11/09/2018

நேரமில்லை....நேரமில்லை





அவசர உலகத்தில்
அனைவரும் சொல்வது
நேரமில்லை....நேரமில்லை...

நேரமில்லை என்று சொல்லும்
நேரமில்லா உறவுகளே...
நேரமில்லை என்று சொல்ல
நேரம் தந்த காரணத்தால்
நேரமில்லா உங்களுக்கு
நேரமொதுக்கி நான் எழுதும்
நேரம் பற்றிய படைப்பு இது
நேரமிருந்தால் படியுங்களேன்..

நேரம் தந்து யோசித்தால்
நீங்களும் சொல்வீர்கள்;
நேரமில்லை என்பது
மடத்தனமென்று

இரவெல்லாம் வேலையென்று
விடியவிடிய தூங்கிவிட்டு
கூவாமல் இருப்பதாய்
சேவல்கள் சொல்வதில்லை
நேரமே இல்லையென்று...

சேர்த்தது போதுமென்று
சோர்விலே உறங்கிவிட்டு
தேடாமல் இருப்பதாய்
தேனீக்கள் சொல்வதில்லை
நேரமே இல்லையென்று....

பிறப்பு முதல் இறப்பு வரை
இருக்கின்ற உடலுக்குள்
இயங்குகின்ற உறுப்புகள்
இளைப்பாறப் போவதில்லை
நேரமே இல்லையென்று...

ஆனால்
மனமுள்ள மனிதனுக்கோ
மணிநேரம் இல்லையாமாம்

அரட்டை அடிக்க நேரமுண்டு
ஆடிக்களிக்க நேரமுண்டு
இணையம் தேட நேரமுண்டு
ஈ குறியீடனுப்ப நேரமுண்டு
உலகை வசைபாட நேரமுண்டு
ஊதியம் சேர்க்க நேரமுண்டு
எள்ளி நகைக்க நேரமுண்டு
ஏறி மிதிக்க நேரமுண்டு
ஐந்தில் மயங்க நேரமுண்டு
ஒன்றைத் தூற்ற நேரமுண்டு
ஓய்வை நீட்ட நேரமுண்டு
ஔவியம் கொள்ள நேரமுண்டு

ஆனால்

அன்போடு பேச நேரமில்லை
ஆசையோடு கொஞ்ச நேரமில்லை
இனியநூல் கற்க நேரமில்லை
ஈதலறம் செய்ய நேரமில்லை
உடலைப் பேண நேரமில்லை
ஊக்கம்தந்து வாழ்த்த நேரமில்லை
எளியோரை நினைக்க நேரமில்லை
ஏற்றியோரைக் காண நேரமில்லை
ஐங்கரனைத் தொழுக நேரமில்லை
ஒருமையில் தியானிக்க நேரமில்லை
ஓர்மையை ரசிக்க நேரமில்லை
ஔதாரியமாய் வாழ நேரமில்லை

ஐயோ.. பாவம்
உண்மையில் நேரமில்லைதான்

மனமுள்ள மாந்தர்களே...
உங்களுக்கு நேரமிருக்கிறதா?!

✍️செ. இராசா

(நேரமிருந்தால் கருத்துச் சொல்லுங்கள்)

No comments: