06/05/2019

ஏய் கடலே... ஏன் கொந்தளிக்கிறாய்?!



ய் கடலே...
ஏன் கொந்தளிக்கிறாய்?!
சந்திரன் சங்கடம் தருகிறானா?! இல்லை
சூரியன் சூடாக்குகிறானா?!
சொல்...
எதனால் கொந்தளிக்கிறாய்?!

படகுக் கத்திகள்
உடலைக் கிழிக்கிறதா?! இல்லை
நெகிழிப் பைகள்
நெஞ்சை அடைக்கிறதா?
சொல்...
எதனால் கொந்தளிக்கிறாய்?!

தொழிற்சாலை மூத்திரங்கள்
தொந்தரவு செய்கிறதா?! இல்லை
சாதிக்கொலை சம்பவங்கள்
சவக்காடு செய்கிறதா?
சொல்...
எதனால் கொந்தளிக்கிறாய்?!

ஆமாம்..
உன் கோப மேனியில் என்ன கொப்பளம்?
உன் நீல மேனியில் என்ன நுரை?!
உன் மூச்சுக்காற்றில் என்ன முனகல்?!
ஓ...
அந்தியில்தான் நீ(யும்) அலைவாயோ?!!

✍️செ. இராசா

No comments: