
எங்கோ நிற்கிறது
அன்றைய காதலின்
இன்றைய சாட்சிகள்
இருவரையும் மறக்காமல்...

✍️செ. இராசா

29/01/2019

நான் யார்?!!- அனுபவம்


2001 மே மாதம், பொறியியல் பரீட்சை எழுதி ஓரு பத்து நாட்களுக்குள்ளாகவே என் தந்தை எங்கள் ஊரிலேயே ஒரு பொறியாளரிடம் சேர்த்து விட்டார்கள்.
நான் கட்டிடவியல் மற்றும் கட்டுமானவியல் படித்து, அதை எப்படி உண்மையில் களத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க நினைத்தால் எனக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. உதாரணத்திற்கு....படிக்கும் போது மீட்டர், சென்டி மீட்டர்...,களத்திலோ அடி, இஞ்சு, நூலு,..... இப்படி நிறைய.....ஒரே குழப்பமாக, இவற்றையெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளவே நாட்களாகிவிட்டது.

எப்படியாவது சென்னை போய் வேலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியில் ஆறே மாதத்தில், வேலையை உதறிவிட்டு மிகவும் புகழ் பெற்ற CR ராஜு என்ற ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் அப்பா தயவில் எங்கள் குடும்ப வழிகாட்டி திரு VKN கண்ணப்ப செட்டியார் உதவியில்.
(இவரிடம் எங்கள் ஐயா 48 வருடங்கள் மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்துள்ளார்கள். நட்புக்காக படத்தில் வரும் பாத்திரங்கள்போல இருவரும் இரு(ற)ந்தார்கள். என் அப்பா ஒரு 7 வருடங்கள் அவர் மகனிடம் வேலை பார்த்தார்கள். அனைத்து முடிவிலும் இவர்தான் முன்னிலை வகிப்பார்)

உண்மையில் சென்னை, அன்று முதல் இன்று வரை அனைவரையும் ஏன் பிரம்மிக்க வைக்கிறது என்பதை நான் அங்கு கண்டேன். மிகவும் பரபரப்பான வாழ்க்கை. என்னால் மறக்க முடியாதது சென்னையின் நெரிசலில் போகும் அந்த ரயில் பயணங்கள். என்னதான் உடைகளைத் தேய்த்து அழகாக உடுத்தி ரெயிலில் ஏறினாலும் ஐந்தே நிமிடத்தில் கசக்கிப் பிழிந்து துப்பிவிடுவார்கள். அட அதிலும் ஒரு சுகம் இருக்குங்க... எப்படி என்றா கேட்கிறீர்கள்?!! மாதாந்திர பயணச் சீட்டு எடுத்துக்கொண்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு சிறப்பு உண்டு. கிண்டியில்- குஷ்பூ இட்லி/உப்புமா, மவுண்டில்- 1 ரூ ஐஸ் கிரீம், சைதையில்- இரத்தப் பொறியல், மாம்பழத்தில்- கடைவீதியில் நடை.....அப்புறம் அழகான கானா பாட்டு தினமும் கேட்கலாம்.....etc. etc. இப்படி போய்க்கொண்டே இருக்கும்.

அதில் முக்கியமானது, என் வாழ்க்கையை மாற்றிய ஒரு சிறு புத்தகம், “நான் யார்?” என்ற தலைப்பில் என் பெரியம்மா வீட்டில் பார்த்தேன். அதுதாங்க என் ஆன்மீகப் பயணத்திற்கு முதல் தீனி போட்ட புத்தகம். சிறு வயதில் நான் தேடிய கேள்விக்கு சரியான விடை அதில் இருந்தது. அதன் வெளியீடு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் என்றிருந்தது. அங்கே வாரா வாரம் தொடர்ந்து போனேன். பக்தியும் ஞானமும் இணைந்தே கிடைத்தது. அனைத்து மதங்களும் போகும் பாதை ஒன்றே என்ற சர்வமத சங்கமத்தின் ஒரு புள்ளியை அல்ல சமுத்திரத்தைக் கண்டேன். பின்னாளில் கல்கத்தா, கவுகாத்தி என்று எங்கு சென்றாலும் அந்த மடங்கள் சென்றேன். அனைத்து மதங்களும் சொல்வது ஒன்றே என்பதைப் புரிந்து கொண்டதால், கத்தார் சர்ச்சில் இரண்டு வருடங்கள் ஒரு பாடகராகவும் இருந்தேன். மசூதி சென்று வந்தேன்.....இப்படி எல்லாம் சென்ற வாழ்க்கை, பிரம்மா குமாரி ராஜயோகம் வழியாக அறிவுத்திருக்கோவில் கண்ட வேதாந்த மகரிஷியின் மனவளக்கலையில் நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்த “நான் யார்?” என்ற புத்தகமே.
இப்பொழுதுகூட எப்போது சென்னை சென்றாலும் மயிலாப்பூர் போய் குட்டிக்குட்டி புத்தகங்கள் வாங்கி வருவேன். அறிவுக்கண்ணை ஆழமாகத் திறக்கும் இடம் என்பதற்கு இங்கே வைத்துள்ள புத்தகங்களே சாட்சி...
#மதங்கள்_என்பது_பாதைகள்_இலக்குகள்_அல்ல
#Sri_Ramakrishna_Math
#Chennai_experience
✍️செ. இராசா

விந்தையின் தந்தை

சிந்தையில் தோன்றிய ஒன்று- நான்
சிந்திட முயல்கின்ற தருணம்- பல
சிந்தனை என்னுள்ளே வந்து- என்
சிந்தையை சிதைக்குது ஐயா!

எந்தை செய்தொரு பிழையாய்- இந்த
கந்தை நிற்கிற பொழுதும்- பல
மந்தை மனிதரைப் போலே - நான்
விந்தையின் தந்தை ஐயா!

✍️செ. இராசா

28/01/2019

மாயை



நிழலைப் பெரிதாகவும்
நிசத்தை சிறிதாகவும் காட்டுவது
ஒளியின் மாயை!

பொய்யை மெய்யாகவும்
மெய்யை பொய்யாகவும் காட்டுவது
காலத்தின் மாயை!

கடவுளை சிறிதாகவும்
கண்டவனைப் பெரிதாகவும் நினைப்பது
திராவிட மாயை!

தமிழைத் தாழ்வாகவும்
ஆங்கிலத்தை உயர்வாகவும் நினைப்பது
மாயையோ மாயை!!!

✍️செ. இராசா

குறிப்பு:

(இந்த வாரம் கிழக்கு ஐரோப்பிய நாடான அஜெர்பெய்ஜான் நாட்டிற்குச் சுற்றுலா சென்று வந்த, அன்புக்குரிய ஆந்திரா/தெலுங்கானா நண்பர் Pvvsn Raj எடுத்து வந்த புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தன.

அதிலும், முஸ்லிம் நாடான அங்கு வைக்கப்பட்ட நம்ம ஊர் நடராசர் சிலையின் இந்த புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படம். கண்டவுடன் தோன்றிய கவிதை இது. அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் அன்புடன் காட்சியாக்குகிறேன்)

#மத_நல்லிக்கணம்_உள்ள_அழகிய_ஊர்_என்பது_தெரிகிறது

மரங்கள்



(1)
வேகமாய் வளர்வதால்
விரைவில் வெட்டப்படுகிறது
சில மரங்கள்

(2)
இரத்தக் கண்ணீரை
சப்தமின்றி வடிக்கிறது
அறுபட்ட மரங்கள்

(3)
கிளைகள் பரவுவதால்
வேகமாய்த் தடுக்கப்படுகிறது
சில போராட்டங்கள்

✍️செ. இராசா
Hi என்று வந்தவர்கள்
Boy என்றவுடன்
Bye என்றார்களாம்

(படத்த மாத்து தம்பி...😀)
அ, ஆ, இ, ஈ.......ஐ...ஐயா!!!

தம்பி.....உங்களுக்கு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்குகிறோம்..

மௌனம் ஞானத்தின் திறவுகோல்

உதடுகள் பேசாதபோது  
உள்ளம் பேசுகிறது
உள்ளமும் பேசாதபோது
உண்மை புரிகிறது...

மௌனம் ஞானத்தின் திறவுகோல்

பயனில்லா சொல்


கிணற்றை உலகமாய் நினைக்கின்ற
கிணற்றுத் தவளையாய் இல்லாமல்- நீ
தன்னிலை யாதென அறிந்திடுவாய்!
தன்னையேப் புகழ்வதை நிறுத்திடுவாய்!

மலரின் தேனைத் துறக்கின்ற
மலத்தின் ஈபோல் திரியாமல்- நீ
பயனுள்ள சொல்லைப் பேசிடுவாய்!
பயனில்லா சொல்லை உதறிடுவாய்!

நெல்லிலே பதரினைப் பிரிப்பதுபோல்
சொல்லிலே பதரினைப் பிரித்தெடுக்க- நீ
ஞானக் காற்றிலே தூற்றிடுவாய்!
ஞாலம் போற்றிட வாழ்ந்திடுவாய்!

✍️செ.இராசா

26/01/2019

பாரிமலைக் கொடி



ஏற்கனவே அறிந்த கதை
எல்லோர்க்கும் தெரிந்த கதை
முல்லைக்குத் தேர் கொடுத்த
வள்ளல் மன்னன் பாரி கதை...

இப்படித்தான் நான் நினைத்தேன்
இக்கதையும் இருக்குமென்று...
என் நினைப்பு பொய்த்த கதை
எழுதுகின்றேன் இக்கவியில்..

பாரி மலையில் கொடியா?!

தலைப்பைக் கண்டவுடன்
தவறுபோல் தோன்றியது...
பிறகு தான் புரிந்தது
பிழையான புரிதல் என்று..

நான் எனும் மண்குடத்தை
நானிங்கே என்னுகையில்
நாணத்தில் தலை கவிழ்ந்து
நங்கைபோல் நகைக்கின்றேன்

கவி அரசர் எழுதிவைத்த
கதையும் கவிதை அன்றோ?!
தலைப்பும் கவிதை அன்றோ?!

சோழநாட்டில் பிறந்து
பாரிநாட்டில் படர்ந்த
பருவக்கொடியின் கதை இது

பாரிக்கு அழைப்பு
****************
ஆடிவரும் காவிரியை
ஆடியிலே காண வேண்டி
பாரியினை அழைத்தானே
பண்புள்ள சோழ மன்னன்..

அன்பான இரு மக்கள்
அங்கவையும் சங்கவையும்
தந்தையின் சொல்படியே
தாமும் உடன் சென்றனரே..

வானுயர்ந்த வள்ளலோடு
வானவரையன் தளபதியும்
கோனுயர்ந்த நாடு காண
கோட்டைவிட்டு போனாரே...

சோழ நாடு
***********
சோழ நாடு சோறுடைத்து
சோடையில்லா வாழ்வுடைத்து
காணுமிடம் அத்தனையும்
கண்கொள்ளா வளமுடைத்து..

பசுமையினைக் கண்டவாறே
பாரிவள்ளல் சென்றடைய
கோடி மக்கள் கூடியதில்
கோமகனும் ஆடிவிட்டான்..

வந்தவரை வரவேற்று
தங்கிடவே வழிசெய்து
செங்காணன் தளபதியின்
செல்லத் தங்கை கதலியினை
உதவிடவே ஆணையிட்டான்...
உளமகிழ்ந்த சோழ மன்னன்

ஆற்றில் வெள்ளம்
*****************
ஆடிப் பெருக்கு காண
கூடுகின்ற கூட்டத்தை
பாரியின் பிள்ளைகளோ
வாய் பிளந்து பார்க்கையிலே..
பாரியின் தளபதியோ
பாய்ந்துவிட்டான் ஆற்றினிலே..

குளிக்க நினைத்தவனை
புரட்டியது ஆற்று வெள்ளம்...
உதவிட முயன்றோரை
உருட்டியது பெரு வெள்ளம்..
என்ன நடக்குமென்று
எவருக்கும் புரியவில்லை..

காவிரி பெண்ணென்றால்
கதலியும் பெண்தானே...
பெண்ணை அடக்குவது
பெண்ணாலே முடியுமென்று
கதலியும் பாய்ந்துவிட்டாள்- அவன்
காதலியாய் மாறிவிட்டாள்!

கதலியின் மண வாழ்வு
**********************
கரை சேர்ந்த இருவரையும்
கரம் சேர்த்தார் மன்னர்கள்...

பிறந்த நாட்டு மண்ணை விட்டு
புகுந்த நாட்டில் புகுந்தவளை
தன் பிள்ளைபோல் எண்ணி
மன்னரும் மனம் மகிழ்ந்தார்..

அழகிய ஆண் மகனை
அன்போடு பெற்றெடுத்து
கதலியின் கொஞ்சலிலே
காலங்கள் ஓடியதில்
ஏழு வருடங்களும்
எப்படியோ ஓடிவிட
என்ன காரணமோ
ஏழரை வந்துவிட்டான்....

படையெடுப்பு
**************
காரணம் ஒன்றுமில்லை
காழ்ப்புணர்ச்சி மட்டும்தான்...

படையும் செல்வமும்
பக்கத்தில் இருந்தாலும்
கொடையின் பெயராலே
கொடியாண்ட பாரியின்மேல்...
மூன்று வேந்தர்களும்
மூர்க்கமாய் முடிவெடுத்து
செங்காணன் தலைமையிலே
செலுத்திவிட்டார் பெரும் படையை..

பாரியின் அச்சம்
****************
தன் வலிமை பெரிதென்று
தலைக்கனமாய் எண்ணாமல்
என்ன செய்தவதென்று
எண்ணுகின்ற வேலையிலே
தளபதி வந்து நின்றான்
தனக்கான கடமையெண்ணி...

நன்மை செய்ததற்கு
நடப்பது இது தானா?!
என்ன நடந்தாலும்
எதிர்த்திடுவோம் எனச்சொல்லி
பிரியமான மகள்களுக்கு
பிரியா விடை கொடுத்தான்..

கதலியின் வீரம்
***************
பாரி நாட்டுத் தளபதியாய்
பாசமிகு தன் கணவன்..
மூவேந்தர் தளபதியாய்
முன் நிற்கும் தன் அண்ணன்..
இரண்டுக்கு இடைவெளியில்
இருக்கின்றாள் கதலி இங்கே...

கணவன் இறந்த சேதி
காதில் வந்து வீழ்ந்தவுடன்
உடனே கொதித்தெழுந்தாள்..
உடை வாளை உருகிவிட்டாள்...

ஆறே வயாதான
அன்பு மகன் கைகளிலே
வாளைக் கொடுத்தனுப்பி
வாஞ்சையோடு வாடி நின்றாள்...

மகனும் இறந்தவுடன்
மங்கையும் தயாரானாள்...
மன்னன்பாரி ஓடி வந்து
மண்டியிட்டு தடுத்து விட்டான்..

கதலியின் முடிவு
***************
வஞ்சக வலைவீசி
மன்னனையும் மாய்த்து விட
அனைத்து மகளிர்களும்
அங்கேயே தீமூட்டி
அக்னிச் சுடருக்கு
அனைவருமே இரையானார்...
அன்னைக் கதலியும்
அன்றைக்கே இறையானார்...

✍️செ. இராசா

முன்னர் எழுதிய பாரி கவிதை இங்கே

https://www.facebook.com/100000445910230/posts/2270330326325142/

25/01/2019

#தூண்டி_விடுதல்




#யாரோ_தூண்டிவிட்டார்- எனை
யாரோ தூண்டிவிட்டார்”
இது என்னவள் சிதறிய வார்த்தை
என் சிந்தையைக் கிளறிய வார்த்தை

தூண்டில் விடுதல் தவறுதான்
தூண்டி விடுதல் தவறா?

தூண்டிவிடா விளக்கு
தூர்ந்துவிடாதா?!

தூண்டிவிடா ஞானம்
துவண்டுவிடாதா?!

தூண்டப்படும் ஊக்கம்தானே
தாங்கிநிற்கும் தூணாகிறது?!

தூண்டப்படும் சிந்தைதானே
தூக்கிவிடும் நண்பனாகிறது

ஆனால்,

தூண்டிவிடும் ஆசை பற்றாகிறதே;
தூண்டிவிடும் வெறுப்பு சினமாகிறதே;
தூண்டிவிடும் சினம் தீயாகிறதே;
தூண்டிவிடும் சபலம் தீதாகிறதே; எனில்
தூண்டிவிடுதல் தவறுதானே?

யார் யாரைத் தூண்டினார்கள்?!

ஆதாமைத் தூண்டியது ஏவாலெனில்
ஏவாலைத் தூண்டியது சைத்தானல்லவா?

துரியனைத் தூண்டியது சகுனியெனில்
சகுனியைத் தூண்டியது பீஷ்மரல்லவா?

இராவணனைத் தூண்டியது சூர்ப்பனகையெனில்
சூர்ப்பனகையை தூண்டியது இலக்குவனல்லவா?!

இங்கே கிருஷ்ணன் தூண்டினால் சரி
சகுனி தூண்டினால் தவறா?!

இங்கே யார் தூண்டினால் சரி?
யார் தூண்டினால் தவறு?

தூண்டுதல் நபரைப் பொருத்ததா...இல்லை
விளைவைப் பொருத்ததா?!!

அணுவில் தூண்டப்படும்
அசாத்திய ஆற்றல்
அழிக்கும் வெடிகுண்டாய் மாற்றினால்
அது தீதாகிறது

சிந்தையில் தூண்டப்படும்
எண்ண அலைகள்
மனிதனை மகாத்மாவாய் மாற்றினால்
அது நன்றாகிறது

ஆம் தூண்டுதல் விளைவைப் பொருத்ததே...

இருக்கிற ஒன்றுதானே தூண்டப்படும்
இல்லாத ஒன்று எப்படி தூண்டப்படும்?

எரியும் விளக்கைப் பொருத்தே
திரியைத் தூண்ட முடியும்...
எண்ணத்தின் திணிவைப் பொருத்தே
எவரையும் தூண்ட முடியும்...

ஊசி அனுமதித்தால்தானே
நூல் நுழைய முடியும்
எண்ணம் அனுமதித்தால்தானே
எதையும் மாற்ற முடியும்..

தூண்டி விடுவோம்
நல்ல எண்ணங்களை மட்டும்

தூண்ட அனுமதிப்போம்
நல்ல சொற்களை மட்டும்

✍️செ. இராசா

தலைப்பு: #தூண்டி_விடுதல்
தூண்டி விட்டவர்: Kavitha Raja
தூக்கி விட்டவர்: அண்ணா விக்டர்தாஸ் கவிதைகள்

24/01/2019

அடிக்கும் குளிருக்கு



அடிக்கும் குளிருக்கு
அங்கியாய் வந்தவனே- நீ
துடிக்கும் யாவர்க்கும்
துணையாய் நிற்பவனே..

நீல நிறங்கொண்டு
நிற்கின்ற மாதவனே- நீ
நிழலாய் இருப்போர்க்கு
நிசமாக இருப்பவனே..

மந்திர இசையாலே
மயக்குகின்ற மாயவனே- நீ
மனதில் நினைத்தாலே
மயங்குகின்ற மன்னவனே...

எந்தன் தமிழுக்கே
இறங்கிவந்த ஆயனே- நீ
அனைத்துத் தமிழரையும்
அ(இ)ணைக்கின்ற சீமானே..

✍️செ. இராசா

#பட_உதவி_கோமதி_அக்கா
#இது_ஆன்மீகப்பதிவு_அரசியல்_பதிவல்ல

எங்கே இல்லை காதல்?



எங்கே இல்லை காதல்?

அணுக்களின் காதலின்றி
அண்டம் தான் உண்டா? - இல்லை
ஆதாமின் காதலின்றி
அகிலம் தான் உண்டா?!

இரண்டு ஹைட்ரஜனை
இணைந்து காதலித்த
ஒற்றை ஆக்ஸிஜனின்
ஒய்யார குழந்தைதானே நீர்!

அப்பனின் ஆட்டத்தை
அன்றைக்கு அனுமதித்த
அம்மைக் காதலின்
இன்றைய சாட்சிதானே நீர்!

எங்கே இல்லை காதல்?
இதிகாசத்தில் இல்லா காதலா-இல்லை
இலக்கியத்தில் இல்லா காதலா?

ஒருத்திக்கு ஒருவனாய்
உரக்கச் சொன்னது
இராமாயணக் காதல்!

ஐவரை மணந்தாலும்
ஐந்தையும் அடக்கியது
மகாபாரதக் காதல்!

திருந்தி வந்தவனை
திரும்பவும் ஏற்றது
சிலப்பதிகாரக் காதல்!

ஆண்கள் இங்கிருக்க
ஆண்டவனைக் காதலித்தது
ஆண்டாளின் காதல்!

அகத்தின் திணையை
அடுக்கிச் சொன்னது
சங்ககாலக் காதல்!

அறத்தின் பொருளோடு
அகஇன்பம் சொன்னது
வள்ளுவரின் காதல்!

காதல் செய்- நீ
கம்பனைக் காதல் செய்
கற்பனை பெருகும்...

காதல் செய்
பாரதியைக் காதல் செய்
பாத்திறம் வளரும்..

காதல் செய்
கண்ணதாசனைக் காதல் செய்
கவித்திறம் மலரும்..

காதல் செய்
காதல் செய்- அது
சாதிய பேய்க்கு
சமாதி கட்டும்...

காதல் செய்
காதல் செய்- அது
இன மோதலுக்கு
இடையூறு செய்யும்..

காதல் செய்
காதல் செய்- அது
மத மனிதருக்கு
மனிதத்தைச் சொல்லும்..

காதல் செய்
காதல் செய்- தொடர்ந்து
காதல் செய்..

✍️செ. இராசா

தலைப்பு: மனைவி Kavitha Raja
PC: Imran Khan தம்பி

23/01/2019

சின்ன உரசலில்
சீக்கிரமாய் மாய்கிறது
தீக்குச்சி...
தலைக்கனத்தால்

ஏழு




ஏழு ஸ்வரங்கள்
ஏழு கண்டங்கள்
ஏழு பெருங்கடல்கள்
ஏழு சக்கரங்கள்
ஏழு உலகங்கள்
ஏழு வாசகங்கள்
ஏழு அதிசயங்கள்
ஏழு கிழமைகள்
ஏழு தலைமுறைகள்
ஏழு கன்னிகைகள்
.........
........

அதுபோல்..
ஏழு சீர்கள் ஒரு குறள்

சீர்கள்= 4+3= 7
குறள்கள் 1330= 1+3+3+0=7
அதிகாரங்கள் 133= 1+3+3=7

மேலும் என்ன சிறப்பு இந்த எண் ஏழுக்கு?!!

தெரிந்தால் சொல்லுங்களேன். அறியும் ஆர்வத்தில் நான்...

22/01/2019

மண்சட்டி மீன் குழம்பு


மண்சட்டி மீன் குழம்பு
மணமணக்கும் வேளையில
மச்சானின் மனசுந்தான்
மீன்போல துள்ளுதடி...

கடல்தாண்டிப் போனாலும்
கமகமக்கும் மண் வாசம்
புதுப்பட்டி மல்லிகைபோல்
புதிரான வாசமடி...

.....ச்சும்மா

21/01/2019

விழி பேசும் மொழிகள்


கண்ணில் மொழிபேசி
நெஞ்சில் கவிபாடி
என்னில் கொண்டாயே காதல்-இன்று
என்னோடு எதனாலே மோதல்?!

எண்ண விதைதூவி
எங்கும் எனைப்பாவி
என்னில் விளைந்தாயே கதிராய்-இன்று
எங்கு போனாயோ புதிராய்?

கவியில் சீராகி
கட்டும் தளையாகி
ஒட்டி இருந்தாயே தமிழாய்-இன்று
வெட்டிக் கொண்டாயோ தனியாய்?!!

மதியில் ஒளியாகி
மனதில் ஒலியாகி
மயங்க வைத்தாயே இசையாய்-இன்று
மறைந்து போனாயோ இறையாய்?!

கண்ணில் மணியாகி
காட்சிப் பொருளாகி
எங்கும் தெரிந்தாயே உருவாய்-இன்று
என்னைச் செய்தாயே குருடாய்?!

19/01/2019

நினைத்தாலே இனிக்கும் (சந்தப்பாடல்)


#ஆண்
நினைச்சாலே இனிக்கிற செங்கரும்பே- நீ
நிசமாவே மணக்கிற மரிக்கொழுந்தே!

#பெண்
மனம்போல பேசுற மன்னவனே- நீ
மந்திரப் பேச்சினில் வல்லவனே!

#ஆண்
மனையாளப் போகும் என்னவளே- நீ
மலையாளம் தோற்கிறப் பேரழகே...

#பெண்
எனையாளப் போகிற என்னவனே- நீ
என்றைக்கும் என்னோட மன்மதனே..
பாரதியே இனி வந்தாலும்
பார்...ரதியே என்றுதான்
பாடவேண்டுமோ?!

18/01/2019

இன்றைய பாப்பாக்களாவது மறக்காமல்
இருக்கட்டும்
பாரதியின் இந்த வரிகளை
“சாதிகள் இல்லையடி பாப்பா”

#நேரமில்லை



ஆட்டுக்கல் போனது
அரவை இயந்திரம் வந்தது
துவைக்கும் கல் போனது
துவைக்கும் இயந்திரம் வந்தது
மிதிவண்டி குறைந்தது
விசையுந்து வந்தது
............
............

இயந்திரங்களின் வருகை
நேரத்தை மிச்சமாக்கியது

மிச்சமான நேரங்கள்தான்
இன்னும் மறைந்தே இருக்கிறது
#நேரமில்லை என்ற வார்த்தையின் ஊடே

✍️செ.இராசா

16/01/2019

ஜல்லிக்கட்டு காளை


(1)
சீற்றத்தில் வருவது
சீக்கிரம் அடங்கியது
சிந்தையின் வலிமையால்..

(2)
வேகமாய் வருவது
அடங்க மறுக்கிறது
ஜல்லிக்கட்டு காளையாய்..

(3)
அறிவில் குறைந்தது
அதிகமாய்த் துள்ளுகிறது
ஜல்லிக்கட்டு காளையாய்..

(4)
வழக்கத்தை மதிப்பது
பகுத்தறிவோடு ஒதுங்கியது
ஜல்லிக்கட்டில் பசுமாடாய்

15/01/2019

“#புதிய_மேகதூதம்”


#சிறை_செல்லுதல்
****************
வச்ச கடனுக்கு
வயக்காட்ட வித்ததுல
கொஞ்சம் காசெடுத்து
கண்ணாலம் செஞ்சுக்கிட்டு

சொச்ச கடனடைக்க
சொந்த ஊர விட்டுப்புட்டு
அழு(த்)த மனதோடு
அயல்நாடு போகையில

யாரோ கொடுத்தான்னு
யாதோ வாங்கிவர
தடையான பொருளால
தண்டனை கிடைச்சதுல

கண்ட கனவெல்லாம்
கானலாய்ப் போன கதை- இது
கண்ட காட்சியொன்று
கவிதையாய் மலர்ந்த கதை

#சிறையில்_கண்ட_காட்சி
************************
உதவி செய்யப்போயி
உள்ளுக்குள் போனதுல
வந்த சிறைக்குள்ள
வருமான வழியின்றி
மனையாள் நினைவோடு
மனசுக்குள் வலியோடு
நாலு வருசங்களும்
நரகமாப் போயிடுச்சு..

இன்னும் இரு மாசம்
இப்படியே போனாக்க
இந்த சிறை வாழ்க்கை
இனிமேலும் இல்லையினு
கொஞ்சம் மகிழ்வோடு
எண்ணுகிற வேளையில
சன்னல் கம்பிக்குள்- அவன்
கண்ட ஓர் காட்சி!
துயர வாழ்விற்கு
துணையான மருந்தாச்சி!

#அன்புக்_காதலிக்கு
******************
மழையில்லா தேசத்தில்
மழை மேகம் வந்ததுல
மனசுக்குள் மத்தாப்பு
மல்லிகையா மணம் வீச
அன்புக் காதலிக்கு
அவன் விடும் தூது இது...

#மேக_நண்பனிடம்_தூது
**********************
நண்பா...நண்பா என் நண்பா..
வானில் போகும் என் நண்பா..
கருணையில் பொழியும் என் நண்பா
கவலையைப் போக்கிட வா நண்பா

வினையின் பயனால் உள்வந்து
மனையை இழந்து வாடுகின்றேன்
உனைப்போல் உதவிய காரணத்தால்
எனையே இன்று தேடுகின்றேன்...

நீயெனைக் கண்ட சேதியினை
நீயென் மனைவிக்கு சொல்வாயா?!
செல்லும் வழியினைச் சொல்லுகிறேன்
சொல்வது போல்நீ செல்வாயா?!!

#வளைகுடாப்_பயணம்
*******************
கத்தார் நாட்டின் கடல்பிறந்து
முத்தாய்த் தெரிகிற என் தோழா..
கொஞ்ச தூரமே நீ சென்றால்
இந்த நாட்டினைக் கடந்திடலாம்..

மண்ணில் உயர்ந்த கட்டிடத்தை
விண்ணில் இருந்தே தொடுவதற்கு
பதுக்க பதுக்க நகர்ந்தாலே
பர்ஜ்துபாய் நகரம் வந்துவிடும்...

அங்கே கொஞ்சம் உறங்கிவிட்டு
அடுத்த நாளில் எழுந்திடுவாய்...
அறக்க பறக்கச் செல்வோர்மேல்
அன்புத் தூரல் பெய்திடுவாய்...

அரபிக் கடலின் முகம்பார்த்து
அன்பாய் நீரினைப் பருகிவிட்டு
இந்திய நாட்டின் வாசலினை
இதமாய் நீயும் அடைந்திடுவாய்

#இந்தியப்_பயணம்
*****************
காந்தி பிறந்த பூமியிலே
சாந்தி இருக்கிற நகரினிலே
சாரலைக் கொஞ்சம் தூறிவிட்டு
காவிரித் தாயைக் கண்டிடுவாய்..

குடகு மலையின் உச்சியிலே
குணத்தில் கர்ணனாய் நீ இருந்து
கருணையைக் கொஞ்சம் காட்டிவிட்டு
கர்நாடகம் கடந்து வந்திடுவாய்...

மலையிலும் அழகாய் இருக்கின்ற
மலையாள மகளிரைக் காணுகையில்
மனதிலே சஞ்சலம் வந்திடலாம்..
மதியிலே கவனம் கொண்டிடுவாய்..

#தமிழகப்_பயணம்
****************
அங்கே இருந்து நீ சென்றால்
அடுத்து வருவது தமிழகமே..
அம்மா..அய்யா....கோஷங்கள்
அங்கே உனக்குக் கேட்டிடுமே..

நஞ்சை புஞ்சை வைத்திருந்து
நஞ்சை உண்கிற நண்பர்களின்
நெஞ்சை நீயும் நன்கறிந்து
நெஞ்சில் ஈரம் காட்டிடுவாய்..

தஞ்சைக் கோவிலில் தங்கிவிட்டு
தந்தை சிவனைத் தொழுதுவிட்டு
நாகூர் தர்கா வழியினிலே
மாதா கோவிலும் சென்றிடுவாய்

மதத்தில் சிக்கிய மனிதர்களின்
மனிதத்தைக் காட்டிடும் மகத்துவத்தை
தருகிற தீர்த்தத்தைத் தந்துவிட்டு
திசையினை மாற்றியே வந்திடுவாய்!

#சிவகங்கையை_அடைதல்
*************************
உன்னை அதிகம் காணாத
செம்மை பூமியில் வாழ்கின்ற
எந்தன் மனைவியை நீ கண்டு
எந்தன் சோகம் சொல்லிடுவாய்...

சிவன்மேல் பொழிந்த நீரினைப்போல்
சிவகங்கை மண்ணில் நீயிறங்கி
சிந்தையில் நிறைந்த காதலியின்
சிவந்த கண்களைத் துடைத்திடுவாய்..

✍️செ. இராசா

(காளிதாசரின் மேகதூதம் ஏற்படுத்திய தாக்கத்தில் விளைந்த கற்பனைக் கவிதை இது. ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்)


#புதிய_மேகதூதம்
#NewMeghadutam
(கதைச்சுருக்கம்:
வெளிநாடு வரும் ஒருவன், விமானத்தில் வரும்போது யாருக்கோ உதவி செய்யப்போக அதனால் மாட்டிக்கொண்டு, நான்கு வருட சிறை வாழ்க்கையை அனுபவித்து, அது முடியும் தருணத்தில் சன்னலில் கண்ட மேகத்தைப் பார்த்து தன் காதலிக்கு தூது செல்ல விண்ணப்பிக்கிறான்)

என் குரலில்....

You Tube Link
👇👇👇👇👇👇
https://youtu.be/hqz5WHdYSPc

14/01/2019

யானை படுத்ததால்
எலி ஏறி மிதிக்கிறதாம்

#மோனை_எதுகை (2)



#மோனை_எதுகை (2)
**********************************************
சீர்களை வைத்து மோனை எதுகை எட்டு வகைப்படும்.

1. அடி மோனை -------அடி எதுகை
2. இணை மோனை----இணை எதுகை
3. பொழிப்பு மோனை--பொழிப்பு எதுகை
4. ஒருஉ மோனை-----ஒருஉ எதுகை
5. கூழை மோனை----கூழை எதுகை
6. மேற்கதுவாய் மோனை---மேற்கதுவாய் எதுகை
7. கீழ்க்கதுவாய் மோனை--கீழ்க்கதுவாய் எதுகை
8. முற்று மோனை-----முற்று எதுகை

1. அடி மோனை -------அடி எதுகை
***********************************
அடி மோனை: அடி தோறும் முதல் சீரில் மோனை வருவது.

(உதாரணம்)

மாவும் புல்லும் ஆஆஆ ஆஆஆ
மாலை மதியும் ஆஆஆ ஆஆஆ

அடி எதுகை: அடி தோறும் முதல் சீரில் எதுகை வருவது.

(உதாரணம்)

மானும் புல்லும் ஆஆஆ ஆஆஆ
தேனும் புள்ளும் ஆஆஆ ஆஆ

2. இணை மோனை----இணை எதுகை
****************************************
இணை மோனை: முதல் இரண்டு சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"அத்தான் அப்படியே வந்து என்னை"

இணை எதுகை: முதல் இரண்டு சீர்களில் எதுகை வருவது.

(உதாரணம்)

"அத்தான் செத்தான் என்று சொல்ல"

3. பொழிப்பு மோனை--பொழிப்பு எதுகை
*************************************************************
பொழிப்பு மோனை: முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் செருக்குள்ள புலவனே"

பொழிப்பு எதுகை: முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் எதுகை வருவது

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் செந்தமிழ் புலவனே"

4. ஒருஉ மோனை-----ஒருஉ எதுகை
*********************************************************
ஒருஉ மோனை: முதல் மற்றும் நான்காவது சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் புலவனின் செருக்கு"

ஒருஉ எதுகை: முதல் மற்றும் நான்காவது சீர்களில் எதுகை வருவது .

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் புலவனின் செந்தமிழ்"

5. கூழை மோனை----கூழை எதுகை
****************************************
கூழை மோனை: முதல் மூன்று சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் செழுமையைச் செதுக்கிய புலவனின்"

கூழை எதுகை: முதல் மூன்று சீர்களில் எதுகை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் என்பது தேன்சுவை உள்ளது"

6. மேற்கதுவாய் மோனை---மேற்கதுவாய் எதுகை
****************************************
மேற்கதுவாய் மோனை: இரண்டாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"ஆறு முகத்தா னாகும் அமுதம்"

மேற்கதுவாய் எதுகை: இரண்டாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் எதுகை வருவது.

(உதாரணம்)

"கற்றவர் செய்கிற நற்றமிழ் பற்றினை"

7. கீழ்க்கதுவாய் மோனை--கீழ்க்கதுவாய் எதுகை
****************************************************************************
கீழ்க்கதுவாய் மோனை: மூன்றாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"அவிர்மதி அனைய திருநுதல் அரிவை"

கீழ்க்கதுவாய் எதுகை: மூன்றாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் எதுகை வருவது

(உதாரணம்)

"அன்ன மென்ன அழகுற மன்னும்"

8. முற்று மோனை-----முற்று எதுகை
***************************************
முற்று மோனை: நான்கு சீர்களில் முற்றிலும் வருவது.

(உதாரணம்)

"தூய துணைவன் துறந்தமை தூற்றும்"

முற்று எதுகை: நான்கு சீர்களில் முற்றிலும் வருவது

(உதாரணம்)

"இங்கித மங்கள மெங்குமி லங்குக"

(சிறப்பில்லா எதுகை மோனைகள் தொடரும்..........)

செ. இராசா....

முதல் பகுதி: https://www.facebook.com/photo.php?fbid=2274562309235277&set=a.459762690715257&type=3&theater

#பொங்கல்_நல்வாழ்த்துகள்_2019


எத்தனையோ திறமைகள்
ஏராளம் இருந்தாலும்
ஏதேதோ காரணத்தால்
எல்லோரும் வெல்வதில்லை...

எப்படியோ ஒரு வேளை
எவரோ சிலர் வென்றாலும்
எவருமே நிலையாக
எப்போதும் நின்றதில்லை..

நிலையில்லா ஒரு வாழ்வே
நிலையென்று தெரிந்தாலும்
நிலையாமை வாழ்வென்று
நிற்பதும் முறையில்லை...

உள்ளுக்குள் இருக்கின்ற
உயர்வான உள்ளாற்றல்
தைத்திரு நன்னாளில்
தானாகப் பொங்கிவர
இறைவனை வேண்டுகின்றேன்!
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

வாழ்க வளமுடன்!

13/01/2019

தாய்மை


உன் மெய்(யைப்) பிரிந்தாலும்
உண்மையில் துடிக்கிறது
தாய்மை 🌧☔️
தாய் மெய் என்பதால்...

✍️செ.இராசா

#தாய்_மெய்
#தாய்மை

பட உதவி:

தாய்மை சொல்லும் படம் வரைந்தது
நண்பன் Siva Thamilappan (பள்ளியில் பிள்ளைகளுக்கான படம் வரையும் பயிற்சிக்காக வரைந்ததாம்)

#முப்போகம்_விளைஞ்சதடி




#முப்போகம்_விளைஞ்சதடி
..கண்ணம்மா...அடி கண்ணம்மா
இப்போது என்னாச்சு
..சொல்லம்மா?அடியே சொல்லம்மா?

தப்பாமல் பெஞ்ச மழை
.......எப்போதும் பெஞ்சதால
அப்போது பஞ்சமில்லை என் மச்சான்
இப்போது விளையவில்லை ஏன் மச்சான்?

(
முப்போகம்...)

முன்போல எல்லோரும்
.....எங்கேயும் மரம்வைச்சால்
முப்போகம் தவறாது என் மச்சான்
இப்போதே மரம் வைக்க வா மச்சான்

12/01/2019

#தொலைக்காட்சி



அரிதாக இருந்தபோதும்
அழகாகத் தெரிந்தாய் அன்று
பக்கத்தில் இருந்த போதும்
பார்க்கவே தோன்றவில்லை இன்று

கருப்பாக இருந்தபோதும்
கலையாக இருந்தாய் அன்று
நிறம் கூடிப்போன போதும்
நிஐமாக இல்லை இன்று

இடை பெருத்து இருந்தாலும்
இதயம் கவர்ந்தாய் அன்று
இடை சிறுத்து போனாலும்
எதையோத் தேடுகிறோம் இன்று(ம்)

#தொலைக்காட்சி

✍️செ. இராசா

(இன்று ஒரு பல்பொருள் அங்காடியில் இரு அரேபிய இளைஞர்கள் தரையில் அமர்ந்து ஏதோ வீட்டில் படம் பார்ப்பதுபோல் பார்த்த இந்த காட்சி என்னைப் பின்னோக்கி எங்கோ அழைத்துச் சென்றது)

#தமிழர்_திருநாள்_2019_கத்தார்


இனிய வணக்கம் உறவுகள,

இது நேற்றைய தினம் கத்தரில் நடைபெற்ற #தமிழர்_திருநாள்_2019_கத்தார் விழாக் கொண்டாட்டம் பற்றிய என் அனுபவக் கட்டுரை. வெளிநாட்டில் ஒரு தமிழ் நிகழ்வு எப்படி கொண்டாடப்படுகிறது என்ற ஆர்வத்தில் உள்ளவர்களுக்காகவே இந்தப் பதிவு. நன்றி.

நானும் கத்தரில் பல நிகழ்வுகளுக்குப் போய் வந்துள்ளேன். ஆனால், நேற்று நான் கண்ட நிகழ்வு முற்றிலும் வித்தியாசமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை. ஆம்... மற்றைய நிகழ்வுகள் நடத்துபவர்கள் எல்லாம் பொருளாதர ரீதியில் உயர்ந்த இடத்தில் பணிபுரிபவர்கள். ஆனால், நேற்றைய நிகழ்வு நடத்தியவர்களில் பெரும்பாலும் மிகவும் குறைந்த ஊதியம் வாங்கும் உடலுழைப்பை ஆதாரமாய்க் கொண்ட தமிழ்ச்சொந்தங்கள்.

#நிறைகள்

1. இதுபோல் இதுவரை யாரும் நடத்தாத மிகப்பெரிய நிகழ்விற்கு “அனுமதி இலவசம்” என்றது.
2. கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் மிகப் பெரிய கூட்டத்தைக்கூட்டி ஒரு நாள் முழுமையும் நிகழ்வு நடத்த அனுமதி வாங்கியது.
3. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழுக்க முழுக்க எங்களைத் தமிழ்க்கடலில் கடேசி வரை நனைய வைக்கும் வகையில் பார்த்துக்கொண்ட அமைப்பாளர்களின் திட்டமிடல்.
4. அருமையான தரமான சைவ உணவு, குடிநீர் போன்றவையும் இலவசமாக வழங்கியது.
5. தேன், திணை, தமிழ் தினசரி நாட்காட்டிகள், தமிழ் நூல்கள், தமிழ் ஆடைகள்....போன்றவை வெளியே மிகவும் குறைவான விலையில் இலாப நோக்கமின்றி விற்பனை செய்தது.
6. உரியடித்தல், பம்பரம் விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை போட்டியாக வைத்து கத்தரில் நடத்தியது.
7. பறையடித்தல், சிலம்பாட்டம், யாருமே அறியாத பாரம்பரிய தற்காப்புக் கலைகள், மிகவும் நேர்த்தியான சாமானியனும் ரசிக்கும் வகையில் நடந்த பரத நாட்டியம், மிகச்சிறப்பான நடிப்பில் அமைந்த சேரன் செங்குட்டுவனின் காவிய நாடகம்.......அட அட அடா.
8. தமிழ் உணவின் மகத்துவம்பற்றி மிகவும் சிறப்பான வகையில் மருத்துவர் கு. சிவராமன் வழங்கிய சிறப்புரையின்போது அரங்கமே அதிர்ந்தது இன்னும் காதில் ஒலிக்கிறது.
இத்தனை நிறைகள் இருந்தாலும் குறைகளும் இல்லாமல் இல்லை. குறைகளைக் களைந்து மேலும் சிறக்க வேண்டும் என்ற வகையில் இங்கேச் சுட்டிக்காட்டுகின்றேன்.

#குறைகள்

1. தமிழர்களின் விழாவாக அழைத்து அனைவரும் ஒன்று சேர்ந்த இடத்தில், கடேசி வரை கட்சி சார்ந்த நிகழ்வாக இல்லாமல் பார்த்துக் கொண்டவர்கள் சில இடங்களில் சறுக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது.
2. அதிலும் கடேசியாக ஒருவர் தன் தலைவனுக்குக் குழந்தை பிறந்த செய்தியை சொன்னபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசிய அந்த உரை மிகவும் முகம் சுளிக்க வைத்தது.
3. நிகழ்வை சிறப்பு விருந்தினருக்காகத் தாமதமாக துவக்கியதில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மற்றவர்களைக் காக்க வைத்தது நிகழ்வின் சறுக்கலே.
4. காக்க வைக்கும் நேரத்தில் வேறு ஏதாவது நடத்தி அந்த இடத்தை நிரப்பி இருக்க வேண்டும் வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டார்கள்.
5. பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடத்த முடியாமல் போகும் அளவு நேர மேலாண்மையில் தவறி இருக்கக் கூடாது.
6. இயற்கைத் தேவைக்குக் கூட வெளியில் போக முடியாத அளவு சுற்றிலும் பாதையே இல்லாத அளவு நெரிசல். சற்றே சரி செய்திருக்கலாம்.
7. அனுசரணையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளில் அவர்கள் அமரும் இட ஒதுக்கீட்டில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
8. கத்தரில் இப்படியான நிகழ்விற்கு அனுமதி கிடைப்பதே பெரிய விடயம். அதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் தமிழர்கள் மறக்கலாமா?!!
குணம் நாடி குற்றம் நாடி பார்க்கும்போது இந்த நிகழ்வு சந்தேகமே இல்லாமல் ஆச்சரியம் தரும் அளவில் நடந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வே. இதேபோல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற குறைகளைக் களைந்து மேலும் மேலும் வெற்றி நடைபோட இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்த்துகள்
வாழ்த்துகள்
✍️செ. இராசா

10/01/2019

மரநேயம்



மனிதநேயம் மலிந்தோர்க்கு
மரநேயம் புரியாது...
மரநேயம் மிகுந்தோர்க்கு
மனிதநேயம் குறையாது....
*********************
✍️செ. இராசா

இங்கு பூமிக்கடியில் போடும் உயர் மின் அழுத்த கேபிள் வேலையின் போது அதன் பாதையில் இருந்த மரங்கள் பத்திரமாக மீண்டும் நடுவதற்காகப் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கூடுதல் தகவல்:

கத்தரில் எந்த மரத்தையாவது அனுமதியின்றி வெட்டினால் 6 மாத சிறைத்தண்டனையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ (இரண்டு லட்சம்கூட ஆகலாம்) விதிக்கப்படும்.

09/01/2019

ஞானம்




புவிக்கு மேலே விண் உள்ளது
——இது சாதாரண ஞானம்

புவிக்குக் கீழேயும் விண் உள்ளது
——இது சிந்தனை ஞானம்

விண்ணைப் பகுத்துக் காண்பது
——இது விண் ஞானம் (விஞ்ஞானம்)

விண்ணைத் தொகுத்துக் காண்பது
——இது மெய் ஞானம்

எல்லாம் தெரியுமென நினைப்பது
——இது அஞ்ஞானம்

08/01/2019

SOLLUNGA WAHEGURU------(பஞ்சாபி + தமிழ்ப் பாடல்)

இன்று இனிக்கிறது



உன் இதழ்களை உரசுகின்ற
குவளையாய்....

உன் கண்களை ரசிக்கின்ற
கண்ணாடியாய்....

உன் முகத்தை அளக்கின்ற
கைப்பேசியாய்...

உன்னையே சுமக்கின்ற
வாகனமாய்...
..................

இருக்கின்ற
உன் கணவனை நினைத்தால்....

அன்றைய காதல் தோல்வி
இன்று இனிக்கிறது...

😀😀😀

...செ. இராசா

(சத்தியமா கற்பனைங்க...)

காதலித்துப் பார்



பெட்ரோலுக்கே வழி இல்லாதும்
பில்கேட்சாய்ப் பேச வைக்கும்

மொக்கையான ஸ்டேடசையும்
அருமையெனச் சொல்ல வைக்கும்

அப்புறம்....என்ற வார்த்தை
மந்திரச்சொல்லாகும்..

வாட்சப்பின் வரிகளெல்லாம்
வைரமுத்தாய் வந்துவிழும்

ஸ்முலேவில் அவள் வந்தால்
அனிருத்தாய் மனம் துள்ளும்

செல்பியில் அவள் சிரித்தால்
செல்லெல்லாம் சூடாகும்

காதலித்துப் பார்....
கஷ்டம் உனக்கேத் தெரியும்

✍️செ. இராசா😊
அலுவலகம் வராத
சாப்பாட்டு பெட்டி சொல்கிறது
வீட்டில் சண்டையென்று
😀😀😀
தான் முனைப்போடு செயல்படலாம்
தன்-முனைப்போடு செயல்படக்கூடாது!

முனைப்பு- தீவிரம், தன்முனைப்பு-EGO

07/01/2019

#நெஞ்சே_நெஞ்சே (பாடலாக)--(குறளின் குரலில்)







நெஞ்சே...நெஞ்சே...
எந்தன் நெஞ்சே..
நஞ்சினை நீயும் தந்தாய்
ஏன்தான் நெஞ்சே...?!

நெஞ்சே நெஞ்சே....
எந்தன் நெஞ்சே
கொஞ்சமும் கருணையின்றிக்
கொன்றாய் நெஞ்சே!

அன்பிலார் வாசம் சென்று
அவரையே நேசம் கொண்டு
என்னையும் ஏதோ செய்தாய்
ஏன்தான்....சொல்லு நெஞ்சே...

கண்ணிலே காணும் போது
தன்னிலை மறக்கச் செய்து
என்னையும் தவிக்க விட்டாய்
ஏன்தான்.....சொல்லு நெஞ்சே..

✍️செ. இராசா

*************
குறள் 1291:
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

விளக்கம்:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?.

********

06/01/2019

#பகுத்தறிவே_மெய்யறிவு




எழுநூற்று எழுபது கோடியிலே
எவருக்கும் தனியொரு அடையாளம்!
எத்தனை கோடிகள் மிகுந்தாலும்
எவரையும் சுமந்திடும் பூகோளம்!

ஒன்றாய் நமக்குத் தெரிந்தாலும்
ஒவ்வொரு கையிலும் தனிரேகை!
கோடாய் நமக்குத் தெரிந்தாலும்
கோளத்தின் மேல்தான் வாழ்க்கை!

புவியின் மேற்புறம் இருப்பவரோ
வெளியை மேற்புறம் காட்டுகையில்
புவியின் கீழ்ப்புறம் உள்ளவரும்
வெளியை மேற்புறம் காட்டுகின்றார்!

எங்கும் உள்ள பெருவெளியை
எப்படி மாயை மாற்றியது?!!
அறிவுடன் பகுத்து ஆராய்ந்தால்
அறிவது இங்கே சாத்தியமே...!!!

#பகுத்தறிவே_மெய்யறிவு
#அறிவே_தெய்வம்

அப்பப்பா என்கிற ரகமே..
















தருபவர் இங்கேக் குறைவு...
தரப்படும் கவிதைகள் அனைத்தும்
தரத்துடன் இருப்பதும் அரிது...7
தலைக்கனம் இல்லாக் கவிதை

அதிலே அப்பா கவிதை
அப்பப்பா என்கிற ரகமே...
அதனை தினமும் படித்தால்
அகத்தில் வருவது சுகமே...

வேட்டி


தறியில் நெய்ததை வெட்டி
தமிழன் கட்டினான் வேட்டி

தனியாய்த் தரணியில் காட்டி
தமிழனை உயர்த்திடும் வேட்டி

கோடையில் குளிர்தரும் ஊட்டி
வாடையில் நலந்தரும் வேட்டி

எங்கும் எவருக்கும் போட்டி
ஏனில்லை அதிலே வேட்டி?!

அன்னியர் உடையினைக் காட்டி
அழியுதோ நம்மிடம் வேட்டி?

வேற்றின உடைகளை ஓட்டி
கட்டுவோம் தமிழராய் வேட்டி!

உள்ளத்தில் மாண்பினைக் கூட்டி
உடுத்துவோம் தமிழராய் வேட்டி!

✍️செ. இராசா

#பொய்முகங்கள்


மையிருட்டில் பிறந்த மழலைக்கு
வைக்கின்ற பெயர் சிகப்பியாம்
வீட்டில் பொய்முகம்

சலுகைகள் நிறைய வருமென்றால்
சாதியின் பெயரை மாற்றுவானாம்
பள்ளியில் பொய்முகம்

பரீட்சைக்குத் தயாராய் வந்தாலும்
படிக்கவே இல்லை என்பானாம்
கல்லூரியில் பொய்முகம்

அனுபவம் இல்லை என்றாலும்
அனுபவ மிகுதிபோல் காட்டுவானாம்
அலுவலகத்தில் பொய்முகம்

எல்லா பழக்கமும் இருந்தாலும்
எந்த பழக்கமும் தெரியாதாம்
திருமணத்தில் பொய்முகம்

காசிற்கு ஓட்டை விற்றுவிட்டு
கையூட்டு அரசியல் என்பானாம்
வாக்காளரின் பொய்முகம்

சிந்தையில் பொய்யாய் வாழ்ந்துவிட்டு
சிவலோகப் பதவி அடைந்தானாம்
மரணத்தில் பொய்முகம்

#பொய்முகங்கள்

05/01/2019

இவனுக்கு வேலையே இல்லையா?
(இதை இப்படியும் கேட்கலாமே) 

இவன் எப்படி நேரம் ஒதுக்குகிறான்?

04/01/2019

ஓர் அழகிய பயணமே....


கோப்பைக்குள் மூழ்கியோ அல்லது
கோவிலுக்குள் இறங்கியோ
இடையில் கிறங்கியோ அல்லது
இசையில் மயங்கியோ
சுயத்தை மறக்கவோ அல்லது
சுயத்தைத் தேடியோ
..........
.........
ஏதோ ஒன்றிற்காய்
ஏங்குமிந்த வாழ்க்கை
ஓர் அழகிய பயணமே....

03/01/2019

தேடிச்சோறு நிதம் தின்று



தேடிச்சோறு நிதம் தின்று
ஓடியாடி மண்ணில் வீழ்ந்து
உயிரைத் துறந்திடவா வாழ்க்கை?- சொல்
உயிரைத் துறந்திடவா வாழ்க்கை?

தன்னைப் பெரிதென்று நினைத்து
எங்கும் குறையென்று கதைத்து
காலம் கடத்துவதா வாழ்க்கை- சொல்
காலம் கடத்துவதா வாழ்க்கை?!

கள்ளைத் தினந்தேடிச் சுவைத்து
கட்டில்சுகம் பெரிதாய் நினைத்து
காட்டை நெருங்குவதா வாழ்க்கை- சொல்
காட்டை நெருங்குவதா வாழ்க்கை?

--செ. இராசா
சிந்தையில் உதித்த கருவும்- விந்தை
சிந்தயில் உதித்த கருவும் விந்தையே...!!!