28/02/2021

அனுபவப் பதிவு-5-----------மீண்டும் அஸ்ஸாம் பயணம்----கட்டுரை

  


 #அஸ்ஸாம்_மேகாலயா

சரியாக ஒருமாதம் ஆனபின்னர் அஸ்ஸாமில் இருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது. அங்கே போவதற்கு டிக்கெட் போடகூட பணமில்லை. நண்பன் சிவாவின் உதவியால் அழுத முகத்தோடு மீண்டும் அஸ்ஸாம் கிளம்பினேன். இம்முறை என்னைக் கோல்பாரா மாவட்டம் துத்னை என்ற இடம் வரச் சொன்னார்கள். மீண்டும் கவுகாத்தி சென்று அங்கிருந்து பேருந்தில் 110 கி.மீ. சென்று முதலாளி வீட்டுக்கு ரிக்க்ஷாவில் ஏறி ஜாடு கம்பெனி செல்லுங்கள் என்றேன். முதலாளிக்கு 14க்கு மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும் இந்த ஜாடு கம்பெனிதான் முதல் கம்பெனியாம். ஜாடு என்றால் விளக்கமாறு. ஆமாங்க... விளக்கமாறு ஏற்றி டில்லி மற்றும் மும்பைக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு அந்நாளில் அனுப்பி வைப்பார்களாம். இப்போது அத்தொழிலில் இலாபம் இல்லையென்றாலும் அத்தொழிலை இன்னும் செய்கிறார்கள். இது அவர்களின் தாத்தா கால கம்பெனி. அதுதான் சிமெண்ட், ஸ்டீல்....என்று பல கம்பெனிகளாக உருவாகியுள்ளது.

இம்முறை நான் பழைய இடமான பர்னிகாட் போகவில்லை. அங்கே PM முகர்ஜியின்மேல் நிறைய இலஞ்சப் புகார்கள் வந்ததால் அவரை நீக்கிவிட்டார்களாம். மேலும் வேறு ஒருவரை நியமித்து வேலைகள் முடியும்நிலையில் உள்ளதென்றார்கள்.‌ எனக்கு வேறு ஒரு சிமெண்ட் உருவாக்கும் தொழிற்சாலையில் முழுக்க முழுக்க என் மேற்பார்வையில் முடிக்க வேண்டும் என்றார்கள். உண்மையில் என்னைவிட என்னை அதிகம் நம்பியவர் இந்த இரபிஜெயின் மட்டுமே. அதனால்தான் தொடர்ந்து நான்கு வருடங்கள் அவர் நிறுவனத்தில் நிறைய ஆலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தேன். ஆனால் அங்கே வேலை பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.

இம்முறையும் அஸ்ஸாம் மேகாலயா பார்டரில்தான் வேலை. நான் தங்கி இருந்த அஸ்ஸாம் துத்னையில் மின்சாரம் தொடர்ந்து இருக்காது. ஒரு பாழடைந்த வீடுமாதிரி இருந்த அபார்ட்மெண்டில் அறை ஒதுக்கினார்கள். கும்மிருட்டாக எப்போதும் மழைவேறு பெய்யும். மெழுகுவர்த்தியில் தனி ஆளாக யாருடைய துணையுமின்றி வேறு வழியுமின்றி ஒருவித பயத்தோடு அறையில் தங்கி இருந்தேன். முதல் 15 நாட்கள் முதலாளி வீட்டில் இருந்தே மார்வாடிகளின் சைவச் சாப்பாடு வந்தது. பிறகு நானே சமைக்கக் கற்றுக் கொண்டேன். முதல்நாள் அதிகாலை அங்கிருந்து வேலை செய்யுமிடமான மேகாலயாவில் உள்ள காரோ மலைத்தொடரில் டமாஸ் என்ற இடம் போனோம். நான் போனமுறை வந்தது காசி மலைத்தொடர் இது காரோ மலைத்தொடர். வெவ்வேறு மழைவாழ் மக்கள் வேறுவேறு மொழி பேசுவோர்கள். இதுதவிர போரோ,ரபா, அஸ்ஸாமீஸ், பெங்காலி, நேபாளி என அனைத்து மொழியும் பேசுவோர்கள் வாழும் இடம். இங்கேதான் உல்பா, மெகாட் போன்ற நிறைய தீவிரவாத குழுக்கள் இருக்கும் இடம். அனைவருமே நன்றாகவே பழகினாலும் யார் தீவிரவாதிகள் என்று யாருக்குமே தெரியாது. தனித்தனியாக அனைவருமே நல்லவர்கள்தான். குழுவானால்தான் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது‌‌. அவர்கள் கேட்கும் பணத்தை அவ்வப்போது கொடுத்தால் பிரச்சினை வராது. இல்லையேல் ஆள் கடத்தல் செய்து மிரட்டுவார்கள். தரவில்லையென்றால் மரணம்தான். (பிறகு சொல்கிறேன்)

இங்கு குளிர் அல்லது மழைதான் இருக்கும். வெயிலே கிடையாது. சிறிய வெயில் வந்தாலும் ப்பா.... பூ என்று பதறுவார்கள். நான் சிரித்துக்கொண்டே நம் ஊரையும் கத்தார் வெயிலையும் நினைப்பேன். என்னதான் வெளியே குளிரென்றாலும் என் மனமெல்லாம் விரக்தியிலும் வேதனையிலும் தீயாய் எரிந்ததால் எனக்குக் குளிர் ஒன்றும் தெரியவில்லை.

நான் வேலை செய்யும் இடமென்பது முதலாளியின் ஏற்கனவே இயங்கும் ஒரு விர்கோ சிமெண்ட்ஸ் என்ற சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அருகிலேதான். அதற்கான பழைய வரைபடத்தை அப்படியே கொடுத்து அதேபோல் வேறு ஒரு சிமெண்ட் பேக்டரி அமைக்க வேண்டும் என்றார்கள். அதன் பெயர் பில்லிணியம் சிமெண்ட் லிமிடெட். அது ஏன் ஒரு ஒப்பந்ததார நிறுவனம் அமைக்காமல் நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், அங்கேதான் இரபிஜெயின் நிற்கிறார். இராஜஸ்தானின் ஜெயின் சமுதாயம் நம்ம ஊர் செட்டியார் சமுதாயம்போல் பெரிய பணக்காரர்கள் நிறைந்த சமூகம். ஆனால் பயங்கரமான சிக்கனவாதிகள். நிறுவனத்திற்குக் கொடுத்தால் கொள்ளை அடிக்கிறார்கள் என்றும், மேலும் இப்படி ஒரு பொறியாளரைக் கையில் வைத்துக்கொண்டு அதே பழைய வரைபடத்தில் செய்தால் பணத்தை சேமிக்கலாம் என்றும், மேலும் வருபவர்களை அங்கே உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கச் சொன்னால் தயங்குகிறார்கள் என்பதாலும் என்னை எடுத்துள்ளார்கள். நான் வருவது வரட்டும், சாகவே துணிந்துவிட்டோம் இதையும் என்னவென்று பார்த்துவிடுவோம் என்று இறங்கினால் அங்கு ஊரே கூடிஇருந்தது. அனைவருக்கும் வேலை வேண்டும் என்று போராட்டம். இது கட்டுமான வேலைதானே. இதற்கேன்‌ இத்தனை போராட்டம்‌. அதுவும் எப்படி அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும்?! ஒன்றும் புரியவில்லை. எப்படி சமாளிப்பதென்றே தெரியவில்லை.

..தொடரும்

✍️செ.இராசா

27/02/2021

 

உயர இருக்கையில்
சிறிதாய்த் தெரிகிறது
பிரச்சினைகள்

அனுபவப் பதிவு-4------------தோல்விப் பயணமும் திருப்புமுனையும்---கட்டுரை

 

 


 அஸ்ஸாம்_மேகாலயா

ஆரம்பத்தில் என்மேல் அவ்வளவு பாசமாக இருந்த முகர்ஜி என்னை கவுகாத்தியில் உள்ள கமக்கியா மந்திர் என்ற கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்றுள்ளார். சிவன் பார்வதிமேல் உள்ள கோபத்தில் துண்டு துண்டாக வெட்டிவிட்டாராம். அதில் தொடைப்பகுதி விழுந்த இடம்தான் இந்த கமக்கியா மந்திர் என்றார்கள். கோவிலிலும் சிலை கிடையாது. தொடைப்பகுதி உள்ள மாதிரி ஒரு கற்சிலையே இருக்கிறது.கவுகாத்தி அருகே மலைமேல் உள்ளது அக்கோவில். அப்படிப்பட்ட கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்ற முகர்ஜி வில்லனாக மாறுவார் என்று நினைக்கவே இல்லை. நான் வெளியேறிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டார்.

எப்படியோ ஒரு அஸ்ஸாம் நண்பரின் உதவியால் முதலாளிக்குத் தகவலைத் தெரிவித்துவிட்டு முகர்ஜிக்குத் தெரியாமல் தமிழ்நாடு கிழம்பத் தயாரானேன். எப்போது வேண்டுமானாலும் அஸ்ஸாம் வரலாம் என்ற அந்த முதலாளியின் அன்புக் கோரிக்கையே பின்நாளில் நான் திரும்பி வருவதற்கும் காரணமாக இருந்தது. ஆம் அங்கிருந்து கிளம்பி சொந்த ஊர் வந்து துபாய் செல்லத் தயாரானேன். துபாய் என்றுதான் சொன்னார்கள் ஆனால் துபாய் அல்ல தோகா கத்தார் என்று பயணச்சீட்டில் போட்டிருந்தது. அதுகூட அப்போது தெரியவில்லை. எப்படியோ அஸ்ஸாமில் இருந்து வந்த சில நாட்களிலேயே 2003ல் கத்தார் சென்றடைந்தேன்.

அங்கே என்னை QAQC என்ற பணியில் அமர்த்தினார்கள். அஸ்ஸாமில் இராஜா மாதிரி பணியில் இருந்த நான். இங்கே இரும்பு பீமில் இரண்டு ஓட்டைகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளந்து குறித்து வைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண வேலை கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காரணம் நான் தொலைபேசியில் தெளிவாகக் கூறி இருந்தேன், வந்தால் பொறியாளர் பணிக்கே வருவேன் என்று. ஆனால் அப்படி இல்லை. இரண்டு நாட்களிலேயே இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினேன். எனில் வேறு வேலை பார்த்துக்கொள்ள அனுமதி தந்தார்கள். ஆனால் அவர்களின் அறையில் தங்க அனுமதி இல்லை. ஓரு அரபியின் வீட்டில் கல்லலைச் சேர்ந்த சமையல் வேலை செய்யும் ஒருவரின் அறையில் அந்த அரபிக்கே தெரியாமல் தங்கி இருந்து கத்தாரில் வேறு வேலை தேடினேன்‌. கிட்டத்தட்ட 17 நிறுவனங்களில் ஏறி இறங்கினேன்‌. வேலை இருந்தால் விசா இல்லை. விசா இருந்தால் வேலை இல்லை. நிறைய அவமானங்களையும் சந்தித்தேன். வீட்டிற்கு போன் பண்ணி அப்பாவிடம் சொன்னால், செத்தாலும் அங்கேயே சா. இங்கே வந்துவிடாதே அசிங்கம் அவமானம் என்றார்கள். எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்று நினைத்துதானே வந்தோம். ஆனால் நம்மை நமக்கான வேலை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் அப்பா என்றேன். அதற்கு கக்கூஸ் கழுவும் வேலையென்றாலும் நீ பார்க்கத்தான் வேண்டும் என்றார் என் தந்தை. நான் அதுவும் தவறில்லை அப்பா. ஆனால் நான் அவ்வேலைக்கு வருவதாகச் சொல்லவில்லையே...என்றேன். அப்பா கேட்கவில்லை.

சரியான வேலை கிடைக்காமல் தோல்வி நிலையில்தான் கத்தாரில் இருந்து திரும்பினேன். ஒரு கூட்டமாக வந்து திருச்சி விமான நிலையத்தில் ஏற்றிவிட்டவர்கள் திரும்பி வரும்போது யாருமே வரவில்லை என் தம்பி சதீஸைத்தவிர. அங்கிருந்து பேருந்தில்தான் வீடுவந்து சேர்ந்தோம். அப்பா என்னிடம் பேசவே இல்லை. வீட்டைவிட்டு போகச் சொன்னார்கள். மனதே சரி இல்லை. தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது அதில் சுயநலம் உண்டென்று நினைத்தேன். அதற்குப்பதில் வேறு ஒருவருக்காக சாவதேமேல் என்று நினைத்ததால் மீண்டும் அஸ்ஸாம் போகலாம் என்று தீர்மானம் செய்து முதலாளி இரபிஜெயின் அவர்களுக்கு ஒரு கடிதம் நண்பர் சிவக்குமார் அப்பாவின் உதவியுடன் எழுதினேன். ஆம்....அஸ்ஸாம் அன்றைய நிலையில் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல் குழுக்கள் அதிகம் நிறைந்த மாநிலமாகும். பிற்காலத்தில் நானும் பாதிப்புக்குள்ளாவேன் என்று தெரிந்தும் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் போய் ஒரு மாதம் ஆனபின்னும் பதில் வரவில்லை.

சரியாக ஒருமாதம் ஆனபின்னே ஒருநாள்..

....தொடரும்

✍️செ.இராசா

26/02/2021

அனுபவப் பதிவு-3----------------நான்காம் மாதம்----கட்டுரை

  

 


#அஸ்ஸாம்_மேகாலயா
#நான்காம்_மாதம்

அஸ்ஸாமைவிட்டுப் போய்விடலாம் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் நான் டைரியில் எழுதிய அந்த மூன்று குறிப்புகளைப் பார்த்துக்கொள்வேன். ஆமாம்... அது என்ன அந்த குறிப்புகள்?!

1. இந்த இடத்தில் சூழ்நிலைகளைச் சமாளித்து எப்படியும் சாதித்தே ஆக வேண்டும்.
2. ஹிந்தி மொழி பேசுவோரிடம் ஹிந்தியில் மட்டுமே பேசும் அளவிற்கு அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. நாளும் தியானம் செய்து தன்னம்பிக்கையைப் பெருக்க வேண்டும்.

ஆம்.. இந்தக் குறிப்புகளே எனக்கு அவ்வப்போது ஊக்கம் தந்தது. கவுகாத்தி இரயில் நிலையத்தில் என்னைச் சந்திக்க வந்த அந்தப் பொறியாளர் சந்திரன் என்பவரைத் தவிற வேறு யாருமே தமிழர் இல்லை. அவரும் வந்த அன்றே  போய்விட்டார். எங்க அப்பாவும் திரும்பிவிட்டார்.

வேலைபற்றி விளக்க மேகலாயாவின் தலைநகரமான சில்லாங்கில் இருந்து முதலாளி ரபிஜெயின் மிகவும் விலை உயர்ந்த காரில் அந்த மோசமான சாலை வழியாக பர்னிகாட்‌ வந்தார்‌. மேகாலயா என்றால் மேகங்கள் சூழ்ந்த என்றே பொருள்படும். எனில் அதன் தலைநகரம் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள்?; உலகிலேயே அதிக மழைபொழியும் சிரபுஞ்சியும் அதன் அருகில்தான் உள்ளது. அந்த ஊரில் இருந்து முதலாளி வருவதாகச் சொன்னார்கள். என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு அழகான ஆங்கிலத்தில் பேசினார். நானும் ஓரளவிற்குப் பேசினேன். அவர் முதலில் சொன்னது. "நான் ஏதோ பெரிய ஆளாக இருப்பீர்கள் என்றே நினைத்தேன். சிறு ஆளாக உள்ளீர்களே.. பரவாயில்லை. இளைஞர்தான் எனக்குத் தேவை. ஹிந்தி தெரியுமா என்றார்?! தெரியாது என்றேன். பரவாயில்லை Broken English பேசி வேலை வாங்குங்கள் என்றார். நானே அப்படித்தான் பேசுவேன் என்றேன். அவர் சிரித்தேவிட்டார். பிறகுதான் தெரிந்தது அங்கே உள்ளவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது என்று? அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிப் புரிவதற்குள் கண்ணில் தண்ணீர் வந்துவிடும். போய்விடலாமா என்ற எண்ணம் எப்போதெல்லாம் மேலோங்குகிறதோ. அப்போதெல்லாம் அந்த டைரியின் குறிப்புக்களைத்தான் பார்த்துக்கொள்வேன்.

எனக்குமேலே ஒரு வங்காளத்தைச் சேர்ந்த முகர்ஜி என்ற பெயரில் ஒரு PM இருந்தார். எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்னவென்றால்,ஒரு தொழிற்சாலை அமைக்க அனைத்து கட்டிடப் பணிகளையும் செய்ய வேண்டும். ஏற்கனவே அங்கு முறுக்குக் கம்பி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இது முறுக்குக்கம்பிக்கு செய்யத் தேவையான மூலப்பொருளான இரும்பு கட்டிகள் செய்யும் ஆலை. மிகப்பெரிய ஆலை.... அதில் ஒரு 33kV மின்நிலையம், எடை தாங்கும் நிலையம், மேல்நிலை தண்ணீர் தொட்டி.....என்று அனைத்தையும் அங்கே உள்ள குட்டி குட்டி ஒப்பந்ததாரர்களை வைத்து வேலை செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர் என்றவுடன் பெரிய அளவில் நினைக்க வேண்டாம். இவர்களெல்லாம் வேலையாட்களை அழைத்து வரும் குழுத் தலைவர்கள்போல்தான். கட்டுமானப்பணி என்றால் மூங்கிலில் கூரைவீடு கட்ட மட்டுமே தெரியும். தூக்குண்டு பார்ப்பது, மூலைமட்டம் பார்ப்பது....என எதுவும் தெரியாது. எனக்கு அவர்களின் மொழி தெரியாது. நான் வேலை வாங்க வேண்டும். இருந்தாலும் அவர்களோடு இணக்கமாகப் பழகியதில் நான்கே மாதங்களில் நானும் மொழி கற்றுக்கொண்டேன். அவர்களும் வேலையில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டனர். அதில் அன்வர் அய்னுல் என்ற இருவர் நல்ல நண்பர்களாக மாறியும்விட்டனர். அவர்களோடு சேர்ந்து ஆட்டோவிலேயே சில்லாங் போய்வந்த அனுபவம் இன்னும் புதுமையானது. போகும் வழியில் படாபானி என்ற ஒரு ஏரியில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

நம்ம ஊர் சாப்பாடும் நம்ம தமிழ் மொழி பேசுவோரும் இல்லாமல் ஏதோ எதுவுமே இல்லாத உணர்வும் இருந்து கொண்டே இருந்தது. அவர்களுடைய எல்லா உணவிலும் கடுகெண்ணைய் வந்து மூக்கைத்துளைத்தது. பின்னர் அதுவும் பழகிவிட்டது. நான் தங்கி இருந்த அறையில் கந்த சஷ்டி கவசம், விவேகானந்தர் பாடல், உதயா என்ற படப்பாடல் இது மட்டுமே எப்போதும் ஒலிக்கும். காரணம் அவை மட்டுமே என்னிடம் இருந்தன. அவை மட்டுமே என்னோடு தமிழ் பேசின. நான் வெளியே உள்ள எஸ்டிடி பூத்தில் ஊருக்குப் பேசும்போது கிடைக்கும் சந்தோசம் மட்டுமே...அதுவும் சில நிமிடங்களே.... எப்போதாவது அந்த பூத்தில் தமிழ்நாட்டு இராணவத்தினர் வருவார்கள் அப்போது அவர்களோடு சில நிமிடங்கள் பேசுவது என்பது மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்கும்.

இப்படிப்போன வாழ்வில் திடீரென்று அப்பாவிடம் இருந்து போன் வந்தது. துபாயில் வேலை உள்ளதாகவும், அம்மன் பட்டியில் உள்ள பெரியகருப்பன் பெரியப்பா ஏற்பாடு செய்துள்ளதாகவும். கிராமங்களில் வேறு வேறு சமுதாயமாக இருந்தாலும் பெரியப்பா சித்தப்பா என்றுதான் உண்மையில் பழகுவோம்.... இல்லை இல்லை வாழ்வோம்.

பாதியில் இந்த வேலையை உதறிவிட்டுப் போவதா? இல்லை என்னை நம்பிய இந்த நிறுவனத்தில் இருந்து வேலை பார்ப்பதா என்று ஒரே குழப்பம். இதற்கிடையில் என்னையும் என் வேலையையும் பிடித்துப்போன PM முகர்ஜி, நான் போகமுடியாத அளவிற்கு தன் வேலையை ஆரம்பித்தார். அங்கே கூலிப்படை தாதாகிரி மிரட்டல் எல்லாம் சர்வசாதாரணம். அப்படி சிலரை வைத்து நீ எப்படிப் போகிறாய் பார்க்கலாம் என்று மிரட்டல் வந்தது. முதலாளியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்படிப் போவதென்றே தெரியவில்லை....?!!

....தொடரும்

✍️செ.இராசா

25/02/2021

அனுபவப் பதிவு-2------முதல் பயணம்---------கட்டுரை

 #அஸ்ஸாம்_மேகாலயா
#அனுபவப்_பதிவு_2
#முதல்_பயணம்



சென்னை சென்ட்ரல் வந்துபார்த்தால் அஸ்ஸாம்போக பயணச்சீட்டு வேறு கிடைக்கவில்லை. அப்புறம் என்ன செய்யலாமென்று நின்று கொண்டிருந்தபோது கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்தால் வாங்கித்தருவதாக அங்கேயே நிறைய தரகர்கள் அனுகினார்கள். நான் இல்லை அப்பா நாம் அன்ரிசர்வுடு கோச்சிலாவது முதலில் கல்கத்தா வரை போய்விடலாம் என்று கூறி பயணச்சீட்டு வாங்கி ஏறிவிட்டோம். பின்னர்தான் தெரிந்தது அது எவ்வளவு பெரிய தவறென்று. ஒவ்வொரு நிலையத்திலும் ஒவ்வொரு விதமான மொழி மற்றும் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக ஏறி நசுக்கு நசுக்கென்று நசுக்கிவிட்டார்கள். வண்டி ஆந்திரா ஒரிசா வழியாக மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா நிலையத்திற்குச் சென்றடைந்தது.

அங்கே இறங்கியவுடன் கவுகாத்திக்கு பயணச்சீட்டு எடுப்பதே பெரும் சவாலாக இருந்தது. காரணம் மொழி. அங்கே உள்ளவர்களுக்கு நாம் பேசும் ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் பேசும் வங்காளம் நமக்குப் புரியவில்லை. அவர்கள் ஹிந்தியில் பேசினாலும் நமக்கு ஹிந்தி தெரியாது. முதலில் நமக்கு எது ஹிந்தி எது வங்காளம் என்றே தெரியவில்லை. இதில் அப்பா வேறு கடிந்து கொள்கிறார். என்ன ஒரு டிக்கெட் கூடவா பேசி எடுக்கத் தெரியவில்லை என்று. அவரே போய் தனக்குத் தெரிந்த உலகமொழியில் பேசி, அதாங்க செய்கை மொழி அதில்பேசி ஏசி கோச்சில் எடுத்துவந்தார். பிறகுதான் தெரிந்தது இரண்டு பயணச்சீட்டில் ஒன்றுதான் ஏசி என்று. அவரைவிட்டுப் பிரிய எனக்கும் பயம்.

இறுதியாக அங்கே தேனியைச் சேர்ந்த தமிழ் இராணவ வீரர் ஒருவரின் உதவியால் நானும் அப்பாவும் ஒரு பெட்டியில் பயணித்தோம். எப்படி என்றால் நான் அவர்களின் மெத்தையைத் தரையில் விரித்துப் படுத்துக்கொள்ள அப்பா எனக்கான அதே இருக்கையில் பயணித்தார்

இப்படியாக கல்கத்தாவில் இருந்து தொடங்கிய பயணத்தில் அந்தத் தேனி காரர் சொல்லிக்கொடுத்த முதல் ஹிந்தி வார்த்தை என்ன தெரியுமா? "சாவல்" என்ற வார்த்தை தான். ஆமாம், சோறு என்ற பொருள்தரும் அந்த வார்த்தையைத்தான் முதலில் கற்றுக்கொண்டேன். அதானே மனிதனின் முதல் தேவை. அந்த வார்த்தையும் அன்றைய சோறும் அவரால் அன்று கிடைத்தது. அப்படியே பயணித்து கவுகாத்தி வந்தடைந்தோம். அடேங்கப்பா...என்ன குளிர்?!

சென்னையிலிருந்து கவுகாத்தி வந்த மொத்த மூன்றரை நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் கூடிக்கொண்டே போன குளிர் கவுகாத்தியில் வெடவெடவென்று ஆட்டியது. வெளியே வந்தால் சென்னையைச் சேர்ந்த சந்திரன் என்ற பொறியாளர் வந்திருந்தார்.
என்னை மேலும் கீழும் பார்த்த அவர் என் உடையையும் காலணியையும் பார்த்து சின்னதாய் நகைத்துவிட்டு முதலில் ஷூ மற்றும் ஸ்வெட்டர் வாங்கிக்கொடுத்து அங்கே உள்ள கேரளபவன் கூட்டிச்சென்றார்.
அங்கேயுமா கேரளபவன் என்று நினைக்கின்றீர்களா?! அங்கே மட்டுமல்ல கல்கத்தா கவுகாத்தி எனப் பெரும்பாலும் எல்லா இரயில் நிலையங்களிலும் அவர்கள் தான் கேன்டீன் நடத்துகிறார்கள்.
பிறகு சாப்பிட்டுவிட்டு அங்கே ஒரு அறையில் தங்க வைத்தார்கள்.

அடுத்தநாள் ஒரு வயதான மிகவும் குள்ளமான பெங்காலிப் பொறியாளர் ஹோர்சார் வந்து மேகலயாவில் உள்ள ஜொராபாட் என்ற இடத்திற்குக் கூட்டிச்சென்று ஒரு நிரந்தர அறை கொடுத்தார்கள். அந்த அறை இருப்பது அஸ்ஸாமில் அதற்கு எதிர்த்தமாதிரி உணவகம் இருப்பது மேகலாயவில். இரண்டையும் பிரிப்பது ஒரு சாலை மட்டுமே. அங்கே உள்ள உணவகம் பெயர் ஹோட்டல் ராஜஸ்தான். என்ன குழப்புகிறதா?!.. அதான் இந்தியா...அன்று ஜனவரி 26,2003. குடியரசு தினம். அங்கே சுதந்திர தினம் மற்றுப் குடியரசு தினம் எல்லாம் கொண்டாட விடமாட்டார்கள் அங்கே தனி நாடு அல்லது தனி உரிமை வேண்டிப் போராடும் தீவிரவாத குழுக்கள். மிறிக் கொண்டாடினால் மேலே போக வேண்டியதுதான். அங்கே பந்த் என்ற வார்த்தை சர்வ சாதாரணம். நானும் அப்பாவும் அந்த அறையில்தான் அன்று தங்கி இருந்தோம். குளிர் தூக்கித்தூக்கிப் போட்டது. ஐரோப்பிய கழிவறையில் இந்தியப் பாணியில் அமர்ந்தேன். காரணம் குளிர்தான். எப்படியோ அந்நாளை ஓட்டிவிட்டு அடுத்த நாள் ஜொராபாட்டில் இருந்து பர்னிகாட் என்ற தொழிற்சாலை கட்டுமிடம் கூட்டிச்சென்றார்கள். ஒரே மலைத்தொடராய் ஏறி இறங்கி ஏறி இறங்கி....தலையே சுற்றியது. அங்கே போனால் வித்தியாசமாக இருந்தது. அனைத்துப்பக்கமும் மலை, கீழே ஆறு, மேலே மேகம். இருட்டிக்கொண்டு கம்மென்று இருந்தது. ஆனால் மணி பகல் 10:00அல்லது 12:00 இருக்கும். அப்படித்தான் எப்போதும் இருக்கும் என்பதை உணர்ந்தேன். அங்கேவுள்ள அஸ்ஸாமி, பெங்காலி, காசி, காரோவ், ஹிந்தி, பஞ்சாபி.....என அனைவரும் பல மொழியில் பேசுகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. பேசாமல் அப்பாவோடு திரும்பிப் போய்விடலாமா என்றே நினைத்தேன். ஆனால், அங்கே ஒரு குரல் ஆழ்மனதில் ஒலித்தது. இல்லை என்னவானாலும் சரி. மூன்று விடயங்களை முடிக்காமல் இந்த இடத்தை விட்டுப் போவதில்லை என்று தீர்மானித்தேன்.
அவற்றை டைரியிலும் குறித்து வைத்துக் கொண்டேன். எப்போதெல்லாம் போகலாம் என்று நினைக்கிறேனோ அதைப் பார்த்துக்கொள்வேன்.

ஆமாம்...அந்த மூன்று விடயங்கள் என்ன?

.....தொடரும்.

✍️செ.இராசா

ஹார்டுவேர் (Hardware), சாஃப்டுவேர் (Software)

  


#மகன்: அப்பா ஹார்டுவேர் (Hardware), சாஃப்டுவேர் (Software) & ஆபரேட்டிவ் சிஸ்டம் (OS) இதை எளிதாகப் புரிய வையுங்கள்.

#நான்:
டேய்.... ஹார்டுவேர்னா அடுப்பு மாதிரி, OS னா தோசைக்கல்லு மாதிரி சாஃடுவேர்னா அதில் போடுற ஆம்லெட் மாதிரி...

இப்ப சாம்சங் (Samsung), ஆப்பிள் (Apple). இதுலாம் அடுப்பு
அதில் ஆன்ட்ராய்டு, IOS இதுலாம் அதன் மேல் வைக்கிற தோசைக்கல்லு இல்லையினா பேன் (Pan).

இப்ப நீ ஆம்லேட்ட கல்லுலயும் போடலாம் இல்லையினா Panலயும் போடலாம். ஆம்லேட் என்னவோ ஒன்னுதான். அதுமட்டுமா தோசையும் ஊத்தலாம்...ஊத்தாப்பம் ஊத்தலாம். இதெல்லாம் வேற வேற சாப்டுவேர்.

#மகன்; சாப்பாட்டு பேரா சொல்லிட்டு சாப்டுவேரா....😊😊😀😀😀😊

✍️செ.இராசா

(மனைவியின் சிறுவாட்டுக் காசில் எனக்குக் கிடைத்த மடிக்கணினி....நன்றி மனைவியாரே

24/02/2021

சரக்கு---கட்டுரை

 

 


இன்றைய தினம் அன்புத் தம்பி ஒருவர் ஒரு வெள்ளைக்காரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு வாங்கியதை ஆச்சரியமாகப் புலனத்தில் போட்டிருந்தார். இப்படியுமா........ என்று அதையே பேசிக்கொண்டிருந்தார்.

நான் அவருக்குப் பதில் தரும் விதத்தில் ஏற்கனவே இது சம்பந்தமான பதிவு ஒன்று போட்டிருந்தேன். அதையே மீண்டும் இங்கே தருகின்றேன்.

ஜூலை 25, 2018, கத்தாரில் இருந்து இந்தியா சென்றபோது தோகா விமான நிலையத்தில் நான் கண்ட காட்சியே கீழே பதிவாக;

உறவுகளே....

இந்த பாட்டிலில் உள்ள திராவகத்தின் விலை 8,89,900.00 ரூபாயாம்......(47210 கத்தார் ரியால்/13041 அமெரிக்க டாலர்)
அடங்கப்பா....😇😇😇

(அவசியமில்லாத பதிவு என்று எண்ண வேண்டாம். உலகத்தில் இப்படியும் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோமே....)

https://m.facebook.com/story.php?story_fbid=2048529121838598&id=100000445910230&sfnsn=mo

குறிப்பு:

இது ஜூலை 25, 2018 ஆம் ஆண்டு விலை மட்டுமே. அதற்குப்பின் 30-50% விலை ஏற்றிவிட்டார்கள் என்றால், இப்போது எவ்வளவு இருக்குமோ? நீங்களே யோசியுங்கள்.

அனுபவப் பதிவு- 1-----------------அஸ்ஸாம் மேகாலயா---- கட்டுரை

 #அஸ்ஸாம்_மேகாலயா


சென்னையில் இருந்து அஸ்ஸாம் போவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நான் அங்கே பணிபுரியும்போது வாசித்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலே என்றால் அது மிகையல்ல. ஆம் கல்கத்தாவில் பிறந்த அவர் சென்னை கொழும்பு வழியாக அமெரிக்கா சென்று உலகம் முழுவதும் சுற்றினாரல்லவா?! அதேபோல் நாமும் எல்லா இடங்களும் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படி இதுவரை போயிருக்கிறேனா என்றால் உண்மையில் இல்லைதான். ஆனாலும், இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்களைப் பார்க்கும்போது இங்கே எல்லாம் போகவேண்டும் என்று சிறுவயது முதலே ஒரு உள்ளார்ந்த ஆசையும் என்னுள் இருந்திருக்கிறது.

சென்னையில் நான் C.R. ராஜு என்ற ஆர்க்கிடெக்கிடம் பணிபுரியும்போது (Dec 2001- Jan 2003) அங்கே வேலைபார்த்த மூத்த பொறியாளர் செஞ்சிலு என்பவர் என்னிடம் 'என்ன தம்பி, இராஜமாணிக்கம் அஸ்ஸாம் போறீங்களா?!" என்றார். நானும் ஏதோ ஒரு அவசரத்தில் "போயிடலாம் சார்" என்றேன். அங்கே என்ன வேலை எப்படி போகவேண்டும் என்றேன். அதற்கு அவர் ஒரு இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும். விமானம் மூலம் போகலாம். பயணச்சீட்டு போட்டுச்சென்றால், அவர்கள் இறங்கியவுடன் தந்துவிடுவார்கள் என்றார்.
என்ன இது வெளிநாடு மாதிரி விமானம் என்றெல்லாம் மிகப்பெரிய வார்த்தை பேசுகிறார்களே என்று ஒரு சின்ன பயம் உடனே தொற்றிக்கொண்டது. மேலும் அஸ்ஸாம் என்றாலே உல்பா தீவிரவாதிகள் அதுஇதுவென்று ஏற்கனவே மணிரத்னம் உயிரே படம்மூலம் கூறியுள்ளாரல்லவா அதெல்லாம் உடனே மனக்கண்முன் ஓட ஆரம்பித்தது. சரி சரி பார்ப்போம் என்று ஒரு குழப்ப நிலையில் சென்னையில் இருந்து பொங்கல் விடுமுறைக்கு ஒருவாரம் எனது சொந்த ஊர் (அம்மன்பட்டி, சிவகங்கை) சென்றுவிட்டேன்.

பிறகு ஒரு வாரம் கழித்து சென்னை வந்தால் செஞ்சிலு அண்ணா மிகவும் கடிந்துகொண்டார். என்னப்பா உன்னை ஒரு வாரமா தேடுகிறேன். நீ கிடைக்கவே இல்லை. சரி சரி அஸ்ஸாம் எப்ப போற? என்றார். எனக்கு மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. உடனே அப்பாவிடம் சொன்னேன். அவர் உடனே நானும் அஸ்ஸாம் வரை துணையாக வருகிறேன் என்றார். எனக்காவது கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேச வரும். அப்பாவிற்கு அதுவும் இல்லை. ஆனால் அவரின் தைரியம் என்னிடம் இல்லை. சரி நாங்க தயார், ஆனால் விமானத்தில் அல்ல தொடர்வண்டியில் போகிறோம் என்று செஞ்சிலு அண்ணாவிடம் கூறினேன் உங்கள் விருப்பம் என்றார். என் முதலாளி ராஜு ஆர்க்கிடெக்டிடம் சொன்னபோது மிகவும் யோசித்து கூடுதலாக 3000 ரூபாய் கொடுத்தார். (என் சம்பளமே அப்போது அவ்வளவுதான். என்னைப்போல் வேறு ஒரு ஆள் கிடைக்கவே இல்லை என்று பின்நாளில் கூறினார் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது)

நானும் அப்பாவும் சென்னை சென்ட்ரல் பொனோம். சென்னை எக்மோர் நான் அடிக்கடிப் போவேன். ஆனால் சென்னை சென்ட்ரல் அன்றுதான் முதன்முதலாகச் சென்றேன். அங்கு சென்றவுடனே ஒரே ஹிந்தி வாடை. வடநாட்டு முகங்கள் என்னைக் கலேபரம் ஆக்கியது. மேலும் அங்கிருந்து அஸ்ஸாம் போக டிக்கெட்வேறு கிடைக்கவில்லை.

அப்புறம் என்னாச்சு?

.... ‌தொடரும்

22/02/2021

புகழ்ப்பத்து ----------வள்ளுவர் திங்கள்-150


தானாகக் கிட்டுமா?! தள்ளாடி முன்னேறிப்
போனால்தான் கிட்டும் புகழ்
(1)

விழுந்தால் எழுகிற வித்தையைக் கற்றோன்
விழுமுன் எழுவான் விரைந்து
(3)

தனித்துவம் இன்றித் தரணியில் வாழும்
மனிதருக்கு இல்லை மதிப்பு
(3)

காலத்தை ஆராய்ந்து கச்சிதமாய் வாழ்வோர்க்கே
ஞாலத்தில் கிட்டும் மதிப்பு
(4)

பிறகு பிறகென்று பேசிடும் பேரை
பிறரென்றும் பேசார் பிறகு
(5)

கிட்டிய வாய்ப்பினைக் கெட்டியாய்ப் பற்றினால்
எட்டிடும் தூரம் எளிது
(6)

முடிவை அடைய முயலா தெனினும்
முடியும் வரைக்கும் முயல்
(7)

எண்ணிய எண்ணம்போல் எல்லாம் நடந்திட
கண்ணிலே அர்ச்சுனன்போல் காண்
(8)

உனக்கான செய்கையை ஊராரா செய்வர்
சொனங்காமல் இப்போதே செய்
(9)

பிரபஞ்ச ஈர்ப்பின் பெருஞ்செய லாலே
வருகிற வெற்றி வரும்
(10)

21/02/2021

யார் கைகேயி?

 


யார் கைகேயி?
********************
🌷🌷🌷🌷🌷🌷🌷
நல்லவரா? கெட்டவரா?
நல்லவர்போல் நடித்தவரா?
நல்லவைகள் நடந்தேற
பொல்லாராய் ஆனவரா?
பொல்லாதார் விட்டொழிய
பொய் வேடம் பூண்டவரா?!

உண்மையிலே யாரென்ற
உண்மையினைக் கண்டறிவோம்
உள்மெய் யாதென்றே
உளமெய்யால் ஓர்ந்தறிவோம்.

யாரிவர்?!
************
🔥🔥🔥🔥🔥
எதிரில் உள்ளோரின்
எதிர்காலம் கண்டறியும்
பஞ்சாங்க சாத்திரத்தை
பகுத்தறிந்த மன்னராம்
கேகேய இராசாவின்
கைகேயி புத்திரியும்
அப்படியே அப்பாபோல்
அப் படிப்பைக் கற்றவரே...
 

தசரதன்_பஞ்சாங்கம்_பார்த்தல்

தான் கோன் ஆனாலும்
தன் கோன் தொடர்ந்திட
தனக்கோர் மகனின்றி
தசரதக்கோன் தேடிவர
இறந்த காலத்திலே
இருந்தீரே சூரியனாய்
இணையராய் அந்நாளில்
இணைத்திட்ட மூவரைப்போல்
நிகழ்கின்ற காலத்திலும்
நிழலாக்க சம்மதித்தால்
நிஜமாக பெற்றிடுவீர்
நின் நிழல்போல பெற்றிடுவீர்;
அன்றைய காயத்ரியே
இன்றை கோசலையாய்
அன்றைய சாவித்திரியே
இன்றைய சுமத்திரையாய்
அன்றைய சரஸ்வதியே
இங்கேயாம் கைகேயியாய்
சகலரையும் மணந்திட்டால்
சக அலர் மறந்திடலாம்..
என்கின்ற யோசனையை
என்றவள் சொன்னவுடன்;

எந்தன் பேரனுக்க
மண்ணாளும் உரிமையென
கேகேயப் பேரரசன்
கேட்டானே வாக்கொன்றை...

கைகேயியின் அழகு கண்டு
கைப்பிடித்த தசரதனும்
கைகேயின் கைக்குள்ளே
கைப்பந்தாய் ஆனாலும்
கால்பந்து விளையாட
கால் டஜன் பிள்ளையின்றி
என்ன வாழ்க்கையென்று
ஏங்கிய மகத்தோடு
கானக வேட்டைக்கு
கோனவன் செல்கின்றான்!

#தசரதன்_பெற்ற_சாபம்

நீர்க்குடம் மோர வந்த
பாலகனின் பானை ஓலி
கானக யானையென
கற்பனையாய் யூகித்து
வேகமாய் விட்ட அம்பு
நாகமாய்ச் சீண்டிவிட
சிரவணன் எனும் சிறுவன்
சிரம் சாய்ந்தான் சவமாக..

தவறையுணர்ந்த மன்னன்
அவதியிலே பதறிவர
ஐயா என்றழைத்து
அவன் நிலையை இயம்புகின்றான்...

குருட்டுப் பெற்றோரின்
குடும்ப நிலை கண்டு
இருட்டுப் பெற்றோருக்கு
இனிநான் மகனென்றான்...
ஏற்காத பெற்றோரும்
இட்டாரே சாபமொன்று..

நான் படும் வேதனையை
நீயும் படுவாயெனெ
வான் முட்டும் கோபத்தில்
வார்த்தாரே கோபமுனி..
வார்த்தைகள் அத்தனையும்
வாட்டுகின்ற சாபப்பிணி

#நான்கு_புத்திரர்கள்
**********************
கோசலைக்கு இராமனும்
கைகேயிக்கு பரதனும்
சுமத்திரைக்கு இருவராய்
இலக்குமண சத்ருகனும்
யாகத்தின் பயனாக
யோகமாய் வந்தடைய
புத்திரர்கள் கண்ட வேந்தர்
புத்துயிர் பெற்றுவிட்டார்!

கால ஓட்டத்தில்
காதிலே நரை வர
என்ன செய்வதென்ற
எண்ணம் வலுவடைய
இராவோடு இராவாக
இராமனை மன்னனாக்க
இராசாங்க சபைகூட்டி
இராசா முன் மொழிய
அமைச்சர் அனைவருமே
அமைதியாய் ஆர்ப்பரித்தார்!

#கைகேயி_கேட்ட_வரம்
*************************
இச்சேதி தெரியாமல்
அச்சச்சோ உறங்குகிறாள்?
இப்பேடி இவளுக்கு
எப்படி நான் உரைத்திடுவேன்?!
என்றெண்ணி கூனியும்
ஒன்றொன்றாய் ஊதியதில்
கைகேயி அன்னையும்
கைங்கர்யம் காட்டுகிறாள்...

வரங்கள் இரண்டாலே
வகுக்கின்றாள் இரு திட்டம்..
இராமன் காடாள்வான்
பரதன் நாடாள்வான்
தீட்டிய திட்டத்தால்
தீட்டானாள் கைகேயி...
இல்லானும் மரிக்கின்றார்
எல்லோரும் சபிக்கின்றார்..
மைந்தனும் வெறுக்கின்றார்
மற்றவரும் ஒதுக்குகின்றார்..
இதெல்லாம் தெரிந்த கதை
இதிலென்ன இருக்கிறதா?!

ஆம்....#யார்_கைகேயி?!
**************************
ஊருக்கும் புரியாத
யாருக்கும் தெரியாத
உண்மை யாதென்ற
உண்மையை அறிந்திடுவீர்;
உத்தமத் தாய்ச்செயலை
உணர்ந்தாலே போற்றிடுவீர்!

இராம அவதாரம்
இனிதே இடம்பெறவும்
இராமனும் அதற்காக
இடம்விட்டு இடம்பெயரவும்
தசரதன் பெற்ற சாபம்
தன் விதி செய்திடவும்
தந்தைக்குத் தந்த வாக்கை
தன் பதி செய்திடவும்
எல்லாப் பழிகளையும்
ஏற்றிட்ட கைகேயி
பொல்லாப் பழி சுமந்த
நல்லாள் என்றறிவீர்...!!!

✍️செ. இராசா

சொந்த சிற்பி

நாமே நம் வாழ்க்கையைச் செதுக்கும் சொந்த சிற்பி
We are our own sculptor of our life

 

20/02/2021

கோபத்தின் உச்சத்தில்..

 


கோபத்தின் உச்சத்தில்
குழந்தையை அடித்த
தாய் சொன்னாள்;
"இறைவனைத் தொழுகையில்
இடையூறு செய்ததாய்"

பாவம்...
அவள் அடித்தது
அந்த இறைவனையே என்று அறியாமல்

நானும் மகிழுந்தும்- கட்டுரை

 



பொதுவாக வளைகுடா நாடுகளில் வேலைக்காக வருகின்ற பொறியாளர்களுக்கு பெரும்பாலும் வாகனங்களை நிறுவனங்களே வழங்குவது என்பது வாடிக்கையான ஒன்றே. எனக்கும் கத்தார் வந்த(2006)அன்றே #மிட்சுபிசி_பஜிரோ (Mitsubishi Pajero) ஓட்டுநரோடு கிடைத்தது. பிறகு அதைவிடக் குறைந்த மாடலான #மிட்சுபிசி_நாட்டிவாவை (Mitsubishi Nativa) மாற்றினார்கள். 2008ல்தான் எனக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. அதன் பின்னர் நான் ஓட்டிய முதல் வாகனம் #ஹோன்டா_சிட்டி (Honda city), அதன்பிறகு நான் வேலைபார்த்த அனைத்து நிறுவனங்களும் கொடுத்த அனைத்து வாகனங்களும் புதிய வாகனங்கள்தான் #0.00 KM ல் தான் எடுப்பேன். காரணம் இரண்டு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் Rent a Car நிறுவனங்களில் மாற்றி விடுவார்கள். அப்படி எனக்கு வந்த வாகனங்கள், #Nissan_Sunny, #Nissan_Tida, #Kia- #Rio, #Kia_Cerato மற்றும் தற்சமயம் #Kia_Sonet என்று எல்லாமே 0.KM தான்.
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அனைத்து மகிழுந்தும் Kia Sonet தவிர்த்து வெள்ளை நிறமே. இம்முறை என் மகன் மற்றும் மகளின் விருப்பத்திற்கிணங்க நிறுவனத்தில் முன்கூட்டியே சொல்லி சிவப்பு நிறம் வாங்கி வந்தேன். 
 
எனக்குப் பொதுவாக வாகனங்களின் மேலோ அல்லது பொருட்களின்மேலோ பற்றில்லா காரணத்தினால் இதுவரையிலும் சொந்த வாகனம் வாங்கவே இல்லை. நிறுவனங்கள் மாதா மாதம் ஒரு தொகை தந்துவிடும் என்பதால் சொந்த வாகனம் வாங்கினால் கண்டிப்பாக இலாபம்தான். ஆனால் ஏனோ ஒவ்வொரு முறையும் யோசித்து வேண்டாமென்றே ஒதுக்கிவிட்டேன். எதுவுமே நிரந்தரமில்லாபோது வாகனம் மட்டும் நிரந்தரமா என்ன?!. அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் புது வாகனத்தில் ஏறி அதை ஓட்டும்போது உள்ள அனுபவம் என்பதும் ஓர் சுகானுபவமே.
 
இந்த KIA SONET ன் மூலம் கொரியாவாக இருந்தாலும் இந்தியாவில்தான் தயாராகிறதாம் அதுவும் சென்னை என்கிறார்கள் (ஆந்திரா என்று சொல்கிறார்கள்). கத்தாருக்கு முதன் முதலாக வந்துள்ள மாடலாம் இது. அதுவும் வந்த 30 மகிழுந்துகளில் நான் ஓட்டும் வாகனமும் ஒன்றாம்...😊😊😊
 
வாழ்வோம்...வாழ்ந்துதான் பார்ப்போமே...
வாழ்க வளமுடன்

இடியாப்பம் என்றே இருக்கின்ற உன்னைப்

 


 

இடியாப்பம் என்றே இருக்கின்ற உன்னைப்
பிடிபார்ப்போம் என்றே பிடித்திட எண்ணி
அடங்காமல் நானும் அவசரம் காட்ட
படக்கென்று கொட்டியதே பால்

✍️செ. இராசா

19/02/2021

கவிதை

எளிமையும் ஆழமும் நிறைந்த
எழில்மிகு ஆயுதமே கவிதை
மொத்தத்தில் இந்த ஓவியம்போல....


✍️

புதுப்புது வடிவங்களில்

 

புதுப்புது வடிவங்களில்
உருமாறி வருகிறது
முகக்கவசங்கள்
 
✍️

18/02/2021

காலாவதியாவதைக் காட்டிக் கொடுக்கிறது

 


காலாவதியாவதைக்
காட்டிக் கொடுக்கிறது
நரை


To be expired soon
betrayed by
Silver hair

ஒளிப்படம்: அணுஸ்ரீ

 

உன்னையே நீ அறிவாய்

 உன்னையே நீ அறிவாய் என்றாய்...

அட..என்னை அறிந்தாலும் அரிந்தாலும் நீதானே உள்ளாய்

15/02/2021

காசு பணம் துட்டு------------காசுப்பத்து------------குறள் வெண்பாக்கள்

 

கடவுளின் ஆலயத்தில் காத்திருக்க வேண்டாம்
கடவுளையே காட்டிடும் காசு!
(1)
 
கடன்தேடி வங்கியில் காத்திருக்க வேண்டாம்!
கடன்கோடி தந்திடும் காசு!
(2)
 
கடன்பற்றி எண்ணிக் கவலையுற வேண்டாம்
கடல்தாண்ட வைத்திடும் காசு!
(3)
 
கடமையே என்றாலும் கண்டுக்க வேண்டாம்
கடமைக்கும் கையூட்டே காசு!
(4)
 
கடுமையான சட்டமென்று கண்ணீரே வேண்டாம்
கடும்வேகம் காட்டிவிடும் காசு!
(5)
 
சிறைச்சாலை போனாலும் சோர்வுற வேண்டாம்
கறையெல்லாம் நீக்கிடும் காசு
(6)
 
ஒருகட்சி விட்டதும் உட்கார வேண்டாம்
கருவறுக்கக் கைகோர்க்கும் காசு
(7)
 
ஒயிலாட்டம் போட்டதும் ஓய்ந்திட வேண்டாம்
கயிலாசம் பாய்ந்திடும் காசு
(8)
 
இருப்பைப் பெருக்காமல் இருந்திட வேண்டாம்
கருவறையும் கல்லறையும் காசு
(9)
 
கவிஞனாய் எண்ணிக் களிப்புற வேண்டாம்
கவிஞானிப் பட்டமும் காசு
(10)
 

மூத்த கவிஞர் திரு. கண்ணன் நடராஜன் ஐயா

 


இன்று 14.02.2021 நம் வள்ளுவர் திங்கள் நிகழ்வில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியீடு செய்ய இருக்கும் மூத்த கவிஞர் திரு. கண்ணன் நடராஜன் Kannan Natarajan ஐயா அவர்களை அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம் உறவுகளே....
 
 
தெள்ளுதமிழ்ச் சோலையிலே
............... திங்கள் கிழமையிலே
வள்ளுவம் போற்றிடவே
...............வாருங்கள் என்றழைத்தால்
வள்ளுவர் சொன்னபடி
...............வார்க்கின்ற நற்கவிஞர்!
வள்ளுவர் திங்களின்
...............மாரத்தான் நாயகர்!
கண்ணன் நடராஜர்
................கைவண்ணம் காட்டியநூல்
மண்ணில் எங்கெங்கும்
................மாண்புடன் சென்றடைய
சேக்கிழார் ஐயாவின்
................செந்தமிழ் தொண்டர்சூழ்
வார்க்கின்றோம் வெண்பாவில் வாழ்த்து!!
வாழ்க வளமுடன் ஐயா!!

13/02/2021

எறும்பின் கண்களுக்கு

 

எறும்பின் கண்களுக்கு 
எலிகூட யானைதான்....
பருந்தின் கண்களுக்கு 
யானைகூட எறும்புதான்...

12/02/2021

கொத்துப் பொரொட்டா போல

 

 கொத்துப் பொரொட்டா போல- என்னைக்
கொத்திப் போட்டுட்டா..
மதுரை முட்டைக் கலக்கிப் போல
குலுக்கி எடுத்துட்டா..

சில்லி பொராட்டா போல- என்னைக்
கிள்ளிப் போட்டுட்டா...
சிக்கன் ஃப்ரையிடு ரைசு போல
புரட்டி எடுத்துட்டா...

ஐயோ ஐயோ என்ன சொல்ல
அட்டகாசம் கொஞ்சம் இல்லை
ஆனாலும் அவளப் போல
ஆக்கிப்போட யாருமில்லை...

✍️செ.இராசா