02/07/2017

கவிஞன் --கவிஞர் வாழ்த்து


கசக்கிப் பிழிந்திட முயலாமல்
கசிந்து உருகிடும் எண்ணங்களை
கவிதையில் பதித்திடும் கவிஞர்களின்
கர்மத்தின் சிறப்பை யாதென்பேன்?

கவிதைமீது காதல் செய்து
காதலிபோலே ஊடல் செய்து
கவிதையில் கொஞ்சிடும் கவிஞர்களின்
காதல் பக்தியை யாதென்பேன்?

பலருக்கு சிலவேலை உதிக்கின்ற
சிலருக்கு முழுவேலை மலர்கின்ற
கவிதைகள் தருகின்ற கவிஞர்களின்
கற்பனை சக்தியை யாதென்பேன்?

கதைக்கும் கவிதை எழுதுகின்ற
கவிதைக்குள் கதையைச் சொல்லுகின்ற
தமிழினம் காத்திடும் கவிஞர்களின்
தமிழின் செழுமையை யாதென்பேன்?

ஞானக் கருத்தைக் கவிதையிலே
ஞாலம் பயனுறச் சொல்கின்ற
ஞானம் நிறைந்த கவிஞர்களின்
ஞான திருஷ்டியை யாதென்பேன்?

தூரிகை தூக்கிடும் ஓவியன்போல்
உளியைப் பிடித்திடும் சிற்பியைப்போல்
வார்த்தைகள் வார்க்கின்ற கவிஞர்களும்
வாழ்வது தமிழின் சிறப்பென்பேன்!

No comments: