23/08/2021

உயிர்க்கொலை தீது ---- வள்ளுவர் திங்கள் 173



கொலைசெய்து கோவாகி கோலோச்சு வோரை
கொலைசெய்தே கொன்றிடுவான் கூற்று
(1)

இறைவன் பெயரால் எவரையும் கொல்வோர்
இறைபொருள் காணா இடர்
(2)

உயிரைப் பறிக்கும் உரிமை எடுத்தால்
உயிரைப் பறித்துவிடும் ஊழ்
(3)

சாதி மதமென்று சங்கை அறுப்போர்க்கு
நாதி எதுவுமில்லை நம்பு
(4)

குத்திய கத்தியது கொல்லாமல் விட்டாலும்
குத்தியதால் அஃதும் கொலை
(5)

கொள்கை புரியாரைக் கொல்வதுதான் தீர்வென்றால்
உள்ளவர் யாரோ உரை
(6)

அடுத்தவர் கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால்
எடுப்பாரா ஆயுதம் இங்கு
(7)

கண்முன் இருப்பதைக் காவிடும் புல்லர்கள்
கண்ணோட்டம் இல்லாத கல்
(8.)

உயிர்வதை செய்வதை ஊக்குவிப்போர் எல்லாம்
உயிர்க்கொலை செய்வோர்க்கே ஒப்பு
(9)

மதங்கள் கடந்து மனிதத்தைக் காண்போர்
அதர்மம் விளையார் அறி
(10)

---செ. இராசமாணிக்கம்--

#வள்ளுவர்_திங்கள்_173

No comments: