16/03/2022

அமேசான் கிண்டிலில் ஏன் புத்தகம் போடுகிறீர்கள்

 


அமேசான் கிண்டிலில் ஏன் புத்தகம் போடுகிறீர்கள் என்கின்ற கேள்விக்கான விடையே இக்கட்டுரை. உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே அச்சுப்பதிப்புதான் மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது அனைத்து நாளிதழ்களுமே, இணையத்திற்கு மாறிவிட்டதால் நாமும் மாறுவதென்பது காலத்தின் கட்டாயம்தானே உறவுகளே....

சரி...அப்படி மாறும்போது எந்த வடிவம் சிறந்தது என்கின்ற கேள்வியெழும் அல்லவா?.. உதாரணமாக, PDF வடிவமா? இல்லை அப்படியே படிக்கின்ற மற்ற வடிவங்களா? இவற்றில் எந்த வடிவம் சிறந்தது என்றால்....உண்மையில் அது தேவை மற்றும் பயன்பாடு பொறுத்ததே என்று சொல்வேன். PDF என்றால் மற்றவர்களுக்கு எளிதாகப் பகிரலாம். மற்ற வடிவங்களில் மொத்தமாக பகிர முடியாது (எழுத்துகள் எல்லாமும் இலவசமல்லவே). அதனால்தான் கிண்டில் நூல்களைப் படிக்க தனிச்செயலி அல்லது கருவி வேண்டும். (காரணம் அதன் எழுத்துருக்கள் MOBI என்கின்ற வடிவத்தில் உள்ளதால்). இருந்தும் அனைத்துமே கைபேசியிலும் படிக்கலாம்.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு புத்தகக் கண்காட்சி அல்லது நூலகம் செல்வதெல்லாம் முடியாதென்பதாலும் இந்தமாதிரி வடிவங்கள் தவிர்க்க முடியாததாகின்றன. தற்சமயம் அதன் பயன்பாட்டாளர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் இன்னும் இதுபோன்ற வடிவங்கள் கூடிக்கொண்டே போகும் என்பதையும், அதெற்கெல்லாம் நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் இப்போதே உணரவேண்டும்.

தற்சமயம் Paper back (அச்சு வடிவம்) என்கின்ற Option தமிழில் இல்லை. அது வரும்போது அதைச் சொடுக்கினால் அச்சடித்த புத்தகத்தை வீட்டிலேயே வந்து தருவார்கள். நான் Bilingual (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆக விட்ட ஹைக்கூ நூலில் அந்த Option ல் வெளிநாட்டினர் வாங்குகின்றார்கள். நான் கூட சோதனைமுறையில் ஐந்து நூல்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைத்தேன். யோசித்துப்பாருங்கள், இது தமிழ் நாட்டில் வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? ஒரே சொடுக்கில் நம் நூலை உடனே அச்சடித்துத் தருவார்கள்.

உண்மையில், இங்கே யாரும் பணத்திற்காக படைப்பதில்லை. அப்படியே படைத்தாலும், சில சொற்ப நபர்களைத் தவிர்த்து யாரும் அதை மட்டுமே நம்பி வாழ்ந்துவிட முடியாது என்பதே உண்மை. ஒரு ஆத்ம திருப்திக்காகவும், தன் படைப்பின் தார்மீக உரிமைக்காகவும் மட்டுமே படைக்கின்றார்கள். அதென்ன தார்மீக உரிமை? பிறகு நம் படைப்பை வேறு யாரேனும் திருடி அவர்கள் கையாண்டால் நாம் என்ன செய்வது? நீதிமன்றமெல்லாம் போய் நம் நேரத்தை வீணாக்கா விட்டாலும், குறைந்தபட்சம் ஊடகத்தில் நம் ஆதாரத்தைக்காட்டலாமே......

இங்கே கிண்டில் பதிப்பிற்கு Amazon எண் வழங்குகிறார்கள். அதுவே, பேப்பர் ரோல் என்கிற option இல் விட்டால் ISBN என்னையும் சேர்த்தே வழங்குகிறார்கள். மிக முக்கியமான விடயம், யாரிடமும் போய் நிற்க வேண்டாம். முற்றிலும் இலவசமும் கூட....அப்புறம் என்ன வேண்டும்?

(என்னைக்கேட்டால் ISBN எண்போல், ஏன் நாமே ஒரு அமைப்பை உருவாக்கி அதில் பதிவு செய்து தமிழர்கள் நலனுக்காக, தமிழ் படைப்பாளர் நலனுக்காக ஏன் ஒரு காப்பீடு எண் வழங்கக்கூடாது என்கின்ற யோசனையும் இருக்கிறது. ஆனால் இதற்கு அமைப்பு ரீதியானவர்கள் முன்வரவேண்டும்)

ஆக...நம் படைப்புகள் எப்படி உள்ளது? எப்படிப் போகிறது? என்பதெல்லாம் காலத்தின் கையில். ஆனால் அதை ஆவணப்படுத்த வேண்டுமென்பது நம் கையில்.

அச்சுவடிவ நூலுக்காக நிறைய மன உளைச்சலுக்குள்ளாகி அடுத்து என்ன செய்யலாம் என்று குழம்பிகொண்டிருந்த நிலையில் சரியான முறையில் வழிகாட்டிய விஜயன் திரைப்பட இயக்குநர் தம்பி திரு. புலித்தேவன் அவர்களுக்கும், இலண்டன் வாழ் Dr. திரு. செந்திலரசு அண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இங்கே பதிவிடுகின்றேன்.

நன்றி!

என்றும் அன்புடன்,

செ. இராசா

(படம் 2018ல் #நான்_எனும்_மண்குடம் வெளியீட்டின்போது எடுத்தது)

No comments: