18/09/2018

வேடிக்கை மனிதர்கள்



*********************
இறந்த சடலத்தை
இடுகாட்டில் போட்டுவிட்டு
நிலையாமை என்கின்ற
நிலைமறந்து போகின்ற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

ஏமாற்றும் கட்சிக்கே
ஏற்றத்தை தந்துவிட்டு
மாற்றமே இல்லையென்று
மாறாமல் சொல்கின்ற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

குப்பையாய் இருப்பதாக
கூப்பாடு போட்டுவிட்டு
தன்வீட்டுக் குப்பையினை
தெருவிலே வீசுகின்ற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

என்ன கொடுமையென்று
எந்நாளும் சொல்லிவிட்டு
எதிரில் கொடுமை கண்டு
எதற்கென்று ஒதுங்குகிற
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

தமிழே உயர்வென்று
தரணியெங்கும் பேசிவிட்டு
தன்பிள்ளை படிப்பதற்கு
தனியார் பள்ளிசெல்லும்
வாடிக்கை மனிதர்களே
வேடிக்கை மனிதர்கள்!

✍️செ. இராசமாணிக்கம்

#வெற்றிபெறா_கவிதை_இது
#வேடிக்கை_மனிதர்கள்

No comments: