07/03/2022

ஓர் கவிதையாய் மாறலாம்

 

அளவைச் சுருக்கி
அடிகளைச் சுருக்கலாமா?!
ஈரடியில் வள்ளுவரும்
ஓரடியில் ஔவையும்
ஏற்கனவே செய்தபின்னே
இதிலென்ன புதுமையிங்கே...
 
நச்சென்று நாமும்
ஹைக்கூவில் சொல்வோமா?!
சிரிப்பதற்கு சென்றியூவாம்
பழமொழிக்கு பழமொன்றியூவாம்
ஏதேதோ செய்தபின்னே
என்னநாம் செய்வதிங்கே?!
 
மரபுக்கே போயங்கு
புதிதாகச் செய்வோமா?!
வெண்பாவில் புகழேந்தியாம்
விருத்தத்தில் கம்பராம்
எல்லோரும் செய்தபின்னே
என்னதான் செய்வதங்கே?!
 
சந்தக் கவி பாடி
சொந்தமாய் இசைப்போமா?!
திரைப்படப் போதைக்குள்
தமிங்கிலம் சேர்ந்தபின்னே
அரபியில் குத்தெழுத
அருணகிரிக்கென்ன வேலை?!
 
நவீனக் கவியென்று
நளினமாய்ச் செய்வோமா?
உரைநடையின் உடைக்குள்ளே
உள்ளபொருள் இடம்மாற்றிக்
குப்பைபலர் கொட்டுகையில்
கூடசேர்ந்து கொட்டனுமா?!
 
எனில் என்னதான் செய்வதாம்?!
பே
.....சா
..........ம
..............ல்
ஓர் கவிதையாய் மாறலாம்!
 
✍️ செ. இராசா

No comments: