18/09/2019

50,000 கட்டுங்கள்

எங்களிடம் வெறும் ரூபாய் 50,000 கட்டுங்கள் உங்களை ஒரே நாளில் அதுவும் ஆறு மணி நேரத்தில் விமானம் ஓட்ட கற்றுத்தருகின்றோம் என்று ஒரு விளம்பரம் வந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு விளம்பரம் எனக்கு வாட்சப்பில் வந்தது. இங்கே விமானம் ஓட்ட அல்ல பாடலாசிரியராக்க!!! ஆனால் பணம் ரூபாய் 50,000 என்பதில் மாற்றம் இல்லை. இது சலுகை கட்டணமே....ஏனெனில் வெளிநாட்டு நபர்களுக்கு ரூபாய் 5,00,000 மாம்.
முக்கிய குறிப்பு: இதை நடத்துபவர் சாதாரண ஆளில்லை, அவரின் அப்பா பல தேசிய விருதுகள் வாங்கியவர், மிகச்சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர். இவரும் பாடலாசிரியர் தான் ஆனால் அவரைப்போல் அல்ல.......இல்லை இல்லை...அவரைவிட நன்றாகப் பிழைக்கத் தெரிந்த மனிதர். காரணம் இனிமேல் சினிமாவில் பாடல் எழுதி சம்பாரிப்பதைவிட இதுவே நல்ல தொழில் என்று சரியாக புரிந்து கொண்டவர். மேலும் ஒரு கூடுதல் தகவல். அந்த விளம்பரமும் ஆங்கிலத்தில் உள்ளது. (அப்போதுதானே தமிழ்நாட்டில் கூடுதல் மதிப்பாக இருக்கும்).

ஏற்கனவே ஒரு பாடலாசிரியர் ஆறு மாத வகுப்பு (மாதம் 4 நாட்கள்) நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் கட்டணத்தை முன் கூட்டியே வாங்கினாலும் இவர் அளவுக்கு வாங்குவதில்லை. மேலும் கூடுதல் நேரம் செலவளிக்கிறார். ஆனால், நம்ம ஆளு இருக்காரே...அவரு பலே கில்லாடி. நம்ம மாதிரி சில ஆர்வக்கோளாறுகள்தான் அவரின் இலக்கே...............கண்டிப்பாக அவர் வலையில் விழும் ஒரு சில நபர்கள் போதும், அவரின் கைச்செலவுக்கு ஆகும்.

இங்கே நமக்குத்தான் சுயபரிசோதனை அவசியமாகிறது. இப்போது சினிமாத்துறையில் பாடலாசிரியர்களுக்கு தேவை உள்ளதா?!....அப்படியே இருந்தாலும் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது? தொடர்ந்து கிடைக்கிறதா? இல்லை புகழ் மட்டும்தான் இலக்கா?.....இப்படி நிறைய கேள்விகள் உள்ளது. சரி அதை விடுங்க....இவர் மாதிரி ஆட்கள், பாடல் எழுதுவது பற்றி ஒரு புத்தகம் போடலாமே அல்லது youtubeல் காணொளி போடலாமே.....அதை விட்டு ஏன் பிறரின் தலைமேல் ஏறுவதிலேயே குறியாக உள்ளார்கள் .அட போங்க சார்....எங்களுக்கு பணம் தான் முக்கியம்...எங்கள் புகழை வைத்து பணம் சம்பாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அப்பாவும் மகனும் கேட்டாலும் கேட்பார்கள்.நமக்கு ஏன் வம்பு? நாம நம்ம கடமையை மட்டும் செய்வோம்.

No comments: