31/01/2024

அங்குமிங்கும் ஓடிய பிள்ளையை

 


அங்குமிங்கும் ஓடிய பிள்ளையை
அடக்கி அமர வைத்தார்கள்!

தனியே அறை கொடுத்து
ஒதுக்கி வைத்தார்கள்!

இதைச் செய்யாதே
அதைச் செய்யாதேயென
கட்டளை விதித்தார்கள்!

ஆனால் அவள் அதையெல்லாம்
கண்டுகொள்ளவே இல்லை...
காரணம்...
அவளுக்கும்
அத்தனிமை பிடித்திருந்தது...

அவள் அண்ணன்
அவளைத் தொந்தரவு செய்யவில்லை
அவள் அம்மா
அவளைக் கண்டு(டி)க்கவே இல்லை
ஆம்...
அவள் கைப்பேசியோடு
விளையாடிக் கொண்டே இருந்தாள்

பாவம்....
இவர்கள்தான் சொல்கிறார்கள்
அவள் பெரிய மனுஷி ஆனாளென்று..

✍️செ. இராசா

உயிரின் மொழியே உன்னதக் கவியே

உயிரின் மொழியே
உன்னதக் கவியே
நடையில் நதியே
நனைந்த மதியே...(2)

விழியில் விழுந்தத் தருணம் முதலே
விதியின் வழியை திருப்பும் விசையே
நெருங்கி நெருங்கி அருகில் வரவே
நெருப்பின் தகிப்பை எழுப்பும் இசையே!

இருக்கையில் கூட இல்லையெனும்
உணர்வைத் தந்தாய்...
இறைநிலை என்றால் என்னவெனும்
அறிவைத் தந்தாய்..

இரண்டே இல்லை ஒன்றென்றால் அத்வைதம் என்பார்
இதிலென்ன விந்தை ஒன்றென்பார்
நம்மையும் கண்டால்...

இருந்தும் அன்பே வலிக்கிறதே..
பிரிவெனச் சொன்னால்..
வலிதரும் சொல்லும் இருந்திடுமோ
நம்மையும் கண்டால்...

வா..வா...அன்பே...அன்பே...

28/01/2024

உப்புக்குச் சப்பாணி

அதென்ன உப்புக்குச் சப்பாணி?!
உண்மையில் அது
உப்புக்குச் சப்பாணியே அல்ல
ஒப்புக்குச் சப்பாணியே...

குழுவில் ஆள் குறைந்தால்
சும்மா இருக்கட்டுமே என
ஒப்புக்காய் சேர்க்கும் கணக்கீடே...

அது சரி?
அதில் ஏன் சப்பாணி?
அதுதான் சமூக அவலம்
அநாகரிகத்தின் அடையாளம்!
மாற்றுத் திறனாளிகளை
ஆற்றல் குறைந்தோரென
பழமொழியால் வதைக்கும்
உளவியல் அசிங்கம்!

கண்தெரியாப் புலவர்மேல்
காலில்லாப் புலவரேறி
இரட்டைப் புலவர்களாய்
எங்கும் வலம்வந்த கதை
சங்க இலக்கியத்தில்
சான்றாக இல்லையா?!

கையும் இல்லாமல்
காலும் இல்லாமல்
தலையணை உருவத்தில்
தரணியையே கலக்குகின்ற
நிக்கி என்கின்ற நிக்கோலஸ்பற்றி
விக்கியில் படிக்கவில்லையா?!

ஹெல்லன் கெல்லர் முதல்
இசைமேதை பீதோவன்வரை
இங்கே யாரும் உங்கள்
நையாண்டி கண்டெல்லாம்
நசுங்கி விடவில்லை..

அது சரி...
நாங்களாவது ஒப்புக்குச் சப்பாணி!
நீங்க...?!

27/01/2024

என் நா மட்டுமல்ல

 


உன் பொன்னழகை
என் கண்களே அறியும்
உன் மென்சூட்டை
என் இதழ்களே அறியும்
உன் நன்ருசியை
என் நா மட்டுமல்ல
என் உயிரும் உணரும்..

✍️செ. இராசா

அம்மா ஜனனி பவதாரிணி நீ

 


அம்மா ஜனனி பவதாரிணி நீ
அம்மா ஜனனி பவதாரிணி நீ
என் ஆத்மார்த்த உயிரான ஓர் வரம் நீ
அம்மா ஜனனி பவதாரிணி நீ
என் ஆத்மார்த்த உயிரான ஓர் வரம் நீ

கணம் கணம் நீயே என் புது ஸ்வரங்கள்
ஆ... ஆ அ அ ஆ அ அ ஆ அ ஆ ஆ அ அ ஆ...
கணம் கணம் நீயே என் புது ஸ்வரங்கள்
ஸ்வரமின்றி உண்டோஇன் னிசைரகங்கள்
கணம் கணம் நீயே என் புது ஸ்வரங்கள்
ஸ்வரமின்றி உண்டோஇன் னிசைரகங்கள்

உலகமே போற்றுகின்ற உன்னத மகள்நீ
உலகமே போற்றுகின்ற உன்னத மகள்நீ
காருண்ய நாமமே
காருண்ய நாமமே பவதாரிணி
அம்மா ஜனனி பவதாரிணி நீ
அம்மா ஜனனி பவதாரிணி நீ

✍️செ. இராசா

24/01/2024

ராமர் பாடல்




மீண்டு(ம்)வந்த நாயகனே ஸ்ரீ ராமா
நீண்டகால சரித்திரமே வா ராமா
கோசலத்து பாலகனே ஸ்ரீ ராமா
கோ..தண்டம் உயர்ந்திடவே வா ராமா

எத்தனை எத்தனை
சோதனை வாழ்வினில்
எப்படி வந்தாலும்
சத்திய ராமனாய்
உத்தம ராமனாய்
எப்படி வென்றாயோ?

எத்தனை எத்தனை
வேதனை தந்தனர்
எப்படி ஆனாலும்
ஷத்ரிய ராமனாய்
சத்குரு ராமனாய்
எப்படி நின்றாயோ?

நன்றேதர நலமேமிக
.....நரனாயுரு வடிவே
சென்றேதிரு வுருவேயிறை
....யெனவேவரு வோனே!
அன்பேவுரு அறமேவழி
....அறிவேநடை எனவே
இன்றேவர இனிதேமிக
....இறையேவரு வாயோ?!

ராமா...ராமா....ராமா ராமா
ராமா...ராமா...ஜெய்‌ஸ்ரீ ராமா...
ராமா...ராமா....ராமா ராமா
ராமா...ராமா...ஜெய்‌ஸ்ரீ ராமா...

கோசல ராமா...ராமா ராமா
தசரத ராமா...ராமா ராமா
சீதா ராமா...ராமா ராமா
கோதண்ட..ராமா..ராமா

அன்பே ராமா...ராமா..ராமா
அறமே ராமா..ராமா..ராமா
அருளே ராமா..ராமா..ராமா
அறிவே ராமா..ராமா..ராமா

அங்கே ராமா..ராமா..ராமா
இங்கே ராமா...ராமா..ராமா
வாவா ராமா... ராமா..ராமா
வாவா ராமா...ராமா...ராமா

ராமா....ராமா.....

✍️செ. இராசா

23/01/2024

நேர்மை நெறிப்படி நடந்தால்

 

நேர்மை நெறிப்படி நடந்தால் - மனம்
நிறைந்த அமைதி கூடும்!
வாய்மை உரைத்திட வாழ்ந்தால்-நம்
மாண்பின் உயரம் கூடும்!

இருப்பதை கொடுப்போம்
....இறைவழி நடப்போம்
..........இருளும் வெளிச்சமாகும்!
வருவதை சகிப்போம்
...வரைமுறை வகுப்போம்
...........வருத்தம் விலகிப்போகும்!

✍️செ.‌இராசா

(மெட்டு: தோல்வி நிலையென நினைத்தால்)

22/01/2024

கம்பனுக்கு(ம்) கோவிலக் கட்டு

 

#மெட்டு: #நண்பனுக்கு_கோவிலக்கட்டு)

வா ....
கம்பனுக்கு(ம்) கோவிலக் கட்டு- அவர்
பேரச்சொல்லி கைகளத் தட்டு
சந்தத்துல தந்தாரு பாட்டு- அவர
சொந்தமெனக் கொண்டாடிக் காட்டு

வாமச்சி செய்யலாம் கம்பன்போல நூறு..
நாமலும் செஞ்சாதான் நிலைக்குமிங்கே பேரு
மொழிய சிதைக்க நெனச்சா
மொகரயில விடுவோம்
மொழிய வளர்க்க நினைச்சா
வழிய உயிரக் கொடுப்போம்

கம்பனுக்கு....

✍️செ. இராசா

தோசை

 


பாசிப் பயிறோடு பச்சரிசி சேர்த்தரைச்ச
தோசை ருசியிருக்கே....தூள்

✍️செ. இராசா

17/01/2024

துரியாதீதம்

ஆக்கினையில் தன்னுயிரை
......ஆழ்ந்துணரும் ஞானத்தை
ஆய்ந்தறியத் தேவை இல்லையோ?!
 
தூக்கிசிர உச்சியினில்
.....சுத்தமனம் ஒன்றுவதை
தோய்ந்துணர ஆசை இல்லையோ?!
 
நீர்க்குமிழி போலெழும்பி
....நிற்காமல் அண்டமதை
நீபார்க்க எண்ண வில்லையோ?
 
யார்க்குமுயிர் வந்தவழி
....ஆதிவெளி சுத்தவெளி
ஈர்க்குமதைத் தேட வில்லையோ?!
 
✍️செ. இராசா

அடடாயிவள் அவடா

 அடடாயிவள் அவடாயென
.....அலைபாய்ந்திட நெஞ்சம்
விடுடாயென விதிடாயென
.......விரைவாகவே அஞ்சும்!

இடராயிலை இனிதாவென
......இழையோடிட நெஞ்சம்
இடியேனென இவளேனென
......இயல்பாகவே அஞ்சும்!

சுடராயிலை இருளாவென
.....சுமையேறிடும் நெஞ்சம்
சுயவேதனை இதுரோதனைத்
......துயரேயென அஞ்சும்!

கடலாயிலை கடுகாவென
......கவிபாடிடும் நெஞ்சம்
கரைசேர்ந்திடும் வழிதேடிட
..... கனிவாகவே கெஞ்சும்!

✍️செ. இராசா

15/01/2024

பொங்கலோ பொங்கலென

 


பொங்கலோ பொங்கலென
....பொங்கலின்று பொங்கிடவும்
எங்கும் இறையருளால்
....இன்பவொளி- தங்கிடவும்
துள்ளும் இசையொலிபோல்
....சூழல் அமைந்திடவும்
அள்ளிக் கொடுத்திடுவோம்
...அன்பு!

12/01/2024

அருள் தொண்டிற்கான விருது

 



இன்றைய தினம் அடியேனுக்கு கத்தார் மனவளக்கலை மன்றத்தின் மூலமாக அருள் தொண்டிற்கான விருது கிடைத்தமையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உறவுகளே..
 
(போன வருடம் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அதை இந்த வருடம் ஒரு வகுப்பறையில் வைத்து சிறப்பு செய்த பேராசிரியர் திரு. முத்து ஐயா அவர்களுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்)
வாழ்க வளமுடன்!
 
குருவே துணை!🙏🙏🙏
 
 
----செ. இராசமாணிக்கம்
 
2000-கல்லூரி காலத்தில் புதுக்கோட்டை மன்றம்
 
(2010ல் சங்கர்லால் என்னும் இலங்கை ஓட்டுனரால்)
 
சிந்தனை உரைகள் வழங்கிய தலைப்புகள்
 
 
அல்கோர் பட்டிமன்றம்
அல்கோர், ICC அபுஹாமர் மற்றும் அல்வுக்கைர் WAD நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொண்டாற்றியது.
 
வாராந்திர மற்றும் SKY VISION வகுப்புகளை ஒலிப்பதிவு செய்து அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியது.
 
வெள்ளிக்கிழமை YYE & YHEன் வகுப்புகளில் என்னால் முடிந்த அர்ப்பணிப்பை வழங்கிக் கொண்டிருப்பது.

08/01/2024

குரல்


என் குரலும்
அரங்கேற்றம் ஆகாதா?
என் குரலையும்
கேட்டுவிட மாட்டார்களா?
இப்படிக்
குரலுக்காகக்
குரல்கொடுப்போரை
அறிவீர்கள்தானே?!

ஆகா....
என்னே கம்பீரமான குரல்?
ஐயே...
என்ன கேவலமான குரல்?
இப்படிக்
குரலைவைத்தே
குறிப்பிடுவோரையும்
அறிவீர்கள்தானே?!

எனில்..
என்றேனும் இந்தக் குரலைப்பற்றி
சிந்தித்துள்ளீரா?!

காற்றை உள்வாங்கி
ஒலியாய் உருமாற்றி
மொழியாய் வடிவேற்றி
குரலாய்ப் பதிவேற்றும் இந்த
மனித விலங்கைப்போல்
மற்றொரு விலங்குமுண்டா?!

ஆம்...
இந்த இனத்தில் மட்டும்தான்
வயதுக்கு வந்தபின்
மெல்லினம் வல்லினமாகி
ஆண்குரல் கட்டைக்குரலாகும்!
அதுவரைக்கும்
என்ன... என்றவன்
அதன்பின்
என்ன்ன்ன....என்பான்!

இந்த இனத்தில் மட்டும்தான்
திருமணமானபின்
மெல்லினக் குரலுக்கும்
வல்லின வலிமைவரும்!
அதுவரைக்கும்
என்ன்ன்ன என்றவன்
அதன்பின்
ஹி..ஹி..என்பான்!

யாரையும் ஆளைப்பார்த்து மட்டும்
எடைபோடாதீர்...
ஆஜானுபாவாய் இருப்பான்
நயன் தாராபோல் பேசுவான்..
அரைச்சாணே இருப்பான்
அடோல்ப் ஹிட்லர்போல் கர்ஜிப்பான்.
காரணம்
குரலே தவிற...உருவமல்ல!

இங்கே எவ்வளவு பெரிய
பேச்சாளராய் இருந்தாலும் சரி
பாடகராய் இருந்தாலும் சரி
குரலொலியைப் பொறுத்தே
கரவொலி மேலோங்கும்!
எனில்;
கரவொலி மேலோங்க
குரலொலியைப் பாதுகாப்பீர்!

✍️செ. இராசா

06/01/2024

எப்ப வருவாயோ

 


எப்ப வருவாயோ- அப்பா
எப்ப வருவாயோ
எப்ப வருவாயோ- அப்பா
எப்ப வருவாயோ.....

நாளைக்கே வருவதாக
நாளுபூராம் சொல்லுமப்பா
நாளைக்கும் நாளையின்னா
நாளை எப்ப வருமப்பா?!!

வாங்கித்தந்த பொம்மையெல்லாம்
வக்கனையா தூங்கு தப்பா
ஏங்கிப்போன என்னைக்காண
வந்தாயென்ன தப்பா அப்பா?!

04/01/2024

நேர்மையோடும் வாய்மையோடும்

நேர்மையோடும் வாய்மையோடும்
.......வாழுகின்ற மாந்தரை
கூர்மையான வார்த்தையாலே
........கூசிடாமல் ஏசுவார்!
ஆர்வமோடும் ஆசையோடும்
.......தொண்டுசெய்யும் நேசரை
கோவமூட்டி வேகமூட்டி
.......கொள்கைமாறத் தூண்டுவார்!

✍️செ. இராசா

03/01/2024

தட்டுங்க தட்டுங்க

 


தட்டுங்க தட்டுங்க கைகளைத் தட்டுங்க
கொட்டுக்கு தக்கன தட்டுங்களே..
தட்டுங்க தட்டுங்க ஓங்கியேத் தட்டுங்க
திக்கெட்டும் கேட்டிடத் தட்டுங்களே...
 
வந்தவர் யாவரும் சொந்தமே என்றிட
சிந்தையில் ஏற்றிடத் தட்டுங்களே..
முன்னவர் பின்னவர் பேதங்கள் நீங்கிட
வேகமாய்க் கைகளைத் தட்டுங்களே...
 
உள்ளத்தில் எப்போதும் உற்சாகம் பொங்கிட
எல்லோரும் நன்றாகத் தட்டுங்களே..
மன்னாதி மன்னரும் மக்களும் ஒன்றென
எல்லோர்க்கும் கேட்டிடத் தட்டுங்களே..
 
✍️செ. இராசா 
 
(முன்போர்முறை கடல் சார்ந்த பாடல் செய்தபோது கடலூரில் இருந்துவந்து கத்தாரில் மீன்பிடிப்புத் தொழிலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நம் மீனவ நண்பர் வீரகுமார் அவர்களையும் அவர் மகனையும் சந்தித்திருந்தேன். இன்று அவர்களை மீண்டும் சந்தித்தபோது எடுத்த ஒளிப்படம்)
 

02/01/2024

காந்திவேசம்

 


கால்வயித்துக் கஞ்சிக்குத்தான்
காந்திவேசம் போடுறான்....
காக்காசப் பார்த்ததுமே
டாஸ்மாக்கத் தேடுறான்....

நாலுபேரு நிக்கசொல்ல
நாயகனாக் காட்டுறான்
ஆளுயாரும் இல்லையினா
நாராசமாப் பேசுறான்...

எல்லாம் நடிப்பு சாமி- இது
பொல்லாதவர் பூமி!
என்னப் பொழப்பு சாமி- இதில்
நல்லவர்‌..யார் காமி?!

✍️செ. இராசா

01/01/2024

இன்றுமுதல்

இன்றுமுதல் மாறுவதாய் எப்போதும் சொல்லுவதால்

'இன்றுமுதல்' என்றாலே ஏசுகிறார்- என்னசெய்ய?! 

'இன்றுமுதல்' என்றசொல்லை இங்குள்ளோர் முன்னாலே

இன்றுமுதல் சொல்லேன் இனி!

புத்தாண்டு நன்நாளில்

புத்தாண்டு நன்நாளில்
...பொய்நீங்கி மெய்யோங்க
......பூதூவி வேண்டுகின்றேன்!

எத்திக்கும் எல்லோரும்
... என்றென்றும் வாழ்வோங்க
...... என்நெஞ்சில் வாழ்த்துகின்றேன்!

சித்தர்கள் ஞானத்தை
...சிந்தைக்குள் வைத்தோங்க
.....செந்தமிழைப் போற்றுகின்றேன்?

எத்தர்கள் மூடர்கள்
.... எல்லோரும் நன்றாக
....... என்பாட்டை ஏற்றுகின்றேன்!

✍️செ. இராசா