07/05/2022

இலக்கியம் ஆய்வோம் – 8 (பெரிய புராணம்)

 

(கோப நாயன்மார்களில் மீதமுள்ள ஐந்துபேரை இப்பதிவில் காண்போம்)



5.5 #கோட்புலி_நாயனார்

ஒருமுறை இவர் வெளியில் சென்றிருந்த சமயத்தில், ஊரில் பஞ்சம் நிலவிய வேளையில், சிவ பூஜைக்காக வைத்திருந்த நெல் களஞ்சியத்தை உடைத்து, அங்குள்ளோர் உண்ட குற்றத்திற்காக குழந்தை உட்பட சுற்றத்தார் அனைவரையும் கொன்று குவித்துள்ளார். (படிக்கும்போதே நடுக்கம் வருதா?!)
கூடுதல் தகவலாக....இவர் தன் இரு மகள்களையும் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக சேவைப்பணிக்காக அற்பணித்தவர் என்னும் தகவலும் உள்ளது. (அதென்ன சேவையோ?)

5.6 #சண்டேசுவர_நாயனார்

நாம் சிறுவயதில் மணலைக் குவித்து கோவில் கட்டி விளையாடுவோம் அல்லவா? அதேபோல் இவரும் பூசை செய்து வழிபடும்போது, அருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் பாலைக் கறந்து தினமும் அபிசேகம் செய்துள்ளார். மாட்டுக்காரர்போய் சண்டேசுவரரின் தந்தையிடம் கூறியுள்ளார். தந்தையார் ஓடிவந்து அனைத்தையும் காலால் தட்டிவிடவே, கோபம் கொண்ட சண்டேசுவரர் தந்தையின் காலை வெட்டியுள்ளார்.

கூடுதல் தகவல் என்னவென்றால் இவரின் மேல் பிரியம் கொண்ட சிவபெருமான் தன் அருகிலேயே ஆலயத்தில் பிரகாரத்தில் வைத்துக்கொண்டாராம். (நாம் மூன்றுமுறை கைதட்டி கும்பிடுவோமே....ஆங்... அவரேதான். ஆமாம் இவருக்கு மட்டும் ஏன் சிறப்பு இடமென்று உங்களுக்குத் தோன்றலாம். இத்தனை கோப நாயன்மார்களில் இவர் மட்டுமே அந்தணர் என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். )

5.7. #சக்தி_நாயனார்

சிவனடியாரையும் யாரேனும் இகழ்ந்துரைத்தால் வேறொன்றும் செய்ய மாட்டார், அவர்களின் நாக்கை அறுத்துவிடுவார். அவ்வளவுதான்...

5.8. #சிறுதொண்டர்..
(இவர் தாங்க....என்னை இப்பதிவே எழுதத் தூண்டியவர்) தலைவர் என்ன கேட்டார் தெரியுமா?. ஐந்து வயதிற்கு கீழுள்ள பிள்ளையை, அம்மா மனதார சம்மதிக்க, அப்பா மகிழ்வோடு கழுத்தை அறுத்து, கறி சமைத்துத் தரவேண்டுமென்று கேட்டுள்ளார். சிறுதொண்டரும் அப்படியே தன் மகனை அறுத்து சமைத்துக் கொடுத்தால், இவர் "உன் மகனைக் கூட்டிவா சேர்ந்து சாப்பிடலாம்" என்று கூறியுள்ளார். (சேட்டைதானே...?) தன் மகன்தான் கறியானான் என்று சொல்லவே அப்போது கடவுள் காட்சியளித்தாராம். இது எப்படி நடந்திருக்கும் என்று எண்ணினால் இதேபோல் ஒரு கதை இஸ்லாத்திலும் உள்ளதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்‌. எது எப்படியோ? இதையெல்லாம் கற்பனையில் கூட ஏற்க முடியவில்லை.

5.9. #இயற்பகை_நாயனார்.

ஒரு சிவனடியார்வந்து இவரின் மனைவியைக் கேட்டுள்ளார். இவரும் நீ போம்மா என்று கூற.... சுற்றத்தார் அனைவரும் இதை வன்மையாகக் கண்டித்துத் தடுத்துள்ளனர். தலைவர் அனைவரையும் கொன்று குவித்துள்ளார்.

(அடப்போங்கப்பா....ஒரே வன்முறையா இருக்கு. பேசாமல் தலைப்பை வன்முறை நாயன்மார்கள் என்று மாற்றியிருக்கலாம்போல.... தயவுகூர்ந்து யோசியுங்கள் மக்களே...அன்பே சிவமென்று சொன்ன திருமூலரும் நாயன்மார்.... இப்படி மூக்கையறுத்து, நாக்கையறுத்து, கையை வெட்டி, காலைவெட்டி, கொலைசெய்து கொன்று குவித்த இவர்களும் நாயன்மார்கள் என்றால் எப்படி....ஆய்வோம்)

No comments: