11/09/2020

கலி வெண்பாவில் ஓர் வேண்டுகோள்

 


குறுநில மன்னர்போல் கோலோச்சி யன்று
தெறிகெட்டு நின்றச் செயலாளர் கண்டும்
அறிவுரை சொல்லி அடக்கிடா தாலே
பறிபோன ஆட்சியால் பட்டீர்கள் நன்றாய்!
 
குடியரசு நாட்டில் குடித்தநற் கள்ளை
குடிகெடும் என்றேதான் கூசாமல் சொல்லி
குடிகெடும் ஆலைகள் கோடியில் தந்தே
குடிகெடும் சாராயம் கொண்டிங்கு வந்தீர்!
 
மதபேதம் இல்லையென மார்தட்டிக் கொண்டு
மதபேதம் கொண்டேதான் வாழ்த்துகள் சொல்வீர்!
மதம்சாரா கூட்டமென மன்றத்தில் சொல்லி
மதக்கணக்கு பார்த்தே வழங்குவீர் சீட்டை!
 
இனமில்லை சாதியில்லை என்றெல்லாம் சொல்லி
இனம்சாதி பார்த்தேதான் எப்போதும் நின்றீர்!
தமிழ்தமிழ் என்றேதான் தன்தோற்றம் காட்டி
தமிழர்க்கு நன்றாகத் தண்ணீரில் செய்தீர்!
 
இலங்கையில் நம்மோர் இறந்திட்ட போதில்
வலக்கையை கட்டித்தான் வாயிலே வைத்தீர்!
இழந்திட்ட ஈழத்தார் எல்லோர்க்கும் நன்றாய்
இழப்பீடா தந்தீர்கள் ஏமாற்றி விட்டீர்!
 
இருக்கட்டும் போதும் இனியென்ன செய்வீர்
ஒருமுறை நன்றாய் ஒழுங்காகச் சொல்வீர்!
வருகின்ற தேர்தல் வருங்காலம் சொல்லும்
தருகின்ற நீதி தரும்!
 
✍️செ. இராசா

No comments: