28/02/2017



அம்மாச்சி என்றாலே! என்
அகக்காட்சி விரியுதம்மா!
அவர்காட்சி தெரியுதம்மா!
அன்புமாட்சி மலருதம்மா!

நீர்வீழ்ச்சி போல்அன்பை
நேர்பாய்ச்சி எம்நெஞ்சில்
அரசாட்சி புரிகின்றார்!
அதன்சாட்சி என்னெஞ்சே!

இருள்காட்சி வந்துவிட்டால்
இடர்வீழ்ச்சி ஆகவேண்டி
அம்மாச்சி குரல்கேட்பேன்
அகமகிழ்ச்சி ஆகிடுவேன்

மனத்தளர்ச்சி போகவச்ச
மதிகுளிர்ச்சி ஆகவச்ச
இறைஆச்சி இவர்தான்னு!
மனசாட்சி பேசுதம்மா!

27/02/2017

எண்ணுக்கும் இறைக்கும் எல்லையில்லை

மெய்வழி அறிதல் ஞானமாகும்
மெய்யாய் உணர்தல் பக்தியாகும்
மெய்யை சரியாய் உணராதோர்
மெய்யை பொய்யென உரைப்பாரே!

பாதை தெளிவாய்த் தெரிந்தாலும்
படித்தது நன்றாய் புரிந்தாலும்
பயணம் தன்னுள் தொடங்காமல்
பக்தியை உணர்ந்தவர் உள்ளனரோ?

ஆயிரம் விடயங்கள் அறிந்தாலும்
ஆயிரம் ஆலயம் சென்றாலும்
ஆண்டவன் அருளை அடையாமல்
ஆதியும் அந்தமும் விளங்கிடுமோ?

அறிவியல் அடிப்படை கணிதமாகும்
அவற்றின் அடிப்படை எண்களாகும்
இறுதிஎண் என்பதே இல்லாமல்
இறைவனும் எண்போல் முடிவிலியே!!


✍️செ. இராசமாணிக்கம்

23/02/2017

கள்ளும் சினமும்


கள்ளும் சினமும் குணத்தால் ஒன்றே!
சொல்லும் நாக்கும் பிரளும் நன்றே!
வெறியும் வேகமும் சங்கமம் கொண்டே!
ஏறிடும் இரண்டிலும் போதை ஒன்றே!

கண்ணும் நெஞ்சும் பார்வை மங்கும்!
கல்வியும் அறிவும் காற்றில் பறக்கும்!
காலும் கையும் நடனம் ஆடும்!
காதலும் தேனும் கசந்தே போகும்!

மூக்கும் முழியும் கோணல் ஆகும்!
மூளையும் செல்லும் முடிவை நோக்கும்!
குணமும் குலமும் குறைவால் மங்கும்!
குருதியில் நஞ்சும் குன்றாய்ச் சேரும்!

நாயும் பேயும் நாவினில் வாழும்!
நோயும் பிணியும் உறவாய் கூடும்!
நட்பும் தமரும் விலகிட நேரும்!
நாடியும் நரம்பும் தளர்ந்தே போகும்!

கள்ளும் சினமும் நீக்கிட வேண்டும்!
எள்ளும் உலகம் வென்றிட வேண்டும்!
அன்பும் அறமும் போற்றிட வேண்டும்!
அறிவும் தெளிவும் அடைந்திட வேண்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!

21/02/2017

எனது ஆத்திசூடி



அறிவைப் பெருக்கு
ஆசையைக் குறை
இனியதைப் பேசு
ஈரநெஞ்சம் கொள்
உண்மை தவறேல்
ஊரை நேசி
எதிரியை வாழ்த்து
ஏளனம் பொறு
ஐம்பொறி அடக்கு
ஒற்றுமை போற்று
ஓர்குலம் ஆகு
ஔடதம் தவிர்
எஃகாய் உடல்கொள்

11/02/2017

நட்பால் இணைவோம்




அன்பை விதையாய்த் தூவித்தான்
நட்பை மரமாய் வளர்த்தோமே!

கற்பைப் போலே போற்றித்தான்
நட்பை நாமும் மதித்தோமே!

காயாய் புளித்த தேர்வுகள்!
கனியாய் இனிக்கும் நினைவுகள்!

எல்லாம் கடந்த காலங்கள்!
என்றும் ஜொலிக்கும் வைரங்கள்!

இலையுதிர் காலம் வந்தாலே
இலைதான் உதிரும் தன்னாலே!

உதிர்ந்த இலைபோல் பிரிந்தாலும்
உதிரம் உறவாய் ஒன்றானோம்!

புதிதாய் துளிர்த்த இலைபோலே
புதையல் நினைவுகள் வருகுதிங்கே!

வசந்த காலம் வருவதைப்போல்
வருடம் ஒருநாள் கூடிடுவோம்!

காலம் தூரம் மறைந்திடவே
நாமும் நட்பால் இணைந்திடுவோம்!

பகடி மோசடி



ஆடி பாடி சேர்த்தாங்களா?
ஓடி ஓடி சேர்த்தாங்களா?
கூடி கூடி சேர்ந்துதானே
கோடி கோடி அடிச்சாங்க.....!

தேடி தேடி அடிச்ச காசில்
திருடி திருடி சேர்த்த காசில்
மாடி மாடி கட்டிப்புட்டு
பகடி மோசடி செய்யுறாங்க!

மோடி நாடி சென்றிடவே
கேடி லேடி முயன்றிடவே
போடி போடி எனவிரட்ட
திருடி குருடி ஆகிட்டாங்க...!⁠⁠⁠⁠



SASIKALA

Fraudகார lady ஒன்னு
Prado carல பறக்குது!

MLAக்கள விலைக்கு வாங்க
Ministerகள அனுப்புது!
Case caseஆ சரக்க இறக்கி
Cash கோடி கொடுக்குது!
DA case தீர்ப்பு வரல
CM post கேக்குது!
OPS பேரக் கேட்டா
BP sugar எகிறுது!

(தமிNglishல எழுதியமைக்கு மன்னிக்கவும்.....)

வெக்கம் கெட்டு ஓடுறாங்க



தஞ்சம் சென்ற இடத்தினிலே
மஞ்சம் போட்டு படுத்துறங்கி
நெஞ்சம் எல்லாம் பகைமையிலே
கொஞ்சம் கூட கருணையின்றி
வஞ்சம் வலை விரிச்சவங்க!
லஞ்சம் தந்து மறைச்சவங்க!

படிப்பு வாசம் இல்லாமலே
நடிப்பு வேசம் போடுறாங்க!
பதவிப் போதை பார்க்கனும்னு
உதவிப் பாதை தேடுறாங்க!
சிதறிக் கூட்டம் போகுமோன்னு
பதறிப் போயி துடிக்கிறாங்க!

கட்டுக்கட்டா பணத்த இறைச்சி
குண்டுகட்டா ஆளத் தூக்கி
பட்டிதொட்டி தேடி தேடி
வெக்கம்கெட்டு ஓடுறாங்க!

✍️செ. இராசமாணிக்கம்

06/02/2017

எங்கே தொலைத்தேன் என் இதயம்?


எங்கே தொலைத்தேன் என் இதயம்?
************************************
வளைந்த புருவத்திலா?
வட்ட முகமதிலா?

உருட்டும் விழிகளிலா?
உதிரும் புன்னகையிலா?

பஞ்சுக் கன்னத்திலா?
படுத்தும் கோபத்திலா?

செவ்விதழ் வார்த்தையிலா?
செறுமும் குரல்களிலா?

கொழு கொழு தேகத்திலா?
கொப்பளிக்கும் சீற்றத்திலா?

எங்கே தொலைத்தேன்
என் இதயம்?

தொலைத்த இடமது தெரியாமல்
தெரிந்தே உழல்கிறேன் உன்னாலே!

ஈருயிர் ஓருயிர் ஆனபின்னே
ஈரநெஞ்சும் அதில் சேர்ந்திடுச்சோ?

இதயம் ஒன்றாய் ஆனபின்னே
இனிநீ என்பது நான்தானே!

இனிமேல் நானும் புகழ்ந்தாலே!
இதுதற்புகழ் தானெனத் தோன்றாதோ?!

ஒரு குறுந்தகவல்


கல்போல் மனதைக் கொண்டாயோ?
சொல் மெய்காண மாட்டாயோ? 

என்றும் அன்பைப் பொழிந்தவனை
இன்றும் நீயாய் அழைக்கவில்லை

நல்வாழ்வை நீயும் வாழ்ந்திடவே 
என்றும் வாழ்த்துவேன் அன்போடே

வித்யா-ஆனந்த்-----திருமணநாள் வாழ்த்துக்கள்



"வித்யா" 
அறிவு..........

"ஆனந்த்"
இன்பம்........

அறிவால் இன்பம் அடைந்திங்கே
அன்பும் அறனும் நிலைத்திடனும்

இல்லறம் நல்லறம் ஆகிடவே
இறைவன் அருளை வேண்டுகின்றேன்

தங்கை குணமே பொறுமை
நங்கை இனமதில் பெருமை

மைத்துனர் போற்றிடும் எளிமை
வைத்தவர் அடைவார் இனிமை

அழகாய் மருமகள் ரித்தன்யா
அடுத்தது மருமகன் எங்கய்யா?

தமிழ்போல் நிலைத்து வாழ்ந்திடவே
தமையன் இங்கே வாழ்த்துகின்றேன்

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌⁠⁠⁠⁠

02/02/2017

கவியோடு நான்பாட உதித்த நல்உறவுகளே-------இனேஷ்-அணுஶ்ரீ

 
கவியோடு நான்பாட
களிப்போடு விளையாட
உயிராக மெய்யாக
உதித்த நல்உறவுகளே

அறிவாலேஉயர்ந்தாலே!
அடைவீரே! ஆனந்தமே!

அப்பா அன்றழைக்க
ஆண்மகவாய் வந்தவனே!

"இனேஷ்"

இரண்டொரு எழுத்தினுள்ளே
இருந்திட வேண்டுமென்றும்
விஷ்ணுவின் நாமமாக
வீற்றிட வேண்டுமென்றும்
இந்திய நாமமாக
இருந்திட வேண்டுமென்றும்
எண்ணிய எண்ணத்தாலே
தோன்றிய நாமம் ஐயா! நீ
தெரிந்திட வேண்டும் ஐயா!

அன்புத்தேன் அளித்திடவே!
ஆடிவந்த பெண்மகவே!

"அணுஶ்ரீ"

ஆதிமுதல் அந்தம்வரை
ஆனதெல்லாம் அணுவாலே!
ஆண்டவனின் இருப்பாக
அணுவையாம் கண்டதாலே!
ஆசையோடு பெயர்வைத்தோம்
அலைமகள் நாமத்தோடே!
அழகான உன்நாமம்
அதுவே நின்திருநாமம்

01/02/2017

நரேன் பிறந்த நாள் வாழ்த்து


இந்திரன் கலை ஓவியமே- நீ
இனிதே வந்த காவியமே

இதயம் கவர்ந்த பாலகனே- நீ
இருப்பாய் என்றும் நலமுடனே

கட்டத்தேவர் ஐயா பரம்பரையில்- நீ
கடவுள் அருளால் வந்தவனே

தங்கராஜ் ஐயா வழியினிலே- நீ
தர்மம் காத்திடப் பிறந்தவனே

பெற்றோர் அருளால் இப்பூமியிலே- நீ
பெற்றாய் நாமம் நரேந்திரா

புனிதர் பெயரைப் பெற்றவனே- நீ
புகழையும் அவர்போல் பெற்றிடுவாய்

அகிலம் உன்னை போற்றிடவே- நீ
அறிவை நீயும் வளர்த்திடுவாய்

சரித்திரம் போற்ற வாழ்ந்திடவே- நீ
சாதனை பல புரிந்திடுவாய்

கருணைக் கடலாய் இருந்திடவே- நீ
கடவுள் அருளைப் பெற்றிடுவாய்

இனேஷ் ராஜா மித்திரனாய்- நீ
இருப்பாய் என்றும் நிச்சயமாய்
 
வாழ்க  வாழ்க வாழியவே- நீ
தமிழ்போல் நிலைத்து வாழியவே!

வாழ்க  வாழ்க வாழியவே- நீ
தமிழ்போல் நிலைத்து வாழியவே!

சின்னமாமா------ திருமண நாள் வாழ்த்துக்கள்



சின்னமாமா! சின்னமாமா! 
சிங்கப்பூரு போனமாமா!
என்ன மாமா பன்னுரது?!
எல்லாம் நம்ம நேரம் மாமா! 

தங்கைகலை மனசுபூராம் 
தங்களையே நினைச்சதால
தங்காகலை முகத்தோடே 
தவியாத்தான் தவிக்கிதிங்கே 

செல்லமகன் நவீண் இங்கே 
செல்லஅப்பா குரலக் கேக்க 
செல்போனக் கேக்குதிங்கே
செல்லமும்தான் கொஞ்சுதிங்கே

உங்கபோனு வந்ததுமே 
உங்க அக்காஅங்கதானே 
உள்ளம்பூரா மகிழுறாங்க 
உடனேயே அழுகுறாங்க 

அத்தை மாமா சித்தியோட 
அன்பால வளர்ந்த மாமா 
அம்மாச்சி குலசாமி 
ஆசீர்வாதம் பெற்றமாமா

செல்வத்த சேர்த்து நீங்க! 
சீக்கிரமே வந்து இங்கே! 
கலைமனம் மகிழ்ந்திடவே! 
உங்க தலை (மரு)மகன் வேண்டுகிறேன்! 

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
⁠⁠⁠⁠⁠