26/05/2022

கொடுஞ்சொல் வேண்டாம் ---- குறள் வெண்பாக்கள்

  


 

#கொடுஞ்சொல்_வேண்டாம்
#குறள்_வெண்பாக்கள்

சொல்லவும் கூசுகின்ற சொற்களைக் கூறுபவர்
நல்லவரே இல்லை நகர்
(1)

கொல்லும்சொல் கூறிவிட்டு குற்றமென்ன இஃதென்போர்
சொல்லும்சொல் யாவும் சுடும்
(2)

தீஞ்சொல் உதிர்த்துத் திமிராய்த் திரிபவர்மேல்
வாஞ்சை அடைந்தால் வலி
(3)

பெருமை உடையவர்கள் பேசுகின்ற பேச்சில்
எருமைக்கும் இல்லை இடம்
(4)

பொல்லாசொல் சொல்லிப் புறமுதுகில் குத்துபவர்
நல்லோர்போல் தோன்றும் நரி
(5)

வசைபாடி எப்போதும் வைகின்ற வாயில்
அசைபோட வேண்டும் அவல்(ள்)
(6)

அவச்சொற்கள் பேசிட அஞ்சாத வாயில்
சிவச்சொல்லால் இல்லை பயன்
(7)

குறைகளைச் சொல்லியே கும்பி நிறைப்போர்
நிறைகளைக் காணார் விடு
(8)

சொந்தமும் பந்தமும் சுற்றமும் எல்லாமும்
நிந்திப்போர்க் கென்றும் நிழல்
(9)

நல்ல உணவோடு நஞ்சிருந்தால் என்னாகும்?
அல்லசொல்லும் அப்படித்தான் அங்கு!
(10)

✍️செ. இராசா

No comments: