23/12/2018

காரி--க(வி)தை



காரி--க(வி)தை
*************************
வள்ளல்கள் எழுவரிலே
வில்லங்க வள்ளலிவன்,..
படைகொண்டு பொருளீட்டி
கொடை செய்த மன்னனிவன்

காரியின் தொழில்
***********************
மலையமான் எனும் நாட்டில்
மங்காதத் திங்களைப்போல்
காரியென்ற ஒரு மன்னன்
போர்த்தொழில் செய்து வர,

மண்ணாளும் மன்னர்கள்
சண்டைக்குத் துணைதேடி
காரியினை நாடிவந்து.
காரியத்தில் வென்றிடுவர்!

காரியின் கொடை
*************************
வென்றவர்கள் அனைவருமே
வண்டிவண்டி பொருள் தருவர்...
வந்தது அனைத்தையுமே
வாரிவாரி வழங்கிடுவான்....

இடம்பார்த்துப் பெய்வதில்லை மாரி
இனம்பார்த்து ஈவதில்லை காரி
இவன் பெருமை அறிந்தவர்கள் கோடி
இரந்து செல்ல வந்தார்கள் நாடி...

ஓரியின் மரணம்
*******************
ஓரி என்ற பெயர் கொண்ட மன்னன்
காரிபோல கொடை செய்த மன்னன்
கொல்லிமலை மன்னனென்று சொன்னால்
அள்ளித்தரும் மன்னனென்று சொல்வர்..

பெருஞ்சேரல் சேரனோடு சேர்ந்து
பெருந்தவறு செய்துவிட்டான் காரி
கொல்லிமலை அரசனைக் கொன்று
பொல்லாதத் தவறிழைத்தான் காரி

அதியமான் மரணம்
***********************
ஓரிமன்னன் மாண்ட சேதிகேட்டு
ஓடிவந்தான் அங்கே ஒரு மன்னன்;
ஓய்வெடுக்கக் காரிவந்த நேரம்
ஓடவிட்டான் காரியினை அன்று!

பதுங்கிப் போன புலிபோலே இருந்து
பாய்ந்து வந்தான் காரியவன் மீண்டும்
பெருஞ்சேரல் துணையோடு வந்து
பெரும்படையால் கொன்றானே அவனை.

கொன்றவனும் கொடையாளி மன்னன்
சென்றவனும் கொடையாளி மன்னன்

ஓரிக்கு நீதிகேட்டு
காரியுடன் சண்டையிட்டு
மண்ணிலே முத்தமிட்டான்
மாண்புமிகு அதியமான்....

ஔவைக்கு நெல்லி தந்து
அனைவருக்கும் பொருள் தந்து
விண்ணிலே கொடைதர
மண்ணிலே உயிர் நீத்தான்...

காரியின் வீரம்
*******************
கர்ம வினையாலே
காரியங்கள் நடப்பதினால்
காரியின் வீ(ஈ)ரத்தால்
காரியும் மீண்டு(ம்) வந்தான்...

படையாலே ஒரு பக்கம்
கொடையாலே மறு பக்கம்
தன்னறம் இதுவென்று
தனியறம் காத்தவனை
மூன்று வேந்தர்களும்
முடிசூடி மகிழ்ந்தார்கள்!!!

வாழ்க நின் புகழ்!!!

செ. இராசா

(பாரிபற்றி படிக்க/பார்க்க இணைப்பு கீழே உள்ளது)
https://www.facebook.com/100000445910230/posts/2270330326325142/

No comments: