10/05/2022

தீ வெண்பாக்கள்

  


#தீ_வெண்பாக்கள்

மக்களின் சாபத்தில் மன்னர்கள் வீழ்கையில்
உக்கிரமாய் மாறும் உணர்வு!
(1)

கண்ணகிகள் விட்டகண்ணீர் கானலில்லை என்பதனை
கண்டதின்று வையகமே காண்!
(2)

பக்சேக்கள் செய்தபலி பாவங்கள் அத்தனைக்கும்
தக்கதொரு தீர்வுதான் சாவு!
(3)

மந்திர மாந்த்ரீக மாயைகள் எல்லாமும்
சொந்தவினை போக்கிடுமா சொல்?
(4)

புத்தரின் பல்காக்கும் புண்ணிய பூமியில்
புத்தன்சொல் காத்தனரா சொல்?
(5)

அகிம்சை வழிசென்றோர் ஆயுதத்தைத் தூக்க
வகுத்தோர் எவரென்று சொல்?
(6)

இனத்திற்குள் ஒற்றுமை இல்லாமல் செய்து
தனக்கென வாழ்ந்தவர்யார் சொல்?
(7)

வெற்றியெனச் சொல்லி வெறிகொண்டு கொக்கரித்தாய்...
பற்றி எரியுது பார்!
(8)

அறமின்றி ஆடும் அனைவருக்கும் பாடம்
இறக்கும்முன் செய்வான் இறை!
(9)

பிரித்தாளும் சூழ்ச்சியால் பேயரசு செய்தால்
எரிமூட்டிக் கொல்வான் எமன்!
(10)

✍️செ. இராசா

No comments: