07/05/2022

இலக்கியம் ஆய்வோம் - 1 (பெரிய புராணம்)


இலக்கியங்களையோ மதத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் இப்பதிவு எழுதப்படவில்லை. நம் இலக்கியங்களில் உள்ள நல்ல பகுதியையும் குற்றமான சற்றே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பகுதியையும் சுட்டிக்காட்டுவது மட்டுமே எம் நோக்கம். இதைப்படித்த பிறகு அந்தக் குற்றமான பகுதிகள் தேவையா என்பதை மறுசீரமைப்பு செய்யவேண்டியது சான்றோரின் பொறுப்பு. இதில் உள்ள நிறைகளை அப்படியே பற்ற வேண்டியது அடியேன் விருப்பு.

எனக்கு சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்தமான எண் யாதென்றால் உடனே 63 என்பேன். காரணம் நான் எங்கே போனாலும் அந்த எண் இருப்பதைக் கவனித்தேன். அதாவது பள்ளியில் வரிசை எண், கல்லூரியில் அறை எண், இவ்வளவு ஏன் சிவகங்கை மாவட்ட வாகனங்களின் அடையாள எண்.........இப்படி வந்த 63ஐ கவனித்தேன். மேலும் கவனித்தபோது, எனக்கு மிகவும் பிடித்த சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு 1863, அவரின் குருநாதர் பிறந்த ஆண்டு 1836, நபிகள் வாழ்ந்த வருடங்கள் 63....இப்படி இன்னும் நீண்டது. அதேபோல் கோவிலில் கவனித்த இந்த 63 நாயன்மார்களின் மீதும் இயல்பாகவே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.


நானும் பலமுறை இந்தப் பெரிய புராணத்தைக் கதையாக வாசித்துள்ளேன். ஆனால், அது ஏதோ இடியாப்பச் சிக்கல்போல், என்னால் யார் யார் என்னென்ன சிறப்பு என்பதை எளிதாக வரிசைப்படுத்த முடியாமல் இருந்தது. பின்னர் ஒவ்வொருவரைப் பற்றியும் தெளிவாக எழுத ஆரம்பித்தபோது, நான் இப்படி கீழேயுள்ளதுபோல் வரிசைப்படுத்த முடிந்தது.


1. சிவார்ப்பண நாயன்மார்கள் (18)
2. சிவத்தொண்டு நாயன்மார்கள் (10)
3. சாகத் துணிந்த நாயன்மார்கள் (4)
4. சிறப்பு மிகுந்த நாயன்மார்கள் (7)
5. கோப நாயன்மார்கள் (9)
6. சிறப்பு குறைந்த நாயன்மார்கள் (6)
7. மற்ற நாயன்மார்கள் (9)


இந்த வரிசையமைப்பில் காணும்போது யார் யார் உண்மையில் வழிபடத்தக்கவர்கள். யார் யார் அப்படி இல்லாதவர்கள் என்பதைத் தெளிவாகக் காணலாம். அதற்கு முன்பாக பெரியபுராணம் பற்றிய சிறு குறிப்போடு ஒவ்வொரு நாயன்மார்களையும் யாம் அடுக்கிய வரிசையில் பார்ப்போம்.

No comments: