19/07/2017

நிலையாமை


வழியோரம் கிடந்த பொருளொன்றை
விழியோரம் விழுந்திட ஆதரித்தேன்!
கலைநயம் மிகுந்த பொருளென்றே
கண்ணால் கண்டே களிப்புற்றேன்!


கண்ணாடி பந்தெனெ அப்பொருளை
குழந்தைகள் இரண்டும் கண்டனரே!
கரங்களில் எடுத்தே அப்பொருளை
குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனரே!

அன்றொரு நாளில் அப்பொருளை
தூக்கி எறிந்தாள் கடைக்குட்டி!
பறந்து வந்த அப்பொருளால்
உடைந்தே போனது எல்.இ.டி!

அதிர்ந்தே அனைவரும் அப்பொருளை
அழித்திட வேண்டி சபித்தனரே!
தெருவில் கிடைத்த அப்பொருளை
தெருவில் தூக்கி எறிந்தனரே!

வருகின்ற பொருள்கள் எல்லாமே
வரும்வழி செல்வது நிச்சயமே!
ஊழின் விதியை நாமுணர்ந்து
உண்மைப் பொருளை உணர்வோமே!

யாரின் பிழையென நினையாது
யாவிலும் நல்லதைக் காண்போமே!
பொய்ப்பொருள் அழிந்தால் கலங்காது
மெய்ப்பொருள் அறிந்திட முயல்வோமே!

-----செ. இராசா----

No comments: