19/05/2021

ஒளி

 #ஒளி
⭐⭐🔥🔥🔥⭐⭐🌕🌈

ஒற்றை ஒளிதான்
ஊடுருவும் படிகத்தால்
பல நிறங்களாகிறது!
ஒற்றை இறைதான்
உணர்கின்ற இதயத்தால்
பல வடிவங்களாகிறது.!

சூரிய ஒளி வந்தால்தான்
பயிர் துளிர்க்கும்!
உள்ள ஒளி வந்தால்தான்
உயிர் சிலிர்க்கும்!

இடியின் ஒலியை
மின்னலின் ஒளி
அறிவிப்பதைப்போல்
ஓம்கார ஒலியை
உயிரின் ஒளி
உசுப்பி விடுகிறது!

ஒலி வானொலியாய்
முன்னே வந்தாலும்
ஒளி காணொளியாய்
வந்தபோதுதான்
ஊடகங்கள் வேகமானது!

ஊர்களின் தூரத்தைக்
கருவியால் அளக்கலாம்
கோள்களின் தூரத்தை
ஒளிதானே அளக்கும்!

இரண்டு இருள்களின்
இடை வெளிச்சம்தானே
மனித ஆயுள்!
கருவறை இருளை உடைக்காமல்
புவியறையில் புகலிடம் உண்டா?
முடிவுரை ஒன்றை அடையாமல்
கவியுரைக்குப் புகழிடம் உண்டா?!

பாயும் ஒளியலை கொண்ட
ஃபைபர் ஆப்டிக் தானே
தொழில்நுட்பப் புரட்சி?
சீறும் சீரலை கொண்ட
லேசர் ஊடலை தானே
ஒளிநுட்பத் திரட்சி?

திருவண்ணாமலை தீபமாகட்டும்
சபரிமலை ஜோதியாகட்டும்
வழிகாட்டும் நட்சத்திரமாட்டும்
ஓளிகாட்டும் நிலவாகட்டும்
எல்லாமும் ஒளிதானே...

இறையொளி வந்தால்தான்
இறையொலி கேட்கும்
மறையொளி ஒளிர்ந்தால்தான்
மதியொளி மலரும்!

அகக் கண் திறக்கட்டும்
அருட்பெருஞ் ஜோதியால்...

அடர் இருள் விலகட்டும்
அவனவன் வினையால்..

✍️செ.இராசா

No comments: