14/02/2022

காமத்துப்பால் -- வள்ளுவர் திங்கள் 198


கண்களா? தூண்டிலா? கவ்வுகிற வேகத்தில்
விண்மீனை வீழ்த்தும் விழி
(1)

கள்ளியா? காதலியா? காண்கின்ற நேரத்தில்
உள்ள(த்)தை மாற்றும் உரு
(2)

கடவுளா? கன்னியா? காணாத போதும்
உடன்பட வைக்கும் உறவு
(3)

குறிஞ்சியா? பாலையா? கூடுகின்ற போதில்
அறிவினைக் கொல்லும் அழகு
(4)

கனவா? நனவா? கவிதையாய்த் தோன்றி
நினைவில் உலவும் நிசம்
(5)

தெற்கா? வடக்கா? திசையேதும் காணாமல்
பற்றிடும் உள்ளகம் பார்த்து
(6)

காமமா? காதலா? காரணப் பேரின்றி
வாமனனாய் நீளும் மனம்
(7.)

அனலா? புனலா? அறியாமல் தானே
கனவிலும் நோகும் கதி
(8)

உண்மையா? பொய்யா? உயிரொன்றும் அக்கணங்கள்
கண்மூடி யாக்கும் கலப்பு
(9)

நிறையா? குறையா? நெருங்கிய பின்னே
மறைவில் திறக்கும் மடை
(10)

No comments: