31/08/2023

நினைவுகளைச் சேகரியுங்கள்

 அந்தப் படம்
எப்போது ஒளிபரப்பானாலும்
அத்தனை சந்தோஷமாம்
அவன் அம்மாவிற்கு...
காரணம் அந்தப் படமல்ல

தான் பிழைக்கும் நாட்டிற்குத்
தன்னையும் அழைத்துச்சென்று
தன் பிள்ளை பெண்டோடு
திரையரங்கும் கூட்டிச்சென்று
பச்சப் புள்ளையைப்போல்
ஐஸ்கிரீமும் வாங்கித்தந்த
அந்த அழகிய நினைவுகள் தானாம்...

ஆம்..
நினைவுகளைச் சேகரியுங்கள்!

✍️செ. இராசா

30/08/2023

உனதாளுமை தெரியாதவர்

 

உனதாளுமை தெரியாதவர்
.....பழிதூவிடும் போதும்
மனதாலதை மதியாதிரு
....மலர்மாலைகள் கூடும்!
சினமோங்கிட சிரம்தாழ்ந்திட
.... நடப்பாரெனும் போதும்
நினைவாலதை நினையாதிரு
....உனதாய்க்கணம் மாறும்!

27/08/2023

குரு & சீடன்

 


 குரு
செல்களுக்குள் உட்புகுந்த
.....சிற்றின்ப ஆசையினை
அல்லலென எண்ணி
......அகற்றிடுவீர்- இல்லையெனில்
தொல்லை பலதருமே
.....தொற்றுபோல் பற்றிடுமே
சொல்லாத் துயர்தருமே
......சூழ்ந்து!
 

சீடன்
சிற்றின்பம் தப்பென்று
......செப்புகின்ற நற்குருவே
சிற்றின்பம் தப்பென்றால்
..... செய்ததுயார்?- குற்றமுற
ஆப்பிளைத் தின்றதுதான்
......ஆதாமின் பாவமெனில்
ஆப்பிள்;ஏன் சைத்தான்;ஏன்
......அங்கு?!
 

குரு
ஆண்டவரின் செய்கையில்
.....ஆயிரம் அர்த்தமுண்டு
தீண்டாதீர் என்றபின்னும் ....
......தீண்டியதார்?- வேண்டியதார்?
அத்தனைக்கும் காரணமாம்
......ஆசையெனும் சைத்தானை
சித்தத்தில் நீக்குவதே
......தீர்வு!
 

சீடன்
என்னதான் உள்ளதென
......எல்லோரும் எண்ணுவதில்
என்ன பிழையுண்டோ
.......யாமறியோம்- என்றாலும்
சிற்றின்பம் தாண்டாமல்
.......சேர்ந்திடுமா பேரின்பம்
குற்றமென்ன எம்கூற்றில்
.......கூறு!
 

குரு
ஒன்றிலும் ஒன்றாமல்
......ஒவ்வொன்றாய் தாண்டிடும்முன்
ஒன்றிலே பற்றியதில்
......ஓர்ந்திருந்தால்- நன்கறிவாய்
ஒன்றிற்கு மேலறிய
......ஓர்பிறவி பத்தாது
நன்கறிந்தோர் சொல்கேட்டால்
......நன்று!

✍️செ. இராசா

26/08/2023

சந்திராயனை அனுப்பி...

 சந்திராயனை அனுப்பிச்
சந்திரனை ஆய்வுசெய்யும்
அதே வேளையில்தான்
இங்கே..
விழுப்புரத்திற்கு ஆளனுப்பி
வீரமுத்தாரை ஆய்வுசெய்கிறார்கள்
சாதிய முத்திரை வழங்க....

✍️வேதனையுடன்

25/08/2023

தேநீரும் நாநீரும்

 

தேநீரும் நாநீரும் சேருகின்ற அந்நேரம்
யார்நீர் எனத்தோன்று...தே!
 
✍️செ‌. இராசா

23/08/2023

சந்திராயன்-3 --- வெற்றி வெற்றி


 


வெற்றி வெற்றி வெற்றியென்று சொல்லடா- இது
வீர வெற்றி வெற்றியென்று சொல்லடா!
திட்ட மிட்ட வெற்றியின்று பாரடா- இதைத்
திட்டம் தீட்டித் தந்ததாரு கூறடா?!

(வேறு)

இந்தியன்னா சும்மா இல்லை கெத்து தானுங்கோ-நான்
இல்லையின்னு சொல்றவன்லாம் ஒதுங்கி நில்லுங்கோ
வீரமுத்து வேலு என்றால் யாரு சொல்லுங்கோ- தமிழ்
வீரத்தோட தலைநிமிர வச்ச பேருங்கோ

சந்திராயன் ரெண்டுகூட தோல்வி இல்லீங்கோ- இப்பச்
சந்திராயன் மூனுகூட ஹல்லோ சொல்லுதுங்கோ...
பாட்டிவடை சுட்டகதை படிச்சி ருப்பீங்கோ-இனி
பார்ட்டிவைக்க மூனுக்கொரு டிக்கெட் போடுங்கோ!

✍️செ. இராசா

அழுக்கு

 அழுக்கு

அழுக்கை
அழுக்குதானே என்று
அலட்சியப்படுத்தாதீர்..
தூசியும் அழுக்கும் சேர்ந்ததே
சுற்றிவரும் கோள்கள்...

அழுக்கை
இழுக்கென்று கூறி
அறைகூவல்விடாதீர்...
ஈருடலின் அழுக்குகள் சேர்ந்ததே
உலவுகின்ற உயிர்கள்...

பார்வதியின் அழுக்கில்தான்
பிள்ளையாரின் அவதாரமென்பது வெறும் கதையல்ல...
அது உண்மையை உணர்த்தும் தத்துவம்...

இந்திரனின் அழுக்கால்தான்
அகலிகையின் அவலமென்பது
வெறும் புராணமல்ல.‌.
அது இன்றுவரைத் தொடரும் பேரவலம்‌‌....

ஆம்..
பிண்டமும் அழுக்கு
அண்டமும் அழுக்கு
நீயும் அழுக்கு
நானும் அழுக்கு

உயிரிருக்கும் வரைதான்
உடலுக்கு மரியாதை...
உயிர் பிரிந்தால்
உடலும் அழுக்கே...

அகத்தின் அழகு மட்டுமல்ல
அகத்தின் அழுக்கும்
முகத்தில் தெரியும்
முகத்தில் மட்டுமல்ல
எழுத்திலும் தெரியும்....

சில அழுக்குகள் ஆபத்தானவை
உடனே நீக்கிவிடவேண்டும்...
இல்லையேல்
பற்றிப் படிந்து
புற்றுநோய்க்கு வழிவகுக்கும்...

சில அழுக்குகள் நீக்கமுடியாதவை
அனுபவித்துதான் ஆக வேண்டும்..
இல்லையேல்...
கர்மவினை போல்
வேறுவழியில் வலிகொடுக்கும்...

அழுத்த அழுக்கை
அழுது தீருங்கள்...
பழுத்த அழுக்கை
விலகி வாருங்கள்...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..

எல்லா அழுக்கும் அழுக்கல்ல உள்ளத்தின்
பொல்லா அழுக்கே அழுக்கு!

✍️செ. இராசா

21/08/2023

ஆயிரம் சூரியன் ஆயிரம் எரிமலை

 

ஆயிரம் சூரியன் ஆயிரம் எரிமலை
......ஆனவன் போல தாயே!
ஆயினும் மாறியே ஆகுவேன் மாரியாய்
......ஆணவம் இல்லை தாயே!
பாயிரம் பாடிட பாக்களை ஏற்றிட
.......பாரதி இல்லை தாயே!
சேயிவன் என்னிடம் செய்யன வேண்டிட
......செய்குவேன் நூறு தாயே!
 
✍️செ. இராசா

20/08/2023

ஒட்டியும் ஒட்டாமல்



...... உட்கார்ந்த நீர்த்துளிபோல்
பட்டும் படாமல்
.......பழகினால்- ந(க)ட்டமில்லை
ஈர்ப்புடன் கூடி
.......எதிர்ப்பாக மாறயில்தான்
யார்க்கும் வலியெடுக்கும்
.......இங்கு!
 
✍️செ. இராசா

இத்தனைநாள் ஆனபின்னும்---------குறும்படம் ஒன்றிற்காக எழுதியது

இத்தனைநாள் ஆனபின்னும் நம்இருதய
மூலையின் ஓரம்
எத்தனையோ வலியிருந்தும் அதுபின்னணி இசைபோல் ஓடும்
 
கண்ணிமைகள் திறந்திருந்தும் காண்கிற காட்சிகள் யாவும் .
எண்ணங்களின் கவிதையினால்
மின்னிடும் கானலாய் மாறும்‌.
 
என்ன இது?! என்ன இது?
காலம் செய்த மாயை இது...
உண்மையெது? பொய்களெது?
உள்ளம் ஓதும் வேதமது
 
எத்தனைநாள் ஆனபின்னும் நம்இருதய
மூலையின் ஓரம்
எத்தனையோ வலியிருந்தும் அதுபின்னணி இசைபோல் ஓடும்
 
✍️செ. இராசா

18/08/2023

இல்லாளை வாழ்த்தும் கவி

 


  #பிறந்தநாளுக்காக

என்னைப்போல் நீ
உன்னைப்போல் நான்
என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்
நீ வேறு நான் வேறுதான்
அதனாலென்ன?!
அந்த முரண்பாட்டில் பூத்த
உடன்பாட்டால்தானே
இரட்டைச் செல்வங்கள்...!!!

இப்படிச் செய்
அப்படிச் செய்
என்றெல்லாம் அதிகாரம் செய்யமாட்டேன்
செய்தாலும் கேட்க மாட்டாய்தான்
அதனாலென்ன?!
அன்பின் அதிகாரமும்
அடங்கமறுத்தலும்தானே
நமக்கான அடையாளங்கள்!

இங்கே நீ
அங்கே நான்
என்றெல்லாம் கவிதையெழுத மாட்டேன்
எழுதினாலும் நீ ஏற்கமாட்டாய்தான்
அதானலென்ன?!!
பிரிவுகள் பிரித்தாலும்
பிரியங்கள் பிரியாததுதானே
தியாகத்தின் அர்த்தங்கள்!

வா....
நீடூழி வாழ்வோம்....என்னவளே...!!!

இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

✍️செ. இராசா

16/08/2023

ஊடக நிலைமை --------- குறள் வெண்பாக்கள்

 




உள்ளதைச் சொல்லுகின்ற ஊடகங்கள் இல்லையெனில்
கள்வரே வெல்வார்கள் காண்
(1)

சார்புநிலை ஊடகமே சந்தையில் உள்ளதெனில்
ஓர்பக்கச் செய்திதான் உண்டு
(2)

உள்ளதை மாற்றி உரைக்கின்ற ஊடகத்தால்
உள்ளத்தால் மாசாகும் ஊர்
(3)

எதிர்மறைச் செய்திக்கே ஈர்ப்பென எண்ணி
எதிலும் குறைசொல்வோர் இங்கு
(4)

அறமில்லாச் செய்தி அதிகமாய்ச் சென்றால்
அறம்குன்றிப் போகும் அகம்
(5)

வம்பிழுக்கும் நோக்கில் வலையொளியில் இன்றுபலர்
தம்குணத்தைக் காட்டுகிறார் தாழ்ந்து
(6)

தம்மினம் தம்சாதி தம்சனம் என்றாகி
தம்போக்கில் மாற்றாதீர் சார்ந்து!
(7)

ஊடக தர்மமெல்லாம் ஒன்றுமில்லை என்பதுபோல்
நாடகமாய்ச் செய்வதா மாண்பு?
(8)

காசுதரும் கட்சியையே காட்டுவீர் என்றானால்
மாசுபடும் எல்லாம் மலிந்து
(9)

நேருக்கு நேரென்று நேரலையில் கூப்பிட்டு
பேருக்குப் பேசுவதா பேச்சு?!
(10)

✍️செ. இராசா

14/08/2023

வேப்பங் குச்சி

 


வேப்பங் குச்சிக்கு விலையவச்சு
....வெளியில் விக்கிறான்
டாப்பு டக்கரு பேஸ்டுயென்று
....நம்மட்ட தள்ளுறான்

உப்புங் கரியும் தப்புதான்னு
.....மாத்தச் சொன்னவன்
உப்பும் கரியும் உள்ளதென்று
....மாத்தி சொல்லுறான்

(பேஸ்டில்....உப்பும் கரியும்)

கார்ப்பரேட் பேஸ்டுங்கோ
காலாவதி ஆச்சுங்கோ..
ஆலும்வேலும் தேடுங்கோ
ஆடாதுங்க பல்லுங்கோ

டூப்பு மச்சி டூப்பு
எல்லாம் இங்கே டூப்பு
ஆப்பு மச்சி ஆப்பு- இப்ப
எல்லாத்துக்கும் Appu

✍️செ. இராசா

13/08/2023

மாடிமேல மாடியென்று

மாடிமேல மாடியென்று
......மாடிவீடு கட்டுவார்!
ஓடியாடி ஓய்ந்தநாளில்
......ஓரமாகத் தூங்குவார்!
வாடிநெஞ்சம் நொந்துநொந்து
.....வாய்த்தவாழ்வை ஏசுவார்!
நாடிகொஞ்சம் தேஞ்சபின்னே
.....வாழயெண்ணி ஏங்குவார்!

கோடிமேல கோடியென்று
.......கோடிசேர்க்க எண்ணுவார்!
கோடியின்றி யாதுமின்றி
........கூற்றனோடு செல்லுவார்!
ஆடியோடி ஓடியாடி
........ஆண்டவனைத் தேடுவார்!
தேடியோடி தன்னிலோடி
.........தெய்வமங்கே காணுவார்!

✍️செ. இராசா

(எமக்குப் பிடித்த சிவவாக்கியச் சந்தத்தில் மீண்டும் ஒரு தத்துவப் பாடல்)

ஒரு நபர் குழு

 "ஒரு நபர் குழுவாம்‌"
ஒரு நபர் எப்படி குழுவாகும்?!
....
தனி மரம் தோப்பாகுமா?

12/08/2023

சாதியென்ன சாதி



சாதியற்ற சமத்துவத்தைத் 

தந்தவன்போல் பேசுவான்!
சாதியென்ன சாதியென்று
பார்த்துசீட்டு வழங்குவான்!

நாதியற்ற சனங்களுக்கு
நண்பனென்று பேசுவான்!
நாங்குநேரி சம்பவத்தை
நாலுநாளில் மூடுவான்!

ஊதியூதி காசுபார்க்கும்
ஊடகத்தைப் போற்றுவான்!
உண்மைசொல்லி பேசுவோரை
உள்ளதூக்கிப் போடுவான்!

போதிதர்மர் நாங்களென்று
பொய்யசொல்லி உருட்டுவான்!
சாதியென்று வந்தபின்னே
சப்தமின்றி ஓடுவான்!

✍️செ. இராசா

09/08/2023

பாகற்காய் கசப்பாமாம்...

 


பாகற்காய் கசப்பாமாம்...
அப்படித்தான் நானும் நினைத்தேன்
நீ செய்துதரும்வரை...
 
✍️செ. இராசா

08/08/2023

கேசவன் (K-7)

 


கேசவன் என்பதைக் கேசெவன் (K-7) என்றாக்கிக்
கேசத்தில் போட்டதுதான் கெத்து!
 
✍️செ. இராசா

அம்மா பாடல்




அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....
 

பல்லவி

பொத்திப் பொத்தி வளர்த்தவதான் அம்மா அம்மா..
பூர்வ ஜென்ம கொடுப்பினைதான் அம்மா அம்மா...

தெய்வம் எங்கே காட்டு என்றால் அதோ அம்மா..
தேட வேணாம் முன்னே நிப்பா இதோ அம்மா...
 

சரணம்_1

உள்ளத நல்லத ஆக்கித்தான் போடுவா
தன்பசி பாராம...
கண்ணுல எண்ணைய போட்டுத்தான் தேடுவா
தன்வலி தீராம....(2)

தப்புக்கு தண்டனை தந்திடு வாருன்னு
அப்புட்ட சொல்லாம...
பிள்ளைய காத்திட உண்மைய மாத்துவா
தன்மனம் தாங்காம.....(2)

அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....
 

சரணம் 2
கிள்ளிக் கொடுக்குற சில்லறைக் காசுல
ஒன்னையும் சேர்க்காம
அள்ளிக் கொடுக்குற அம்மனா மாறுவா
எப்பவும் சோராம....(2).

எட்டி உதைக்கிற உள்ளக் குமுறல
எப்பவும் காட்டாம
தட்டிக் கொடுக்குறத் தாயெனத் தோன்றுவா....
அப்பவும் மாறாம....(2)

அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....

✍️செ.‌இராசா

06/08/2023

முகநூலில் நடக்கும் சதுரங்க வேட்டை

 


அன்பு உறவுகளே,

முகநூலில் நடக்கும் சதுரங்க வேட்டை பற்றி ஏற்கனவே நிறைய முறை எழுதியுள்ளேன் என்றாலும் மீண்டும் எழுத வேண்டிய சூழ்நிலை உருவானதால் மறுபடியும் எழுதுகிறேன் உறவுகளே.....
சமீப காலமாக பல வழிகளில் தில்லுமுல்லுகள் நடப்பதை அறிவோம். அதில் சிலபல பற்றி தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் நானும் சிலவற்றை இங்கேப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1. இங்கே இலங்கைத் தமிழர் வேடம் பூண்டு சிலர் உலவுகிறார்கள். பொதுவாக நான் தமிழில்தான் உரையாடுவேன். ஆனால் அந்த நபரோ ஆங்கிலத்திலேயே என்னோடு தொடர்பு கொண்டார். ஆரம்பத்தில் என் கவிதை அருமையாக உள்ளதாகப் பேசியவர், பிறகு அதையெல்லாம் விட்டுவிட்டு பல தகவல்கள் கேட்க ஆரம்பித்தபோதுதான் உஷாராகி Block செய்துவிட்டேன். இதை ஏன் எழுதுகிறேன் என்றால், மக்களே அவர்களின் நோக்கம் முற்றிலும் வேறு என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு உடனே துண்டிக்கவேண்டும் என்பதே...

2. கடந்த மார்ச் மாதம் நான் வீட்டைக் காலி செய்யும் சூழ்நிலை வந்தபோது சில பொருட்களை விற்க முயன்றேன். முகம் தெரியாத ஒரு நபர், 1100/-ரியாலுக்குப் பேசிவிட்டு 3000/- ரியால் கூடுதலாக அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு. அதைத் திருப்பிதரச் சொன்னார் ஆனாலு வேறு ஒரு அக்கவுண்ட்டில் போடச் சொன்னபோதுதான் நான் சுதாரித்துக் கொண்டேன்‌. (அப்படி செய்திருந்தால் வேறு வகையில் பின்விளைவுகள் வந்திருக்கும்‌...நல்லவேளை)

3. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கே பெண்களுக்கு மட்டும் உள்பெட்டித் தொந்தரவுகள் என்றில்லை. ஆண்களுக்கும் பல வழிகளில் வரும். நீங்கள் அவர்களோடு கண்டித்து எழுதினாலும் சரி, நல்ல முறையில் எழுதினாலும் சரி....அவற்றையெல்லாம் மிக அழகாக மாற்ற முடியும். ஆகவே, கவனம்!

4. இணைய உலகத்தில் AI தொழில் நுட்பக் காலத்தில், விருப்பக் குறியீடுகளில் உள்ளவற்றைப் பயன்படுத்துவதில்கூட சில சிக்கல்கள் உண்டு உறவுகளே.... அன்பார்ந்த விடயத்தை, மனமார்ந்த வாழ்த்தினைக் குறிக்கும் இதயக் குறியீட்டை தப்பாகப் பார்க்கும் நபர்களை என்ன செய்வது?... அதுபோன்ற குறியீட்டை நீ ஏன் பயன்படுத்துகிறாய் என்றும் மிரட்டல் பதிவுகள் உள்பெட்டியில் வருகின்றன.

(சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் ❤️ இதயக் குறியீடு அனுப்புவது சட்டப்படி தவறென்றும் தண்டனைக்குரிய குற்றமென்றும் பார்க்கப்படுவதாக தற்சமயம்தான் சட்டம் ஏற்றியுள்ளனர் என்கின்ற செய்தி அதிர்ச்சிகரமாக உள்ளது)

05/08/2023

ஏறுகிற விலைவாசி ........இறங்க மறுக்குது!

 

ஏறுகிற விலைவாசி
........இறங்க மறுக்குது!
ஏறும்படிக் காசுமட்டும்
........ஏற மறுக்குது!
வாழுகிற சனங்களெல்லாம்
........வருந்திக் கிடக்குது!
ஆளுகிற அரசுயென்றும்
.........கணக்குப் போடுது- தேர்தல்
.........கணக்குப் போடுது!

எதிர்க்கட்சி ஆகையில
........எதிர்ப்பக் காட்டுது!
அதிகாரம் மாறயில
........அமைதி யாகுது!
டாஸ்மாக்கின் வருவாயக்
........கூட்டச் சொல்லுது!
பேஸ்புக்கில் வரலாற
........மாத்திச் சொல்லுது- நல்லா
........மாத்திச் சொல்லுது!

தக்காளி போனாக்க வெங்காயம்
வெங்காயம் போனாக்க தக்காளி
அவனென்ன இவனென்ன பங்காளி
எல்லோரும் உள்ளுக்குள் கூட்டாளி

✍️செ. இராசா

எட்டிரெண்(டு) ஆண்டுகள்முன்

 

எட்டிரெண்(டு) ஆண்டுகள்முன்
...எங்கிருந்தோ ஓடிவந்து
பட்டென்று பார்த்தவுடன்
...பாதியிலே- விட்டுவிட்டு
பக்கத்து நாடான
...பக்ரைனைச் சென்றடைந்தாய்
இக்கணம்நீ எங்கே இயம்பு?
 
✍️செ. இராசா

03/08/2023

மிளகு



பொங்கல் சாப்பிடுகையில்
உங்கள் பல்லில் மிளகுபட்டால்
வெறும் மிளகுதானே என்று
ஒதுக்கி ஓரம் தள்ளுபவரா நீங்கள்?
எனில்‌...
உங்களுக்குத்தான் இந்தப்பதிவு...

ஆம்..
இந்த மிளகுதான்
இந்த மிளகிற்காகத்தான்
நாம் அடிமையானோம் என்றால்
நம்புவீர்களா?!!
அதுதான் உண்மை...

இங்கே...
வாஸ்கோடாகாமா வரும் வரைக்கும்
நாமும் அறிந்திருக்கவில்லை
காலிகட்டில் கால் வைப்பவன்தான்
காலை வாரப்போகிறானென்று...

சூப்பில் மிளகிடும்வரைக்கும்
அவனும் கணித்திருக்கவில்லை
விலைபேசி விற்பவனைத்தான்
வலைவீசப் போகிறோமென்று..

ஆமாம்....
மிளகாய்க்கு ஏன்
மிளகாய் என்று
பேர்வந்தது தெரியுமா?
மிளகாய்
மிள..‌.காய் (பெப்பராய்) உறைத்ததால்
மிளகாய் என்றனராம்...
அட
அவ்வளவு ஏன்?
சில்லி நாட்டைச் சேர்ந்ததால்தான்
சில்லிக்கே சில்லியென்று பெயர்...
எனில்
சில்லியும் மிளகாயும் காரணப்பெயர்களே தவிர
மிளகுபோல் உருவான
இடுகுறிப்பெயரல்ல...

கடுகு சிறுத்தாலும்
காரம் குறையாது என்பது
பழமொழி....

மிளகு சிறுத்தாலும்
மேன்மை குறையாது என்பது
புதுமொழி...

காரணம்
மிளகாயால் வரும் கேடுகள் எதுவும்
மிளகால் இல்லை...
மிளகாலே வரும் நன்மைகள் ஏதும்
மிளகாயில் இல்லை...
எனில்
மிளகை நேசி...
மிளகையே நேசி.‌‌..

வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா

உன்பதம் பணிந்தவர்

 

உன்பதம் பணிந்தவர்
.....உழலுவ தில்லை!
உன்னருள் கிடைத்தவர்
.....கலங்குவ தில்லை!
உன்வினை புரிந்தவர்
......மயங்குவ தில்லை!
உன்னையே நினைப்பவர்
......தவறுவ தில்லை!
 
✍️செ. இராசா

01/08/2023

எழுத்து ----- குறள் வெண்பாக்கள்




எல்லா எழுத்தும் எழுத்தல்ல தீதொன்றும்
இல்லா எழுத்தே எழுத்து
(1)

எழுத்தின் வலிமை எழுத்தில் தெரியும்
எழுதும்முன் எண்ணி எழுது
(2)

எழுத்தில் அறம்கண்டோன் ஏற்றுகின்ற பாட்டின்
எழுத்தில் உறைவான் இறை
(3)

மற்றவர் சொற்படியே மாற்றுகிறோம் என்றானால்
கற்றதமிழ் என்னாகும் சொல்?
(4)

இறையின் கொடையால் இறங்கும் எழுத்தால்
இறையையும் வாழ்த்தி எழுது
(5)

கலையாகச் செய்கின்ற கையெழுத்(து) ஓங்க
தலையெழுத்தும் வேண்டும் தனித்து
(6)

எழுத எழுதத்தான் ஏற்றமென எண்ணி
எழுத்தைத் தவம்போல் எழுது
(7)

விலையில்லா நல்லெழுத்தை வேண்டிவரும் பேர்க்கு
விலைவைத்துத் தந்தால் மதிப்பு
(8)

அனைத்தையும் ஏற்க அவசியம் இல்லை
வினையறிந்து செய்ய விரும்பு
(9)

தனித்துவம் காட்டாமல் தந்தென்ன வாகும்
இனியேனும் மாற்றி எழுது
(10)

✍️செ. இராசா