14/07/2018

மாணிக்க வாசகரே,,,,,,,,,,,,,,



நீர் நடந்த பாதையிலே
யார் நடந்து போனாலும்
காணுகின்ற காட்சியெல்லாம்
ஆண்டவனின் திருவுருவே..

நீர் கொடுத்த வாசகத்தை
யார் பாடிக் கரைந்தாலும்
கண்ணீராய் வடிவதெல்லாம்
என்னிறைவன் பேரன்பே..

நீர் செய்த பக்தியினை
யார் செய்ய முயன்றாலும்
கவிதையாய் வருவதெல்லாம்
கடவுளின் பேரருளே...

நீர் வாழ்ந்த ஆலயத்தை
யார் சென்று பார்த்தாலும்
ஆத்மாவாய் உணர்வதெல்லாம்
ஆதியவன் அற்புதமே...

நீ நடந்த பாதையிலே
நான் நடந்து போவதற்கு
நாயிலும் நாயடியேன்
நானுன்னை வேண்டுகிறேன்....

மாசில்லா நேசரே
மாணிக்க வாசகரே
வேதம் தந்தநின்
பாதம் பணிகின்றேன்...

திருச்சிற்றம்பலம்....

✍️செ. இராசா

No comments: