07/05/2022

இலக்கியம் ஆய்வோம் - 3 (பெரிய புராணம்)

 


1. #சிவார்ப்பண_நாயன்மார்கள்_18
சிவனை இப்படி இப்படித்தான் வணங்க வேண்டுமென்றுமில்லை. எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம் என்பதை நிரூபித்து அவனருள் பெற்றவர்களை சிவார்ப்பண நாயன்மார்கள் என்று இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன். அது என்ன சிவார்ப்பண நாயன்மார்கள் என்றால் சிவனுக்காக ஏதோ ஒரு வழியில் தன் பக்தியை அர்ப்பணம் செய்து வழிபட்டர்வர்களே. அவர்களைப்பற்றி இங்கே காண்போம்.

1.1. #சுந்தரமூர்த்தி_நாயனார்

பெரிய புராணத்தின் காவிய நாயகன் அல்லது மூல நாயகனாக சுந்தர முர்த்தி நாயனாரை முதலில் சொல்வதே சாலச்சிறந்தது என்பதால் அவரை முதலில் பார்ப்போம். பக்திப் பரவசத்தில் வாழ்ந்த 60 நாயன்மார்களை வைத்துப் பாடிய திருத்தொண்டத் தொகை என்னும் மூல நூலை எழுதிய நாயன்மாரே இவர். இவர் எழுதிய பக்திப் பதிகங்கள் பரவசமூட்டுபவை. இவரைச் சுற்றியே நிறைய நாயன்மார்கள் வருகின்றார்கள். (இவரின் திருமணம் சார்ந்த விடயத்தில் நிறைய குழப்பமான கதைகள் வருகின்றது என்பதால் அதைத் தவிர்க்கின்றேன்.)

1.2. #ஐயடிகள்_காடவர்_கோன்

வெண்பா எழுதியே இறைவனை அடைந்தவர். பல சிவ தலங்களுக்குச் சென்று சேத்திர வெண்பா படைத்துள்ளார். ஆக...இயல் தமிழாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் மூலம் திண்ணமாகிறது.

1.3. #திருஞானசம்பந்தர்

மூன்று வயதிலேயே பார்வதி தேவியிடம் ஞானப்பால் குடித்ததாக கதை உள்ளது. அது தெரியாது... ஆனால் அப்போதுமுதலே நிறைய பக்திப் பாடல்கள் பாடியுள்ளார் என்பது உண்மை. இவரும் சிவபக்தியை தமிழில் சமைத்து இறைவனை அடைந்தவராகிறார்.

1.4. #திருமூலர்
ஞான மார்க்கம் மூலமாக திருமந்திரம் என்னும் அற்புதமான நூலை வழங்கியவர். தமிழ் வழி போதிக்கவே மாடு மேய்க்கும் மூலன் என்னும் ஒருவன்மேல் கூடுவிட்டு கூடுபோன கதையும் உள்ளது.

1.5. #திருநாவுக்கரசர்
சமண மதத் தலைவராக இருந்த இவர், தன் தமைக்கயார் திலகவதியாரால் சிவபக்தராக மாறி "கூற்றாயினவாறு விலக்கலீர்" எனும் பாடைலைப் பாடி சூலை நோய் நீங்கப்பெற்றார். இவரும் தமிழ் வழி பக்தியால் மதமே மாறியவர். சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணி புரிந்ததால் "உழவாரத் தொண்டர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

1.6. #திருநீல_கண்ட_யாழ்ப்பாணர்
திருஞானசம்பந்தருடன் சேர்ந்து அவர் பாடும்போது இவர் யாழிசை வாசித்தவர்.
இவர் இசையாலேயே இறைவனை அடைந்தவர்.

1.7. #ஆனாய_நாயனார்
பசுக்களை மேயவிட்டு புல்லாங்குழலிலேயே நமசிவாய என்னும் பொருள் தரும் கீதமிசைத்து இவரும் இசையால் இறைவனை அடைந்தவர்.

1.8. #காரிகோவை_நாயனார்.
காரிகோவை என்னும் நூலேற்றி, அதையே இசைப்பாடலாய் எங்கும் பாடி, அதன்வழி வந்த பொருளால் பல கோவில்கள் கட்டியவர். சிவனடியார்களுக்கும் அள்ளியள்ளி வழங்கியவர். ஆக...இவர் இயல், இசை, தொண்டு என்று பல வழிகளில் இறைவனை அடைந்தவர்.

1.9. #புகழ்த்துணை_நாயனார்
பஞ்சம் வந்தபோதும் விடாமல் பூஜை செய்து தினமும் இரவில் அடியார்களுக்கு காசு வழங்கியவர்.

1.10 #உருத்திர_பசுபதி_நாயனார்
கழுத்தழுவு நீரில் நின்று சிவாயநம என்று ஜபம் செய்தே இறைவனை அடைந்தவர். (ஜபம் மூலம்)

1.11. #பூசலார்
மனதிற்குள்ளேயே கோவில் கட்டி வழிபட்டவர்.
(சைவத்தில் பக்தி, பூஜை பிரார்த்தனை மட்டுமல்ல உருவமில்லா ஞான மார்க்கமும் உண்டு)

1.12. #வாயிலார்_நாயனார்
இவரும் மனதிலேயே இறைவனைத் தொழுதவர். (ஞான மார்க்கம்)

1.13. #அதிபத்தர்
தான் பிடிக்கின்ற மீனில் ஒரு மீனை மீண்டும் கடலில் விட்டு சிவார்ப்பணம் செய்தவர். ஒரு நாள் கிடைத்த ஒரே மீனான பொன் மீனையும் கடலில் விட்டவர். (கர்ம யோக பக்தி)

1.14. #முருக_நாயனார்
தினமும் பல விதமான பூமாலைகள் கட்டி அர்ப்பணித்தவர். (பக்தி)

1.15. #மூர்த்தி_நாயனார்
தினமும் சிவபெருமானுக்கு பூச சந்தனம் வழங்கியவர். சமண அரசன் சந்தனம் கிடைக்காமல் செய்தபோதும் தமது முழங்கையைப் பாறையில் தேய்த்து பக்தியைக் காட்டியவர். (பக்தி)

1.16 #சாக்கியர்
இறைவனைக் கல்லை எறிந்தே வழிபட்டவர். (கல் அவருக்கு மனதில் மலர்போன்ற பொருளாக இருந்திருக்கும்‌. எல்லாம் இறைவன் தந்தததுதானே?!) (சித்த யோகம்)

1.17.#கோச்செங்கட்சோழன்
நிறைய சிவன் கோவில்கள் கட்டிய மன்னன்
(தொண்டு)

1.18. #பெருமிழலைக்_குறும்பர்
தன்னிடத்தில் இருந்துகொண்டே யோகக் காட்சியால் மறுநாள் சுந்தரமூர்த்தியாருக்கு சிவன் வழங்க இருக்கும் பேற்றினை உணர்ந்து இவரும் சென்றாராம். அந்த அளவிற்கு யோகஞானம் உள்ளவர். (ஞான மார்க்கம்)

முன்னரே கூறியபடி இறைவனை இப்படித்தான் வழிபட வேண்டுமென்றுமல்ல எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்பதை தெள்ளத்தெளிவாகக் காட்டுவதை இதன்மூலம் உணர்கின்றோம்.

(குறிப்பு: சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் தேவாரப் பாடல்களாக இடம்பெறுகிறது)

No comments: