31/12/2019

தமிழ்ப்பட்டறை



தமிழ்ப்பட்டறை
***************
அங்கிங் கெனாதபடி
எங்கெங்கோ எழுதிவிட்டு
சான்றிதழின் பின்னாலே
சான்றோர்கள் போகையிலே
எப்பொருளும் தந்திடாமல்
மெய்ப்பொருளாய் இயங்குமொரு
முகநூலின் குழுமத்தை
முதன்முதலில் கண்டபோது
ஆச்சரியப் பூச்சொரிய
அன்னாந்து வியந்ததனை
அப்படியே சொல்லிடவே
அடியேனும் முயல்கின்றேன்!!!
அருந்தமிழ்ப் பட்டறையை
அடிதொட்டு வணங்குகிறேன்!!

அறிமுகம்
*********
எப்படி பட்டதென
இப்போதும் தெரியாது?
கவிதைப் போட்டியெனக்
கண்ணில் பட்டது..

“தங்கமடி நீ எனக்கு” இது தலைப்பு
தங்க மடி தந்தது அது எனக்கு
எழுதிய முதல் கவியே
இரண்டாமிடம் ஏற்றியது
எழுதினேன் எழுதினேன்..
தொடர்ந்து எழுதினேன்..
எத்தனையோ வெற்றிகள்
எத்தனையோ தோல்விகள்
அது ஒரு பொருட்டல்ல
அந்த நிர்வாகிகளின் பங்களிப்பு
அது அது அது என்னை ஈர்த்தது..

நிகழ்வுகள்
***********
ஒரு நாள் கவிச்சரம் என்றார்கள்
மறு நாள் கருத்தரங்கம் என்பார்கள்
ஒரு நாள் திண்ணை என்பார்கள்
மறு நாள் கதை எழுது என்பார்கள்
ஒரு பக்கம் ஹைக்கூ என்பார்கள்
மறு பக்கம் எசப்பாட்டு என்பார்கள்
ஒரு பக்கம் சிறுவர் பாடல் என்பார்கள்
மறு பக்கம் படக் கவிதை என்பார்கள்
தினமும் தினமும்
கணமும் கணமும்
கனமின்றி உழைப்பார்கள்- தலைக்
கனமின்றி உழைப்பார்கள்!!!

அன்றே எழுதிய வாழ்த்து (ஜூன் 2017)
************************************
எழுத்துத் தமிழ் சிறப்புறவே
தமிழ்ப்பட்டறைத் தளம்மூலம்
எழில்தமிழ் வளம்காக்கும்
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரு மூச்சு!
எப்பொழுதும் தமிழ் மூச்சு!
என்நேரம் தமிழ் தாகம்!
எல்லோர்க்கும் ஒரே நோக்கம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
எனக்குள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எடுத்தாளும் ஆளுமையால்
எழுத்துப்பட்டறை ஆகியதோ?!
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கிறதே!!!

என்தமிழ் உறவுகள்
என்றென்றும் சிறப்புறவே
என் மனமார வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறைத் தலைவரையும்
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
என் மனம் மொழி இரண்டாலும்
என்வழியில் வாழ்த்துகிறேன்!
எம்சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

பட்டறை மாணவன் நான்
***********************
எதுகை மோனையென
எதை எதையோ எழுதி வந்தேன்..
இங்கே வந்தபின்தான்
இலக்கணம் அறிந்து கொண்டேன்..

ஹைக்கூ சென்றியூவென
பொய்கூவாய் கூவி வந்தேன்
இங்கே வந்தபின்தான்
அதையும் அறிந்து கொண்டேன்..

அது மட்டுமா?!

எசப்பாட்டு இல்லாட்டி- இன்றென்
நிசப்பாட்டு இல்லீங்கோ?!
கவிச்சரம் இல்லாட்டி- இன்றிந்தக்
கவி ராசா இல்லீங்கோ?!

இது மட்டுமா?!

எத்தனையோ அண்ணன்கள்?!
எத்தனையோ அக்காக்கள்?!
என்னெற்ற தம்பிகள்?!
என்னெற்ற உறவுகள்?!
அனைத்தையும் வழங்கியது
அருந் தமிழ்ப்பட்டறையே...!!!

நன்றியுரை
**********
“நான் எனும் மண்குடம்”
நான் வெளியிட்ட நூல் என்றால்
அதற்கு நானா காரணம்?!!
அதற்குப் பட்டறையே காரணம்

தமிழ் மாணவன் நானும்
தமிழ்ச்சோலையின் நிர்வாகி என்றால்
அதற்கு நானா காரணம்?!!
அதற்கும் பட்டறையே காரணம்

இன்னும் இன்னும் இன்னுமென
இன்னும் சொல்லலாம்தான்..
இருப்பினும் இத்தோடு முடித்து
என் இதயத்தை எடுத்து
இங்கேயே சமர்ப்பித்து
நன்றிகூறி விடைபெறுகிறேன்
நன்றி! நன்றி!! நன்றி!!!

✍️செ. இராசா

No comments: