24/02/2022

நீங்களே சொல்லுங்கள்!

பாராட்டின் உச்சத்தில்
பொசுக்கென்று வருகிறது
பொறாமை

இப்படி நேற்றைய நாளில் குறுங்கவி ஒன்று பதிவு செய்திருந்தேன்.

இதில் யாருக்கென்று சொல்லவில்லை? படிப்பவர்களிடமே விடப்பட்ட முடிவு அது.
மேலும், அதில் ஒரு சிலேடையும் இருந்தது.
எத்தனைபேர் கவனித்தீர்களோ?!

பொசுக்கென்று- வேகமாக
பொசுக்கு என்று- சுட்டுவிடும் நோக்கில்

சரி அதற்கென்ன இப்போ...அதானே? கவிதை பிறப்பதென்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏதோ ஓர் உள்ளுணர்வின் அல்லது அழுத்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். அதற்கான காரணத்தை படைத்தவனே அறிவான். அதை நாமாக கேட்டாலொழிய யாரும் சொல்வதில்லை. அப்படி இக்கவிதை பிறந்ததற்கான காரணமும் ஓர் அழுத்த வெளிப்பாடே. அதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இப்பதிவை வழங்குகின்றேன்.

சமீபத்தில் சங்க இலக்கியம் சார்ந்த ஒரு குழுவில் எனது இரண்டு கவிதைப் பதிவுகளைப் போட்டேன். எனக்கே மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதாவது மிகக்குறைந்த நேரத்திலேயே 300 விருப்பக்குறியீடுகள், 100க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள், 100+ பகிர்வுகள் என்று சென்றுகொண்டே இருந்தது. அட... இந்தக்காலத்தில் இலக்கிய கவிதைகளை இப்படிக் கொண்டாட ஒரு தளம் உள்ளதே என்று மிகவும் வியந்தேன். அந்த ஆர்வத்தில் அதே போன்ற மூன்றாவது பதிவு போட்டால் அதை நிராகரித்தார்கள்.. தொடர்ந்து மூன்று முறை போட்டும் நிராகரித்தார்கள். இவ்வளவிற்கும் அவற்றில் எந்தத் தவறான படமும் எழுத்துகளும் இல்லை. காரணமும் கூறவில்லை.

ஒரு புதிய நபர் வளர்வதை அங்கேயுள்ள நிர்வாகிகளே விரும்பவில்லையென்று அப்போதுதான் புரிந்துகொண்டேன். பிறகென்ன அந்தக் குழுவை விட்டு நீங்கி வந்துவிட்டேன். மறுபடியும் ஆட்கள் குறைந்த என் களத்தில் எனக்கான மதிப்புமிக்க உறவுகளுக்கும் மட்டும் டீயாற்ற வந்துவிட்டேன். இதுதான் இந்தக் குறுங்கவிக்குப்பின் உள்ள சோகமான முன்னுரை.

ஆமாம்.....நாம் ஏன் ஒரு சங்க இலக்கியத்திற்கென்று பிரத்தியேகமான பக்கம் ஆரம்பிக்கக்கூடாது?!

நீங்களே சொல்லுங்கள்!

No comments: