31/12/2017

உழைப்பே உயர்வென்று




உயரத்தில் நின்றுகொண்டு
முகநூலில் எழுதுகின்றான்
"உழைப்பே உயர்வென்று...."

Thank you PC: Mr. Arjun Shukla

28/12/2017

அந்த வரிசையில் நானும்---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (85) பங்குபெற்ற கவிதை


அந்த வரிசையில் நானும் நின்றேன்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!
அந்த வரிசையில் நானும் நிற்பேன்!
எந்த வரிசையில் என்றா கேட்கின்றீர்?!


சொந்த நாட்டில் வேலையும் இன்றி
சொந்த பந்தத் துணையும் இன்றி
நொந்து நின்ற இளைஞர்கள் பலர்!
அந்த வரிசையில் நானும் நின்றேன்!

சொந்த பந்தம் சுகமாய் வாழ்ந்திட
நொந்த வலிகளைப் படிப்பினை ஆக்கியே
சொந்தக் காலில் வென்றோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நின்றேன்!

வெந்தது எதையோ வயிற்றில் நிறைத்து
வந்ததை சேமித்து செலவைக் குறைத்து
வந்ததில் ஈகைகள் செய்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

வந்த சோதனை யாவும் பொறுத்து
எந்த நிலையிலும் கடன் வாங்காது
சிந்தையில் சிறப்பாய் வாழ்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

தந்தை தாயை என்றும் மதித்து
வந்த மனைவியைக் கலங்க விடாது
நிந்தை செய்யாமல் வாழ்வோர் பலர்!
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன்!

இந்த நிலையிலே நின்று விடாது
இந்தப் பிறவியில் முழுமை பெறாது
அந்தம் காணாத சான்றோர் சிலர்!
அந்த வரிசையில் நானும் நிற்பேன்!

——செ. இராசா——-

27/12/2017

மலாலா


பயங்கரவாதம் ஒரு பக்கம்
படித்திடும் ஆசை மறுபக்கம்
இரண்டிற்கும் இடையில் போராட்டம்
இருந்தது மலாலா வாழ்வோட்டம்


ஜின்னா வழியினில் சென்றவருள்
இன்னா வழியினில் சென்றசிலர்
எல்லா சிறுமியும் பள்ளிசெல்ல
பொல்லா மனிதராய் தடுத்தனரே....

கல்லா குழந்தைகள் எல்லோரும்
நல்லா படித்திட வேண்டுமென்று
அல்லா துணைவர வேண்டிக்கொண்டு
பொல்லா கூட்டத்தை எதிர்த்தாளே....

மதியில்லா அரக்கரின் தீச்செயல்கள்
மலாலா அடைந்த வேதனைகள்
இரண்டையும் இணையத்தில் பதிவிட்டு
இறுதியில் தனியாய் வென்றாளே....

படித்திட முடியா சூழலிலும்
படித்திட எண்ணிய மலாலாவை
மனதால் ஒருமுறை வாழ்த்திடுவோம்!
மதியால் உலகை வென்றிடுவோம்!

—-செ. இராசா——

யார் அவர்?




"பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை
பூமியில் விஜயம் செய்தேன் நான்......"
அந்த "நான்" என்பது யாதென்று
அழகாய்ச் சொன்னார் ஒரு மனிதர்!

"காமத்திலிருந்து கடவுளென்று"
"நான்" வெல்லவும் வழி சொன்னார்!
"இந்த நிலையும் மாறிவிடும்......"
இதையும் சொன்னவர் அதே மனிதர்!

யார் அவர்?
............................
.............................
..............................
............................
...........................
............................
.............................
.............................
.............................

(சொன்னவர் யாரெனப் பார்க்காமல்
சொன்னதன் பொருளை ஆராய்வோம்)

------செ. இராசா------

பொறியாளர்

வங்கிக்கடன் வாங்கி
படித்த அவ்விளைஞன்
வாங்கிய கடன் அடைக்க
வங்கியில் வேலை பார்த்தான்
#பொறியாளர்_பட்டத்துடன்

இரு வரிக்கவிதை





அந்தரத்தில் தொங்கினாலும்
அன்புக்கு பஞ்சமில்லை
=======================
அம்மாவின் இலைவீட்டில் ஒரே சத்தம்...
வாரிசு போட்டியோ?
========================

25/12/2017

மனசாட்சியோடு நான்


நீ எதற்காக எழுதுகிறாய்?
.........
நான் எனக்காக எழுதுகிறேன்
.........
எனில்..... நீ சுய நலவாதியா?
........
இல்லை.. இல்லை..
நான் பிறருக்காகவும் எழுதுகிறேன்
......
எனில்...நீ புதியதை விதைக்கிறாயா?
.......
இல்லை... இல்லை
நான் புரிந்ததை எழுதுகிறேன்
..........
நீ யார் இதையெல்லாம் எழுத?
நீ என்ன எல்லாம் அறிந்தவனா?
......
அப்படி நினைக்கவில்லை......:
நான் அறிந்ததை எழுதுகிறேன்
........
அதைத்தான் அனைவரும் செய்கின்றனரே?
நீ ஏன் எழுதுகிறாய்?!
........
.......
ஆமாம்...நான் ஏன் எழுதுகிறேன்?!
.....

——-செ. இராசா——-

74வது கவிச்சரம்--இயேசு பாலன் பிறப்பு



தமிழ்த்தாய் வணக்கம்:
********************************
எத்தனை கோடித் தமிழர்களை
எழிலுடன் தமிழ்த்தாய் பெற்றெடுத்தாள்!
அத்தனைத் தமிழரைப் பெற்றெடுத்தும்
அற்புத இளைமையில் மின்னுகின்றாள்!
அடையாளம் தந்தத் தமிழ்த்தாயை
அனைவரின் சார்பாக வணங்குகின்றேன்.

கவிச்சரத் தலைமை_வணக்கம்
*******************************
உள் மூச்சில் தமிழ் இழுத்து
வெளி மூச்சில் கவி படைக்கும்
கவிஞர் மற்றும் கவிச்சரத் தலைவர்
சகோதரி ஜோ. குமாரி எலிசபெத் அவர்களையும்
அன்போடு வணங்குகின்றேன்!

அவை வணக்கம்!
****************
தூரத்தில் பார்த்து வியப்பு கொண்டேன்!
தூரத்தை குறைத்து இணைத்துக் கொண்டேன்!
இருப்பினும் வியப்பு குறையவில்லை!
இதயத்தின் பிடிப்பும் மாறவில்லை!

தமிழ்ப்பட்டறைச் சிறப்பினை என்சொல்வேன்?
தமிழின் சிறப்பே அதுவென்பேன்!
ஆன்றோர் சான்றோர் இருக்கின்ற
அற்புத சபையை வணங்குகின்றேன்!

இயேசு பாலன் பிறப்பு
*********************
இன்பத்தை அனைவரும் அனுபவிக்க -நம்
இறைவன் இயேசு மனம் வைத்தார்!

அன்னை மேரிக்கு மகனாக- நம்
ஆண்டவர் இயேசு இறங்கி வந்தார்!

ஏழைத் தச்சரின் பிள்ளையாக- நம்
ஏக இறைவன் இயேசு வந்தார்!

அன்பினை உலகிற்கு எடுத்துச்சொல்ல- நம்
அன்பின் இயேசு பிறந்து வந்தார்!

உறவுகள் சந்திப்பு
*****************
அன்புள்ள உறவினர் வருகையிலே
அகத்தினில் இன்பம் ஊற்றெடுக்கும்!
அகிலமே உறவினர் ஆகையிலே
அகத்தினில் இறைநிலை பெருக்கெடுக்கும்!

அன்புள்ள உறவினை அன்பு செய்தால்
அதிலுள்ள மகிழ்வே தனியாகும்!
அன்பில்லா உறவையும் அன்பு செய்தால்
அதுதான் ஆண்டவர் குணமாகும்!

நன்றி நவில்தல்
****************
இனிய கிறுஸ்துமஸ் மற்றும்
இனிய புத்தாண்டு வாழ்த்தினைக்கூறி
வாய்ப்பளித்த அனைவருக்கும்
நன்றிகூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்!
வாழ்க வளமுடன்!

——செ. இராசா——-

https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=74 

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்



அறிவுரை சொல்வது எவருக்கும் எளிது!
அறிவுரை போலவே நடப்பவர் அரிது!
எதிரியை நேசிக்கச் சொன்னவர் இயேசு!
என்றும் அதுபோல் வாழ்ந்தவர் இயேசு!

ஈகையைப் போதித்தல் எவருக்கும் எளிது!
ஈதலே அறமென வாழ்பவர் அரிது!
ஈந்தே தன்னுயிர் துறந்தவர் இயேசு!
ஈடில்லா அன்பினைப் பொழிபவர் இயேசு!

அன்பும் சிவமும் ஒன்றென அறிவோம்!
அன்பும் இயேசுவும் அதுவென உணர்வோம்!
அன்புள்ள இதயத்தில் வாழ்பவர் இயேசு!
அன்பினால் அகிலத்தை ஆள்பவர் இயேசு!

மதங்கள் சொல்லிடும் இறைநிலை அறிவோம்!
மறைபொருள் உண்மையை அன்பென உணர்வோம்!
மதத்தைத் தாண்டிய மனிதராய் வாழ்வோம்!
மறைந்துள்ள எதிரியை அன்பால் வெல்வோம்!

அன்பே இயேசு! அன்பே சிவம்!
அன்பே இயேசு! அன்பே எல்லாம்!

——இனிய கிறுஸ்துமஸ் நல்வாழ்த்துகள்-----

அன்புடன்,
செ. இராசா.

24/12/2017

சினம்

சினம் தவிர்க்கும் வகுப்பில்
சூடாகிப்போனார் ஆசிரியர்......
அடிக்கடிவந்த அலைபேசியில்
அழைத்தது அவரின் மனைவியாம்...

23/12/2017

மலரும் நினைவுகள்-2


(கல்லாரியில் கடைசி வருடத்தில் தொழிற்கல்வி சம்மந்தமான ஒரு கருத்தரங்கில் நான் வாசித்த சில வரவேற்பு வரிகள்:)

வையகமே வாழ்த்தும் அளவில்
வானளாவில் உயர்ந்துள்ள
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்,
கட்டிடவியல் மற்றும் கட்டுமானவியல் துறையை
கலைநயத்துடன் தேர்ந்தெடுத்து
எதிர்கால இந்தியாவை
ஏற்றமிகு இந்தியாவாக மாற்றத் துடிக்கும்
வருங்கால வல்லுநர்களை
வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்...


........(புகைப்படங்கள் பட்டமளிப்பு விழாவில் எடுத்தவை)

22/12/2017

நான் ஆண்

எழுத்துக்கள் கேட்டனவாம்....
ஏன் வரவேற்பு இல்லையென?

எழுதியவன் “நான் ஆண்” என்றானாம்!

ஹைக்கூ


மிருகங்களின் உரசலால்
பரிதாபமாய் ஓர் உயிர்
#குப்பைத்தொட்டியில்_சிசு
 
விதைத்தது முளைத்ததும்
அறுத்து எறிந்தனர் பாவிகள்
#குப்பைத்தொட்டியில்_சிசு

விளையாட்டில் விதிமீறல்
விளையாடியவர்கள் தான் தெரியவில்லை
#குப்பைத்தொட்டியில்_சிசு

21/12/2017

தவறு




தவறு செய்தால்- அதை
தவறி செய்தால் - பெரும்
தவறு செய்ததாய் ஆகாது!

தவறு செய்தால்- அதை
தவறாது செய்தால்- அது
தவறிலும் தவறாய் ஆகிவிடும்!

20/12/2017

சிறுவயதில் நான் எழுதிய காதல் கவிதை

(முதல் கவிதையென்றும் நினைக்கின்றேன்)
***********************************************

கண்ணாடி போட்ட நான்- உன்
முன்னாடி வந்துநின்றால்
தள்ளாடிச் சென்று- ஒரு மறைவின்
பின்னாடி போவது எதனால் தெரியுமா?!


இந்த கருப்பானவனைக் கண்டால்
உனக்கு வெறுப்புண்டாகுமோ என்ற அச்சத்தினால்..

எனக்கே என்னை பிடிக்காதபோது
உனக்குமட்டுமா என்னைப் பிடிக்கப்போகிறது.... என்ற எண்ணத்தினால்...

அழகின் சிற்பம் நீ..
அமைதியின் மறுபெயர் நீ...
...............
..............
...............
?!!!!


(கவிதையின் வரிகள் தொலைந்ததைப்போல்
காலத்தால் நினைவும் தொலைந்தனவே..................)


செ. இராசா

என் காதலி மனைவிக்காக


காதல் கவிதை(யும்) எழுதிடவே- என்
காதலி கவிதா வேண்டுகின்றாள்!
கவிதையில் முதுமை காட்டாமல்- என்
கவிதையில் இளமை வேண்டுமென்றாள்!


இதோ... நானும் மா(ற்)றி விட்டேன்
............
............
நிலவாக நீ இருந்தால்
நீல்ஆம்ஸ்ட்ராங்காய் ஆகிருப்பேன்....

கடலாக நீ இருந்தால்
நதியாக கலந்திருப்பேன்...

கவிதாவாய் நீ இருந்தாய்
கணவனாக மாறிவிட்டேன்...
........
இல்லை.... இல்லை
இளமை இல்லை
இதைத்தானே எண்ணுகின்றாய்?!
இதோ;

எழுதி எழுதிக் குவித்துள்ள
எத்தனையோ கவிதைகளில்
புரிந்தும் புரியாத
புதுக்கவிதை போன்றவளே.....

ஆஹா......
இது சரி இல்லையே....

ம்......என்ன எழுதலாம்?

உயிரோடு மெய்சேர்ந்து
உருவான கவி(தா) நீ!
உன்னோடு எனைச்சேர்த்து
உருவான கவிஞன் நான்!

....எப்பூடி?!
....யாருக்கிட்ட?!

.......செ. இராசா......

19/12/2017

73வது வார கவிச்சரம் நிகழ்ச்சியில் நான் எழுதிய கவிச்சரம்


அன்பு நண்பர்களே நான் தலைமையேற்று கலந்துகொண்ட கவிச்சரம் என்ற #தமிழ்ப்பட்டறை நிகழ்ச்சியில்
நான் பதிவேற்றிய இரு கவிதைச் சரங்களை (தலைமை கவிச்சரம் மற்றும் நிறைவுச்சரம்) இங்கே தருகின்றேன்.

73வது வார தலைமைக் கவிச்சரம்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தமிழ்த்தாய் வணக்கம்:
***********************
அறம் பொருள் இன்பம் சொல்லி
அறிவுக்கண்ணை திறந்து வைத்த
தமிழ்மறையை நமக்குத்தந்த
தலைமகனைப் பெற்றெடுத்தத்
தமிழ்த்தாயை வணங்குகின்றேன்!
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்!

அவை வணக்கம்:
****************
கம்பனைப் பெற்றடுத்த
கவித்தாயின் மனம்குளிர
கவிதைகள் பலசெய்து
கவிச்சரம் தொடுக்கின்ற
கவிஞர்களின் அவைதனை
கரமுயரத்தி சிரம் தாழ்த்தி
கனிவோடு வணங்குகின்றேன்!

தலைப்பு : இலக்கிய விழா
*************************
நடந்துவந்த பாதையிலே
கடந்துவந்த பெருமையினை
இலக்கியத்தால் அறிவதினால்
இலக்கியத்தைப் போற்றிடுவோம்!

தற்காலம் சிறப்பதற்கும்
பொற்காலம் அறிவதற்கும்
எடுத்தியம்பும் இலக்கியத்தை
எந்நாளும் போற்றிடுவோம்!

இலக்கியத்தைக் கொண்டாடும்
இலக்கிய விழாக்களினை
நாள்தோறும் நடத்திடுவோம்!
நாம்சிறக்க வாழ்ந்திடுவோம்!

உப தலைப்புகள் :
*****************

கலை நிகழ்ச்சிகள்:
*******************
கண்களுக்கும் செவிகளுக்கும்
காண்போர் அனைவருக்கும்
களிப்பினை அள்ளித்தரும்
கலைநிகழ்ச்சி நடத்திடுவோம்!

இயல் இசை நாடகத்தால்
இனிமையான நிகழ்ச்சிதந்து
கவிதைபோல் இனிமைதரும்
கலைஞர்களை வாழ்த்திடுவோம்!

சிறப்பு விருந்தினர்கள்
***********************
விழாவினைச் சிறப்பிக்கும்
விழாவின் விருந்தினர்கள்
விழாவினில் மகிழ்ச்சியுற
விழாக்களை நடத்திடுவோம்!

கருத்தரங்கம்
*************
உயர்ந்த உண்மைக் கருத்துகளை
உலகம் உய்வுறும் என்றறிந்தால்
உரத்த குரலில் சொல்லிடுவோம்!
உலகம் உயர்வுற உதவிடுவோம்!

கருத்துகள் பிறரைச் சேர்வதர்க்கும்
கருத்தினால் கருத்தினை வெல்வதற்கும்
கருத்தின் அரங்கங்கள் அமைத்திடுவோம்
களங்கள் அதுவென உணர்த்திடுவோம்!

கவியரங்கம்
************
மொழியின் செழுமையினை
மொழிகின்ற கவி சொல்லும்!
மொழியின் ஆழத்தினை
மொழிகின்ற கவி சொல்லும்!

கவிஞர்களின் பெருமையினைக்
கவியரங்கக் கவி சொல்லும்!
கவியரங்கக் கவிஞர்களை
கவியுலகம் தினம் சொல்லும்!

பட்டி மன்றம்
*************
சொல்லும் சொல்லை அழுத்திச் சொல்லி
வெல்லும் சொல்லை எடுத்துச் சொல்லி
சொல்லோடு சொல்லை மோதச் செய்து
சொல்லால் வெல்லுமாம் பட்டிமன்றம்!

அதுவும் இதுவும் மோதும் பொழுதில்
அதுவே சரியென எண்ணும் பொழுதில்
இதுவும் சரியென எண்ணச் செய்து
அறிவை எழுப்புமாம் பட்டிமன்றம்!

ஆன்மீகச் சொற்பொழிவு
**********************
உள்ளுக்குள் உரைந்துள்ள ஞானத்தை
உசுப்பிட உதவிடும் ஞானிகளின்
சொற்களைக் கேட்கின்ற அரங்கத்திலே
செவிகளுக் கின்பம் குறைவுண்டோ?

உண்மையில் ஞானத்தை வழங்குகின்ற
உயர்ந்த மனிதரின் வார்த்தைகளால்
ஆன்மா விழிப்புற வில்லையெனில்
அதனால் யாதும் பயனுண்டோ?!

அழைப்பு
*********
கவிச்சரம் தொடுத்திடுவோம்
வாருங்கள் நண்பர்களே.....!
கவிச்சரம் தொடுத்திடுவோம்
வாருங்கள் கவிஞர்களே.....!

############################################################
73-வது வார நிறைவுச்சரம்
############################################################

தமிழ்த்தாய் வணக்கம்
***********************
அன்றுமுதல் இன்றுவரை
அழகியல் குறையாமல்
திங்கள்போல் ஒளிவீசும்
தமிழ்மொழியின் கால்களிலே
மனத்தாலும் மொழியாலும்
மகிழ்வோடு வணங்குகின்றேன்.

அவை வணக்கம்
**************************
அறிவியலின் அற்புதமாய்
ஆர்ப்பரிக்கும் இணையத்திலே
தமிழர்களை மேம்படுத்தும்
தளமாகத் திகழ்கின்ற
தமிழ்ப்பட்டறைக் குழுமத்தினை
தலைகுனிந்து வணங்குகின்றேன்.

இலக்கிய விழா
****************
அரங்கங்கள் நிறைந்ததினால்
அயோத்தி சிறந்ததென்று
நாட்டின் சிறப்புப்பற்றி
கம்பரும் கூறுகின்றார்!

எவ்வினத்தின் பெருமைகளும்
எவ்வினத்தின் செழுமைகளும்
அவ்வினத்தின் இலக்கியத்தால்
அகிலத்திற்கு அறியவரும்!

வந்த வழி அறிந்திடவும்
போகும் வழி தெரிந்திடவும்
இலக்கிய மன்றங்களே
இலக்கணம் சொல்லித்தரும்!

கலைநிகழ்ச்சிகள்
********************
ஆடலும் பாடலும்
அழகாக இருந்தாலும்
ஆபாசம் நுழைந்துவிட்டால்
அருவருப்பு ஆகிவிடும்!

களிப்போடு கருத்திருந்தால்
கலைநிகழ்ச்சி தேனாகும்!
களிப்பு மட்டும் தனித்திருந்தால்
புலன்கள் மட்டும் சுகமாகும்!

சிறப்பு விருந்தினர்கள்
***********************
கருத்தோடு தொடர்புடைய
கருத்துள்ள விருந்தினரை
அழைத்துவரும் பொழுதினிலே
அனைவருக்கும் மகிழ்ச்சிவரும்!

அறிவுப்பசி தீர்க்கின்ற
அற்புத விருந்தினரை
அழைத்துவரும் பொழுதினிலே
ஆனந்தம் அகத்தில் வரும்!

கருத்தரங்கம்
**************
எக்கருத்து என்றாலும்
உட்கருத்து சரியென்றால்
வரவேற்று வாழ்த்துகின்ற
மாண்புள்ள சபையரங்கம்
மகிழ்வான கருத்தரங்கம்!

அதிகமான கருத்தரங்கம்
அகிலமெங்கும் கூட வேண்டும்!
தனிமனிதத் தூற்றுதலும்
தற்பெருமைக் கூற்றுகளும்
தவிர்த்திடவே முயலவேண்டும்!

பட்டி மன்றம்
**************
ஒத்திகை செய்துவந்த நாடகம்போல் இல்லாமல்
ஓடுகின்ற வாழ்க்கைக்கு ஒத்துவரும் கருத்தோடு
ஒப்பற்ற வாழ்வுபெற உதவுகின்ற கருத்தோடு
ஒழுங்குடன் நடக்கின்ற பட்டிமன்றம் சிறப்பாகும்!

ஆன்மீகச் சொற்பொழிவு
**************************
ஆன்மீகக் கருத்தோடு அறிவியல் கருத்திணைத்து
தற்கால இளைஞர்களும் ஏற்கின்ற வழியறிந்து
அறிவினை வழங்குகின்ற ஆன்மீகச் சொற்பொழிவில்
பிறர்வழியை குறைசொல்லா மாண்பு(ம்) வேண்டும்!

கவியரங்கம்
*************
கற்கோவில் கோபுரமும்
சொற்கோவில் காவியமும்
தமிழ்மொழியின் பெருமை சொல்லும்
தனித்துவ அடையாளங்கள்!
காலத்தின் பதிவுகளைக்
காவியமாய் பதிந்தால்தான்
காணாமல் போகாமல்
காலமெல்லாம் வாழ்ந்திடலாம்!

தீர்ப்பு:
********
இலக்கியத்தின் உச்சபட்சம்
இருக்கின்ற கவிதையெல்லாம்
பிறக்கின்ற இடமாக
கவியரங்கம் இருப்பதினால்
கவியரங்கம் உயர்வென்ற
தீர்ப்பினையே வழங்குகின்றேன்!

நன்றி நவில்தல்:
*********************
எத்தனையோ கவிஞர்கள்
எழில்கூட்டிய மேடையிலே
எளியோனாம் அடியேனை
ஏற்றிவிட்ட நண்பர்களுக்கும்,

தலைவர் திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் ...
சகோதரர் திரு. சேதுமாதவன் அண்ணா அவர்களுக்கும் ..
சகோதரி திருமதி. முல்லை நாச்சியார் அவர்களுக்கும் ..
சகோதரர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கும்
சகோதரர் திரு. சத்திய சீலன் அவர்களுக்கும்
சகோதரி திருமதி. ஜெயபாரதி அவர்களுக்கும்,
உயிர் நண்பர் திரு. சிவக்குமார் நாச்சியப்பன் அவர்களுக்கும் மற்றும்
கவிச்சரம் தொடுத்த அனைத்து கவிஞர்களுக்கும்
என் உளமார்ந்த நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன்..

மேலும், சென்னை, திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், மதுரை......என கிளைகள் பலபரப்பி
தமிழறம் விதைக்கின்ற
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
மனமார வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
https://www.facebook.com/photo.php?fbid=2028115350740892&set=gm.1949742412011332&type=3&theater&ifg=1

அன்பெனும் மழையிலே


84வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அய்யா அவர்களுக்கும், முதல் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்பெனும் மழையிலே
***********************
அண்டத்தில் ஆயிரம் இருப்பு கண்டீர்!
அன்பினில் சிறந்தது யாது கண்டீர்?!
அன்பெனும் மழையிலே நனைந்து பாரீர்!
அன்புதான் ஆனந்தம் என்றே சொல்வீர்!

அன்னையர் கொள்கின்ற பிள்ளை பாசம்
அன்பினில் உச்சத்தை என்றும் சொல்லும்!
அன்னியர் என்கின்ற மனதின் எண்ணம்
அன்பினால் உடைவது என்றும் திண்ணம்!

அடுத்தவர் வேதனை உணரும் தருணம்
அழுதிடும் கண்ணீரில் கடவுள் வருவான்!
அஹிம்சையால் அகிலமே மகிழும் தருணம்
அதர்மத்தின் உருவமும் கடவுள் ஆவான்!

அன்பின் எல்லைகள் விரியும் நேரம்
அகிலமே இறைவனின் ரூபம் ஆகும்!
அன்பின் எல்லைகள் சுருங்கும் நேரம்
அகிலமும் இறைவனும் சூனியம் ஆகும்!

அன்புள்ள காதலர் பிரியும் நேரம்
அற்புதம் அதிசயம் பதரெனத் தோன்றும்!
அன்புள்ள காதலி கொஞ்சும் நேரம்
அற்பமும் சொற்பமும் பொன்னெனத் தோன்றும்!

அன்புள்ள நண்பரின் உறவுகள் என்றும்
ஆயிரம் யானையின் பலமாய்த் தோன்றும்!
அன்பெனும் மழையிலே நனைந்தோர் நெஞ்சம்
ஆயிரம் ஆயிரம் நண்பராய்த் தோன்றும்!

—செ.இராசா—


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1948833668768873/

16/12/2017

ரௌத்திரம் பழகு-----களஞ்சியம் கவிதைப் போட்டி-83 (வெற்றிக் கவிதை)



83வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அய்யா அவர்களுக்கும், முதல் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. நிகரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ரௌத்திரம் பழகு
****************
எங்கெங்கு காணினும் லஞ்சம் லஞ்சம்!
என்றுதான் தீருமோ மக்கள் பஞ்சம்!
ஏழைகள் வாழ்விலே எங்கே இன்பம்?
ஏய்ப்பவர் ஆள்வதால் எல்லாம் துன்பம்!


வாக்குகள் மாற்றியே வாய்ப்பு தந்தோம்!
வரிசையாய் மாறிய ஆட்சி கண்டோம்!
வாய்வழி வள்ளல்கள் பலரைக் கண்டோம்!
வரிகளால் வங்கியில் வாடி நின்றோம்!

திராவிடம் திராவிடம் என்று சொல்லி
திராவகம் வீசிய பலரைக் கண்டோம்!
தமிழினம் என்னினம் என்று சொல்லி
தமிழனைக் குத்திய சிலரைக் கண்டோம்!

சமத்துவப் போதனை செய்து கொண்டே
சாதியம் வளர்த்திடும் தலைமை கண்டோம்!
அடிக்கடி நிறங்களை மாற்றிக் கொண்டே
அறிவுரை வழங்கிடும் கொடுமை கொண்டோம்!

ஆத்திகம் நாத்திகம் கூறு போடும்
ஆள்பவர் மனங்களில் மாற்றம் வேண்டும்!
கோத்திரச் சூத்திரம் போட்டுப் பார்த்தால்
ரௌத்திரப் பார்வையில் எரிக்க வேண்டும்!

—�—செ. இராசா—�—
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1947775012208072/ 

14/12/2017

சூழ்நிலை (சிறுகதைப்போட்டி-இது என் முதல் சிறுகதை)




#தமிழ்ப்பட்டறை புதினம் கதை எழுதும் பயிற்சி
________________________________________________________
தொடக்கம் : ----
முடிவு
******
சரிப்பா உன்முடிவை நீ சொல்லிட்ட அது உன் விருப்பம் .
என்முடிவை நான் சொல்றேன். என்னால அந்த இடத்தை விட்டு வரமுடியாது. எங்கே இருந்தாலும் நல்லபடியா இருங்க.
பேரனுங்க வந்தவுடன் பார்த்திட்டு இரவு கிளம்புகிறேன் என்றவரை திகைப்போடு பார்த்தான் மதன்.
_____________________________________________________________________________
ஒரு கிராமத்தில், மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான் மதன். தகுதிக்குமீறி படிக்கவைத்த தன் தந்தையைவிட்டு மதன் ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததே இல்லை. சிறுவயதிலேயே தாயை இழந்த சோகம்கூட வராத அளவு தன்னை பார்த்துக்கொண்ட தன் தந்தையின் மேல் மிகுந்த பாசம் கொண்டவன் மதன்.

கல்லூரியில் சேர்ந்த மூன்றாம் வருட முடிவில் அவனையே சுற்றி சுற்றி வந்த காவேரியை மணந்துகொண்டு இரு குழந்தைகளுக்குத் தந்தையானான். காலங்கள் உருண்டோடின.

அப்பாவைப்பிரிந்து மனைவி மக்களோடு நகரத்தில் வசிக்க வேண்டியநிலை மதனுக்கு வந்தது. மிகவும் வசதி வாய்ந்த நிலைக்கு மாறினான். கால ஓட்டத்தில் தன் தந்தைக்கு போன் செய்யக்கூட மறந்துவிட்டான்.

அன்றொரு நாள், பள்ளிக்கு சென்ற தன் மகனும் மகளும் வீட்டிற்கு நேரத்திற்கு வரவில்லை எனக் காவேரியும் மதனும் பதறிப்போய் பள்ளிக்கு போன் செய்தால், பள்ளி வாகனம் பழுதானதால் சற்று தாமதமெனக் கூறியதை அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தனர். ஆனாலும் மதனின் பதற்றம் மட்டும் அடங்கவே இல்லை. அப்பாவிற்கு போன் செய்து வரவழைத்தான்.

அப்பாவும் கிராமத்திலிருந்து தன் பேரன்களுக்கு, தன் தோட்டத்தில் இருந்து காய், பழங்கள் என அள்ளிக்கொண்டு வந்துசேர்ந்தார். "அப்பா...விவசாயமெல்லாம் வேண்டாம்ப்பா................எங்க கூடே இருங்கப்பா" என்றான் மதன்.

விவசாயத்தையும் விடமுடியாமல், தன் மகன், மருமகள், பேரன்களையும் விடமுடியாதவராய் அழுதபடியே, ஒரு வழியாக தன்னை தேற்றிக்கொண்டு ".ம் ..............சரிப்பா உன்முடிவை நீ சொல்லிட்ட அது உன் விருப்பம் .என்முடிவை நான் சொல்றேன். என்னால அந்த இடத்தை விட்டு வரமுடியாது. எங்கே இருந்தாலும் நல்லபடியா இருங்க. பேரனுங்க வந்தவுடன் பார்த்திட்டு இரவு கிளம்புகிறேன்," என்றவரை திகைப்போடு பார்த்தான் மதன்.

சேதுமாதவன்Group Admin சிறப்பு தம்பி அருமையான தொடக்கம்

Raja Manickam முதல் முயற்சி அண்ணா....அழைத்தமைக்கு நன்றி அண்ணா
சேதுமாதவன்Group Admin சிறப்பான கதையமைவு வாழ்த்துகள் தம்பி


குக்கூ

பெண்ணே வா!
புறப்பட்டு வா!

மரபு வேலி தடுப்புகளை
உடைத்தெறிந்து வா...

விருத்தப்பா பாடிவிட்டாய்
விரும்பியதைப் பாடலாம் வா...

கலிப்பா பாடிவிட்டாய்
கண்டதைப் பாடலாம் வா...

ஹைக்கூவைப் பெற்றெடுத்து
குக்கூவெனக் கூவலாம் வா...

என்றென்றும் உனக்காக
ஏங்குகிறேன் சீக்கிரம் வா..

#கவிதைப்_பெண்ணுக்காக_காத்திருக்கும்_இளைஞன்

ஹைக்கூ

பொறுமையோடு காத்திருந்தேன்
சுகப்பிரசவம் ஆகும்வரை
கவிதைமகள் பிறந்துவிட்டாள்

மன்னியுங்கள்


தாயே தமிழ்த்தாயே....
தயவுகூர்ந்து கேட்கின்றேன்- உன்
பிள்ளைகளை மன்னியுங்கள்....

நீர் தந்த தமிழ்ப்பாலை
நிறைவோடு அருந்தாத- உன்
குழந்தைகளை மன்னியுங்கள்...

வள்ளுவனை பாரதியை
வளர்த்தெடுத்த தமிழ்த்தாயே- உன்
வலி(ழி) அறியாப் பிள்ளைகளை
வாஞ்சையோடு மன்னியுங்கள்....

“மம்மி டாடி” போதையிலே
மதியிழந்து போனாலும்
மறுவாழ்வு பெறவேண்டி
மனதார மன்னியுங்கள்....

அடிபட்டால் வருவார்கள்
“அம்மா அப்பா” என்று சொல்லி
அதுவரையும் தமிழ்த்தாயே
அன்போடு மன்னியுங்கள்....

—-செ. இராசா——

யார் இவர்?



பச்சைவர்ண உடுப்பணிந்து
புரட்சிவெறி கண்களோடு
பார்க்கும் மனிதர் யாரிவர்?

உள்ளூர் வெளியூர் பதாகைகளில்
உடுத்தும் இளைஞர் ஆடைகளில்
உறையும் மனிதர் யாரிவர்?

யாரிவர் என்றா கேட்கின்றீர்?
"சே. குவேரா" என்பது விடையாகும்!
"சே" புரட்சியின் விதையாகும்!

"சே" என்றால் எதிரியெல்லாம்
"தீ" என்றே பயத்துடனே
"ஓ" என்றே அலறினராம்!

"சே" என்றால் நண்பரெல்லாம்
"ஆ" என்றே வாய்திறந்து
"வா" என்றே அழைத்தனராம்!

ஆம்.
ஆதிக்க சக்திகளின்
பொதுவான எதிரியவர்: "சே"

அடக்குமுறை புரட்சியெனில்
பொதுவான தோழரவர்: "சே"

-----செ. இராசா-----

‘நான்’ சாக எழுதுகின்றேன்



நான் எழுதுகின்றேன்- சரி
நானா எழுதுகின்றேன்?!-ஆம்
நானே எழுதுகின்றேன்- அட
நானும் எழுதுகின்றேன்-ஆமாம்
நானேன் எழுதுகின்றேன்?!- என்
‘நான்’ சாக எழுதுகின்றேன்- இதையும்
நானாக எழுதுகின்றேன்!


-------0000000-------------

12/12/2017

72 வது கவிச்சரம்- மகாகவி பாரதியார்




தமிழ்த்தாய் வணக்கம்
*************************************
தான்பெற்ற தவப்புதல்வன்
தரணியையே வென்றபோது
தாய்கொண்ட மகிழ்ச்சியைப்போல் - பெருங்
களிப்போடு தமிழ்த்தாய்க்கு
கவிச்சரங்கள் தொடுக்கின்றேன்! - இரு
கரமுயர்த்தி வணங்குகின்றேன்!

தலைமை வணக்கம்
*******************************
மாகவியைப் பாடுகின்ற
மாமன்ற கவியரங்கை
சிறப்பிக்கும் தலைவரையும்
சேக்கிழார் ஐயாவையும்
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

அவை வணக்கம்
**************************
எத்தனையோ அவைகள் கண்டோம்
இத்தனை சிறப்பு இல்லை!
எத்தனையோ தளங்கள் கண்டோம்
இத்தளம்போல் எங்கும் இல்லை!

உயர்புகழ் கவிஞர் பலர்
உறுப்பினர் ஆன சபை- நல்
உயிர்ப்புடன் உள்ள சபை
அச்சபையை அடியேனும்
அன்புடனே வணங்குகின்றேன்!

மகாகவி பாரதியார் வாழ்த்து
************************************
அடிமைத்தனம் உடைத்தெறிய
அரும்பாடு பட்டவன் நீ!

ஆசைவேர் அறுத்தெறிய!
ஆத்மஞானம் படைத்தவன் நீ!

இறுமாப்பு கொள்ளாத
இருதயத்தைக் கொண்டவன் நீ!

ஈதல் அறம் எடுத்துச்சொன்ன
ஈடில்லா சான்றோன் நீ!

உரிமைக்குரல் என்னவென்று
உண்மைகளை உடைத்தவன் நீ!

ஊமைகளாய் வாழ்ந்தவர்க்கு
ஊக்கவினை தந்தவன் நீ!

எழுத்தினிலே புதுமை செய்து
எல்லோர்மனம் வென்றவன் நீ!

ஏதிலார் பொய்யுரையை
ஏதுமில்லா(து) செய்தவன் நீ!

ஐயர்குலப் பிறப்பெனினும்
ஐயமில்லா தமிழன் நீ!

ஒற்றுமைக்கு வழிசொன்ன
ஒப்பற்ற தலைவன் நீ!

ஓர் மறையாம் குறள்போலே
ஓர் கவிஞன் ஆனவன் நீ!

ஔவியம் கொண்டவர்க்கும்- பின்பு
ஔவைபோலே தெரிந்தவன் நீ!

அஃறிணை ஆனாலும்
அஃது(ம்) இறைவன் என்றவன் நீ!

பாரதியாரின் கண்ணன் பக்தி
*****************************************
கண்ணனையே நண்பனாக்கி- தினம்
கலந்துரையாடல் செய்தாய்!

கண்ணனெனும் தாய்தேடி- பசிக்
கன்றெனத் துள்ளி நின்றாய்!

கண்ணனெனும் தந்தையிடம்- உன்
கடமையினைச் செய்து நின்றாய்!

கண்ணனையே சேவகனாக்கி- அன்புக்
கட்டளையால் பணிய வைத்தாய்!

கண்ணனெனும் அரசனிடம்- சபைக்
கவிபாடும் புலவனானாய்!

கண்ணனையே சீடனாக்கி- உயர்
குருபோல கருணை கொண்டாய்!

குரு கண்ணனிடம் சரண்புகுந்து- உன்
கர்மவினைநீக்கி நின்றாய்!

கண்ணனெனும் குழந்தைக்கு- நீ
கவிபாடி கொஞ்சி நின்றாய்!

காதலனாய் காதலியாய்- என்றும்
காதெலெனில் கண்ணனென்றாய்!

கண்ணனிலே குடிபுகுந்து - உயர்
கீதைபோலே கவிகள் தந்தாய்!

நன்றியுரை:
*****************
வாய்ப்பளித்த அனைவருக்கும்
வார்த்தைகளால் மட்டுமன்றி 
மனத்தாலும் நன்றி சொல்லி
மகிழ்வோடு வணங்குகின்றேன்.

----------------செ. இராசா------------

எத்தனை எத்தனை உறவுகள்?



வெள்ளை வேட்டி வெளுத்துத்தந்து
வெடுக்குன்னு காசவாங்கி
வெவரமாக வச்சிக்கிட்டு
வெள்ளந்தியா சிரிச்சுகிட்டே....
பழைய சோறு கேட்கும் அந்த
பாசக்கார அக்கா எங்கே?

அப்பா வரலையான்னு
அன்போட பேசிக்கிட்டே
அரைகிலோ கறியோட
கால்கிலோ எழும்புவச்ச
கறிக்கடை பாய் மாமா
காணாமல் போனதெங்கே?

கவுத்திவச்ச சட்டியொன்னு
கழுத்து மேல வைச்சதுபோல்
சிரிச்சுக்குட்டே முடிவெட்டி
சிரத்தை சேதம் செஞ்சாலும்
ஐயா ஐயான்னு பேசும் அந்த
ஐயா இப்ப போனதெங்கே?

காசும் எதுவும் வாங்காம
கணக்கு எதுவும் வைக்காம
கடலைமிட்டாய் சேர்த்துத்தரும்- அந்த
கடைக்கார மாமாதான்
காணாமல் போனதெங்கே?

செவ்வாய் வெள்ளி பூஜை செய்ய
செவ்வந்தி மாலை கட்டி
கசங்காம இருக்கணும்னு
காகிதத்த மேல சுத்தி
வாசமாய் மணம் இருக்க
பாசமாய் மனசு வச்ச
பூக்கார அம்மாதான்
புதிர்போல போனதெங்கே?

----------------------
-----------------------
எத்தனை எத்தனை உறவுகள்?
எல்லாம்தான் போனதெங்கே?

----செ. இராசா-----