31/07/2020

பாகைநாடன் ஐயா---இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 


பாகைநாடன் ஐயாவின் பாதத்தில் வீழ்ந்ததால்
வாகைதொட்ட ஐயாவின் வாழ்த்தினைப்
பெற்றதால்
தாய்த்தமிழ்ப் பிள்ளையை சந்தித்த நற்பயனால்
வாய்த்திட்ட பிள்ளையென் வாழ்த்து!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா

✍️செ.இராசா

(நல்லாசிரியர் விருது பெற்ற, 17 நூல்கள் படைத்த திரு. சண்முகநாதன் ஐயா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணங்கி மகிழ்கிறேன் ஐயா!!!)

30/07/2020

வணக்கம் தமிழா சாதிக்-இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 


சாதிக்கப் பிறந்த சாதிக்கே- நீ
சாதிமதம் பார்க்கா சாதிக்கே!
ஆதிக்கும் இசைந்து சாதிக்கே-நீ
ஆதிக்கம் செலுத்து சாதிக்கே!
 
தேதிக்குள் முடிக்கும் சாதிக்கே-உனைத்
தேடிவரும் வாய்ப்புகள் சாதிக்கே!
நீதிக்குப் பேசும் சாதிக்கே- நீ
நிச்சயம் வெல்வாய் சாதிக்கே!
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி!!!
 
✍️செ.இராசா
அனைவருக்கும் இனிய ஈது முபாரக் நல்வாழ்த்துகள்

படியேறிப் போகின்ற

 


படியேறிப் போகின்ற பாவையின் கண்கள்
படியேறப் போகின்ற பாவியைக் கண்டு
படியிறங்கி வந்ததால் பள்ளத்தில் வீழ்ந்து
படியிறங்கிப் போனகதை பார்

✍️செ. இராசா

#கற்பனை_மட்டுமே

ஓவியம் உதவி Elaiyaraja S A V நன்றி ஐயா

விந்தை உலகில் 

வித்திட்ட தந்தை

விருட்சமாய் நாம்...

நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு

நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு!
மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் உண்மையான நட்பு...

இல்லை.. இல்லை
மரணம் தாண்டியும் தொடர்வதுதான் உண்மையான நட்பு...

#இனிய_நண்பர்கள்_தின வாழ்த்துகள்
✍️செ.இராசா

(மேலே உள்ள வரிகள் 2012ல் நான் எழுதியவை. இதே வரிகளை 2017ல் என் நண்பன் போஷ் மறைவின்போது ஞாபகம் செய்தேன். இப்போது இவ்வரிகளை நினைத்துப் பார்த்து...மரணம் தாண்டியும்.....என்ற வரியை இணைத்துள்ளேன்...

ஆமாம் நண்பா...என்றும் உன் நினைவோடு)

29/07/2020

குறளுரையாடல் 5

 


  #குறளுரையாடல்_5

#நான்_1
கற்றதைக் கற்றதுபோல் கற்போர்க்குக் கற்பித்துக்
கற்றோரில் நிற்போராய்க் காட்டு

#ஐயா_2
காட்டுக்குள் வாழ்ந்தாலும் நல்வீட்டில் ஆழ்ந்தாலும்
நாட்டுக்குள் நீதிநெறி நன்று.

#நான்_3
நன்றென்று தோன்றுவதை நன்றாகப் பற்றுவோர்
என்றைக்கும் வாழ்வார்கள் பார்

#ஐயா_4
பாருக்குள் நன்னாடு பாரதம் நம்நாட்டின்
ஊருக்குள் நம்மண்நல் ஊர்

#நான்_5
ஊருலகம் போற்றும் உயர்வாழ்வு வேண்டுமெனில்
சீருடன் செய்வாய் செயல்

#ஐயா_6
செயலாற்றும் ஞாலத்துள் செந்நீரில் வாழும்
கயலுட் புகாநீர்போல் கல்

#நான்_7
கல்லுக்குள் உள்ள(க்) கருத்தை உணர்ந்தோர்க்கு
கல்லும் கடவுளே காண்

#ஐயா_8
காண்பதுவும் கேட்பதுவும் கட்செவிமுன் மெய்யல்ல
மாண்பதுவால் ஆய்வது மாண்பு

#நான்_9
மாண்புள்ள மாந்தராய் மண்ணிலே வாழ்வோரை
காண்கின்றார் தெய்வமாய் காண்

#ஐயா_10
காண்பதுவும் கண்டதுவும் கண்காணப் போவதுவும்
வீண்மனமோ கேளாநீ வீண்.

#நான்_11
வீண்பேச்சு பேசிடும் வீணர்கள் கூட்டத்தை
காண்கையில் தோன்றும் கசப்பு

#ஐயா_12
கசக்கும் நுனிக்கரும்பும் காலங் கடக்க
அசத்தல் இனிப்பளிக்கும் ஆழ்

#நான்_13
ஆழ்ந்து படித்தபடி அப்படியே ஏற்றிவிட்டு
வாழ்வைப் படித்திட வா

#ஐயா_14
வாவென்று சொன்னேன் வணங்கி விழிமூடி
போவென்று சொல்லேன் ஓம்

#நான்_15
ஓமென்ற மந்திரத்தில் ஊடாடும் மெய்ப்பொருளை
நாமென்றும் எண்ணினால் நன்று

#ஐயா_16
நன்று நினைந்துநீ நல்லொழுக ஆசையை
வென்று முடிக்கவுனை வெல்

#நான்_17
வெல்வோர்க்கே இவ்வுலகம் வென்றிடவே வேண்டுமென
உள்ளத்தில் என்றைக்கும் ஊன்று

#ஐயா_18
ஊன்றிக் களித்திடும் உள்ளத்தில் மெய்யறிவு
தோன்றி யொளிரும் ஒளி.

#நான்_19
ஒளியோடும் வேகத்தில் உள்வாங்கிப் பாட
அளிப்பாயே என்னுள் அருள்

#ஐயா_20
அருளைப் பொழியும் அருந்தமிழ் உள்ள
இருளை ஒழிக்கும் இருப்பு.

✍️மருத்துவர் ஐயாவுடன் & செ.இராசா

27/07/2020

மெல்லச் சிரித்தாள்

  

படபடக்கும் இதயம்...
துடிதுடிக்கும் இமைகள்...
பார்க்கத் துடிக்கும் பார்வை...
பார்த்துவிடுவார்களோ என்ற பயம்..
நக்கல் செய்வார்களோ என்ற நாணம்
பேச வேண்டுமோ என்ற கூச்சம்..
என்ன நடக்குமோ எனும் ஆர்வம்..
எங்கிருந்தோ வந்த அச்சம்..
வியர்வையை துடைக்கும் வெக்கம்
இப்படி எத்தனையோ உணர்ச்சிகள்...

இதைக் கவனித்தபடியே
#மெல்லச்_சிரித்தாள்.
தன்னைப் பெண் பார்க்க வந்த
அந்தக் கடைசி மாப்பிள்ளையை.....

✍️செ. இராசா

See Less

26/07/2020

கற்றதைக் கற்றதுபோல்

கற்றதைக் கற்றதுபோல் கற்போர்க்குக் கற்பித்துக்

கற்றோரில் நிற்போராய்க் காட்டு

பறம்பு மலைக்கு

 


#பறம்பு மலைக்கு - வெடி
குண்டு வைக்கிறான்
பாறைகளக் காசாக்கி
விக்கப் பாக்குறான்
 
எதுத்தேதும் கேட்டாக்க
உள்ள வைக்கிறான்
எதையுமிங்கு கேட்கலைனா
ஏறி மேயிறான்...
 
#பாரி மன்னன் ஆண்ட மலை
பாரில் வீரம் காட்டும் மலை
ஈசன் கோவில் கொண்ட மலை
ஈதல் அறம் கூறும் மலை
பண்பாட்டைச் சொல்லும் மலை
பண் பாடும் பாணர் மலை
பறவை எல்லாம் வாழும் மலை
பறம்பு என்னும் பிரான் மலை
எங்க ஊரு ஊட்டி மலை
என்றும் வளம் உள்ள மலை
இந்த மலை வேணுமாடா உனக்கு
இன்னும் என்ன செய்ய போடுறீங்க கணக்கு
 
நம்ம தமிழ் நாகரிகம்
மண்ணின் உள்ளே தோண்டுகிறோம்
கண்ணு முன்னே நிக்கிறதக்
கண்டு கொண்டு தூங்குகிறோம்!
யானை பலம் என்ன வென்று
யானைக்கிட்ட சொல்லாமல்
பூனைபோல ஆட்டி வச்சு
யானைப் பாகன் ஆள்வதுபோல்
வந்து மேல ஏறிக்கிட்டு
வச்சு வச்சு செய்யுறீங்க
எங்க மலை வேணுமாடா உனக்கு
இன்னும் என்ன செய்ய போடுறீங்க கணக்கு
 
✍️செ.இராசா

25/07/2020

கல்

 #கல்

 



இத்தனை வயதாகிவிட்டது
இன்னும் குறையவில்லை
இந்தக் கல்லின் மேலுள்ள ஈர்ப்பு...

இது...
சொக்கட்டான் ஆடிய கல்லா? இல்லை
சொக்கனாய் பாவித்த கல்லா?
இது
அம்மியாய் உருண்ட கல்லா? இல்லை
அம்மனாய் நினைத்த கல்லா?

ஆமாம்...
இந்த பிரபஞ்சப் பாத்திரத்தில்தான்
எத்தனை எத்தனை சூரியக்கற்கள்?!

இந்த சூரிய ஆட்டுக்கல்லில்தான்
எத்தனை எத்தனை கோளக்கற்கள்?

ஒற்றைப் புவிக்கல்லில்
ஒய்யாரமாய் உலாவருகிறோமே...
இந்தக் கற்கப்பலுக்கு
ஓய்வே இல்லையா?!

வெள்ளை கல்லொன்றை
வெண்ணிலவாய்ச் சொல்கிறோமே
அங்கே பாட்டி வடைசுட்ட வீட்டில்
மின் விளக்கே இல்லையா?!

அது என்ன
அப்பாவின் விரலில்...
இராசிக் கல்லென்று
எப்போதும் ஒரு கல்..

அது என்ன
அம்மாவின் மூக்கில்
மூக்குத்திக் கல்லென்று
எப்போதும் ஒரு கல்...

ஆ......
அடியேனின் வாயிலும் ஓர் கல்..
எத்தனை முறை அலசினாலும்
எப்படியோ வந்துவிடுகிறது..
அரிசிக்குள் மறைந்த
சில கலப்படக் கல்

ஆனாலும்..
கல்லைக் குறைவாக எண்ணாதீர்
கல் மூத்திரப் பையை அடைத்தால்
என்னாகும் தெரியுமா?

கல்லைத் தாழ்வாக மதிப்பிடாதீர்
கல் வைரக் கல்லாய் இருந்தால்...
அதன் மதிப்பு தெரியுமா?

ஓர் ஆச்சரியம்..
கல்லுக்குள் சிலை காணும்
சிற்பியின் கண்கள்!

அட மீண்டும் ஆச்சரியம்
சிலையைக் கல்லாகவே காணும்
சிலரின் கண்கள்!

கல்..
கல்லிற்குள் உள்ள நுட்பத்தைக் கல்..
கல் உடைபட்டால் அணு
அணு உடைபட்டால்?
அது அளப்பரிய சக்தி

ஆம்..
சிவமும் சக்தியும்
வெறும் சொற்களல்ல
அது கற்களுக்குள்
பொதிந்த தத்துவங்கள்

புரிந்தால் ஆத்திகம்..
புரியாவிடில் நாத்திகம்...

இனியும்....
கல்லானாலும் கணவன் என்று
கல்லை மட்டப்படுத்தாதீர்..
இதை நான்..
கணவனாய்ச் சொல்லவில்லை
கல்லாய்ச் சொல்கிறேன்...

என்ன தேடுகிறீர்
அடிக்க கல்லையா?!
அதற்கு முன் பொறுங்கள்
இயேசுவின் அசிரீரி கேட்கிறது;

"பாவம் செய்யாதவர்கள் மட்டுமே"
ஆமென்...

✍️செ. இராசா

கல்கண்டு செய்தகவி கற்கண்டா இல்லையா
சொல்லுங்கள் பின்னூட்டம் தந்து


24/07/2020

சமயம்

 #சமயம் சார்ந்த பதிவை
சமயம் பார்த்து பதிவிடும்
சமய வாதியா நான்?!
ஆம்..சமயம் பற்றிப் பதிவிடும்
சமயவாதியே நான்..
இந்த சமயம் பற்றிய பதிவை
சமயம் இருந்தால் படியுங்களேன்

இந்த சமயம்
இதற்கான சமயம்
அந்த சமயம்
அதற்கான சமயம்
இப்படி சமயத்தை எப்படி வகுப்பதென
எல்லா சமயங்களும் சொன்னாலும்
இந்த சமயம் பற்றிப்புரிய
நமக்குத்தான் சமயமே இல்லைபோல..

நேற்றைய சமயம் நேற்றோடு
நாளைய சமயம் நாளைக்கு
இன்றைய சமயம் இப்போது..

இந்த சமயத்தை
இப்போதுள்ள சமயத்தை; ஏன்
ஒவ்வொரு சமயத்தையும் ருசித்து
ஒவ்வொரு சமயத்திலும் வாழ்ந்தால்
எல்லா சமயமும்
நல்ல சமயமே......




✍️செ.இராசா

23/07/2020

காணொளியைக் காட்டிவிட்டு

காணொளியைக் காட்டிவிட்டு கண்டபடி வாங்கிவிட்டுத்
தேனொழுகப் பேசுவதா தீர்வு


 


✍️செ‌.இராசா

22/07/2020

பயன்தரா ஒன்றைப் படைப்பதால் கிட்டும்
பயனில்லாச் சான்றிதழ் ஏன்
✍️

விவசாயம்


 
மழையே இல்லை
ஈரமாய் இருக்கிறது
கண்கள்

(1)

தூவிய வேகத்தில்
வேகமாய் வளர்கிறது
களை

(2)

உழுததன் பயனை
அறுக்கையில் அனுபவிக்கிறார்
இடைத்தரகர்

(3)

நன்றாய் உழைத்தாலும்
அடி வாங்குகிறது
விவசாயம்

(4)

✍️செ.இராசா

21/07/2020

அறமில்லார் கையில் அணுஞானம் சென்றால்
குறைசொல்லி வீசுவர் குண்டு

✍️

20/07/2020

#தலைப்பு_பண்பிலார்............வள்ளுவர்_திங்கள்_120


#இலக்கியச்_சான்றுகள்_மூன்று

பண்பில்லா கௌரவர்கள் பாரதப்போர் கொண்டுவந்து
மண்ணிற்குள் போனார் மறைந்து
(1)

பண்பில்லா சூர்ப்பனகை பாசாங்கு செய்ததினால்
அண்ணனும் சாய்ந்தார் அறி
(2)

பண்பில்லா கோவலர்கள் பாடியாடச் சென்றதினால்
கண்ணகியர் பட்டகதைக் காண்
(3)

#நடைமுறைச்_சான்றுகள்_மூன்று
#கேள்விகள்

பண்பில்லா காவலர்கள் பாதகங்கள் செய்வதற்குக்
கண்ணீர்தான் சிந்தணுமா சொல்
(4)

பண்பில்லா காமுகர்கள் பைத்தியமாய்ப் பாய்வதற்குச்
செந்நீர்தான் சிந்தணுமா சொல்
(5)

பண்பில்லா ஆட்சியர்கள் பல்லிழிப்பைப் பார்ப்பதற்கா
உண்மையிலே ஊடகங்கள் சொல்
(6)

#தீர்வுகள்_மூன்று

பண்பில்லா மூடர் பதவியில் ஆடினால்
தண்டிக்க தண்டம் எடு
(7)

பண்பில்லா ஈனர் பணியில் உறங்கினால்
கண்டிப்பாய் நீக்கி விடு
(8)

பண்பில்லா வீணர் பலிபாவம் செய்திட்டால்
வன்பொருளை வெட்டி விடு
(9)

#வள்ளுவம்_ஒன்று

பண்பில்லா கீழோர்கள் பார்வைக்கு மேலிருந்தும்
பண்புள்ள மேலோரா கார்!
(10)

✍️செ.இராசா

#தலைப்பு_பண்பிலார்
#வள்ளுவர்_திங்கள்_120

குறள் 973:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

18/07/2020

காலமும் நேரமும் கைவசம் ஆகுமெனில்
ஞாலமே நம்வசம் நம்பு

என் மகள் அணு (வகுப்பு 3) வரைந்த ஓவியம்

ஓவியமாய் வந்தமகள் ஓவியம் செய்கின்றாள்
பாவிநான் செய்ததவம் பார்

✍️செ.இராசா







17/07/2020

முட்டியைப் பேர்த்தே முடக்கிட வேண்டும்



முட்டியைப் பேர்த்தே முடக்கிட வேண்டும்
சட்டையைக் கழட்டி சவுக்கடி தரணும்
பாதம் இரண்டில் பழுக்கவே காய்ச்சி
சேதம் செய்தே சிதைத்திட வேண்டும்

பொய்மை பேசும் போக்கிரி வாயை
கையில் வேலால் காயம் தரணும்
வரவர விட்டால் வருவார் பலரும்
வருவோர் யார்க்கும் தரணும் தரணும்

இதுபோல் வருகிற ஈனர் யார்க்கும்
அதுபோல் அவர்க்கும் அஃதே தருக
பொறுப்பிலா மூடர்கள் புறத்தைப் பொத்த
கறுப்பர் கூட்டத்தின் வாயில் தருக

கட கட கட கட கடகட கட வென
நற நற நற நற நற நற நற வென
தர தர தர தர தர தர தர வென
வெளு வெளு வெளுவென வெளுத்திட வருக

✍️செ.இராசா

அடியே மோட்டா சோறு



அடியே மோட்டா சோறு
ஆடி வந்தது பாரு
இடியா எண்ணங்கள் நூறு
ஏனோ தோனுது கேளு

வா...என் வண்ணக்கிளி நீ
என் கண்ணுக்குள்ள தீ
ஒளி ஏற்று ஏற்று..
நீ.‌....என் நெஞ்சுக்குள்ள தேர்
உயிர் சுண்டவைக்கும் தேன்
எனில் ஊற்று ஊற்று..

✍️செ. இராசா

Ehteraz

ஆரம்பத்தில் நானும் தப்பாதாங்க நினைச்சேன்...‌.

என்னடா உலகமே கொரானாவ கட்டுப்படுத்த இவ்வளவு போராடுறாங்க இந்த இராஜா என்னன்னா இப்படி செய்றாரேன்னு..

ஆமாங்க இங்க எங்க கத்தார் அரசர் முழு Lockdown போடலீங்க. ஆனால் வேறு மாதிரியாக யோசித்தார்.

1. எங்க இருந்து அதிகமாக Report வருதோ அந்தப் பகுதிய மட்டும் தடை செய்தார் ‌

2. Ehteraz அப்படின்னு ஒரு App introduce செய்தார்.

3. அதில் பச்சை மஞ்சள் சிவப்பு மூன்று நிறங்கள் வரும்.

4. அதில் பச்சை வந்தால் தான் அனைத்து கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் போக முடியும். நிறுவனத்தின் MD ஆனாலும் அதாங்க விதி.

5. இப்ப பாருங்க.... உலகின் இறப்பு விகிதம் மிக மிக மிகக் குறைவாக உள்ள நாடுகளில் கத்தாரும் ஒன்று‌ .

6. அதுமட்டுமல்ல.... வேகமாக கட்டுப்படுத்திய நாடுகளில் கத்தாரும் ஒன்று‌.

மன்னாதி மன்னா உமக்கு மனமார்ந்த நன்றி

மக்களே அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

Please.....
உண்மையின் தன்மையை உள்ளுணர்வு சொல்லும்கால்
நன்மைகள் ஆயிரம் நம்பு✍️

இந்து மதம் என்றால் என்ன?




இந்து மதம் என்பது நமக்குப் பிறர் வைத்த பெயரே தம்பி

இந்தியாவில் ஆறு சமயங்களை இணைத்தபோது இப்படி ஆனது.

சைவம்-சிவனை வழிபட்டார்கள்
வைஷ்ணவம்-கிருஷ்ணன்
கௌமாரம்-முருகன்.
கணபதியம்-கணபதி
சௌரம்-சூரியன்
சாக்தம்-காளி....

இப்படி..... தனித்தனியாக இருந்தாலும். எல்லாமே ஒரே மாதிரி ஒன்றுக்கொன்று பிணைந்தும் அல்லது பிணைக்கப்பட்டும் இருந்தது.

இதுபோக..

சிறுதேவதை வழிபாடு
கொற்றவை போன்ற காளி வழிபாடு
ஐயனார் கருப்பர் போன்ற முன்னோர் வழிபாடு

இப்படி ..... தனக்கு மேல் உள்ள சக்தியை உருவமாகவும்,

உருவமே இல்லாமல் சிதம்பர
ரகசியம் என்று சொல்லப்படும் அருவமாகவும்

லிங்க வடிவில் அருவம் உருவம் கலந்த அருஉருவமாகவும் வணங்கபட்டு பல பல ....... வடிவங்களில் அல்லது வழிகளில் ஆனால் ஒரே பரம்பொருளையே வணங்கினோம் நாம்.

பின்னர் சமணம் பௌத்தம் என்று உருவாகி இந்தியாவெங்கும் பரவிய போது ஆதிசங்கரர் தோன்றி வாதம் செய்தார். அப்போது அனைத்து மதங்களையும் இணைத்தார் அல்லது அதுவாகவே இணைந்தது.

அவரின் #இடைச்செருகல் பற்றிய கேள்விக்கான விளக்கம்;

தங்களின் கேள்விக்கு வருவோம்

நாம் காணும் பல பாடல்கள்,சங்க இலக்கியங்கள், காவியங்கள் .....என அனைத்தும் ஓலைச்சுவடிகளில் நைந்து போன நிலையில் கிடைத்து அதைப் பல பிரதிகள் எடுத்து.....பல கைகள் மாறிய பின்னரே கிடைத்துள்ளது. அதில் பல வார்த்தைகள் தெரியாமல் இருந்தததால் பிரதி எடுத்தவர்கள் தானாக இட்டும் நிரப்பி உள்ளார்கள். சிலர் தானாக சில பாடல்களை சொருகியதாகவும் எல்லா இலக்கியங்களிலும் சொல்லப்படுவது உண்டு.

எது எப்படியோ....நாம் எல்லாவற்றிலும் உள்ள நல்லவைகளை எடுத்து அல்லவைகளை விடுவோமாக....

✍️செ.இராசா.

#அவரின்_பதில்

அண்ணா நான் குழம்பிய நிலையில் இருந்து விடிவு பெற்றுவிட்டேன் . இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றினை மிக எளிமையாய் புரிய வைத்தமைக்கு மிகுந்த நன்றி அண்ணா.

அந்தத் தம்பி வேறு யாருமில்லை. மணல் கடிகாரம் என்ற நூலின் ஆசிரியர் பனிப்பூக்கள் பார்த்திபன் தான் ‌

நன்றி தம்பி!!!
— with பனிப்பூக்கள் பார்த்திபன்.

16/07/2020

ஆதி பகவன் வேலவன்டா


கந்தனைப் பேசும் கயவர்கள் கூட்டத்தால்
சிந்தைக்குள் வந்தது தீ
#குறள்_வெண்பா

 

தத்துவம் காணாத தற்குறிகள் யாவருக்கும்
தத்துவம் போற்றுகிற சத்தியத்தை போதிக்க
தத்துவ நாயகனே! சத்திய புத்திரனே!
வித்தகம் காட்டவெடு வேல்!
#ஒரு_விகற்ப_இன்னிசை_வெண்பா

#பாடல்
#மெட்டு_ஆடி_அடங்கும்_வாழ்க்கையடா

ஆதி பகவன் வேலவன்டா
ஆறு முகமே சாமியடா!

முந்தைக்கு முந்தைய மூத்தவன்டா- அவன்
உந்தைக்கும் முந்தைய தந்தையடா!

பெரியார் பேசினால் நாத்திகம்டா
பெரியவாள் பேசினால் ஆத்திகம்டா
நாயேநீ பேசினால் நாத் தீயும்டா
நான்இனி பேசினால் .....த்......ஓடிடுடா

✍️செ.இராசா

15/07/2020

பாத்திரம் அறிந்து பிச்சை போடு..
அறிவுநிலை அறிந்து அறிவூட்டு...

14/07/2020

கானா---- லிப்ஸ்டிக் எல்லாம் எதுக்குமா ..... லிப்ஸக் கடிச்சிக்கோ



#கானா
#சூழலுக்காக_எழுதியது


லிப்ஸ்டிக் எல்லாம் எதுக்குமா
..... லிப்ஸக் கடிச்சிக்கோ
லெக்கின்ஸ் எல்லாம் பழசுமா
......லெக்கில குந்திக்கோ
கடிச்ச முறுக்கு பிடிச்சாக்கா
.....இறுக்கிக் கடிச்சுக்கோ
பிடிச்ச பிடியில் ஃபயரு பத்தும்
.....ஸபீடாப் பிடிச்சுக்கோ

உனக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாம்
.....உங்க நைனா சொன்னால் உனக்கு என்ன இத்தன வருத்தமா....
பஞ்சும் நெருப்பும் பத்த மறுக்குமா
....வச்சா பதறித் தெரிக்கும் டீசர் ஒன்னு நச்சுன்னு விடுவமா

மெரீனா பீச்சே கதிகலங்கும் நம்ம கடலை போட்டாம்மா
எலியட் பீச்சே எரிஞ்சுவிழும் நம்ம ரவுசு விட்டாம்மா

மீட்டர் போட்ட ஆட்டோபோல ஆட்டம் போட்டு வாயேன்மா
கோட்டர் போட்ட சேவலாட்டம் சேட்டை காட்ட போறென்மா

பீட்டர் விட்டு ஃபிலிமு காட்டி போட மாட்டேன் சீனுமா
பாட்டுப் பாடி கூத்தடிக்க டிக்கு டாக்கு வேணுமா

(வீட்டு குள்ள ஏத்தி டலாம் வத்திப் பொட்டி தாரேன்மா)

✍️செ.இராசா

தொட்டா முறைக்கிற
விட்டா வெடிக்கிற
பட்டாப் பிடிக்கிற தீயா நீ

சுட்டா அணைக்கிற
சொட்டா வடிக்கிற
பட்டா நனைக்கிற நீரா நான்

உட்டா கலக்கலாம்
கெட்டா மறக்கலாம்
சிட்டாப் பறக்கலாம் வா வா

13/07/2020

பாரம்பரிய தாய விளையாட்டை.....




இந்தக் கொரானா காலத்தில் பிள்ளைகள் வெளியே போய் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இதில் அவர்களும் என்னென்ன விளையாட்டுகள் தான் விளையாடுவார்கள். இப்படி ஒரு முறை நான் தமிழ்ச்சோலை உறவுகளுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் நம் பாரம்பரிய தாய விளையாட்டைப் பரிந்துரைத்தார்கள். இதை என் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க அவர்களின் வழியிலேயே YOU TUBE காணொளி காண்பித்தேன். அதற்கு பகடையும் பலகையும் வேண்டுமே?. என் பையன் அதையும் அவனாக YOU TUBEல் பார்த்து உடனேயே செய்து விட்டான். பிறகு என்ன விளையாடியும் விட்டோம்.

நாமெல்லாம் இந்தத் தாயத்தை அம்மா அத்தை விளையாடும்போது பார்த்தோம். பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நாமும் விளையாடக் கற்றுக்கொண்டோம். இப்போது உள்ள பிள்ளைகளின் வேகமும் சீக்கிரம் கற்றுக் கொள்ளும் சாதுர்யமும் உண்மையில் வியக்க வைக்கிறது.
3 * 3, 4 * 4 cubes எல்லாம் விளையாடுகிறார்கள். நமக்குப் புரியவே மாட்டேன்கிறது. ஏன் இப்படி உறவுகளே....ஒரு வேளை நமக்கு வயசாயிடுச்சோ?!

✍️செ. இராசா

11/07/2020

தமிழ் அமுது


இன்று என் மகளின் மூன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தைப் புரட்டினேன். என்ன ஆச்சரியம்?! முதல் பாடலாய் கவியரசர் எழுதிய "தமிழ் அமுது" என்ற பாடல் இருந்தது. எவ்வளவு எளிமையான எழிலான பாடல். ஆகா‌‌...ஆகா... அனைத்து வரிகளும் அழகோ அழகு.

கவியரசரின் பாடல்களை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியவர்களும் உண்டு இன்னும் வாங்குபவர்களும் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனால், சிறுவர்களும் அவரின் கவிதைகளைப் பாடமாகப் படிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நல்ல நோக்கத்தை அறிந்த போது உண்மையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் நோக்கிலேயே இப்பதிவை எழுத நினைத்தேன்.

ஒருகாலத்தில் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்திற்கு அதன் குறைகளைக் கவியரசர் சுட்டிக்காட்டினாராம். அதாவது கொன்றை வேந்தனில்... "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற வரிகளுக்குப் பிறகு வரும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற வரிகளை நீக்கிவிட்டார்களாம்‌. காரணம் திமுகவின் கொள்கையில் ஆலயம் போவது தவறு என்ற கொள்கை இருந்ததால் ஔவையார் வரிகளையே நீக்கி விட்டார்கள். (தமிழ்த்தாய் வாழ்த்தில் கைவைத்தது போலவே) அதை வன்மையாகக் கண்டித்து நீதிக்காகப் போராடினார் நம் கவியரசர். இன்று அதே தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் அவரின் பாடலையே முதற்பாடலாக வைத்தது வரலாற்றுச் சாதனை அல்லவா?!!

✍️செ.இராசா


பொதுவாக நம் பதிவுகள் பிறரால் விரும்பப்படுமாயின் நாம் மகிழ்ச்சி அடைவோம். அதுவே அப்பதிவு பிறருக்கும் சேரட்டும் என்ற நோக்கத்தில் பகிரப்படுமாயின் மேலும் பெருமகிழ்ச்சி அடைவோம்‌. அப்படிப் பகிர்பவர்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமான ஆளுமையாக இருந்தால்....... ஆகா ஆகா சொல்லவே வேண்டாம்.
ஆமாங்க.... நம்ம பதிவைத் திரு. காந்தி கண்ணதாசன் ஐயா பகிர்ந்துள்ளார்கள் என்பதை நான் பெருமையாக மட்டும் அல்ல கவிக்கடவுளின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.
மனமார்ந்த நன்றி ஐயா



✍️செ. இராசா

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன பாம்புக்கதை




பல்லில்லை என்றறிந்தால் பாம்பென்றும் பாராமல்
தொல்லை பலதந்து தொந்தரவு செய்வார்கள்
உண்மையைச் சொல்லாமல் உஸ்ஸென்று சீறியே
நன்மையைச் செய்தால் நலம்

✍️செ. இராசா

#கரு_ஸ்ரீராமகிருஷ்ணர்_சொன்ன_பாம்புக்கதை

உலகில் வாழ நேரும்போது, தீயவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள சிறிது தமோ குணத்தைக் காட்டுவது அவசியம்தான். ஆனால் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.

‘சில சிறுவர்கள் புல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே கொடிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. பாம்பிடம் உள்ள பயத்தால் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒருநாள் பிரம்மச்சாரி ஒருவர் அந்தப் புல்வெளி வழியாகச் சென்றார். மாடு மேய்க்கும் பிள்ளைகள் அவரிடம் ஓடிச் சென்று, சுவாமி, அந்த வழியாகப் போகாதீர்கள். அந்தப் பக்கம் ஒரு கொடிய விஷப் பாம்பு இருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு அந்த பிரம்மச்சாரி, பிள்ளைகளே, அது இருந்துவிட்டுப் போகட்டும், அதனிடம் எனக்குப் பயமில்லை. எனக்கு மந்திரம் தெரியும்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்கலானார். பயத்தினால், அந்தச் சிறுவர்கள் யாரும் அவருடன் செல்லவில்லை. யாரோ வருவதைக் கண்ட பாம்பு படமெடுத்தபடி சீறிக்கொண்டு வேகமாக ஓடி வந்தது. பிரம்மச்சாரியை நெருங்கியதும் அவர் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அவ்வளவுதான், சீறிவந்த பாம்பு மண்புழுவைப்போல் அவரது காலடியில் வீழ்ந்தது.

‘பிரம்மச்சாரி அதைப் பார்த்து, நீ ஏன் இப்படி மனிதர்களைத் துன்புறுத்திக்கொண்டு திரிகிறாய்? வா, உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன். இந்த மந்திரத்தை நீ ஜபம் செய்தால் பகவானிடம் உனக்கு பக்தி ஏற்படும். நீ அவரைப் பெறுவாய், பிறருக்குத் தீங்கு செய்யும் இந்தத் தன்மை போய்விடும்” என்று சொல்லி அந்தப் பாம்பிற்கு மந்திரத்தை உபதேசம் செய்தார். மந்திர உபதேசம் பெற்ற பாம்பு குருவை வணங்கி, குருநாதா, நான் எவ்வாறு சாதனை செய்ய வேண்டும்?” என்று கேட்டது. அதற்கு குரு, இந்த மந்திரத்தை ஜபம் செய். யாருக்கும் தீங்கு செய்யாதே” என்று சொன்னார். பிறகு புறப்படும்போது, நான் மறுபடியும் வந்து உன்னைப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

‘சில நாட்கள் கழிந்தன. அந்தப் பாம்பு யாரையும் கடிக்க வருவதில்லை என்பதைச் சிறுவர்கள் கண்டுகொண்டனர். கல்லெறிந்தாலும் அது ஒன்றும் செய்யவில்லை, மண்புழுவைப்போல் கிடந்தது. ஒருநாள் சிறுவன் ஒருவன் அதன் வாலைப் பிடித்து தூக்கிச் சுழற்றி தரையில் அடித்தான். அதன் வாயிலிருந்து ரத்தம் பீறிட்டது, சுரணையற்று வீழ்ந்தது. அதனிடம் அசைவோ நெளிவோ இல்லை. எனவே அது இறந்துவிட்டது என்று எண்ணி சிறுவர்கள் போய்விட்டனர்.

‘இரவு வெகுநேரம் சென்ற பிறகு பாம்பிற்கு உணர்வு வந்தது. மிகுந்த சிரமத்துடன் மெல்லமெல்ல நகர்ந்து அது தன் வளைக்குள் சென்றது. அதன் உடம்பெல்லாம் சின்னாபின்னமாகிவிட்டது, அசையக்கூட அதனிடம் தெம்பில்லை. நாட்கள் கடந்தன. அது எலும்பும் தோலுமாக ஆகிவிட்டது. பயம் காரணமாக இரை தேடிக்கூட பகல்வேளையில் வெளியே வருவதில்லை. எப்போதாவது இரவுவேளையில் மட்டும் வெளியே வந்தது. மந்திர உபதேசம் பெற்றதிலிருந்து அது யாரையும் துன்புறுத்துவதில்லை. மண், இலை, உதிர்ந்த பழங்கள் இவற்றைத் தின்று உயிர் வாழ்ந்தது.

‘இப்படி ஏறக்குறைய ஓர் ஆண்டு கழிந்தது. பிரம்மச்சாரி அந்த வழியாக மறுபடியும் வந்தார். வந்ததும் பாம்பைப்பற்றி விசாரித்தார்.
‘அந்தப் பாம்பு இறந்துவிட்டதாகச் சிறுவர்கள் சொன்னார்கள். பிரம்மச்சாரி அதை நம்பவில்லை. தான் உபதேசித்த மந்திரத்தின் பலனை அடையாமல் பாம்பு இறந்திருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். எனவே இங்கும் அங்கும் தேடியபடி தான் கொடுத்த பெயரைச் சொல்லி அழைத்தார். குருவின் குரலைக் கேட்ட பாம்பு வளையிலிருந்து வெளியே வந்து அவரை மிகுந்த பக்தியோடு வணங்கியது. என்னப்பா, எப்படி இருக்கிறாய்?” என்று பிரம்மச்சாரி விசாரித்தார். சுவாமி, சௌக்கியமாக இருக்கிறேன்” என்றது பாம்பு. ஆனால் ஏன் இவ்வளவு மெலிந்திருக்கிறாய்?” என்று கேட்டார். பிரம்மச்சாரி, குருவே, யாருக்கும் தீங்கு செய்யாதே என்று தாங்கள் எனக்குக் கட்டளையிட்டிருந்தீர்கள். அதன்படி இலைகளையும் பழங்களையும் தின்று வாழ்ந்து வருவதால் மெலிந்துவிட்டேன் போலும்” என்று பாம்பு கூறியது.
‘அந்தப் பாம்பிற்கு சத்வ குணம் அதிகரித்திருந்ததால் அதற்கு யாரிடமும் கோபம் இல்லை. சிறுவர்கள் தன்னைக் கொல்ல முயன்றதைக்கூட அது மறந்துவிட்டது. சரியாக சாப்பிடாததால் மட்டுமே உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க முடியாது. கண்டிப்பாக வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். சற்று யோசித்துப் பார்” என்று பிரம்மச்சாரி கூறினார். சிறுவர்கள் தன்னைத் தரையில் அடித்தது அப்போதுதான் பாம்பின் நினைவிற்கு வந்தது. குருநாதா, இப்போது என் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் இந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் என்னைத் தரையில் சுழற்றி அடித்தார்கள். அவர்கள் அறியா சிறுவர்கள். என் மனநிலை அவர்களுக்குத் தெரியாது. நான் யாரையும் கடிப்பதில்லை, யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று பாம்பு சொல்லிற்று. இதைக் கேட்டதும் அந்த பிரம்மச்சாரி, சீச்சீ, நீ இவ்வளவு முட்டாளா? உன்னைக் காப்பாற்றிக் கொள்ள உனக்குத் தெரியாமல் போய்விட்டதே! மற்றவர்களைக் கடிக்காதே என்று சொன்னேனே தவிர, சீறாதே என்று சொல்லவில்லையே. சீறி அவர்களை ஏன் பயமுறுத்தவில்லை?” என்றார்.
‘தீயவர்களிடம் சீற வேண்டும். அவர்கள் நமக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதற்காக அவர்களைப் பயமுறுத்த வேண்டும். ஆனால் அவர்கள்மீது ஒருநாளும் விஷத்தைச் செலுத்திவிடக் கூடாது, தீமை செய்யக் கூடாது.

இருளை விலக்கும்



இருளை விலக்கும் எரியும் விளக்காய்
குருவின் விளக்கம் குறையை விலக்கி
அருளால் பெருகும் அகத்தின் சுடரால்
விரைவாய்க் கழியும் வினை

✍️செ.இராசா

10/07/2020

இசைக்கடவுள்



#இசைக்கடவுள்

எங்கே தொடங்குவேன்..
எங்கே முடிப்பேன்.
எல்லையில்லா இறைவனுக்கு
எல்லைகட்ட முடியுமா?
வானளவுக் கலைஞனுக்கு
வார்த்தை கட்ட முடியுமா?!
இருப்பினும் ஆசையுடன்
ஏற்றுகிறேன் ஓர் கவிதை...
ஏதேனும் பிழை இருப்பின்
எளியோனை பொறுத்தருள்வீர்!

இருபதாம் நூற்றாண்டின்
இரண்டாம் ஜூன் 43ல்
இராமசாமி சின்னத்தாயின்
இரண்டாம் பிள்ளையாய்
இசைவால் கருவாகி
இசையாய் உருவாகி
பண்ணைபுரம் எனும் ஊரில்
பண்ஞானி பிறக்கின்றார்!

அன்றைக்கே இராசையா
அன்னையின் கிளியானார்!
அன்னக்கிளி வந்தபின்னோ
அகிலத்தின் கிளியானார்!
ஆனால்...அற்பருக்கோ
அண்ணார் கிலியானார்!!

எத்தனையோ மேடைகளில்
எத்தனையோ கச்சேரிகளில்
கோலோச்சிய இராசையா
கோத்த முதல் இசைகானம்;
கண்ணதாசர் வரிகளிலே
கண்ணீர் பூ சாற்றியது!
அன்று முதல் இன்றுவரை
ஆத்மாவையே ஆட்டுகிறது!

இயல்புப்பா என்று சொல்லி
இந்துஸ்தானிப்பா பாடி
அப்பப்பா கொடுமை செய்த
அப்போதைய திரை இசையை
வண்ணப்பா மாறாமல்
சிந்துப்பா சிதையாமல்
சந்தப்பா எழிலோடு
சொந்தப்பா பல தந்து
இசைப்பா புரட்சியினால்
இனிப்பாய் படைத்திட்ட
இசைஞான தேசிகனார்
இசைஞானி என்றானார்!

கீபோர்டு கற்றுவிட்டால்
கூப்பாடு போடுகின்றார்!
ஒரு படம் செய்து விட்டால்
கர்த்தாபோல் கதைக்கின்றார்!
இவர்களின் மத்தியிலே
இளையராஜா இருந்தாலும்
அனைத்துக் கருவியையும்
அவரிசைக்க வைக்கின்றார்!

ஏழாயிரம் பாடல்களில்
ஏதேதோ செய்துவிட்டு
சிம்பொனி சிகரத்தில்
சித்தாந்தம் செப்புகின்றார்!

கருநாடகம் என்போர்க்கு
பஞ்சமுகி செய்துவிட்டு
ராப்பென்று குதிப்போர்க்கு
பாப்பாகி நிற்கின்றோர்!

ஏ ஆர் ரகுமானை
ஏணியாய் ஏற்றிவிட்டு
தானும் யாரென்று
தரணிக்கேக் காட்டுகின்றார்!

இறுதியாய்ச் சொல்கின்றேன்
உறுதியாய்ச் சொல்கின்றேன்
இசையென்றால் யாதென்றால்
என்றைக்கும் ஒருவர்தான்!
அவரெங்கள் இராசையா
அவரின்றி யாரையா?!!

✍️செ.இராசா

09/07/2020

பாம்பும் உறவாக




பாம்பும் உறவாக பக்கத்தில் ஓடிவர
வேம்பும் இனிப்பாக வெண்பாவாய் தித்திக்க
நாம்மாற வேண்டுமதை நம்பு

✍️செ.இராசா

08/07/2020

அருவி



கீழே விழுந்தாலும்
வாழ வைக்கிறது
அருவி
(1)

புகை வந்தாலும்
கனல் இல்லை
அருவியில்
(2)

தரையில் விழுந்து
தாளம் போடுகிறது
அருவி
(3)

✍️செ.இராசா

கறிக்கொழம்பே






#மரிக்கொழுந்தே_மெட்டு

#கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே
கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே....ஓ
நானும் உன்னை உறிஞ்சிடவா சொல்லு சொல்லு
அப்படியே குடிச்சிடவா சொல்லு சொல்லு
கறிக்கொழம்பே ஏய் கறிக்கொழம்பே
கறிக்கொழம்பே

அப்பெல்லாம் எங்கவூரில் அத்தை மாமா வாரயிலே
அப்ப ஒரு நாட்டுக் கோழி குழம்பாக்கத் தேடயிலே
கட்டி போட்ட பொட்டக் கோழி சட்டிக்குள்ள வேகையிலே
எட்டுவூரத் தாண்டி மணம் அங்கே இங்கே
போகையிலே
உன் நினைப்பு மனச தூண்டிடுமே
உன்ருசிக்கு உசுரு ஏங்கிடுமே...
உன்ருசிக்கு உசுரு ஏங்கிடுமே...

கறிக்கொழம்பே........

✍️செ.இராசா

(என் மனைவி சமைத்த நாட்டுக்கோழி குழம்பிற்காக இப்பாடல்....
பக்கத்தில காடையும்.......😊😊😊😊😀😀
வாங்க சாப்பிடலாம்)