07/09/2020

ஆத்திசூடி, உயிர்வருக்க, விளக்கக் குறள் வெண்பாக்கள்

 


இன்றைய என் மகனின் #பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் அவருக்கு நான் தரும் பரிசு #ஆத்திசூடி #உயிர்வருக்க #விளக்கக் #குறள்வெண்பாக்கள்

(பிற்காலத்தில் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில்...)

#ஆத்திசூடி_விளக்கம்
#குறள்_வெண்பாக்களில்

1. #அறம்_செய_விரும்பு

அறச்செயல் யாதென ஆராய்ந்து நீயும்
நிறைவுடன் செய்ய நினை

2. #ஆறுவது_சினம்

கோபத்தின் வேகத்தைக் கொன்றிட்டால்
உன்னுள்ளே
கோபத்தீ மாறும் குளிர்ந்து

3. #இயல்வது_கரவேல்

கொடுக்க முடிந்தது கொஞ்சம் எனினும்
கொடுப்பாய் அதுவே கொடை

4. #ஈவது_விலக்கேல்

உடையோர்க்குச் செய்யும் உதவியை யாரும்
தடையிட எண்ணினால் தப்பு

5. #உடையது_விளம்பேல்

உன்னிடம் உள்ளதை ஊருக்கே சொல்வது
நன்மை அளிக்காது நம்பு

6. #ஊக்கமது_கைவிடேல்

தூக்கி விடுவோர்கள் தூக்கிவிடா விட்டாலும்
ஊக்கத்தை உன்னுள்ளே ஊட்டு

7. #எண்_எழுத்து_இகழேல்

எண்ணிக்கை சொல்கிற எண்கணிதம் போலவே
எண்ணத்தைச் சொல்லும் எழுத்து

8. #ஏற்பது_இகழ்ச்சி

எப்படி என்றாலும் என்ன நடந்தாலும்
எப்போதும் பிச்சை அவம்

9. #ஐயம்_இட்டு_உண்

பசியிலே நிற்போரைப் பார்த்திட நேர்ந்தால்
பசிக்குணவு போட்டுப் புசி

10. #ஒப்புரவு_ஒழுகு

உலகத்தின் போக்கினை உண்ணிப்பாய் ஆய்ந்து
நலமுறச் செய்வாய் வினை

11. #ஓதுவது_ஒழியேல்

புத்தகமே எப்போதும் புத்துயிரை நல்குவதால்
புத்தகத்துள் நாளும் புகு

12. #ஔவியம்_பேசல்

கறாராகச் சொல்கிறேன் கட்டாயம் வேண்டாம்
பொறாமைத்தீ வந்தால் பொசுக்கு

✍️செ.இராசா

#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_மகனே

No comments: