11/05/2022

ஆணியின் கேள்வி

 


அடிகள் பல வாங்கித்தான்
ஆழம்காண முடியுமென
தலையில் அடித்துச் சொல்லும்
எங்கள் பிரம்மாக்களே..
 
கூர்மையான காலிருந்தும்
குச்சியான மேலிருந்தும்
தலையில் அடிப்பதற்குத்
தலைக்கனம்தான் காரணமா?
 
 
எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.‌‌...
உங்கள் கடவுள்களைக் காலெண்டராக்கி
எங்கள்மேல் தொங்கவிடுவதால்...
 
ஆனாலும் வருத்தம்தான்
உங்கள் கடவுளைத் தொங்கவிட
எங்களையும் சிலுவையேற்றுவதால்....
 
ஆமாம்....
தெரியாமல்தான் கேட்கிறேன்
நீங்கள் வந்து குத்திக்கொண்டு
எங்களையேன் சொல்கின்றீர்
ஆணி குத்தியதென்று‌....
 
ஓ...நீங்கள் மனிதர்கள் அல்லவா?!
 
✍️செ. இராசா

No comments: