27/09/2018

#அறிவியலும்_தமிழும்_2


இந்த பேரண்டத்தில் நாம் காணும் அனைத்துமே அணுக்களின் கூட்டு என்பதை நாம் அறிவியல் பூர்வமாக அறிகின்றோம். இதை வெகு எளிதாகச் சொல்வதென்றால், சிறு வயதில் களிமண்ணால் விளையாடும்போது வண்டி, பொம்மை என்று பற்பல உருவங்கள் செய்து விளையோடுவோமல்லவா??! மேலும் இப்படி நாம் என்னதான் பல உருவங்கள் செய்தாலும் இவை அனைத்தும் உருவானது களிமண் என்று அறிவோம்தானே?!. அதைப்போலவே, நாம் காணும் அனைத்துப் பொருட்களும் (நீர், நிலம், நெருப்பு, கோள்கள்......அண்டம், பிண்டம்) என அனைத்துமே அணுக்களால் ஆனதே.

அறிவியல் பூர்வமாகச் சொல்வது என்றால் ஒரு பொருளை எடுத்து உடைத்துக் கொண்டே (பகுத்தல்) போகும்போது அதற்குமேல் உடைக்கமுடியாத ஒன்றே அணுவாகும். அணுக்களின் அமைப்பையும் அதன் சேர்க்கையையும் பொருத்து தனிமங்கள், வாயுக்கள், நீர்மங்கள்.... என்று அழைக்கின்றோம்.

இந்த அணுவை வேகமாக ஒரு சக்தியைக் கொண்டு தாக்கினால் அதில் அளப்பறிய ஆற்றல் வருகிறது என்று நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அதன் விளைவே அணுகுண்டு மற்றும் அணுஉலைகள்.

அணுவின் அளப்பறிய ஆற்றலை அறிந்த ஔவையார், திருக்குறளின் பெருமையை அணுவை உவமையாக வைத்துச் சொல்வதை இங்கே கவனியுங்கள்;

“அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக் குறுகத்தரித்த குறள்”

-திருவள்ளுவமாலை
(11ஆம் நூற்றாண்டு )

அதாவது அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகட்டியதுபோல மிகவும் சிறிய அளவிலான குறளில் அளப்பரிய கருத்துகள் உள்ளதாம். இங்கே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆம், இங்கே நாம் குறளின் பெருமையை அறிவதோடு
அணுவின் ஆற்றலையையும் அறிகின்றோம்.

மேலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் இயற்றிய திருமந்திரத்தைக் கவனியுங்கள்

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்

மேலும் ஒரு சித்தர் பாடல் மூலமாக
அறிய வருவது யாதென்றால்;

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கிலச்சாணிரண்டு முழமாம்.”

அதாவது, அணுவின் அளவைப்பற்றிச் சொல்வதற்காக எழுதப்பட்ட பாடல்.

அணு, தேர்த்துகள், பஞ்சிழை, மயிர், மணல், கடுகு, நெல், விரல், சாண், முழம்
....... இப்படி போகிறது.

அணுவையும் பகுத்து நவீன அறிவியல் 2012ல் “God Particles” என்று கண்டுபிடித்ததாகச் சொன்னாலும் அதற்கு முன்பாக 1985லேயே தன் கட்டுரையில் “இறைத்துகள்கள்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(பெயரும் ஒத்துப்போனது மிகப்பெரும் ஆச்சரியமே)

நண்பர்களே, என் நோக்கம் இன்றைய அறிவியல் வளர்ச்சியை தாழ்த்தி தமிழை உயர்த்துவதாக எண்ண வேண்டாம். நம் தமிழில் நிறையவிடயங்கள் முன்கூட்டியே இருந்துள்ளது என்பதைத் தெரியப்படுத்துவதே ஆகும்.

(தொடரும்)

No comments: