31/12/2020

புது வருசத்தில் மலர்கிறநம்பிக்கையால்

 

புது வருசத்தில் மலர்கிறநம்பிக்கையால்
இனி ஒரு புதுயுகம் பிறக்கட்டுமே
விடியலைப் போற்றிப் பாடிப்பாடி
புது வருசத்தை வரவேற்போம்
மண்ணில் யாவரும் ஒன்றாய்க்கூடி
புதுவருசத்தில் வென்றிடுவோம்
✍️செ.இராசா

30/12/2020

தென்னைப்பத்து............. குறள் வெண்பாக்கள்

 



#தென்னைப்பத்து
#குறள்_வெண்பாக்கள்

காயென்றும் ஓர்நாள் கனியாகும் ஆகாதே
மாயக்காய் தேங்காய் அது
(1)

உப்புக் கடல்நீரை உள்வாங்கிக் கொண்டாலும்
உப்பில்லை அந்நீரில் பார்
(2)

பல்லடுக்குப் பாதுகாப்பில் பத்திரமாய் நீர்வைத்த
வல்லமையை என்சொல்வேன் நான்
(3)

மின்சாரம் இல்லாமல் நீரேற்றி மாற்றுகின்ற
நன்னீர்செய் ஞானம் நவில்
(4)

ஓரிடம் காலூண்றி ஓங்கி வளர்வதை
யாரிடம் கற்றாயோ நீ
(5)

ஆழக்குழி தோண்டி அடியிலே நீர்விட்டால்
வாழவழி காட்டுவாய் நீ
(6)

நேராய் நிமிர்ந்தோர்க்கு நேர்கின்ற தீங்கைப்போல்
பாரேன் தடுக்கிறார் 'கள்'
(7)

தென்னங்கள் என்றவுடன் தீங்கெனச் சொல்வோரின்
எண்ணங்கள் சாராயங் கள்
(8)

இளநீரின் இன்சுவைபோல் ஈடேதும் உண்டோ?
உளமாற வந்திங்(கு) உரை
(9)

நீர்விட்டால் நீர்செய்யும் நேர்த்தியைக் கண்டதினால்
வார்த்தேனே வெண்பாவில் வாழ்த்து
(10)

✍️செ.இராசா

சைனா கொரோனோ

 


 

#சைனா_கொரோனா‌ அடடா
சைனா கொரோனோ- அட
சைனா மேடு போனபின்னே
லண்டன் கொரோனா அடஇது
லண்டன் கொரோனா

அடிச்சத் துவைச்சுக் கிழிச்சிடுச்சு அப்பப்பா
இதுக்கு மேலே என்ன இருக்கு சொல்லப்பா
புடிச்சு நசுக்கிப் போட்டிடுச்சு அப்பப்பா
பொழைக்க என்ன வழி இருக்கு சொல்லப்பா

கொரானான்னு சொல்லி சொல்லி
குறைச்சுப்புட்டான் சம்பளத்தை (2)
சூமுரூமு (zoom room) பிலிமு காட்டி
அள்ளிப்புட்டான் ஸ்கூலு ஃபீசை (2)
சானிட்டைசர் போட வச்சு
சாச்சுப்புட்டான் சைனாக் காரன் (2)
கார்ப்பரேட்டு கணக்குப் போட்டு
ஏவிப்புட்டான் வெள்ளைக் காரன்(2)

ஒன்னும் புரியல - எங்களுக்கு
ஒன்னும் புரியல
இன்னும் எங்கே போகுமுன்னு
எதுவும் தெரியல- எங்களுக்கு
எதுவும் தெரியல

✍️செ.இராசா

(இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உருவான பாடல் இது)

29/12/2020

வள்ளுவர் திங்கள்_142 கொடை

 


கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு

நீ சிந்தும் ஓர் சிறு பருக்கை
ஒரு எறும்புக்கூட்டத்தின் பசி போக்கும்!
நீ செய்யும் ஓர் சிறு தானம்
பல எளியோர் வாழ்வில் ஒளி ஏற்றும்!
கொடு! கொடு!

இங்கே....
இருக்கும்போது கொடுப்பதல்ல கொடை
இல்லாதபோதும் கொடுப்பதே கொடை
இதில் சிறிதென்ன பெரிதென்ன
கொடு! கொடு!

இன்னும்.......
கொடை என்றால் கர்ணனும் பாரியும் தானா?
கொடுப்போர் அனைவரும் கொடையாளியே..
கொடுத்தால் அனைவரும் கொடை ஆழியே....

கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு

--செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_142
#கொடை

27/12/2020

தமிழ்ப்பத்து.............குறள் வெண்பாவில்.......பாரதியாரின் கண்ணன் பாடல் தலைப்பில்

 #தமிழ்ப்பத்து
#குறள்_வெண்பாவில்
#பாரதியாரின்_கண்ணன்_பாடல்_தலைப்பில்

#தமிழென்_தாய்
பாரா திருந்தால் பதராவேன் என்றெண்ணி
நேராமல் செய்தாயே நீ

#தமிழென்_தந்தை
சிந்தைக்குள் வந்தென்னுள் சீராய் அணிசெய்ய
எந்தைபோல் வந்தாயே நீ

#தமிழென்_குரு
இருளை விலக்கும் எரிதீபம் போன்ற
குருவென நின்றாயே நீ

#தமிழென்_தெய்வம்
வேண்டிடும் போதெல்லாம் வேகமாய் வந்திடும்
ஆண்டவன் ஆனாயே நீ

#தமிழென்_தோழன்
துயர்வரும் காலமும் தோழனாய் நிற்கும்
உயர்வுற வானாயே நீ

#தமிழென்_அரசன்
வரியில்லா போதும் வரிதர வேண்டி
அரசன்போல் கேட்பாயே நீ

#தமிழென்_சேவகன்
ஏவிய வேகத்தில் ஈட்டிபோல் பாய்ந்துவரும்
சேவகனாய் மாறாயோ நீ

#தமிழன்_சீடன்
பாடலின் ராகத்தைப் பற்றியதும் பாடுகிற
சீடனாய் வாராயோ நீ

#தமிழென்_குழந்தை
பழகிய ஒன்றையேப் பற்றென பற்றா
மழலையாய்ப் பேசாயோ நீ

#தமிழென்_காதலி
மோதலால் ஊடியே முட்டியே நில்லாமல்
காதலால் கூடாயோ நீ

✍️செ.இராசா

முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை

முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை எழுதினேன்
முறைத்து முறைத்துப் பார்த்தாள்..

எளிய நடையில் ஓர் புதுக்கவிதை
எழுதினேன்
ஏனோ... மீண்டும் முறைத்தாள்..

மீண்டும் ஓர் ஹைக்கூ எழுதினேன்
இம்முறை “ம்கூம்” என்று முனங்கினாள்

என்னதான் உன் பிரச்சனை? என்றேன்
இதுதான் தமிழா?!! என்றாள்

😀😀
✍️செ. இராசா

(வருங்காலத் தலைமுறைகளிடம் தமிழைக் கொண்டுபோய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல.....அதை நாமே தொடங்கவேண்டும்)

23/12/2020

கவிதை



இறுதிக் கவிதைக்கும்
அடுத்த கவிதைக்குமான
இடைவெளி இருக்கிறதே...
அது ஊடலைப்போல..
மிகுந்தால் வருகின்ற வேதனை

குறையும்வரை குறையாது!

கவிதை பிறக்கின்ற
அந்தத் தருணம் இருக்கிறதே
அது கூடலைப்போல...
வார்த்தைகள் கை கோர்த்து
அடி அடியாய் நீண்டு
எப்போது முடியுமென
எப்போதும் தெரியாது...

கவிதை பிறந்தபின்
எழுகின்ற ஆனந்தம் இருக்கிறதே
அது பிரசவித்த தாயின்
பெருமூச்சுபோல...
சொன்னால் புரியாது
சொல்லவும் முடியாது....

கவிதை
அது சுகப்பிரசவமானால்
அளப்பரிய இன்பம்!

கவிதை
அது கருக்கலைப்பானால்
அளவில்லாத் துன்பம்..

கவிதை
எப்போது பிறக்கும்?!
எவருக்கும் தெரியாது!

எப்போதும் பிறக்கலாம்
இப்போதும் பிறக்கலாம்!

இதோ....
பிறந்துவிட்டது!

ஆமாம் எது கவிதை?!

எதுகையும் மோனையும்
இணையர்போல் இருக்க
சீர் சீராய் சொல்லடுக்கி
அடி அடியாய் சீர்படுத்தி
தளை தட்டாக் களையெடுத்து
மலை கட்டும் மரபுதான் கவிதையா?!

உணர்ச்சியின் உச்சத்தில்
ஊற்றெனப் பெருக்கெடுக்க
எண்ணத்தின் அலைகூடி
எழும்புகின்ற வேகத்தில்
புதுவிதமாய் விதைக்கின்ற
புதுவிதைதான் கவிதையா?

சுறுக்கெனத் தைப்பதுபோல்
நறுக்கெனச் சொல்லி
மூன்றாவது அடியிலே
முக்தியைத் தருகின்ற
வாமனரின் வடிவு தான்
வருங்காலக் கவிதையா?

உண்மையில் எது கவிதை?!

ஒருவரியில் கவி செய்த
ஔவையின் படைப்பும்;
பத்தாயிரம் கவி செய்த
கம்பனின் படைப்பும்;
பதினான்கே வரி செய்த
பூங்குன்றனார் படைப்பும்;
தமிழ்கூறும் நல்லுலகில்
தலைநிமிர்ந்த கவிதைகளே..

ஆம்..‌

வடிவத்தால் அளக்கப்படுவதல்ல கவிதை!
படிமத்தால் செதுக்கப்படுவதே கவிதை!

✍️செ.இராசா

பாடலும் கவியும்
வெறும் பொழுதுபோக்கல்ல
அது கலை

என் பெயர் ஆனந்தன்---------இது விமர்சனமல்ல

  


 #இது_விமர்சனமல்ல

தமிழரும் தமிழ்ப்படங்களும்
தாயும் சேயும்போல்
ஒன்றுக்குள் ஒன்றாய்
ஒன்றிப்போன விடயங்கள்..
யார் மறுதலித்தாலும்
இது மறுக்கமுடியாத உண்மை...

தெருக்கூத்தில் தொடங்கி
நாடகத்தில் வளர்ந்து
திரைப்படமாய் விரிந்த சினிமா
தலைநிமிர்ந்து நிற்கிறதா இல்லை
தலைகுனிந்து போகிறதா?
'#என்_பெயர்_ஆனந்தன்" பாருங்கள்!

கதை
கதைக்குள் கதை
கதைக்கின்ற கதையென.....
இப்படம் வெறும் படமல்ல
இனி படம் எடுப்பவருக்கான பாடம்..

யார் சொன்னார்கள்?!
வர்த்தகப் படம் வேறு
கலைப்படம் வேறென்று?!

யார் சொன்னார்கள்?!
பிரம்மாண்டமே படைப்பென்று?

யார் சொன்னார்கள்?!
எதார்த்தப் படங்கள் ஒடாதென்று?

நாலு பாட்டு
நாலு சண்டை
நெகிழ்ச்சி வசனம்
கவர்ச்சி நடனம்
இவ்வளவு தானா படம்?!!
கொடுமை!!!

ஒன்றைச் சொல்லுங்கள்?!
படம் பொழுதுபோக்கா? கலையா?!
பார்ப்பவர்க்கு எப்படியோ...
படைப்பவர்க்கு எப்படி?!

நல்ல கவிதையைப் போல்
நல்ல கட்டுரையைப்போல்
நல்ல ஓவியத்தைப்போல்
படம் பார்ப்போரைத் தூண்ட வேண்டும்
இல்லையேல்....
படம் படைக்காமல் விட வேண்டும்

'என் பெயர் ஆனந்தன்" பாருங்கள்
நம்மை நாமே பரிசோதிக்க முடியும்!!

✍️செ.இராசா

(இப்படத்தில் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்)

21/12/2020

குறள் வெண்பாவில்........கோபாலர்அதிகாரம்


 
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_ஐயா


#குறள்_வெண்பாவில்
#கோபாலர்_அதிகாரம்

இனிய குறள்போலே எந்நாளும் வாழ
வணங்கி வழங்குகிறேன் வாழ்த்து
(1)

இராம கிருஷ்ணரை எப்போதும் போற்றும்
இராமசாமி கோபாலர் நீர்
(2)

மருத்துவச் சேவையை மார்க்கமாய் எண்ணும்
அருள்மிகு சேவகர் நீர்
(3)

வள்ளுவம் சொல்வதை வாழ்க்கையில் செய்திடும்
வள்ளுவ வாரிசும் நீர்
(4)

தன்கா குறுங்கவி தந்திடும் போதிலும்
வெண்பா படைப்பவர் நீர்
(5)

எத்தனை வேலை இருக்கிற போதிலும்
வித்தக நிர்வாகி நீர்
(6)

திரைப்படம் பார்த்ததைத் தித்திக்கும் பாங்கில்
உரைக்கும் விமர்சகர் நீர்
(7)

படித்தது போலவே பண்பாய் நடக்கும்
பிடித்த மனிதரும் நீர்
(8)

வடித்த கவியின் வரிகளைப் போற்றும்
பிடித்த இரசிகரும் நீர்
(9)

இதயம் முழுதும் இனிதே நிறைந்த
அதிசய நண்பரே நீர்
(10)

✍️செ.இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா

நெத்திலிமீனு கொழம்பு வச்சு

 


நெத்திலிமீனு கொழம்பு வச்சு
நெல்லுச்சோறு வடிச்சு வச்சு
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
அத்தை பெத்த ஒத்தை புள்ள
அத்தானுக்கு செஞ்சு தந்தா (2)
 
......... ஐயோ ஐயோ என்ன சொல்ல?!
...........ஆசைக்கொரு வேலி இல்லை
...........அள்ளிக் கொள்ள வந்தேன் புள்ள
...........தள்ளி வையு தட்ட மெல்ல
...........பட்டிக் காட்டு வாசம் புள்ள
...........பக்கா மாசு மீனுக் குள்ள
...........இன்னும் கொஞ்சம் போடு புள்ள
...........திங்கத் திங்கத் திகட்ட வில்லை
 
வையி அடி நீ வையி- நீ
வச்சீனா வச்சிருவேன் கையி
............என்னது?
நான் தட்டச் சொன்னேன்..
............அதானே......?!!
 
நெத்திலிமீனு கொழம்பு வச்சு
நெல்லுச்சோறு வடிச்சு வச்சு
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
......... ஐயோ ஐயோ என்ன சொல்ல?!
இப்ப என்னத்தானே சொன்னீங்க
.........தெரியாதாக்கும்
 
✍️செ. இராசா
(இன்று மனைவியார் வைத்த நெத்திலிமீனால் உருவான பாடல் இது...... நன்றி மனைவியாரே😊😊😊💐💐💐)

வள்ளுவர் திங்கள் 141----------மயக்கும் மொழி

 


#அவன்_பேசிய_வார்த்தைகள்

தன்னிகர் இல்லாத் தமிழ்போல் அழகினில்
உன்னிகர் இல்லா உலகு

கம்பனில் கண்ட கவின்போல் சிரிக்கையில்
சிம்பொனி போன்ற சிலிர்ப்பு

பாரதி ஏற்றிய பாபோல் சினக்கையில்
பேரிகை கொட்டிடும் பேச்சு

வள்ளுவன் செய்த வரிபோல் அடிஅடி
உள்ளத்தைத் தூண்டும் உணர்வு

இராஜா இசையின் இதம்போல் இரவில்
இராஜாங்கம் செய்யும் எழில்

#நினைவு_திரும்புதல்

உயர்த்தி உயர்த்தி உசுப்பிடும் பேச்சு
மயங்கிட வைக்கும் மது

மயக்கும் மொழியால் மனதை மயக்கி
வியந்தபின் வைத்தான் விதை

விதைத்தது வேகமாய் வேர்விடும் முன்னே
அதைவிட்டுப் போனான் அயல்

அயலகம் சென்ற அவனையே எண்ணி
மயங்கிக் களிக்கும் மனம்

#அவன்_திரும்பிவந்தபோது

பிரிந்தோன் திரும்பினான் பேசவே இல்லை
எரிந்து குளிர்ந்த இரவு

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_141
#மயக்கும்_மொழி

18/12/2020

 


என் முன்னே நீ வந்தால்
என்ன நான் கேட்டிடுவேன்?!

உன்னையேக் கேட்டிடுவேன்..
உன்னை மட்டும் கேட்டிடுவேன்
எனில்...
நீ வேறு நான் வேறா?!

ஆமாம்...
நீ இல்லா நான் யார்?
நீ உள்ள நான் யார்?!
நீ வந்தால் நான் எங்கே?
நான் போனால் நீ எங்கே?!

அகம் பிரம்மாஸ்மியா?!
அறியேன் நான்

அகம்
நீ
நான்
அறிவேன் நான்
அந்த அறிவே நான்

✍️செ.இராசா

கத்தாருக்காக ஒரு பாடல்


#கத்தார்_தேசிய_நாள்
#டிசம்பர்_18

#கத்தாருக்காக_ஒரு_பாடல்
#அரேபிய_மெட்டில்_எழுதியது

எல்லோரும் நன்றாக வாழ்கின்றனர்- எங்கே
சொல்லென்றால் அந்நாடு கத்தர்
நெஞ்சில் துடிப்புள்ள தீரர்கள் வாழ்கின்ற
நன்நாட்டில் ஓர்நாடு கத்தர்

தன்னம்பிக்கை கொண்டு தன்னந்தனி நின்று
.........தானே வளர்கின்ற நாடு
யாராலும் என்றைக்கும் ஏதேனும் வந்தாலும்
........தானாய் வெல்லுமிந்த நாடு

WE LOVE QATAR WE LOVE QATAR
WE ARE ALL LOVING- YES- WE LOVE QATAR

நம்ம கத்தர் நம்ம கத்தர்
அரேபிய சிங்கம்தான் நம்ம கத்தர்

உலகத்தின் வேகத்தில்
...........உச்சத்தில் நின்றாலும்
எளியோரை மதிக்கின்ற நாடு
இளைஞர்கள் படைகொண்டு
...........நடைபோட்டுச் சென்றாலும்
முதியோரும் புகழ்கின்ற நாடு

வரியேதும் போடாமல்
.......... வதையேதும் செய்யாமல்
ராஜாங்கம் செய்கின்ற நாடு
மனமேதும் கோணாமல்
...........மறைவார்த்தை மீறாமல்
மதிப்போரை மதிக்கின்ற நாடு

✍️செ.இராசா

16/12/2020

ஞாலம் அறியட்டும் நன்று



ஊழும் உறவுமாய் உன்னடியில் நின்றுகொண்டு
நாளும் பொழுதுமாய் நாயகனே வேண்டுகிறேன்
காலன் வருமுன்னே காட்டிவிடு யாரென்று
ஞாலம் அறியட்டும் நன்று!

✍️செ.இராசா

15/12/2020

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்---------இலங்கை சுதாகரன்


மெட்டு: சலோமியா....

சுதாகரா....ஆ ஆ..சுதாகரா ஆ.ஆ.
கண்டி கண்ட சோதரா
கருப்பு நிறமானுடா
ஆளைப் பாரு கூலுடா
ஆனால் செம்ம வாய்சுடா......(2)

சுதாகரா....ஆ ஆ..சுதாகரா ஆ.ஆ.

உருவோ சிங்கள டானு
நெஞ்சோப் பாச வெடி
குரலோ மிரட்டும் பாணி
இதமாய்க் கொட்டும்பனி
இவன் சிலோனுடா இல்லை நம்மாளுடா
அட ஹிந்தி யிலும் பட்டாசுடா
இவன் சிலோனுடா என்றும் நம்மாளுடா
அட ஹிந்தி யிலும் பட்டாசுடா
ஏ ஹம்ஆப்கே ஏ ஐன்கோனு
ஹரே தில்வாலே எங்க அமீர்கானு
எந்த மொழியில வேணும் உடனேக் கேளு
‌எப்படி வேணும் ஹரி ஹரன்தான் பாரு
சுதாகரா....ஆ ஆ..சுதாகரா

எங்கள் அன்புப் பாடகர் மற்றும் இசைஞர் சுதாகரன் #இனிய_மனமார்ந்த_பிறந்தநாள் #வாழ்த்துகள்

14/12/2020

நற்பண்பு...............மாண்புப் பத்து...............ஒரே ஈற்றுச்சீரில்--குறள் வெண்பாக்கள்

#நற்பண்பு
#மாண்புப்_பத்து
#ஒரே_ஈற்றுச்சீரில்_குறள்_வெண்பாக்கள்

எதிர்க்கட்சி ஆனாலும் ஏற்பதை ஏற்று
மதிப்பதே மண்ணாள்வோர் மாண்பு
(1)

எதிர்க்கட்சி என்போர்கள் எப்போதும் வைதால்
மதிப்பின்றி போய்விடும் மாண்பு
(2)

எதிரியின் வீழ்ச்சிக்கும் எள்ளாத தன்மை
மதிப்புள்ள சான்றோரின் மாண்பு
(3)

காட்சிக் கெளியோராய் கண்ணியம் காப்போரின்
மாட்சிமை போற்றுதல் மாண்பு
(4)

எளியோரின் தேவையை எப்போதும்
ஆய்ந்தே
வழிகாட்டும் நல்லரசின் மாண்பு
(5)

உரிய முறையில் உழைக்கின்ற பேரை
மரியாதை செய்தலே மாண்பு
(6)

உறவென்று சொல்லி உறவாடி விட்டு
மறப்பதா நல்மக்கள் மாண்பு?!
(7)

உண்மையாய் எண்ணும் உறவினர் மேலேயே
மண்ணையள்ளிப் போடுவதா மாண்பு?
(8)

அறமென்ற ஒன்றே அறியாதான் நட்பை
மறப்பதே நல்லோரின் மாண்பு
(9)

தன்னையே ஆராய்ந்து தன்தவற்றை காண்போரை
மன்னித்தல் நல்லோரின் மாண்பு
(10)

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_140

12/12/2020

சுத்த புத்தி சித்தனுக்கும்

சுத்த புத்தி சித்தனுக்கும்
செத்த புத்தி பித்தனுக்கும்
சிந்தையிலே 'நான்' ஒன்றுமில்லை-பிறர்
சிந்தைவிட்டு 'நான்' போவதில்லை..
 
✍️செ.இராசா

10/12/2020

தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்

 

தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதைகேளீர்...

சிவகங்கைச் சீமைச் சரகம்
.......மயில்ராயன் கோட்டை நாட்டின்
............மாவீரன் கருவப் பாண்டியன் கதைகேளீர்..

மெய்க்காவல் பணியில் என்றும்
.......பொய்க்காமல் வாழும் ஊராம்
..........பொக்காலி பட்டி என்னும் சேதுநகர்

காங்கிக் கருவ ருக்கும்
‌..தாய்வீரக் கருப்பாயிக்கும்
....நான்காம் பிள்ளை யாகப் பிறந்தாரே

திருமலைக் கோவில் வந்த
.....மன்னரின் குதிரை பின்னே
........தென்பக்கச் சேது நாடு சென்றாரே

பனிரென்டாம் வயதில் சென்றே
..... பல்கலைக் கற்றார் அங்கே
........மறவர்கள் தளபதி யாய் மாறினாரே

சிவகங்கைக் கோவ னூரில்
.......அகமுடைப் பெண்ணைக் கட்டி
............முக்குலப் பாலம் போட்ட மூத்தவரே

பிள்ளைகள் ஐந்தைப் பெற்று
... பெண்டாட்டி பிள்ளை யோடே
........போனாரே மீண்டுமவர் சொந்த நாடு..

வந்தாலும் வரவேற் பில்லை
.....சொந்தங்கள் பேச வில்லை
........போங்கடா என்றேயவர் புதுகை சென்றார்

புதுக்கோட்டை தொண்டைமானால்
‌..புதுவாழ்க்கை கண்ட தேவர்
......பிள்ளைகள் எல்லாம் கற்க வழிவகுத்தார்

நெல்லுருவிக் கொள்ளை யரால்
.... நேர்கின்ற கொள்ளை யாலே
..... மயில்ராயன் கோட்டை நாட்டார் புலம்பிநின்றார்..

எல்லோரும் ஒன்றாய்க் கூடி
......நல்லதோர் முடிவைத் தேடி
சிவகங்கை மன்னருக்கு ஓலை விட்டார்..

மாவீரன் கருவப் பாண்டி
.... வந்தால்தான் தீரும் என்றே
.......அம்பல காரரிடம் மன்னர் சொன்னார்

எல்லோரும் புதுகை சென்று
......வல்லோரை வாரும் என்றே
.........மன்றாடி மண்ணைக் காக்க வாருமென்றார்..

தன்பிள்ளை ஐவருக்கும்
...சரியான வாழ்க்கை செய்ய
...... சம்மதம் பெற்ற பின்னே மீண்டும் வந்தார்...

வளரிவேல் வாள்சிலம்பம்
மல்யுத்தம் வர்மக்கலை
கற்றவர் கருவப் பாண்டிச் சேர்வையன்றோ?!

நெல்லுருவிக் கொள்ளை யரைப்
...புல்லுருவி போலே வெட்டி
......திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி கண்டார்

அன்றுமுதல் கொள்ளையர்கள்
....அனைவருமே விட்டார் தொழில்
மயில்ராயன் கோட்டை நாட்டார் மகிழ்வுற்றார்...

சிவகங்கைச் சீமை சென்று
.. மன்னர்க்கு தளபதியாய்
திருமலைக் கோவிலையும் காத்து வந்தார்

தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதை இதுவே...

✍️செ.இராசா

தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதைகேளீர்...

சிவகங்கைச் சீமைச் சரகம்
.......மயில்ராயன் கோட்டை நாட்டின்
............மாவீரன் கருவப் பாண்டிச் சேர்வைக் கதை
இது...மாவீரன் கருவப் பாண்டிச் சேர்வைக் கதை

மெய்க்காவல் பணியில் என்றும்
.......பொய்க்காமல் வாழும் ஊராம்
..........பொக்காலி பட்டி என்னும் சேதுநகர்

காங்கிக் கருவ ருக்கும்
‌..தாய்வீரக் கருப்பாயிக்கும்
....நான்காம் பிள்ளை யாகப் பிறந்தாரே

திருமலைக் கோவில் வந்த
.....மன்னரின் குதிரை பின்னே
........தென்பக்கச் சேது நாடு சென்றாரே

பனிரென்டாம் வயதில் சென்றே
..... பல்கலைக் கற்றார் அங்கே
........மறவர்கள் தளபதி யாய் மாறினாரே

சிவகங்கைக் கோவ னூரில்
.......அகமுடைப் பெண்ணைக் கட்டி
............முக்குலப் பாலம் போட்ட மூத்தவரே

பிள்ளைகள் ஐந்தைப் பெற்று
... பெண்டாட்டி பிள்ளை யோடே
........போனாரே மீண்டுமவர் சொந்த நாடு..

வந்தாலும் வரவேற் பில்லை
.....சொந்தங்கள் பேச வில்லை
........போங்கடா என்றேயவர் புதுகை சென்றார்

புதுக்கோட்டை தொண்டைமானால்
‌..புதுவாழ்க்கை கண்ட தேவர்
......பிள்ளைகள் எல்லாம் கற்க வழிவகுத்தார்

நெல்லுருவிக் கொள்ளை யரால்
.... நேர்கின்ற கொள்ளை யாலே
..... மயில்ராயன் கோட்டை நாட்டார் புலம்பிநின்றார்..

எல்லோரும் ஒன்றாய்க் கூடி
......நல்லதோர் முடிவைத் தேடி
சிவகங்கை மன்னருக்கு ஓலை விட்டார்..

மாவீரன் கருவப் பாண்டி
.... வந்தால்தான் தீரும் என்றே
.......அம்பல காரரிடம் மன்னர் சொன்னார்

எல்லோரும் புதுகை சென்று
......வல்லோரை வாரும் என்றே
.........மன்றாடி மண்ணைக் காக்க வாருமென்றார்..

தன்பிள்ளை ஐவருக்கும்
...சரியான வாழ்க்கை செய்ய
...... சம்மதம் பெற்ற பின்னே மீண்டும் வந்தார்...

வளரிவேல் வாள்சிலம்பம்
மல்யுத்தம் வர்மக்கலை
கற்றவர் கருவப் பாண்டிச் சேர்வையன்றோ?!

நெல்லுருவிக் கொள்ளை யரைப்
...புல்லுருவி போலே வெட்டி
......திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி கண்டார்

அன்றுமுதல் கொள்ளையர்கள்
....அனைவருமே விட்டார் தொழில்
மயில்ராயன் கோட்டை நாட்டார் மகிழ்வுற்றார்...

சிவகங்கைச் சீமை மன்னர்
.. சசிவர்ணத் தேவர் சொல்ல
திருமலைக் கோவிலையும் காத்து வந்தார்

தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதை இதுவே...

✍️செ.இராசா