28/12/2018

ஏகலைவன் - க(வி)தை

ஏகலைவன் - க(வி)தை
**********************
அகிலத்தில் சிறந்தவனாய்
அருச்சுனனை நிலை நிறுத்த
இருவரின் வாழ்க்கையிலே
குருதுரோணர் செய்தது
இதிகாசப் புராணத்தின்
இருண்ட பக்கங்கள்!

குலத்தின் பெயராலே
குருகுலம் இல்லையென
துரோணர் சொன்னாலும்
துவளாமல் போராடி
கோபுரம்போல் உயர்ந்தவனே
கொடையாளி கர்ணன்!

குலத்தின் பெயராலே
குருகுலம் இல்லையென
குருதுரோணர் மறுத்தாலும்
குருவினை மறவாது
குணத்தால் வென்றவனே
குறையில்லா ஏகலைவன்!

எத்தனை சமாதானம்
எவர் வந்து சொன்னாலும்
ஏற்கவே முடியாத
ஏகலைவன் தியாகத்தை
என்னவென்று சொல்லிடுவேன்
எழுதிடவே முயலுகின்றேன்..

துரோணரின் சந்திப்பு
********************
இளவரசர் அனைவரும்
கலைகற்கும் இடத்திற்கு
வேடுவர் குலம் பிறந்தோன்
வேண்டி வந்தான் துரோணரிடம்

அகத்தின் ஆர்வத்தை
முகத்திலே கண்டாலும்
அந்தண ஆசிரியர்
அவனுக்கு(ம்) மறுத்துவிட்டார்

ஏகலைவனின் வீரம்
********************
அன்புசெய் அன்பர்க்கே
அன்புசெய்யா அகிலத்தில்
அன்புசெய்யா ஆசிரியர்மேல்
அன்பு வைத்தான் ஏகலைவன்!

மனதினில் அவரையே
மானசீகக் குருவாக்கி
சிலையொன்று செய்து வைத்து
சிலை முன்னே கலை பயின்றான்!

சங்கொலி கிழிந்ததுபோல்
எங்கிருந்தோ சப்தம்வர
வந்ததிசை நோக்கி
அம்புகளால் அடக்கி விட்டான்!

வாயிலே தையலோடு
நாயொன்று துள்ளிவர
அருச்சுணனும் துரோணரும்
அதனையே பின்தொடர
ஏகலைவன் குகைக்குள்ளே
ஏறிவந்தார் இருவருமே...

குரு தட்சணை
**************
அங்கிருந்த சிலை கண்டு
ஆச்சரியம் அடைந்த குரு
அவன் செய்த கலை கண்டு
அப்படியே உறைந்து விட்டார்!

நேரடிச் சீடனுக்கே
நேர்த்தியுறா ஞானத்தை
இவன் கற்ற திறனறிந்து
இடிந்தே போய் விட்டார்!

இப்படியே இவன் சென்றால்
இவர் சபதம் தோற்குமென்று
தட்சணை கொடுக்கச்சொல்லி
கட்டைவிரல் வேண்டுமென்றார்!

சொல்லிய சொல்லொன்று
கொல்லுஞ் சொல்லானாலும்
வில்லம்பு வேகத்தில்
விரலினை வெட்டிவிட்டான்!

முடிவு
******
ஒருவனின் வளர்ச்சிக்கு
ஒருவனை அழிப்பதா?!
சாதியின் பெயராலே
சாத்திரத்தை மறுப்பதா?

என்ன கொடுமையென்று
ஏனென்று கேட்கவில்லை- சொல்
ஏகலைவா......நீ
என்ன கொடுமையென்று
ஏன் அன்று கேட்கவில்லை?

நீ மட்டும் அன்றைக்கே
நியாயத்தைக் கேட்டிருந்தால்
ஆதிப் பரம்பரையை
அடக்க நினைப்பார்களா?!

✍️செ. இராசா

https://youtu.be/L6W0q1ww8C8
https://youtu.be/L6W0q1ww8C8 

No comments: