19/11/2019

மாயஜால வித்தைகோடி



💐💐💐💐💐💐💐💐
வாழ்விலே........ஈசனே
💐💐💐💐💐💐💐💐
மாயஜால வித்தைகோடி
.......காட்டுகின்ற வாழ்விலே
ஞாலஞான வித்தைகாட்டி
.......காத்திடுவாய் ஈசனே!!
கோடிகோடி சூதுகோடி
.........சூழுகின்ற வாழ்விலே!
கோடிசூதை மோதிமோதிக்
..........கொன்றிடுவாய் ஈசனே!

கானமோடும் பானமோடும்
........ஆடுகின்ற வாழ்விலே
ஞானமோடும் பக்தியோடும்
........பாடுகின்றேன் ஈசனே!
அங்குமிங்கும் இங்குமெங்கும்
..........ஓடுகின்ற வாழ்விலே!
இங்குமங்கும் எங்குமுன்னைத்
..........தேடுகின்றேன் ஈசனே!

💐💐💐💐💐💐💐
ஊரிலே.........ஈசனே
💐💐💐💐💐💐💐

சாதிபேதம் என்றுசொல்லி
...........தாழ்த்துகின்ற ஊரிலே
நீதிவேதம் ஒன்றுதந்து
...........காத்திடுவாய் ஈசனே!
ஓதியோதி தீதுசொல்லி
...........தூற்றுகின்ற ஊரிலே
ஆதியோகி யாகிவந்து
...........மாற்றிடுவாய் ஈசனே!

சேரிசேரி என்றுசொல்லி
..........சேர்த்திடாத ஊரினை
நாரியர்த்த நாரிபோலே
...........ஆக்கிடுவாய் ஈசனே!
ஏறிஏறி எம்மிலேறி
............எம்மையாளும் ஊரிலே
மாறிமாறி நீயுமாறி
............காட்டிடுவாய் ஈசனே!
🌲🌲🌲🌲🌲🌲
ஓம் நமச் சிவாய
அன்பே சிவம் (2)
ஓம் நமச் சிவாய
🌲🌲🌲🌲🌲🌲

💐💐💐💐💐💐💐
வீட்டிலே......ஈசனே
💐💐💐💐💐💐💐

சோறுசோறு என்றுமட்டும்
...........சோறையூட்டும் வீட்டிலே
சோறுகூட ஞானமூட்ட
..........வந்திடுவாய் ஈசனே!
போட்டிபோட்டு சண்டைபோட்டு
...........காளியாடும் வீட்டிலே!
போட்டியின்றி அன்பையூட்டி
...........வேலிபோடு ஈசனே!

கொஞ்சமேனும் கிள்ளியேனும்
..........தந்திடாதோர் வீட்டிலே
அஞ்சிடாமல் அள்ளியள்ளி
..........தந்திடவை ஈசனே!
எல்லைமீறி என்றுமெங்கும்
..........தொல்லைதரும் வீட்டிலே
தொல்லையென்ற சொல்லுயில்லை
...........என்றுமாற்று ஈசனே!

💐💐💐💐💐💐💐
நெஞ்சிலே.....ஈசனே
💐💐💐💐💐💐💐
நானேநானே என்றுசொல்லி
........ஆடுவோர்கள் நெஞ்சிலே!
நீனேதானே நானுமென்று
.........காட்டிடுவாய் ஈசனே!
மானேதேனே மங்கையென்று
...........கொஞ்சிடுவோர் நெஞ்சிலே!
கோனே!கோச மங்கையென்று
............காட்டிடுவாய் ஈசனே!

ஆத்திகத்தை ஆத்திரத்தால்
..........தூற்றுவோர்கள் நெஞ்சிலே
ஆத்மநாத சாமிநீயே
..........ஆண்டிடுவாய் ஈசனே!
சாத்திரத்தில் கோத்திரத்தைப்
...........போற்றுவோர்கள் நெஞ்சிலே
கோத்திரத்தின் சூத்திரத்தை
............மாற்றிடுவாய் ஈசனே
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌲🌲🌲🌲🌲🌲
ஓம் நமச்சிவாய
அன்பே சிவம்(2)
ஓம் நமச்சிவாய
🌲🌲🌲🌲🌲🌲

✍️செ.இராசா

No comments: