02/04/2019

ஆசை (குறளின் குரலில்)


தூண்டும் ஆசையை அனுமதித்தால்- நீ
தூண்டில் மீனாய் ஆகிடுவாய்!
மீண்டும் மீண்டும் வேண்டிநின்றால்- நீ
மாண்டும் நிம்மதி வேண்டிடுவாய்!

முழுதும் ஆசையை நீக்கிவிட்டால்- நீ
முழுமுதல் யாதென அறிந்திடுவாய்!
முற்றும் முயற்சியை விட்டுவிட்டால்- நீ
முட்டுச் சந்தில் முடங்கிடுவாய்!

அகத்தில் ஆசையை அறுத்துவிட்டால்- நீ
சகமே உனதென உணர்ந்திடுவாய்!
சகத்தின் அளவில் ஆசையுற்றால்- நீ
யுகங்கள் தோறும் பிறந்திடுவாய்!

நஞ்சை நஞ்சால் முறிப்பதுபோல்- நீ
நெஞ்சின் நஞ்சை நீக்கிவிடு!
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்- நீ
முயற்சியில் ஆசையை முறித்துவிடு!

No comments: