19/10/2018

அவள் பெயரை எழுதித்தர ................

நான் எழுதும் வரியெல்லாம்
நகைப்பாக உள்ளதென்று
எழுத்தை மாற்றச்சொல்லி
என்னவளும் வேண்டுகின்றாள்

ஏதேனும் புதிதாக
ஏதாவது எழுதச்சொல்லி
என்னையவள் கேட்கின்றாள்

என்ன நான் எழுதுவது?
எதை நான் எழுதுவது?

புரியும்படிச் சொன்னாலோ
எளிதாக உள்ளதாமாம்
புதியவார்த்தை போட்டாலோ
புரியவே இல்லையாமாம்

சத்தியத்தைச் சொன்னாலோ
தத்துவங்கள் எதற்கென்றாள்
அறம்பற்றி எழுதினாலோ
அறிவுரைகள் யாருக்கென்றாள்

சமூகத்தைச் சாடினாலோ
சிகப்பு மணம் குறையுதென்றாள்
சரித்திரத்தை எழுதினாலோ
சலிப்பு தரும் பதிவு என்றாள்

காதலைச் சொன்னாலோ
காதலே இல்லையென்றாள்
கடவுளைப் பாடினாலோ
கவிதையே இல்லையென்றாள்

அவள் பெயரை எழுதித்தர
அப்படியே நகைக்கின்றாள்

No comments: