29/06/2021

மேதகு

 


காலம்
தனக்கான தேவைகளைத்
தானே தீர்த்துக் கொள்கிறது!
சில சமயங்களில்...
தீர்த்தும் 'கொல்'கிறது!

'பிரச்சினை'
அண்டை வீட்டில் நடந்தாலும்
அண்டை நாட்டில் நடந்தாலும்
அதற்கென்ன இப்போ என்றிருந்தால்
அது புரிய வாய்ப்பில்லை...
அதை...
அந்நிய மனத்தோடு அல்லாமல்
அன்பின் அகத்தோடு அணுகினால்
அவர்களின் நியாயம்
அப்போது புரிய வாய்ப்பிருக்கிறது?

வரலாறு என்பதென்ன?
வரவும் செலவுமாய்
வந்துபோனோர் கணக்கா?!
இல்லை...
ஆள்வோர்கள் செய்திட்ட
அதி-கார அதிகாரங்கள் தானே?!

ஒரு காலத்தில் காலூன்றிய இனம்
மறு காலத்தில் சறுக்குவதும்
அந்நேரம் அந்நியர் மேலேறி
அடக்கிட முயல்வதும்
அங்கே கிளர்ச்சி எழுந்து
புரட்சி வெடிப்பதும்
வரலாற்றுச் சக்கரத்தில்
வாடிக்கையான நிகழ்வே..

அப்படி எழுந்த ஓர் இனத்தையும்
அதை எழுப்பிய ஓர் தலைவனையும்
படமாக்கிச் சொன்ன கதை இது
இல்லை இல்லை
பாடமாய் உணர்த்தும் கதை
"மேதகு" என்கின்ற
மாவீரன் எழுந்த கதை!

கதை
கதைக்குள் கதை
இது...
கதை சொல்லும் யுக்தி!

தெருக்கூத்து வழியாக
தெரிவிக்க வந்த கதை..
தமிழருக்குச் சொல்வதுபோல்
தரணிக்கேச் சொல்லும் கதை...
என்ன நேர்த்தி?
என்ன தெளிவு?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
இமய இயக்குனரை
இதயத்தால் வாழ்த்துகின்றேன்...!!!

இங்கே...
எதைச் சொல்ல எதை விட?!
அனைத்தையும் சொல்வது
அத்தனை எளிதுமல்ல
இருந்தும் முயல்கின்றேன்...

புத்த பிக்குகள்
சிலோன் பிரதமர்கள்
நகர மேயர் துரையப்பா
காந்தியவாதி செல்வா
காவல்துறை அதிகாரிகள்
தந்தையார் வேலுப்பிள்ளை
தாயார் பார்வதி அம்மாள்
காடையர்கள்....
போராளிகள்...
இப்படி...
பார்த்துப் பார்த்து செய்த
பாத்திரப் படைப்புகள்
அதிலும்
அந்த மாவீரர் பாத்திரம்!!
அதற்காக மாத்திரம்
அளிக்கலாம் ஆயிரம் மதிப்பெண்..
ஓமய்யா...
அவரின் மதிப்பை எண்?!
பாராட்ட வார்த்தைகளில்லை
பார்த்தோர் சொல்கின்றார்

யாரப்பா அந்த இசைஞர்?
பின்னணியில் பின்னுகிறார்
நெஞ்சிற்குள் பண்ணுகிறார்...
நல்ல காலம் கட்டாயம் அவருக்குண்டு
நமக்கும்தான்...😊😊😊

பாடல் வரிகள்...
பக்குவமாய்ப் பறைகிறது
மேதகு தலைவரின்
மேலான எண்ணத்தை....

ஒளிப்பதிவு ஒலிப்பதிவென
ஒவ்வொரு துறையிலும்
பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படைப்பு!

கை கொடார் மத்தியில்
கைதூக்கி விட்டோர்க்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துகளை
நேர்மையாய்த் தெரிவித்த
நல்லோர் அனைவரையும்
நானும் வாழ்த்துகின்றேன்!!!

நன்றி மறப்பது நன்றன்று!

அனைவருக்கும் வாழ்த்துகள்!

அவசியம் பார்க்க வேண்டிய படம்!!!
அனைவரும் பாருங்கள்..🙏🙏🙏
ஆதரவு தாருங்கள்...🙏🙏🙏

#மேதகு_தொடரும்

✍️செ. இராசா

(இயக்குனர் கிட்டு அவர்களிடம் எம் வாழ்த்துக்களை அலைப்பேசியிலும் பகிர்ந்து கொண்டேன்)

No comments: