01/12/2019

நாயே...நாயே... நன்றி கெட்ட நாயே.


நாயே...நாயே...
நன்றி கெட்ட நாயே..

நிறுத்துங்கள்.
நாங்கள் எங்கே நன்றி மறந்தோம்?!

பழையது போடும்போதெல்லாம்
புதுமனைவி போட்டதுபோல் திண்கிறோம்!
எங்கே கட்டிப்போட்டாலும்
அங்கேயே சொர்க்கம்போல் கிடக்கிறோம்!

காணாத போதெல்லாம் கரைகிறோம்!
காணும் போதெல்லாம் குழைகிறோம்!
தெரியாதோர் வந்தால் குரைக்கிறோம்!
தெரிந்தோர் வந்தால் குறைக்கிறோம்!

உங்களுக்கு ஆட்டத்தான்
எங்களுக்கு வாலோ என்று
வாலாட்டியே எங்கள்
வாழ்க்கையை ஓட்டுகிறோம்!

காவல் காக்கிறோம்!
மோப்பம் பிடிக்கிறோம்!
ஏன்...
உங்களுக்காக
உயிரையும் துறக்கிறோம்!

சீ.....
“நன்றி கெட்ட நாயே” என
நாக்கூசாமல் சொல்வதை நிறுத்துங்கள்
நான் சொல்வதை
நெஞ்சில் நிறுத்துங்கள்

“நன்றி கெட்ட நாய்” எனச்சொல்லி
நாய் இனத்தை அவமதிக்காமல்
“நன்றி கெட்ட மனிதா” எனச் சொல்லுங்கள்...

கொஞ்சமேனும் நன்றி இருந்தால்...

#நன்றியுள்ள_நாய்களின்_குரலாக
#நான்_நாயானபோது

✍️செ. இராசா

No comments: