17/09/2018

கவி வருமா? எப்பொழுதெல்லாம்?


கணங்களின் காதலிலே
கற்பனை சிறகடித்தால்
கவிதையில் பறக்கின்ற
கவிஞனாய் மாறிடலாம்!

கனங்களின் நோதலிலே
கற்றது தெளிவானால்
வரிகளை மருந்தாக்கி
வலிகளை ஆற்றிடலாம்!

வனங்களின் சூழலிலே
வருவது வரியானால்
தேனிலே ஊறவைத்த
கனியென்று சுவைத்திடலாம்!

அருவியின் சாரலிலே
அமைவது அடியானால்
சொல்லிலே செய்கின்ற
கள்ளென்று பருகிடலாம்!

உச்ச அன்பெல்லாம்
உள்ளத்தில் திணிவானால்
கடவுளின் படைப்பாற்றல்
கவிதையில் கண்டிடலாம்!

No comments: