30/04/2019

#கலங்காதிரு_மனமே





#கலங்காதிரு_மனமே கலங்காதிரு
கதியின்றிப் போனாலும் கலங்காதிரு
கலங்காதிரு மனமே கலங்காதிரு
கல்மழையே பொழிந்தாலும் கலங்காதிரு

உருவத்தில் பெரிதான யானை கண்டும்
உள்ளத்தில் கலங்காதப் புலியைப்போல
உலகத்தில் பெரிதான இன்னல் கண்டும்
ஒழுக்கத்தில் தவறாத பண்பைக் காட்டு!

எண்ணிக்கை மிகையான படையைக் கண்டும்
எண்ணத்தில் கலங்காத வீரன்போல
அன்பான உறவெல்லாம் உதறும் போதும்
என்றைக்கும் மாறாத அன்பைக் காட்டு!

28/04/2019

கற்தூண் பிளந்தே கடவுள் வருவது--வெண்பா-12




கற்தூண் பிளந்தே கடவுள் வருவது
கற்பனை என்றேக் கதைத்தாலும்-சிற்பிகள்
கற்களின் உள்ளேக் கடவுளைக் கண்டது
கற்பனை
இல்லையே காண்!

✍️செ. இராசா

எங்கே இருந்து சிரிக்கின்றாய்?!


கழுகுகள் பற்றிய குஞ்சினைப்போல்- மதக்
கழுகுகள் பற்றிய பிஞ்சுகளின்
அழுகுரல் இன்னும் கேட்கலையா?- இல்லை
அழுவதும் #இறைவன்_கட்டளையா?!

மூலை மழுங்கிய கத்தியைப்போல்- சில
மூளை மழுங்கிய மூடர்களால்
மூளைச் சலவையில் மயங்கிடவே- இந்த
மூளையை #இறைவன்_படைத்தானா?!

எங்கே இறைவா இருக்கின்றாய்- நீ
எங்கே இருந்து ஆள்கின்றாய்?!!
இங்கே எம்மை அழுகவிட்டு- நீ
எங்கே இருந்து சிரிக்கின்றாய்?!

✍️செ. இராசா

tagTag PhotopinAdd Location

நீ ஒதுங்கிய படகல்ல


ஆறறிவைச் சுமந்த நீ
ஓரறிவையும் சுமந்து
அன்பினைப் போதிக்கிறாய்!

வாழ்ந்தபோது உதவிய நீ
ஓய்ந்தபோதும் உதவி
அறத்தினைப் போதிக்கிறாய்!

நீரிலே ஓடிய நீ
நிலத்திலே நின்று
நிலையாமை போதிக்கிறாய்!

மரமாய்ப் பிறந்த நீ
மறையும் தருணத்திலும்
செய்ந்நன்றி போதிக்கிறாய்!

யாராலோ வந்த நீ
யாவரையும் கரையேற்றி
வாழ்வையேப் போதிக்கிறாய்!

நீ ஒதுங்கிய படகல்ல
எமை உணர்த்திய படகு

✍️செ. இராசா

27/04/2019

#ரோசாவும்_ராசாவும்




(ஆணும் பெண்ணும் தனித்தனியாக தூரத்தில் இருந்து பாடுகின்றார்கள். பழைய திரைப்படங்களில் உள்ள பாடல் காட்சியைப்போல கற்பனையில்...
#ரோசாவும்_ராசாவும் என்று பழைய பாணியிலேயே)

தன்னானே நானன்னே தன்னானே
தன்னானே நானன்னே தன்னானே

குடிகாரன் நானில்லை ரோசாவே-ஆனால்
குடிக்காமல் புலம்புறன்டி ரோசாவே
கவியெழுதத் தெரியாது ரோசாவே- இப்ப
கவிஞனாக மாறிபுட்டேன் ரோசாவே

சத்தியவான் நீதானே ராசாவே- நீ
சத்தியங்கள் செய்யனுமா ராசாவே
வைரமுள்ள வரியெழுதும் ராசாவே- என்
வைரமுத்து நீதானே ராசாவே

உன்னோடு சேரத்தான் ரோசாவே- அட
உசுருல்லாம் கொதிக்குதடி ரோசாவே
எனக்காகப் பூத்திருக்கும் ரோசாவே- நீ
எப்போது வந்திடுவ ரோசாவே

எனக்காக வாழுகின்ற ராசாவே- நீ
எப்போதும் என்னோட ராசாவே-நான்
இப்போதே வந்திடவா ராசாவே- ஊர்
தப்பாகப் பேசிடுமே ராசாவே!

கருப்பாக நானிருந்தும் ரோசாவே- நீ
கருக்காமல் பார்த்துக்குவேன் ரோசாவே
கருப்பானக் கட்டழகு ராசாவே- நீ
கருத்தாலே கவருகின்ற ராசாவே!

✍️செ. இராசா

த்தூ..பத்திரிக்கை செய்தி

முப்பது வருடமாய்த் திருடுகின்றாள்
முக்கியத் தொழிலாய்ச் செய்கின்றாள்
தப்பென அவளுக்கும் தெரியவில்லை
துப்பிட அரசுக்கும் நேரமில்லை

த்தூ...

முந்திரிக் கொட்டைபோல்-வெண்பா-11





முந்திரிக் கொட்டைபோல் முந்திடும் ஓட்டத்தில்
எந்திர வேகத்தில் எங்கிலும்- இந்தியன்
தந்திர மின்றியே தன்திறம் காட்டியே
மந்திரி ஆகிறான் பார்!

✍️செ. இராசா

26/04/2019

உடம்பு இளைக்க ஊர்வலமா?



உடம்பு இளைக்க ஊர்வலமா?- இல்லை
உடையே இல்லா நகர்வலமா
குடும்ப அரசியல் குதூகலமா- இல்லை
கோட்டையைப் பிடிக்கிற குழுவினமா?!

✍️செ. இராசா

(அரசியல் பதிவல்ல)

தலையில்லா...



தலையில்லா முண்டம்போல்- இந்தத்
தலையில்லா அரசில்- தறு
தலையிரண்டு சேர்ந்தாலும்- ஒரு
தலையாகவில்லை- பெருந்
தலையான ஒருவனின்- கொடுந்
தலையீட்டின் தாக்கம்- இன்னும்
தலைவலியாய் இருப்பதாய்
தலையிரண்டும் அழுதே...

✍️செ. இராசா

செரா_குறள்_11-அன்பு




ஆறுக்குள் உள்ள  ஐந்திற்கும் என்றும்
ஆறுதல் தந்திடும் அன்பு

பொங்கி வரும் பாற்கடல்போல்



பொங்கி வரும் பாற்கடல்போல்-என்றும்
பொங்கி வரும் பூந்தமிழே!- இன்று
நங்கை என நாணுவதேன்- நீயுன்
நன்-கை தா நானுமாவேன் தேன்

“சலாமலேகும்”

“சலாமலேகும்” என்றவுடன்
“அலைக்கும் சலாம்” என்றேன்
‘மௌன விரதம்’ இருந்த போதும்
(மனிதம் உயர்வானது என்பதால்)

25/04/2019

என் தொலைந்த பேனாக்களே.....


என் இருதய ஓசை இடிக்கிறதா!!
என் விரல்கள் உம்மை வதைக்கிறதா?!
என் சினத்தின் வேகம் சிதைக்கிறதா?!
என் மனத்தின் வரிகள் உதைக்கிறதா?!
எனில்....
என்னைத் தொடர்ந்து விலக்குவதேன்?

என் தொலைந்த பேனாக்களே.....

முடியல😭😭😭

✍️செ. இராசா

(படம் 2015ல் எடுத்தது)
வெற்றி பெற்றோருக்கு
வேகமாய்க் கிடைக்கிறது
சாதீய அடையாளம்
நவீன தமிழகத்தில்
வேகமாய் வளர்கிறது
சாதீய வெறி

24/04/2019

அறியாமை யாதென்றே


அறியாமை யாதென்றே ஆராயா தன்மை
அறியாமை என்றே அறிக- அறிந்தே
அறிந்ததாய்ப் பேசும் அறிவிலி கண்டால்
அறிந்ததைப் பேசாது செல்!
 

23/04/2019

இரண்டு மூச்சுகளுக்கு இடையே

இரண்டு மூச்சுகளுக்கு
இடையே இளைப்பாறும் தருணமும்
உன்னையே நினைக்கிறேன் என் சகியே!
என் கவியே!

22/04/2019

ஐவகைக் கடமைகள்


உயிருடல் மனமென மூன்றினையும்
ஒழுங்காய்க் காக்கும் வழியறிந்து
முதலில் தன்கடன் செய்வதையே
முதலாம் கடமை என்றறிவோம்

இயல்புடை மூவரைக் காப்பதினை
இல்லறப் பண்பென நன்குணர்ந்து
இல்லறம் இனிதென வாழ்வதையே
இரண்டாம் கடமை என்றறிவோம்!

சுற்றமும் சூழலும் விலகாமல்
பற்றிய நட்பினை வெறுக்காமல்
ஊன்றிய கோலாய் நிற்பதையே
மூன்றாம் கடமை என்றறிவோம்!

ஊறின்றி அனைவரும் உய்வடைய
ஊருக்கு உதவுதல் நான்கென்றால்
வையகம் தழைக்க முயலுவதே
ஐந்தாம் கடமை என்றறிவோம்!

ஐவகைக் கடமையை நன்குணர்ந்து
ஐந்தையும் சரிவரச் செய்பவனை
அறத்தின் சான்றென அறிந்திடுவோம்!
அவனே சான்றோன் வணங்கிடுவோம்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

#ஐவகைக்_கடமைகள்