30/06/2023

நடந்தது அத்தனையும்

                                                                                                                                        

நடந்தது அத்தனையும்
நன்றாகவே நடந்தது
நடப்பது அத்தனையும்
நன்றாகவே நடக்குது

நடக்க இருப்பதுவும்
நன்றாகவே நடக்கும் (2)

எதை இழந்திட்டாய்நீ
எதற்கு நீ அழுகுறாய்?
எதைப் படைத்திட்டாய்நீ
வீணா ஏன் புலம்புறாய்?

எதை எதை எடுத்தாயோ
இங்கிருந்துதான் எடுத்தாய்
எதை எதை கொடுத்தாயோ
இங்கிருந்துதான் கொடுத்தாய்

இன்னைக்கி உன்னது
நாளைக்கு அவனது
நாளைக்கி வருவது
மறுநாள் பிறரது...

உலக நியதி யாது?- அதை
உற்றுநோக்கிப் பாரு...
படைப்பின் விதியைப் பார்த்து- உன்
பயண வழியை மாத்து....

✍️செ. இராசா

28/06/2023

சொப்பனத்தில் கண்ட அரிசி

சொப்பனத்தில் கண்ட அரிசி- அட
சோத்துக்குத்தான் ஆகிடுமா?!
கற்பனையில் வந்த சிரிக்கி- அட
கட்டிக்கத்தான் சம்மதிக்குமா....?!

25/06/2023

அமெரிக்கவாழ் தொழிலதிபர்

கடலுதாண்டி வந்தபோதும்
கருணை குறையா கவரிமானு...
உயரமேறி வந்தபோதும்
உறவத் தாங்கும் எங்கத் தூணு
எல்லா ஊரும் எல்லா சனமும்
ஒன்றே என்றப் பரம்பரை பாரு.
போதும் போதும் என்கிற வரைக்கும்
நல்லுராசு ஐயா போல தருவது யாரு?!
எத்தனையோ கஷ்டத்திலும்
இல்லையினு சொன்னதில்லை...
எத்தனைபேர் எதுக்கயிலும்
எதிரியாக நினைச்சதில்லை....
 
 
சங்கத் தமிழன்- நம்ம
சிங்கத் தமிழன்
டெக்ஸாஸில் எல்லோரும் சொல்லும்பேரு....
நம்ம நல்லுராசு *அண்ணன்தான்* சூப்பர்ஸ்டாரு...
நைட் அன்ட் டே பார்க்காம உழைச்சாருங்க - இப்போ
நம்பர் ஒன் டிரெண்டிங்கே அண்ணன்தானுங்க...
 
 
தன்னைப்போல போராடும் சொந்தங்கள மறக்கல
அன்னைபோல உறவாண்ட
அண்ணங்கள உதறல
முட்டிமுட்டி ஜெயிச்சாலும்
வலியின்சுவடு மறையல
எங்கோபோன பின்னாலும்
இன்னும்குணம் மாறல
 
எட்டடி பத்தடி பாஞ்சாரு
எகிறி அடிச்சு வென்றாரு...
எப்படி இப்படி செஞ்சாரு
எதிரி வியக்க வச்சாரு
தட்டுங்க தட்டுங்க கைகளத் தட்டுங்க..
உலகம் அதிரட்டும் 
 
 
சங்கம்செட்டி நாடென்றால்
சொல்லுறாங்க சூப்பரு!
பட்டிதொட்டி பாரெல்லாம்
ஃபேமஷான மேக்கரு!
நல்லுராசு *ஐயாதான்*
எல்லோருக்கும் மென்டரு (Mentor)
சொன்னபடி செய்வதுல
அண்ணன்தான்டா டக்கரு...
 
நெஞ்சுல பட்டதச் சொல்வாரு
நேருக்கு நேருதான் நிப்பாரு
அஞ்சிடக் கெஞ்சிட மாட்டாரு
அன்புல இன்னொரு தாயாரு
தட்டுங்க தட்டுங்க கைகளத் தட்டுங்க..
உலகம் அதிரட்டும்
 
 
டெக்ஸாஸில் ஜொலிக்கும் சங்கத்தமிழன்
ஊர்தாண்டி கலக்கும் நம்மத் தமிழன்
எல்லோர்க்கும் பிடிச்ச எங்கத்தமிழன்
நல்லோர்க்கு *சிவமான* அன்புத்தமிழன்
வாழ்வாங்கு வாழ வாழ்த்திடுவோம்
 
 
ஆராத்தி எடுங்க ஆராத்தி
நம்ம நல்லுராசு ஐயாவ பாராட்டி
ஆராத்தி எடுங்க ஆராத்தி
நம்ம ஐயாவ எல்லோரும் பாராட்டி
தட்டுங்க தட்டுங்க கைகளத் தட்டுங்க..
உலகம் அதிரட்டும்
 
 
தலைக்கனம் இல்லாத் தலைவன் பாரு
தனித்துவம் உள்ளத் தமிழன் பாரு!
சமத்துவம் கண்ட தோழன் பாரு!
தருவதில் இன்றைய கர்ணன் பாரு!
உழைக்கிற வர்க்கம் அனைவரையும்
ஒன்னாப் பார்க்குற மனிதருங்க..‌‌...
 
தனக்கெனத் தனியா ஒதுக்காம சரிசமம் காட்டுற புனிதருங்க...
அதையிதைச் சொல்லிக் காட்டாம அமைதியா கடக்குற புத்தருங்க‌...
கதைபல சொல்லிக் அளக்காம கவிதையா சிரிக்கிற சித்தருங்க...
 
✍️செ‌. இராசா

23/06/2023

கவியரசர் ----- பிறந்தநாள் வாழ்த்து

 

பாட்டினேரைப் பூட்டிவந்து
...பட்டிதொட்டி உழுதவன்!
நாட்டினோரை எண்ணியெண்ணி
...நல்லவித்தை பதித்தவன்!
ஏட்டிலேயே நின்றவற்றை
... எங்குமள்ளிக் கொடுத்தவன்
கோட்டிலேயே சென்றிடாமல்
....குன்றிலேறி ஒளிர்பவன்!
 
✍️செ. இராசா

21/06/2023

யோகா குறள்கள்




யோகா வழிச்சென்றால் என்றைக்கும் சோர்வில்லை
வாகாய் உடல்மாறும் வா
(1)

பந்துபோல் துள்ளிப் பறந்திட வேண்டுமெனில்
விந்துவளம் கூட்ட விரும்பு
(2)

காயகல்பம் என்னும் கலைபயிலும் மாந்தர்க்கு
நோயற்ற வாழ்வாயுள் நூறு
(3)

உடல்நலமும் நல்ல உளவளமும் கூட்டித்
தடம்பதித்து நிற்பாய்த் தனித்து
(4)

எண்ணம்சொல் செய்கையில் ஏற்றங்கள் பெற்றுவிட்டால்
வண்ணமய மாகும்நம் வாழ்வு
(5)

எல்லாக் கலையும் கலையல்ல தீதேதும்
இல்லாக் கலையே கலை
(6)

இணக்கமாய் வாழும் இயல்புள்ளம் கொண்டால்
வணங்குவர் எல்லோரும் வந்து
(7)

தலைகுனிந்து கற்கும் தவக்கலை என்றும்
தலைநிமிர வைக்கும் தனித்து
(8.)

பேசுவதைப் பேசார்முன் பேசாமல் மௌனித்து
பேசுகின்ற நேரத்தில் பேசு
(9)

ஆத்ம பலம்கூட்டும் அக்கல்வி கல்லாமல்
சாத்திரம் கற்றென்ன சால்பு
(10)

✍️செ. இராசா

20/06/2023

மல்லிகைப்பூவாய் இல்லாமல் பாறாங்கல்லாய் இருந்தால்

 


நயமான அரிசியையும்
உரிச்ச உளுந்தையும்
மூனுக்கு முக்கால்னு
முறையா அளந்து
நாலுக்கு அஞ்சுமுறை
அலசியதை ஊறவச்சு
நறுநறுன்னு இல்லாம
நைசா அரைச்சு
தனித்தனியா அரைச்சதில
உப்பவிட்டுக் கலக்கி
புளிப்பேறும் வரைக்கும்
பொறுமையாக் காத்திருந்து
பொங்கிவரும் மாவை
பூப்போல அள்ளி
குழிக்கொரு கரண்டியா
கொஞ்சமா ஊத்தி
ஆவியில வெந்ததும்
அப்படியே இறக்குனா..
அட...அட....அடா‌‌..
....
என்னத்த சொல்ல?!
....
மல்லிகைப்பூவாய் இல்லாமல்
பாறாங்கல்லாய் இருந்தால்
நிர்வாகம் பொறுப்பல்ல
😃😃😃

✍️செ‌‌. இராசா

19/06/2023

 


கீழகீழ கீழயென்று
.......கீழசென்று பார்க்கையில்
ஆழமான சேதிசொல்லும்
.......அர்த்தமுன்னுள் தோன்றுமே!
மேலமேல மேலயென்று
.......மேலயேறிப் போகையில்
ஞாலமுந்தன் காலிலென்ற
.........மாயைவந்து போகுமே!

வேலைவேலை வேலையென்று
........வேலைதேடும் நாட்களில்
காலைமாலை பேதமின்றி
.........மூளைவேலைக் கேங்குமே!
நாளைநாளை நாளையென்று
‌..........நாளையோட்டும் மாந்தரை
நாளையென்ன நாளையென்று
..........நாமுமோட்ட வேண்டுமே!

✍️செ‌. இராசா

17/06/2023

சொல்லும் போதே இனிக்கிறது
சர்க்கரை இல்லையெனும் சேதி

15/06/2023

குடிமகன்களின் சாபம்

 பிறர்காசை முற்பகலில் தொட்டால் அதைத்தேடி
பிற்பகலில் ஐடி வரும்
✍️
குடிமகன்களின் சாபம் பொல்லாதது.10 ரூபா ஜி

வட்டார சொல்லெடுத்து வாய்குளிர பாடப்போறேன்

 #தொகையறா

வட்டார சொல்லெடுத்து
வாய்குளிர பாடப்போறேன்
தட்டாத மெட்டெடுத்து
தந்தனத்தாம் போடப்போறேன்
கட்டாத காளையெல்லாம்
காட்டாறாப் பாயுமடி....
எட்டாத கன்னியெல்லாம்
ஏறெடுத்துப் பார்க்குமடி
பாருங்கடி..பாருங்கடி..பாருங்கடியோவ்

#வசனம்
யோவ்...என்னய்யா...இழுக்குற...
இருஞ்சை...வாரோம்ல...
எங்கிட்டு வாரீக....வர்றாராம்ல....

#பல்லவி
என்னள பேசுற...
என்னள நீ பேசுற...
கண்ணில்வலை வீசுற....
கண்டதுமே ஏசுற.‌...(2)
அத்தை பெத்த சின்ன புள்ளேயே- இந்த
அத்தான் வந்தா தப்பு இல்லையே...
குத்த வச்சத் தங்கச் சிலையே- நான்
குத்த மேதும் செய்ய வில்லையே!

(என்னள பேசுற)

#சரணம்_1
ஒக்கூரு சந்தையினு
ஓடிவா என்னவளே...
தெக்கால போயிடுவோம்
தெம்மாங்கு பாடிடுவோம்...
பாகனி கோயிலுக்கு
போவதா சொல்லுபுள்ள
காரைக்குடி தியேட்டருல
காலைக்காட்சி பார்த்திடுவோம்.‌.
காலைக்காட்சி பார்த்திடுவோம்

(வேறு)

மச்சானின் வண்டியில் இடமிருக்கு ஏறிக்க பின்னால
மச்சினி வந்தாலும் மனமிருக்கு கூப்பிடு முன்னால....

ஆத்தாடி ஆத்தா‌...

சுத்த புத்தி சித்தனுக்கும்

 

சுத்த புத்தி சித்தனுக்கும்
செத்த புத்தி பித்தனுக்கும்
சிந்தையிலே நான் ஒன்றுமில்லை- பிறர்
சிந்தைவிட்டு “நான்” போவதில்லை! 
 
மந்த புத்தி மாந்தனுக்கும்
நொந்த புத்தி வேந்தனுக்கும்
சிந்தையிலே நான் தெரிவதில்லை- அவர்
சிந்தையிலே "நான்" புரிவதில்லை!
 
✍️செ. இராசா

14/06/2023

தவறின்றிப் போனால் சரி

தவறான ஒன்றைத் தவறென்று சுட்டத்
தவறில்லை என்றால் தவறு- தவறைத்
தவறென்று கண்டால் தவறைத் திருத்தித்
தவறின்றிப் போனால் சரி

13/06/2023

சகுந்தலா

 


(மகாபாரதக் கதையின் ஆதி மன்னனும் பரதச் சக்கரவர்த்தியின் தந்தையுமான துஷ்யந்தன் என்னும் மன்னன் காட்டில் முனிவர் குடிலில் வளரும் சகுந்தலா தேவிமேல் மையல் கொண்டு கந்தர்வ முறையில் காதல் திருமணம் செய்துவிட்டு, மீண்டும் வந்து கூட்டிப்போவதாய் வாக்குறுதி தருகின்றான். சகுந்தலா தேவி அவன் நினைவாகவே இருக்கும் தருணத்தில் துர்வாசர் வருகிறார். அதைக்கவனிக்காத தேவிக்கு நீ நினைக்கும் உன்னவன் உன்னை மறப்பான் என்று சாபம் விடுகிறார். அதுதெரியாமல் இருவரும் மன்றாடும் காட்சியை குறளுரையாடல் செய்துள்ளேன்)

#சகுந்தலா_1
வருவதாய்ச் சொல்லிவிட்டு வந்தீரே ஐயா
திரும்பிவர வில்லையேன் செப்பு?

#துஷ்யந்தன்_2
சந்திர வம்சத்து சான்றோர்சூழ் நற்சபைமுன்
வந்தென்ன செய்கின்றாய் வம்பு?!

#சகுந்தலா_3
என்னய்யா.....‌ சொல்கின்றீர்?!!! என்னையா சொல்கின்றீர்?!!!
என்னையே தந்ததற்கா ஈது?!

#துஷ்யந்தன்_4
உளராதே பெண்ணே...உயர்சபையின் முன்னே
களவாண்ட கள்வன்யார் காட்டு?!

#சகுந்தலா_5
கொட்டிய தேளின் கொடுக்கறியும்
கொட்டியதை
கட்டியநீர் விட்டதேன் கை

#துஷ்யந்தன்_6
என்னம்மா சொல்கின்றாய் ஏதும் புரியவில்லை
சொன்னசொல் ஆய்ந்தாயா சொல்?

#சகுந்தலா_7
வயிற்றில் வளர்கின்ற மைந்தனே சாட்சி
உயிர்கொடுத்தோன் நீரே உணர்!

#துஷ்யந்தன்_8
யாருடைய பிள்ளைக்கு யாரம்மா தந்தையார்?!
ஊருவிட்டு ஊர்போ உடன்

#சகுந்தலா_9
கந்தர்வ கல்யாணம் கட்டியது உண்மையெனில்
வந்தென்னைப் பார்ப்பாய் விரைந்து

#துஷ்யந்தன்_10 (திரும்பி வந்தபின்)
துர்வாச சாபத்தால் தூரமாய்ப் போனதற்கு
கர்மவினை மூடியதென் கண்!

#சகுந்தலா_துஷ்யந்தன்_11
காரணம் என்றெல்லாம் கண்டுண்மை சொன்னாலும்
பேரணம் அஃதென் பிழை

#துஷ்யந்தன்_12
பரதனைத் தந்தெந்தன் பாரம் குறைத்தாய்
பரதன்பேர் நாடாகும் பார்

✍️செ. இராசா

12/06/2023

நீதிநேர்மை நியாயமென்று வாழுகின்ற மாந்தரை

 


நீதிநேர்மை நியாயமென்று
.......வாழுகின்ற மாந்தரை
போதிதர்மர் பேரனென்று
......போகவிட்டுப் பேசுறார்!
சாதிபேதம் எதுவுமின்றி
......கைகொடுக்கும் பேர்களை
சாதிமதம் ஆய்ந்தறிந்து
......தன்பலத்தைக் காட்டுறார்‌!
 
உள்ளகாசில் நன்றுசெய்யும்
......உண்மையான மாந்தரை
உள்ளதாலே தருவதாக
......ஊதிவூதித் தூத்துறார்!
கள்ளமான பாதையேறக்
......கால்பிடிக்கும் பேர்களை
வெள்ளையுள்ளம் கொண்டவர்போல்
.....மென்மையாகப் பார்க்குறார்!
 
✍️செ. இராசா

வயது ஏற ஏறக்
கூடிக்கொண்டே போகிறது
பொறுப்பு

10/06/2023

வானிற்கும் தூதுவிடும் நீர்

 


வான்விடும் நீரைத்தான் வையகம் வாங்கிடுமோ?!
வானிற்கும் தூதுவிடும் நீர்!
 
✍️செ. இராசா
 
(இன்று எடுத்த ஒளிப்படம்)

09/06/2023

என்ன தவறிழைத்தேன் சகியே

என்ன தவறிழைத்தேன் சகியே
ஏனிந்தத் தண்டனையோ...?!
என்னை மறந்தனையோ சகியே
யாதுமென் விதிதானோ?!

கூறடி நேரடியாய் சகியே
கொன்றிடல் முறைதானோ?!
நூறடி நூறடியாய் சகியே
நுன்மனம் விலகியதோ?!

யாரடி தீர்த்திடுவார் சகியே
என்நிலை இதுதானோ?
பாரடி பார்வையினால் சகியே
பைத்தியம் தெளியாதோ?!

பைந்தமிழ் பார்க்குதடி சகியே
பாடிய கூற்றினையே....
செந்தமிழ் சொல்லுமடி சகியே
தேடிய நாட்களையே...

ஓடியே வந்திடடி சகியே
ஒதுங்கிடல் சரியில்லையே
கூடிட எண்ணிடடி சகியே
கோபமும் முறையில்லையே

வாழ்வதும் ஒருமுறையே சகியே
வாயினி வாழ்ந்திடவே...
ஆழ்மனம் துடிக்குதடி சகியே
அன்பினை வார்த்திடவே..

✍️செ. இராசா

08/06/2023

சபலம்

 #சபலம்

கண்ட மாத்திரத்தில்
நெஞ்சில் தோன்றும் பிரளயம்!
எண்ணிய நேரத்தில்
எங்கிருந்தோ வரும் பூகம்பம்!
அடக்கம் தளர்கையில்
அளவுமீறி உடையும் அணைக்கட்டு!
மயக்கம் படர்கையில்
மதிமீறிப் பாயும் காட்டாறு!

சிறு பொறி போதும்
காட்டுத்தீ பரவ‌‌...
சிறு ஓட்டை போதும்
பெருங்கப்பல் கவிழ..
சிறு சபலம் போதும்
பெரும்‌..மனிதன் வீழ‌‌...

இங்கே..
மேனகைகள் ஆட
விஸ்வாமித்திரர்கள் வீழலாம்
ஆனால்
இந்திரர்களின் சபலத்திற்கு
அகலிகைகள்தான் கிடைத்தார்களா?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

ஒரு சின்ன மயிறிலை போதும்
வைரங்கள் கூலாங்கற்க‌ளாக...
முத்துக்கள் வேணாமென்றாக

ஒரு சின்ன துருப்புபோதும்
சாம்ராஜ்யங்கள் சரிய...
காமராஜ்யங்கள தெரிய.

இங்கே அனைவரும் உத்தமர்கள்தான்
பிம்பம் உடையாதவரை......
இங்கே அனைவரும் நல்லவர்கள்தான்
சபலம் தழுவாதவரை..

சபலம்..
பலத்தைக் கெடுக்கும் தீயுண்ணி
நலத்தைக் கெடுக்கும் நாயுண்ணி

கவனம்...

✍️செ. இராசா

06/06/2023

பொத்திப் பொத்தி வளர்த்தவதான் அம்மா அம்மா..

 


அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....

பொத்திப் பொத்தி வளர்த்தவதான் அம்மா அம்மா..
பூர்வ ஜென்மக் கொடுப்பினைதான் அம்மா அம்மா...

தெய்வம் எங்கே காட்டு என்றால் அதோ அம்மா..
தேட வேணாம் முன்னே நிப்பா இதோ அம்மா...

உள்ளத நல்லத ஆக்கித்தான் போடுவா
தன்பசி பாராம...
கண்ணுல எண்ணைய போட்டுத்தான் தேடுவா
தன்வலி தீராம....(2)

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா

பாடலாகக் கேட்க

https://youtu.be/gxMgl9NuwMA

05/06/2023

நிலையாமை

 #நிலையாமை

பயணம் முடியும்முன் பாதியில் சென்றால்
துயரம் அதுதரும் சூழ்ந்து
(1)

இருப்பின் அருமை இழப்பில் தெரியும்
இருக்கையில் வாழ்வீர் இசைந்து
(2)

மறுகணம் மட்டும்தான் மாற்றானின் கண்ணீர்
இறுதிவரை எண்ணுபவர் யார்?!
(3)

இருப்போர் விழியை இறந்தோர் திறந்தும்
இருக்கையில் காணாரே இங்கு!
(4)

படக்கென்று தோன்றிப் படக்கென்று மீண்டும்
உடல்விட்டுப் போகும் உயிர்
(5)

அங்குமிங்கும் இங்குமங்கும் ஆடவைத்த நம்முயிர்
எங்குசென்று சேர்கிறதோ எண்ணு!
(6)

அப்பனென்றும் மாமனென்றும் அன்றழைத்த சொந்தங்கள்
இப்பிணத்தைத் தூக்குவென்பார் பின்பு!
(7)

காலக் குதிரைமேல் கண்டபடி செல்பவரில்
ஞாலத்தை வென்றவர்தான் யார்?
(8)

செல்வம் இளமை எதுவும் நிலையல்ல
செல்லும்முன் செய்வாய் சிறப்பு
(9)

காற்றுள்ள போதே கடமையைச் செய்வோருக்கு
கூற்றனும் ஆவான்நல் கூட்டு!
(10)

✍️செ. இராசா

04/06/2023

 


 

எத்தனை எத்தனை தொழில்நுட்பம்
இருந்தும் இங்கே என்னபயன்?
இத்தனை உயிர்கள் போனபின்னும்
யார்தான் பொறுப்பை ஏற்கிறவன்?!

புல்லட் வேகத் தொடரியெல்லாம்
போகிற காலம் வந்ததென்றீர்!
பொல்லாப் பொய்கள் சொல்லாதீர்
போகிற தடத்தை சரிசெய்வீர்!!

இனியும் இனியும் இதுபோலே
இன்னொரு விபத்து வேண்டாமே
கனிவுடன் கடமை புரிந்தாலே
கண்களில் கவனம் சிதறாதே....

✍️செ. இராசா

02/06/2023

இசைக்குள் இசைவோன்

 

இசைக்குள் இசைவோன் இசையால் எழுவோன்
இசையின் இறைவன் இவன்...
 
✍️செ. இராசா
இனிய மனமார்ந்த பிறந்தநாள்
வாழ்த்துகள்
ஐயா

கடலு கதி கலங்கும்

 


கடலு கதி கலங்கும் வெள்ளி சனி நாங்க வந்தா....
தூண்டி துடிதுடிக்கும் துள்ளி வரும் மீனப் பார்த்தா....(2)
 
வந்தவரை இலாபம்தானே அண்ணாத்த- அட
வல்லையினா நட்டமிங்கே என்னாத்த?
வாழும்வரை வாழ்ந்திடுவோம் அண்ணாத்த- அட
வாழ்ந்தபின்னே வருவதிங்கே என்னாத்த?
 
✍️செ.இராசா

01/06/2023

சாதியில்லா சமத்துவன்னு சொல்லுறான்-

 

சாதியில்லா சமத்துவன்னு சொல்லுறான்- ஆனா
சாதிக்கான சான்றிதழக் கேக்குறான்....
சாதிபேதம் இல்லையென்று கூவுறான்- ஆனால்
சாதிபார்த்தே..வேட்பாளர நிறுத்துறான்..
நீதிக்காக நிற்பதுபோல் காட்டுறான் - ஆனால்
நிதிவந்தா வாயபின்னே பொத்துறான்..
ஆதிதொட்டு ஆண்டவன்னு பேசுறான்- ஆனால்
ஏதிலாரைப் போலயின்னும் ஏங்குறான்..
 
✍️செ. இராசா