21/06/2021

சூது விளையாட்டு----------வள்ளுவர் திங்கள் 164

 


 #சூது_விளையாட்டு
#வள்ளுவர்_திங்கள்_164
#குறள்_வெண்பாக்கள்

சும்மா எனச்சொல்லி சூதாட்டம் போவோரே
யம்மா... எனச்சொல்வர் பின்பு
(1)

பப்ஜியென கிப்ஜியென பல்லிழிக்கும் நேரத்தில்
ச(த)ப்பென்று கன்னத்தில் சாத்து
(2)

பகடை உருட்டியே பல்லுயிர் மாய்த்த
சகுனி விளையாட்டைத் தள்ளு
(3)

இணையக் கடலுக்குள் எந்தோர் வலையும்
உனைப்பற்ற வந்தால் ஒதுங்கு
(4)

கள்ளைவிட போதையெனக் கன்னியைச் சொல்வோர்கள்
உள்ளபடி சூதறியார் ஆம்
(5)

சின்ன வயதிலே சிந்தைக்குள் சூதென்றால்
என்னவிளை வாகும் இயம்பு
(6)

கள்ளத் தனமாகக் காணொளிக்குள் மூழ்குகின்ற
பள்ளிக் குழந்தைகளைப் பார்
(7)

தலைமுறை மாற்றத்தின் செய்கை அறியார்
நிலைகுழைந்து போவார் நிசம்!
(8.)

பணத்தைக் கொடுத்துப் பறிக்கின்ற வெற்றி
அனைத்தும் கொடுக்கும் அழிவு
(9)

நூதன சூதெனும் நோயிலே சிக்குவோர்
வேதனைக் கில்லை மருந்து
(10)

✍️செ. இராசா

No comments: