24/12/2018

தேவனுக்குத் தாலாட்டு


கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆண்டவரே.... கண்ணுறங்கு
கொஞ்சும் மாதா கண்ணுறங்க
கொஞ்ச நேரம் நீயுறங்கு

ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

மண்ணிலுள்ள மாந்தரெல்லாம்
விண்ணுயரம் செல்வதற்கு
விண்ணுலகை விட்டிறங்கி
மண்ணிலிங்கு வந்தவரே....(கண்ணு)

அன்னை எங்கள் மேரிக்கு
அன்பானப் பிள்ளையாகி
அன்பாலே இவ்வுலகை
ஆளவேண்டி வந்தவரே.....(கண்ணு)

ஏழ்மைமிகுத் தச்சருக்கு
எழிலானப் பிள்ளையாகி
எல்லோரும் உய்வடைய
ஏகனாய் வந்தவரே...........(கண்ணு)

பரமபிதா ஆவியினால்
பரலோகம் விட்டுவந்து
பாவங்கள் செய்வோர்க்கு
பாடம் சொல்ல வந்தவரே...(கண்ணு)

கடமையை மறந்தவராய்
மடமையில் திரிவோரைக்
கரையேற்றும் வழிசொல்லக்
கடவுளாய் வந்தவரே......(கண்ணு)

✍️செ. இராசா

#இனிய_கிறிஸ்துமஸ்_வாழ்த்துகள்_2018

No comments: